நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 30
திங்கட்கிழமை
இன்றொரு சமையல் குறிப்பு..
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நாட்டில் விளைந்து கொண்டிருக்கும் சிறு தானியம்..
இதன் பெருமைகள் யாவருக்கும் தெரிந்ததே..
தினைப் பாயசம்
தேவையான பொருள்கள்:
தினையரிசி 200 கி
பாசிப்பருப்பு 50 கி
கருப்பட்டி 250 கி
ஏலக்காய் 3
பசும்பால் 400 மிலி
தேங்காய்த் துருவல் சிறிதளவு
முந்திரி 15
உலர் திராட்சை 20
பசு நெய் 50 மிலி
செய்முறை :
தினை, பாசிப்பருப்பு இவற்றை சுத்தம் செய்து சற்று சிவக்க வறுத்துக் கொள்ளவும்..
பாயசம் வைக்கும் முன்பாக இரண்டீயும் சரிக்கு சரி தண்ணீரில் 15 நிமிடங்கள்
ஊற வைத்து பின் மிதமன சூட்டில் அடுப்பில் ஏற்றவும்..
வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை சற்றே சிவக்க வறுத்துக் கொள்ளவும்..
( பொன்னிறமாக எப்படி டா வறுபடும் ?..)
ஏலக்காய்களை கல்லுரலில் இடித்துக் கொள்ளவும்..
பாலை மிதமான சூட்டில் வைத்து -
அரை வேக்காட்டில் கொதிக்கின்ற தினையுடன் சேர்த்துக் கிளறி விடவும்..
இடையில் கருப்பட்டியைத் தூளாக்கி - அளவான வெந்நீரில் கரைத்து வடிகட்டி தளதளத்துக் கொண்டிருக்கின்ற பாயசத்தில் ஊற்றி -
வறுத்து வைத்திருக்கின்ற முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய்த் துருவல் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு தளதளத்து வரும்போது
இறக்கவும்..
தினைப் பாயசம் செய்வதற்கு இன்னும் பற்பல வழிகள்...
ஏதோ - நாமும் நமது வித்தையை இங்கு காட்டினோம் என்பதில் எனக்கொரு மகிழ்ச்சி..
கீழுள்ள காணொளியில் சொல்லப்படுவதைப் போல அப்பளத்துடன் தான் தினைப் பாயசத்தைச் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை..
இன்றைய அப்பளங்கள் இரசாயனக் கலவைகள் என்பதை மனதில் கொண்டால் சரி..
**
காணொளிக்கு நன்றி
நம்முடைய நலம்
நம்முடைய கையில்
இயற்கையே இறைவன்
இறைவனே இயற்கை
***