நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 19, 2023

திருவக்கரை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 5 
வெள்ளிக்கிழமை

திருவக்கரைத் திருப்புகழ்


தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன ... தனதானா

கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி ... துரையாதே
கருவழிதத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை ... யிடைவீழா
உலகு தனிற்பல பிறவி தரித்தற
உழல்வது விட்டினி ... யடிநாயேன்
உனதடி மைத்திரள் அதனினு முட்பட
உபய மலர்ப்பதம் ... அருள்வாயே..

குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு ... மயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் ... மணிமார்பா
அலைபுன லில்தவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை ... உறைவோனே
அடியவர் இச்சையில் எவையெவை உற்றன
அவைதரு வித்தருள் ... பெருமாளே..
-: அருணகிரி நாதர்:-


உன்னைச் சிறிதும் துதித்து வணங்காமல்,
நூல்கள் சிலவற்றை ஆரவாரத்துடன் பிதற்றுவதை விடுத்து

கருக்குழியின் பள்ளத்தில் புகுந்து
பொல்லாத நரகத்தின் மத்தியில் விழுந்து விடாமல், 

இவ்வுலகில் பல பிறவிகளை எடுத்து
அவற்றில் உழன்று திரியாமல்,
 
நாயினும் கீழான நான் இனியாவது உனது அடியார் கூட்டத்தில் ஒருவனாகும்படிக்கு
உன்னிரு மலர்ப் பாதங்களைத் தந்து
அருள்வாயாக..

கிரெளஞ்ச மலை பொடியாகும்படியும்
அலைகடல் வற்றிப் போகும்படியும்
அசுரனாகிய சூரபத்மனோடு போர் செய்த வேலாயுதனே,

நற்குணத்தவனே, ஞானமூர்த்தியே,
குமரப் பெருமானே.

தினைப் புனத்தில் குறமகள் வள்ளியை மணந்த அழகிய மார்பனே,

அலை வீசும் நீரில் சங்குகள் தவழ்ந்து பிரகாசிக்கின்ற
திருவக்கரை எனும் அழகிய தலத்தில் வீற்றிருப்பவனே,

உன் அடியார் தம் மனதில் தகுதியானதாக  என்னென்ன
விருப்பங்கள் உள்ளனவோ - அவைகளை எல்லாம் நிறைவேற்றி அருள் புரிவாய் பெருமாளே ..

முருகா.. முருகா..
***

12 கருத்துகள்:

  1. திருப்புகழைப் பாட வேண்டும்...  முருகன் திருவருளை .நாடவேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம் ..

      முருகா.. முருகா..

      நீக்கு

  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருப்புகழ் பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    திருப்புகழ் பாடலும், பொருளும் அருமை.

    /உன் அடியார் தம் மனதில் தகுதியானதாக என்னென்ன
    விருப்பங்கள் உள்ளனவோ - அவைகளை எல்லாம் நிறைவேற்றி அருள் புரிவாய் பெருமாளே ../

    முருகா.. நானும் அப்படியே வேண்டிக் கொள்கிறேன். முருகா சரணம்.
    குமரா சரணம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      முருகா.. முருகா..

      நீக்கு
  3. பதில்கள்
    1. மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      முருகா.. முருகா..

      நீக்கு
  4. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும். அருமையான பொருளுடன் கூடிய திருப்புகழ்ப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா ..

      முருகா.. முருகா..

      நீக்கு
  5. திருப்புகழும் அதற்கான பொருளும் சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ ..

      முருகா.. முருகா..

      நீக்கு
  6. திருப்புகழ் பாடலும் விளக்கமும் அருமை.
    பாடலை பாடி முருகனை தொழுது கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      முருகா.. முருகா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..