நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 12, 2022

யார் ஹிந்து!


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

சில தினங்களாக ஊரெங்கும் ஒரே கேள்வி.. 

யார் ஹிந்து?..

அவனா.. இவனா?.. 
இவனா.. அவனா!..

மிளகாய்ப் பொடி, மிளகுப் பொடி, மல்லிப் பொடி மற்ற மசாலாப் பொடிகள் என்று வாரி வீசிக் கொள்வதால் எங்கும் காரம், கமறல்!..


நான் நினைத்துக் கொண்டேன்..
கல்விக் களஞ்சியமாகிய  வாரியார் சுவாமிகள் இப்போது இருந்திருந்தால் சொல்லியிருப்பாரே!.. - என்று..

கூடவே, வேறொரு ஐயமும் ஆதங்கமும் எழுந்தது - 

அவரையும் விட்டு வைக்காமல் புழுதி வாரித் தூற்றுவார்களே!.. இப்போதிருக்கும் மேதாவியர்கள்.. - என்று..

ஆனால், 
அப்போதே - ஹிந்துஸ்தானம் ஹிந்து -
இப்படியான வினாக்களுக்கு தெளிவு செய்திருக்கின்றார்  ஸ்வாமிகள்..

நேற்று எதையோ தேடியபோது டுவிட்டர் செய்தி ஒன்று முன்னால் வந்து நின்றது..

அது இங்கே..


திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மேலும் சொல்லி இருக்கின்றார்..

" ஹிந்து" என்பதன் அர்த்தம் ஹிம்சையை துய்ப்பவன்.. அடுத்தவர் (பிற உயிர்) படும் கஷ்டத்தை - ஹிம்சையை - தனதாக எண்ணி வருந்துபவனே ஹிந்து!..

இதை ரிக் வேத ஸ்ருதி வாக்கியத்தின் வாயிலாக அறியலாம்.. 

“ஹிம்சை ச துய்யதாம்ய - ஹிம்துனே அக்ஷகம்” “ஹிம்ஸாயா தூயதே யஷ்ச ஸதாசரண தத்பர:


இனி நம்முடைய கருத்துகள்:

அறங்கள் என்று சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் பிற உயிர்களின்  துன்பங்கண்டு இரங்குவது தானே!..

மற்ற உயிரின் துன்பத்தைத் தனது துன்பம் போலக் கருதிக் காப்பாற்றா விட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?.. - என்று, டாக்டர் மு. வரதராசனார்  -  குறட்பா ஒன்றிற்கு உரை எழுதியிருக்கின்றாராம்!..

அந்தக் குறள் -
இன்னா செய்யாமை எனும் அதிகாரத்தில் இருக்கின்றதாம்..

அப்படியானால்,
பிறரது வேதனையை உணர்பவனே அறிவுடையவன்..
அப்படியான அறிவுடையவனே ஹிந்து..

கடல் தாண்டிச் சென்று பிற நாட்டை வெற்றி கொண்டாலும் கையில் நிராயுதபாணியாக நின்றவனை வெட்டித் தள்ளாமல் வெற்றிக் கொடியை நாட்டி விட்டு அவனிடமே  நாட்டைக் கொடுத்து விட்டு வருபவன் ஹிந்து.. 

ஸ்ரீ விஜயத்தின் மீது படை நடத்தியபோது
அப்படிச் செய்தவர் தானே ராஜேந்திர சோழர்..

அவரது தந்தை ராஜராஜ சோழர் தனது சிற்றப்பா மதுராந்தக சோழரின் உளக் கிடக்கையை - துயரத்தை - அறிந்து மணிமுடியையும் சிம்மாசனத்தையும் விட்டுக் கொடுத்தவர் ஆயிற்றே!..

 மேலும் - 
இவர்களது முன்னோர்களான
சிபிச் சக்ரவர்த்தியும்
மனுநீதிச் சோழனும் -

எள்ளுறு சிறப்பின்
இமையவர் வியப்ப
புள் உறு புன்கண் தீர்த்தோன்;
என்றும்

வாயிற் கடைமணி 
நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி 
உகு நீர் நெஞ்சு சுட, தான் தன் அரும் பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்..

என்றும்,
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளால் புகழப்பட்டிருக்கின்றார்கள்..

அவர்கள் இருவரும் சிற்றுயிர்களான புறாவின் மீதும் பசுங்கன்றின் மீதும் இரக்கம் கொண்டவர்கள் தானே!..

இன்னும் பல மன்னர்கள் மயிலுக்குப் போர்வை தந்த பேகன், 

முல்லைக்குத் தேர் கொடுத்த வேள்பாரி, 

முரசுக் கட்டிலில் களைத்துத் தூங்கிய ஏழைப் புலவர் மோசி கீரனாருக்கு கவரி வீசிய சேர மன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை,

தன் தம்பியின் துயருக்காகத் தன் தலையையே தானமாகத் தந்த குமணன்,

இவர்களெல்லாம் திருக்குறள் காட்டிய வேத நெறியில் நில்லாதவர்களோ!..

நமது சிற்றறிவுக்குத் தெரியவில்லை..

ஹிந்து என்பவனைப் பற்றி வேதத்தில் உள்ளதையே -
தானும் சொல்லி இருக்கின்றாரே ஐயன்!..

இப்போதைய அறிவு சால் பெருந்தகைகள் -
ஐயன் வள்ளுவர் மீது எப்படியெல்லாம் வாரித் தூற்றப் போகின்றார்களோ!.. 

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.. 315

வாழ்க தமிழ்
வாழ்க பாரதம்..
***

21 கருத்துகள்:

  1. நீங்கள் என்ன சொன்னாலும் இவர்கள் கேட்கப் போவதில்லை!அவர்களின் நோக்கம் அரசியல், குட்டையைக் குழப்புவது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அவர்களுக்கு எதுவும் சொல்ல வில்லை.. அது எனது வேலையும் அல்ல..

      தளத்திற்கு வருபவர்களுடன் ஒரு கருத்துப் பகிர்வு.

      அவ்வளவே!..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  2. முன்னெல்லாம் இந்தக்கடையெழு வள்ளல்கள், அரசர்களின் பெருந்தன்மை போன்றவை குறித்த சிறு சிறு சம்பவங்கள் பாடங்களாக வந்தன. இப்போதோ? குழந்தைகள் இவர்களை எல்லாம் பற்றிக் கேள்விப் பட்டே இருக்க மாட்டார்கள். போனால் போகிறது எனத் திருக்குறளை மட்டும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் வள்ளுவர் ஹிந்து இல்லை/காவி வண்ண உடையோ, நெற்றியில் திருநீறோ கிடையாது என்று சாதிப்பதற்காக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // முன்னெல்லாம் இந்தக்கடையெழு வள்ளல்கள், அரசர்களின் பெருந்தன்மை போன்றவை குறித்த சிறு சிறு சம்பவங்கள் பாடங்களாக வந்தன.. //

      உண்மை தான்..

      குழந்தைகள் அறிவு பெற்று ஒழுக்கத்துடன் நல்லவர்களாகி விட்டால் என்ன்ம் செய்வது?

      அதனால் தானே பேருந்து நிலையத்தில் வைத்து சிறுவன் ஒருவன் சிறுமிக்குத் தாலி கட்டுகின்றான்..

      அடுத்த நிலை என்னாகுமோ?..
      யாருக்காகவும் இரக்கப்படத் தேவையில்லை..
      எக்கேடும் கெட்டுப் போகட்டும்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  3. அரசியல்வாதிகள் போலவே இப்போது பொதுமக்களும் மாறிவருவது வேதனைக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..
      பொது மக்களையும் தங்களைப் போலவே மாற்றி விட்டார்கள்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  4. //வேதத்தில் உள்ளதையே -
    தானும் சொல்லி இருக்கின்றாரே ஐயன்! //

    முருகா...

    பதிலளிநீக்கு
  5. மக்களைத் தலையாட்டி பொம்மையைப்போல், குடிக்கவைத்து மாக்களாக்கியிருக்கிறார்கள். அவர்கள் தலையில் இது ஏறுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏறாது.. ஏறாது..
      ஒருக்காலும் ஏறாது..
      //

      நெல்லை அவர்களின்
      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. எல்லாவற்றிலும் தேவையற்ற விஷயங்கள் அதாவது அதில் மதம் ஜாதி இவை ஏதேனும் சிக்குகிறதா என்று தேடி இல்லாவிட்டாலும் இருப்பது போல் சொல்லி நல்லா இருக்கும் சாதாரண மக்களையும் குழப்பி குட்டையைக் கலக்கிவிடுவதுதான் அரசியல் மட்டுமல்ல திரைத்துறையினரும்தான். மக்கள் தான் முக்கியத்துவம் கொடுக்காமல் நல்லதை சிந்தித்து தங்கள் வாழ்க்கை முன்னோக்கிச் செல்ல என்ன வேண்டுமோ அதை உருப்படியாக சிந்தித்து வாழ வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நல்லதை சிந்தித்து தங்கள் வாழ்க்கை முன்னோக்கிச் செல்ல என்ன வேண்டுமோ அதை உருப்படியாக சிந்தித்து வாழ வேண்டும்.//

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல விளக்கமான சிந்தனைகள்.

    /ஹிந்து" என்பதன் அர்த்தம் ஹிம்சையை துய்ப்பவன்.. அடுத்தவர் (பிற உயிர்) படும் கஷ்டத்தை - ஹிம்சையை - தனதாக எண்ணி வருந்துபவனே ஹிந்து!../

    அருமையான எண்ணங்களின் வாயிலாக வந்த உண்மை பேச்சு. எத்தனையோ பெரியவர்களும், நேர்மையான மன்னர்களும், உண்மைக்கு புறம்பாக செயல்படாது வாழ்ந்து காட்டிய பூமி இது. . அவர்களை போலவே வாழாவிட்டலும், அவர்களின் எண்ணங்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மக்களின் சுதந்திரங்கள் பாழாகி கொண்டுதான் உள்ளது. என்ன செய்வது..? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடுத்தவர் (பிற உயிர்) படும் கஷ்டத்தை - ஹிம்சையை - தனதாக எண்ணி வருந்துபவனே ஹிந்து!..//

      இது வாரியார் சுவாமிகள் அவர்களின் விளக்கம்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. சிற்றறிவு என்று கூறி, நுட்பமான செய்திகளைப் பகிர்ந்துள்ளீர்கள். சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி ஐயா..

      நீக்கு
  9. வாரியார் சுவாமிகள் அவர்களின் விளக்கம் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றி துளசிதரன்..

      நீக்கு
    2. ஹிந்து நல்லதோர் விளக்கம் .

      நீக்கு
    3. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. எல்லா உயிர்கள் இடத்தும். அன்பு செய்து வாழ்வதுதான் நல்ல மனிதம். கடையேழு வள்ளல்கள் எல்லாம் வாழ்ந்து காட்டியவர்கள். நாமும் பாடமாக படித்து இருக்கிறோம்.
    அவர்களை நீங்கள் பதிவில் குறிப்பிட்டது அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..