நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 22, 2023

கண்ணாயிரம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 8
திங்கட்கிழமை

வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தான் இந்திரன்,. கொன்றை மரத்தின் நிழலில் ஜோதிமயமாக சிவலிங்கம்..

இதுதான் குறுமாணி எனும் வாமன மூர்த்தி வழிபட்ட லிங்கம்.. குறுமாணி எனில் குறுகிய வடிவுடைய வித்யார்த்தி.. மாணவன்..

இந்த சிவலிங்கத்தைத் தேடித்தான் இத்தனை ஓட்டமும்..

சிவலிங்கத்தைக் கண்டதும் வேரற்ற மரம் போல வீழ்ந்தான்.. 

" இப்படியும் ஓர் இழிவு வந்ததே.. " 

செய்த பாவத்தால் சிறுமையுற்று நிற்கின்ற அவலத்தை - எண்ணி எண்ணி அழுதான்..

அருட் பெருங்கடல் அமைதியாக இருந்தது..

" உலகோருக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்!.. "

ஈசனின் மொழி கேட்டு எழுந்த இந்திரன் -
" என்னை மன்னித்து விடுங்கள் பெருமானே!.. " - என்றான்..

" கௌதமரின் சாபத்தினால் உன் உடம்பில் தோன்றியவை அனைத்தும் பிறர் பார்வைக்கு கண்களாக விளங்கும்..  எனினும் உனக்கு அவை படிப்பினையே!.. "

ஈசன் இந்திரனின் பிழை பொறுத்து அருளினார்..

கிடைத்த வரைக்கும் ஆதாயம் என்ற மனநிலை இந்திரனுக்கு..

" கண்ணாயிரங் கொண்ட கருணையே போற்றி..
சுகந்த குந்தளாம்பிகைத் தாயே போற்றி போற்றி!.. "

தலத்தில் இருந்த தீர்த்தத்தில் இருந்து நீரெடுத்து அம்மையப்பனுக்கு பாத பூஜை செய்த இந்திரன் நன்றியுடன் வணங்கி விட்டு தேவசபைக்குத் திரும்பினான்..

இந்திரன் திரும்பி வந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் தேவசபை களை கட்டியது..

" இனி உலகம் திருந்தி விடுமா?.." -  அருகில் வீற்றிருந்த சுகந்த குந்தளாம்பிகையின் மனதில் ஐயம் எழுந்தது..

" திருந்தாது.. " - ஈசன் புன்னகைத்தார்..

" நீதியை விட்டு விலகுவதற்குத் தானே மறதி மயக்கம்  என்பனவற்றை படைப்பினுள் பொதிந்து வைத்திருக்கின்றோம்!. அகலிகை விழித்து நோக்கியிருந்தால் இந்திரன் என்ன கதி ஆகியிருப்பான்?.. அகலிகை கற்றிருந்த கல்வியும் பெற்றிருந்த அறிவும் அப்போது மயக்குற்று இருந்தன!.. "

" ஏன் இந்த நாடகம் ஸ்வாமி?.. " - என்றாள் அம்பிகை ஏதும் அறியாதவளைப் போல..

" எல்லாம் ஸ்ரீ ராமனின் பெருமையை இந்த உலகிற்கு உணர்த்துவதற்காகத் தான்.. "
- என்றார் ஈசன் புன்னகை மாறாமல்..
 
அந்த வேளையில் தண்டக வனத்தில் விஸ்வாமித்திரரும்  அவரைத் தொடர்ந்து ராமனும் இளைய பெருமாளும்.. 
 
வழி நடையில் பழைமையான கல் ஒன்று..


ஸ்ரீ ராமனின் திருவடித் தாமரைகள் அந்தக் கல்லை நெருங்கிக் கொண்டிருந்தன..

தொலைவில் கௌதம முனிவரும் வந்து கொண்டிருந்தார்..
***

நாம் ஒவ்வொருவரும்
கண்ணாலும்  காதாலும் சொல்லாலும் செயலாலும் கருத்தாலும் செய்திருக்கும் (திரி காரணங்களால்)
பாவங்கள் ஆயிரம் ஆயிரம்.. அவைகளைத் தொலைக்கின்ற தலம் இது..

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் சென்று வணங்க வேண்டிய கோயில் இது..


கண்ணார் கோயில்
(திரு குறுமாணக்குடி)

இறைவன் 
ஸ்ரீ கண்ணாயிர நாதர்
அம்பிகை 
ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை
இந்திர தீர்த்தம்
சரக் கொன்றை

மயிலாடுதுறை சீர்காழி சாலையில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு முன்னால் பாகசாலை எனும் இடத்தில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது இக்கோயில்..

கண்ணார் கோயில் என்றே விளங்குகின்றது ஊர்..

ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் அருளியுள்ளார்..

திருப்பதிகத்தின் ஐந்தாம் பாடலிலும் ஏழாம் பாடலிலும் தல புராணத்தைச் சொல்லியிருக்கின்றார்..


படங்கள் : விக்கி

முதல் திருமுறை
திருப்பதிக எண் 101


தண்ணார்திங்கள் பொங்கரவம் தாழ் புனல்சூடிப்
பெண் ஆணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழுவோர்கட்கு இடர்பாவம்
நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே. 1

மறுமாணுருவாய் மற்றிணைஇன்றி வானோரைச்
செறுமாவலிபால் சென்று உலகெல்லாம் அளவிட்ட
குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே.. 5


முன்னொருகாலத்து இந்திரன் உற்ற முனிசாபம்
பின்னொருநாள் அவ் விண்ணவர் ஏத்தப் பெயர்வெய்தித்
தன்னருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பென்பர்
கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.7

காமருகண்ணார் கோயில் உளானைக் கடல்சூழ்ந்த
பூமருசோலைப் பொன்னியன்மாடப் புகலிக்கோன்
நாமருதொன்மைத் தன்மையுண்ஞான சம்பந்தன்
பாமருபாடல் பத்தும்வல்லார்மேற் பழிபோமே..11

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. ஒரு தேர்ந்த திரைப்படக் காட்சி போல விவரித்திருக்கிறீர்கள்.  ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். சிறப்பான ஒரு சிவஸ்தலம் குறித்த தகவல்கள் நன்று. அனைவருக்கும் எல்லாம் வல்ல எம்பெருமான் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அனைவருக்கும் எல்லாம் வல்ல எம்பெருமான் அருள் புரியட்டும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. புதிய பாடல் பெற்ற தலம். இதுவரை கேள்விப்பட்டதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சற்று முன்னால் உள்ளது இந்தக் கோயில்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. இந்த கோவிலுக்கு சென்று இருக்கிறோம். பல வருடங்கள் ஆச்சு. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஒவ்வொரு கிருத்திகை அன்றும் போய் வருவோம்.
    தலபுராண பாடல் படித்து வணங்கி கொண்டேன்.
    படங்கள் எல்லாம் அருமை. சிவதரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அருமையாக உள்ளது. தேவேந்திரன் பெற்ற சாப விமோசனம், அதை தந்தருளிய கோவிலின் வரலாறு என யாவையும் அறிந்து கொண்டேன். சிவதரிசனம் கிடைக்கப் பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஓம் சிவாய நம..
      மகிழ்ச்சி..

      நன்றி தனபாலன்..
      நலம் வாழ்க..

      நீக்கு
  7. இந்தத்தலங்கள் பற்றி எல்லாம் இன்றே அறிய நேர்ந்தது. தகவல்களைத் தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. அறிந்திராததிருத்தலம் பற்றிய வரலாறும் தலம் பற்றியும் அறிந்து கொண்டோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..