நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 27, 2022

உலக நீதி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎன்னில் நீசொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ இயமன் தானே..
-: உலக நீதி :-


உலகநீதி என்பது பழந்தமிழர் நூல்களுள் ஒன்றாகும்.. 

ஈற்றடிகளில் முருகப் பெருமானின் திருவடிகளைச் சிந்திக்கும் விருத்தப் பாடல்களை உடையது.. 

உலகநீதியில் பதினொன்றாவது விருத்தமாக இப்பதிவிலுள்ள பாடல் வருகின்றது..

அந்நூலில் 
இப்பாடலை இடைச் செருகலாக அமைந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.. ஏனெனில் முருகனைச் சிந்திக்கும் ஈற்றடிகள் இல்லாதது தான்..

நூலின் ஆறாவது விருத்தத்திலேயே
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்..
எனக் கூறுகின்றார் உலகநாதப் புலவர்..

இந்த விருத்தத்திலும்
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் - என்று  மறுபடியும் வற்புறுத்த ப்படுகின்றது..

இந்த விருத்தத்தில் சொல்லப்படும் நீதிகளாவன:

வாழ்க்கையில் ஐந்து பேருக்குக் கொடுத்தாக வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது என்று வரிசைப் படுத்தும் போது 

அழுக்கை நீக்கித் துணிகளை வெளுத்துத் தருகின்ற ஏகாலியார், 

முகம் மழித்து முடி திருத்துகின்ற நாவிதர், 

கலைகளைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர், 

பேறு காலம் பார்த்த மருத்துவச்சி, 

பெருநோயைக் குணப்படுத்திய மருத்துவர்..

இவர்களுக்கான தட்சணையைக் காலத்தில்
கொடுக்காதவர்களை - எப்படியெல்லாம் தண்டிக்கக் காத்திருக்கின்றானோ யமதர்மன்!..

இங்கே செய்வது போல -
அங்கே வழக்கை இழுத்தடிக்க முடியாது.. வாய்தா கேட்க முடியாது.. 

உடனுக்குடன் தீர்ப்புகள் நிறைவேற்றப்படும் என்பதை நினைவில் கொள்வார்களா - அறம் பிழைத்தோர்!..

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவருக்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்...

என்று, திரு ஐயாற்றுத் திருப்பதிகத்தில் உரைக்கின்றார் அப்பர் ஸ்வாமிகள்..

இரப்பவர் எனில் யாசகம் கேட்பவர்.. கரப்பவர் எனில் மறைப்பவர் - என்று பொருள்..

கொடுப்பதற்குப் பொருள் இருந்தும் மனம் இல்லாதவர் என்று கொள்ளலாம்..

இதில் இன்னொரு செய்தியும் இருக்கின்றது..

நேர்மையாக வேலை செய்வதற்கு வழி இருந்தும் 
அதை மறைத்து அரசுப் பணியில் லஞ்சம் வாங்கிப் பிழைப்பதும்



உணவகங்களில் கெட்டுப் போனவற்றை அதை உண்பவர் அறிய முடியாதபடிக்கு தில்லாலங்கடி வேலைகளுடன் விற்பனை செய்து
சில்லறை பார்ப்பதும் -

இதற்கு மேலும் பல விதமான குற்றங்கள்
எதற்கும் எவர்க்கும் அஞ்சாமல் இன்றைய நாட்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன..

எல்லாவற்றையும் கடுநரகங்கள் எனும் ஒற்றை வரிக்குள் வைத்து விடலாம்..

மக்கள் சொல்வதையே கேட்காத நிலையில் இருப்பவர்கள் மகான்கள் சொல்லியிருக்கும் நீதியையா கேட்கப் போகின்றார்கள்?..

அவரவர் தலைவிதிப்படி நடக்கட்டும்!..


இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவருக்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்
பரப்பு நீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே!..
-: அப்பர் ஸ்வாமிகள் :-
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

22 கருத்துகள்:

  1. அப்பர் ஸ்வாமி பாடல் மிக அருமை.  உலகநீதியும் இப்போதுதான் முதல்முறை படிக்கிறேன்.  பின்னாட்களில் இந்த லிஸ்ட்டில் மருத்துவரையும் வக்கீலையும் மட்டுமே வைத்திருக்கிறார்கள் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. உணவகங்களின் ஊழல் திகைக்க வைக்கிறது, பதற வைக்கிறது.  நம்பி உணவுண்ண வரும் மக்களுக்கு செய்யும் துரோகம்.  எதெதில் ஊஹல் செய்வது என்கிற வரைமுறை இல்லாமல் போய்விட்டது.உணவை விற்பதே பாவம் என்று நினைப்போர் முன்னாட்களில் இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உணவகங்களின் ஊழல் திகைக்க வைக்கிறது, பதற வைக்கிறது. நம்பி உணவுண்ண வரும் மக்களுக்கு செய்யும் துரோகம். //

      இந்தக் கொடியவர்களிடம் இருந்து நாம் தான் தப்பித்துக் கொள்ள வேண்டும்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. தண்ணீரையே விலைபேசி விற்பார்கள் என்றும் தெரியாதிருந்தார்கள்.  "குடிக்கும் நீரை விலைகள் பேசி விற்கும் கூட்டம் அங்கே..." என்று பாடல் எழுதும் நிலைதான் சமீபத்தில் கூட இருந்தது.  இப்போது தண்ணீர் காசு கொடுத்துதான் வாங்குகிறோம்!  நேற்று பணியிலிருந்து திரும்பும்போது பத்து 25 லிட்டர் கேன்களை வைத்துக் கொண்டு ஒருவர் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.  வேறு காரணம் என்றால் பேரலிலோ வேறு பாத்திரங்களிலோ பிடிக்கலாமே என்று தோன்றியது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பத்து 25 லிட்டர் கேன்களை வைத்துக் கொண்டு ஒருவர் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். //

      வேறெதற்கு?.. எல்லாரும் காசு பண்ணுகின்றார்கள்..

      இனிமேல் உஷாராக இருக்க வேண்டும்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. இறைபயம் எவருக்கும் இல்லை இங்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறை பயம் இருந்தால் ஏன் இப்படி செய்யப் போகின்றார்கள்?..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  5. சமீபத்தில் எந்த எந்த பழைய உணவுப் பொருட்கள் என்ன வடிவம் எடுக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் ஓட்டல்களில் காஃபி, தேநீர் குடிக்கக் கூடப் பயமாகத் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓட்டல்களில் காஃபி, தேநீர் குடிக்கக் கூடப் பயமாகத் தான் இருக்கிறது..//

      நான் தேநீர், காஃபி இவற்றை நிறுத்தி விட்டேன்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  6. துரை அண்ணா உலகநீதி பாடல் அருமை. வாசித்ததில்லை. அதில் சொல்லியிருப்பதற்கு ஏதுவான பதிவு.

    பதிவின் தகவல்கள் பயமுறுத்துகிறது.

    நம்மூரில் வலுவான சட்டங்கள் உல்லை. உணவு பாதுகாப்பு முறைகள் கடுமையாக இல்லை. அதனால்தாஅன் இப்படி...அதனால் வெளியிலிருந்து வரும் பல நஞ்சுகளையும் கலக்க இயலுகிறது.

    வெளியில் சாப்பிடுவதை எவ்வளவுக்கெவ்ளவது தவிர்க்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. எங்கு சென்றாலும் கையில் எடுத்துச் செல்வது நல்லது

    கிட்டத்தட்ட இதை ஒத்த பதிவுதான் எங்கள் தளத்தில் நண்பர் துளசி எழுதியிருக்கிறார். போதை மருந்து எப்படிப் பரவத் தொடங்கியிருக்கிறது அதுவும் உணவுகளின் மூலமாகவும்....கேரளத்து நிகழ்வைச் சொல்லி ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியில் சாப்பிடுவதை எவ்வளவுக்கெவ்ளவது தவிர்க்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

      இந்த நிலைப்பாடு தான் முக்கியம்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  7. அப்பர் பாடலும். உலக நீதி பாடல் பகிர்வுக்கும் நன்றி.
    உலக நீதி, வாழ்க்கை நெறி இவற்றை கடைபிடித்தால் உலக மக்கள் எல்லாம் நலமாக வாழலாம்.
    மனசாட்சிக்கு பயப்படவில்லை என்றால் என்ன செய்வது!
    நாம் செய்யவேண்டியது அனைவரும் மனநலம், உடல் நலத்தோடு இருக்க வேன்டிக் கொள்வதுதான்.

    பதிலளிநீக்கு

  8. இங்கே யாரும் திருந்துகின்ற மாதிரி இல்லை..

    நாம் தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..

    தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..

      நீக்கு
  10. உலக நீதி, ஐயாற்றுப்பதிகத்தில் அப்பர் சுவாமிகள் என்று அருமையான கருத்துகள் அடங்கிய பதிவு.
    ஆனால் நடைமுறையில் உணவே மருந்து என்பது மாறி உணவே விஷம் என்றாகி வருகிறது. வேதனையான விஷயம்.
    புரோட்டா சமீபகாலங்களில் சொல்லப்படுவதுண்டு. என்றாலும் நாங்களும் வருடங்களுக்கு முன்பெல்லாம் விரும்பிச் சாப்பிட்டதுண்டு. ஆனால் இப்போது சாப்பிடுவதில்லை.

    கலப்படமும், தரமும் இல்லாத உணவுக் கூடங்கள் பெருகிவிட்டன எல்லாமே வியாபார ரீதியில் நடப்பதால்.

    சமுதாயம் நல்ல பாதையில் செல்வது போல் இல்லை, எதிர்கால சமுதாயத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. என்னப்பனும் அம்மையும் தான் துணை இருக்க வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  11. // சமுதாயம் நல்ல பாதையில் செல்வது போல் இல்லை.. //

    இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்..

    பதிலளிநீக்கு
  12. எதிலும் கலப்படம் நீதி எங்கே ?
    சிறு வயதில் ருசியாகவும் தரமான உணவுகளாகவும் நம்பிக்கையாக சாப்பிட்டு இருக்கிறோம் இப்பொழுது தரம் சுத்தம் எங்கே என கேட்கவேண்டியுள்ளது?.
    ஆண்டவன்தான் எம்மைக் காக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. முன்னெல்லாம் பள்ளிப் பாடங்களில் இருந்தன. எனக்கு 3 ஆம் வகுப்பிலோ அல்லது நான்காம் வகுப்பிலோ இவற்றைப் படித்த நினைவும். இப்போது தான் நீதியே வேண்டாம் என்கின்றனரே! என் அப்பா இவற்றை எல்லாம் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்துவார். பள்ளி வாத்தியார் வேறேயா? கேட்கவே வேண்டாம். எங்களுக்கு நீதி போதனைகள் அவரிடமிருந்து வந்த வண்ணமாகவே இருக்கும். பலதும் மனதில் ஆழ்ந்து பதிந்து விட்டன.

    பதிலளிநீக்கு
  14. ஓ... இடைச்செருகலாகக் கருதுகிறீர்களா? எனக்கும் அது flowவில் பொருந்தாத பாடலாகத்தான் தோன்றியது. இருந்தாலும் முகம் தெரியாத அந்தப் புலவனுக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  15. பழைய பரோட்டா, சால்னா - ... எந்தக் கடையிலும் அப்போது செய்த பரோட்டாதான் விக்கறாங்களா என்ன? உதாரணமா இரயில் நிலையத்தில் இருக்கும் கடைகளில், செண்ட்ரல் கிச்சனிலிருந்து வருகிறது என்கிறார்கள். அது நிச்சயம் முந்தைய நாளினுடையதாகத்தான் இருக்கும். இங்கும் மிஞ்சினால் ஃப்ரிட்ஜில்தான் வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..