நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 12, 2024

குறுக்குத்துறை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 27
 வியாழக்கிழமை

 நன்றி விக்கி

குறுக்குத்துறை..

ஆவணி இரண்டாவது வாரம் வியாழக் கிழமை (29/8) பிற்பகல்..

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே  முருகன் கோயில் அமைந்துள்ள இடம்..

ஆற்றின் குறுக்காக  அமைந்திருப்பதால்  கோயிலுக்கு குறுக்குத் துறை முருகன் கோயில் என்று பெயர்..

முருகன்  சுயம்புவாக தோன்றிய இடம் என்பதால் , அந்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டுள்ளது..

300/400 வருடப் பழைமை பெருமைகளை உடையது இக்கோயில்..

 நன்றி விக்கி

 நன்றி விக்கி

கடும் மழைக் காலங்களில்  வெள்ளம் பெருக்கெடுக்கும் போது, உற்சவ மூர்த்திகள்  கரையிலிருக்கும் மேலக் கோயிலில்  வைத்து பாதுகாக்கப்படுகிறன..
வெள்ளம் வடிந்து கோயில் சுத்தம் செய்யப்பட்டதும்  உற்சவர் திருமேனிகளை மறுபடி கொண்டு வந்ததும்  வழிபாடுகள் தொடர்கின்றன..
நன்றி : ஆலயத் தகவல்கள்..

கீழுள்ள காட்சிகள் எளியேனின் கை வண்ணம்..



நெல்லையப்பர் கோயிலில் தரிசனம் செய்த பின் மதிய உணவு..  

சற்று முன்னதாகவே
குறுக்குத் துறைக்கு
 வந்து விட்டோம்..

தாமிர பரணியின் கரை ஓரமாக குப்பை மேடுகள்.. கட்டிடங்களின் இடிபாடுகள் என, அழகு ததும்பிக் கொண்டிருந்தது..






மழைக் காலங்களில் ஆர்ப்பரிக்கின்ற தாமிரையாள் சிலுசிலு எனத் தவழ்ந்து கொண்டிருந்தாள்..

குளிப்பதற்கு வாகாக இருக்கும் என்று நினைக்காததால் மாற்று துணி எடுத்து வராமல் வந்தோம்.. தாமிர பரணியின் அழகையும் அதில் குளிப்பவர்களையும்  கண்டபின் மனம் நெகிழ்ந்து விட்டது.. 

கைகளில் நீரை அள்ளி அர்க்கியம் கொடுத்து விட்டு மூன்று கை நீரை அருந்தி -
கட்டியிருந்த துணியுடன் மூழ்கிக் குளித்து மகிழ்ந்தோம்.. 

தாய் தாமிரையும் மகிழ்ந்திருப்பாள்..

பாவம் தீர்க்கும் பரணீ போற்றி..

பொதிகை மலை உச்சியிலே புறப்பட்டு
தாமிரபரணிக்குள் வீசுகின்ற தென்றல் ஈரத் துணிகளை விரைவாக உலர்த்தி விட்டது..


இதற்கு முன் தாமிரபரணி நதியில் பொதிகையின் பாபநாசத் துறையிலும் அகத்தியர் அருவியிலும்  சொரிமுத்து ஐயனார் துறையிலும் நீராடி இருக்கின்றோம்..  


மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டது.. ஸ்ரீ வள்ளி தேவயானையுடன்  காட்சி அருள்கின்ற பெருமானைக் கண் குளிரத் தரிசனம் செய்து வணங்கினோம்..


 நன்றி விக்கி

கருவறையில்   வள்ளி, தெய்வானையுடன் நான்கு திருக்கரங்கள் கொண்டு நின்ற திருக் கோலத்தில் காட்சித் தருகிறார் ஸ்ரீ சுப்ரமண்யர்..

 .
கோயிலுக்குள் பெரும் பாறை ஒன்றில் பஞ்ச லிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாக அம்பிகையுடன் திகழ்கின்றன..

திருச்செந்தூர் போலவே இங்கும் முருகப் பெருமான்,
 சிவ பூஜை செய்வதாக   திருக்குறிப்பு..






அற்புதமான அழகான திருக்கோயில்..

எல்லாரையும் காத்தருள்வாய் எம்பெருமானே என்ற வேண்டுதலுடன் விடைபெற்றுக் கொண்டோம்..

நதிக்கரையில் மத்வ பீடத்தினரின்  ஸ்ரீ ராகவேந்திரர் மடம்.. தரிசனம் செய்து விட்டு ஜங்ஷன் திரும்பி எளிய உணவு..

இப்போதைக்கு நெல்லை பயணப் படங்கள் தற்காலிகமாக நிறைவு பெறுகின்றன..

இரவு பத்தரை மணியளவில், நெல்லையில் இருந்து - கன்யாகுமரி காசி விரைவு ரயிலில் பயணித்து  விடியற்காலையில் நல்லபடியாக தஞ்சைக்கு வந்து சேர்ந்தோம்...

ஆவணியின் இரண்டாம் வாரத்தின் கிழமைகளை அனுசரித்து  இருக்கைகளைப் முன்பதிவு செய்ததில் இருந்து  பத்திரமாக வீடு திரும்பியது வரைக்கும் அனைத்தும் இறைவன் செயல்..

இறைவன் செயலே..



சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
   மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
      வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
         கால்பட் டழிந்தது இங்கு என்தலை மேல் அயன் கையெழுத்தே.. 40  
-: கந்தர் அலங்காரம் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. //என அழகு ததும்பிக் கொண்டிருந்தது! //

    ஹா..  ஹா..  ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊருக்கு ஊர் இப்படித்தான்..

      மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. மேலே தலைப்பில் இன்று புதன் கிழமை என்பது குழப்பி விட்டது!

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அழகு. விளக்கங்களுடன் கொடுத்திருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு ஆற்றிலும் நீராடினீர்களா?  நல்லது.  சில்லென்று நீரில் இறங்கும் போது ஒரு மேல்மூச்சு வாங்கும்.  அப்புறம் பழகி விடும்!

    பதிலளிநீக்கு
  5. நிச்சயமாய் அற்புதமான அழகான கோவில்தான் என்று தெரிகிறது.  நல்லபடியாய் ஆன்மீகச் சுற்றுலாவை முடித்து நலமாய் இல்லம் ஏகியது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  6. கந்தர் அலங்காரம் பாடலை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
    குறுத்துறை முருகன் கோவில் படங்கள் மிக அருமை.
    விவரங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  7. குறுக்குத்துறை அழகான ஆலயம் - படங்கள் வழி கண்டு மகிழ்ந்தேன். நேரில் இது வரை தரிசித்திராத ஆலயம். எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லதையே நல்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  8. குறுக்குத்துறை முருகனையும்,தாமிரபரணியையும் வணங்கிக்கொண்டோம்.

    அழகாக உள்ளது ஆலயம் நதி இரண்டுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..