நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 29, 2022

ஓரானைக் கன்று


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
பேரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்திதருஞ் சித்திதருந் தான்..
-: பழந் தமிழ்ப் பாடல் :-
*
நாளை மறுநாள்
ஸ்ரீ விநாயக சதுர்த்தி..

எளியேன் எழுதிய
போற்றி மாலை
இன்றைய பதிவில்..
*

ஓரானைக் கன்று என 
வந்தானை போற்றி
சிவசக்தி வலம் செய்து 
நின்றானை போற்றி..

மாமேரு மலைதனில்
மலர்ந்தானை போற்றி
மா பாரதம் தன்னை 
வரைந்தானை போற்றி..

அன்றமரர் துயரங்கள்
தீர்த்தானை போற்றி
ஔவைக்கு அருந்தமிழ்
கொடுத்தானை போற்றி..


காவேரி கடுஞ்சிறை
விடுத்தானை போற்றி
கைதொழ எல்லாமும்
ஆனானை போற்றி..

அரங்க மாநகர் தன்னைத்
தந்தானை போற்றி
ஆங்கொரு குன்றிலே
அமர்ந்தானை போற்றி..

தேவாதி தேவர் தொழ
நின்றானை போற்றி
தேவாரம் தனை மீட்டுத்
தந்தானை போற்றி..

அச்சிறுத்தருள் செய்த
அழகானை போற்றி
ஆயிரத்தெழுவருடன்
வந்தானை போற்றி..


புன்கூரில் குளமொன்று
புரிந்தானை போற்றி
புறம்பயத்தில் தேனோடு
பொலிந்தானை போற்றி..

மருதீசர் மலைக் குன்றில்
மிளிர்ந்தானை போற்றி
உப்பூரில் வெயில் தனில்
அமர்ந்தானை போற்றி..

அமரர்க்கு அமுதென்று
ஆனானைப் போற்றி
கந்தனுக்கு வள்ளிதனைத்
தந்தானை போற்றி..

கும்பமுனி கும்பிடக்  
குளிர்ந்தானை போற்றி
குறை தீர்த்து குலங்காத்து
நிறைந்தானை போற்றி..

வாதாபி தனை வென்று
வந்தானை போற்றி
வளர்பிறை அதனுடன்
நின்றானை போற்றி..


கலங்காமல் உயிர்களைக்
காத்தானை போற்றி
கருதியே வந்தார்க்கு
கதியானை போற்றி..

ஓங்கார ரூபமாய்
ஒளிர்ந்தானை போற்றி
ஓலமிட்டொரு குரல்
விளித்தானை போற்றி..

செவிகேட்டு செந்தமிழ்
மகிழ்ந்தானை போற்றி
விதிமாற்றி விளக்கேற்றி
வைத்தானை போற்றி..

ஞானமே வடிவாக
வந்தானை போற்றி
தானமே தவமாக
இருந்தானை போற்றி..


கோள்வினை எல்லாமும்
தீர்த்தானைப் போற்றி
நாளெலாம் நல்வினை
சேர்த்தானை போற்றி..

கல்லானைக் கவியென்று
வளர்த்தானை போற்றி
பொல்லானை பொறுத்தருள்
புரிந்தானை போற்றி..18

போற்றியே போற்றி எனப்
போற்றிடு மனமே..
போற்றியே போற்றி என
வாழ்த்திடு மனமே..
**

ஓம் கம் கணபதயே நம
***

10 கருத்துகள்:

  1. கீழே உள்ள போற்றி அகவல்  நீங்கள் எழுதியது என்று நினைக்கிறேன்.  சரிதானே?  அருமை.  சீர்காழி பாடலையும் ரசித்தேன்.  விநாயகர் சதுர்த்தி புதன் கிழமைதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பதிவில் காணும் போற்றி அகவல் எளியேன் எழுதியதே.. விநாயக சதுர்த்தி புதன் கிழமை தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  2. காலையில் சீர்காழியாரின் நல்லதொரு விநாயகர் கானம் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. சீர்காழியாருக்கு வணக்கமும் நன்றியும்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  3. பெயரில்லா29 ஆகஸ்ட், 2022 07:20

    போற்றி பாடலை மிகவும் ரசித்தேன். எளிமை இனிமை

    பதிலளிநீக்கு
  4. போற்றி போற்றி !! உங்கள் பாடல் அருமை துரை அண்ணா. இன்றே விநாயகச் சதுர்த்தியின் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது....பாட்டைக் கேட்டுக் கொண்டே கருத்து அடிக்கிறேன். ஊரில் இருப்பது போல் எண்ணம். ஏதோ கோயிலுக்கு அருகில் இருப்பது போன்று....சீர்காழி அவர்களின் பாடல் என்ன அருமையான பாடல்....ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் எழுதிய போற்றி பாடல் அருமை.
    போற்றி பாடலை பாடி விநாயகரை வணங்கி கொண்டேன்.
    சீர்காழி அவர்களின் பாடல் அருமையான தேர்வு கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பாடல் தந்துள்ளீர்கள் ஓம் கணபதி துணை

    சீர்காழி பாடல்கள் எங்கள் அப்பாவுக்கு பிடித்தமானது வீட்டில் ஒலிக்க வைப்பார். சிறுவயதில் இவற்றை நாங்கள் கண்டுகொள்ளவில்லை.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் போற்றி பாடல் மிக அருமை. எளிய சொற்களில் விநாயகரின் அனைத்துப் பெருமைகளையும்/குடி கொண்டிருக்கும் ஊர்களையும் சேர்த்துச் சொல்லி விட்டீர்கள். அந்த விநாயகன் அருளால் உங்கள் கவி பாடும் திறமை மேலும் மேலும் செழிக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..