நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 01, 2019

மங்கல மார்கழி 17

ஓம் 



அனைவருக்கும் 
அன்பின் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
***

தமிழமுதம்

ஒழுக்காறாக் கொள்க ஒருவந்தன் நெஞ்சத்து
அழுக்கா றிலாத இயல்பு..  (161) 
*

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் 17




அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் 
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே 
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த 
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா 
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்..
***

உடுக்கவும் உண்ணவும் அருந்தவும் ஆகிய
எல்லாமும் எவ்விதக் குறையுமின்றி
எந்நாளும் தழைத்து விளையும்படிக்கு
நல்லறங்களைப் புரியும் எம்பெருமானே..
நந்தகோபாலரே.. துயில் களைவீராக!...

இளஞ்சிங்கத்தைப் பெற்றவளே
எங்கள் யசோதா...

எங்களது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும்
கொழுந்து ஆனவளே...

நல்வழிகாட்டி
குலவிளக்காகவும் ஆனவளே..
நீ அறிவுறுத்தலாகாதா!...

உலகளந்து ஓங்கி வானோடு நின்ற
நிமலனே.. நீ இன்னும் உறங்கிக் கிடப்பதென்ன!...

பொன்னுக்குப் பொன்னாக
சதங்கையும் தண்டையும்
திருவடிகளில் அணி செய்ய
உறங்கிக் கிடப்பவனே.. பலதேவா!...
எழுந்தருள்வாயாக!..

உன் தம்பியொடு நீயும் வந்து
நின் திருமுக
தரிசனம் அருள்வாயாக!...
*

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ அப்பக்குடத்தான் - திருப்பேர்நகர் (கோவிலடி)  
வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொருநாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு.. (2173) 
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :- 
*

இயற்கையின் சீதனம்

செண்பகம்


இதன் மறுபெயர் தான்
மனோரஞ்சிதம்...

இப்பூவினைக் குறிப்பதற்கு
ஆங்கிலத்தில் சொல் இல்லை என்பது
நமக்குப் பெருமை...

செண்பகம் என்பதுவே Champak
என்று வழங்கப்படுகின்றது..

தேவாரத்தில் பல இடங்களிலும்
பேசப்படும் மலர் - செண்பகம்...

பெரும்பாலும் இந்தப் பூவைச்
சூட்டிக் கொள்வதில்லை..

ஆனாலும்
இந்தப் பூவின் பெயரைச்
சூடிக் கொள்வதை விரும்பினர்....

ஏழை எளிய மக்கள் முதல் 
மாமன்னன் வரை
செண்பகம் என்றாலே சிறப்பு தான்...

கூந்தலில் நறுமணம் தேடி
தமிழுக்குப் புகழ் சேர்த்தவன்
செண்பகப் பாண்டியன்...

மண்ணின் மக்கள் இன்புற்ற பொழுதில்
அம்பிகை பராசக்தி
செண்பகப் பூவையும் அதன் பெயரையும்
ஒருசேர சூட்டிக் கொண்டாள்...

கோவில்பட்டி
ஸ்ரீ பூவனநாதர் திருக்கோயிலில்
அம்பிகையின் திருப்பெயர்
ஸ்ரீ செண்பகவல்லி!...
***

சிவ தரிசனம்
திருப்பூந்துருத்தி

ஸ்ரீ புஷ்பவனநாதர்  
இறைவன் - ஸ்ரீ புஷ்பவனநாதர்
அம்பிகை - ஸ்ரீ சௌந்தர்யநாயகி

தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - சூர்ய தீர்த்தம் 

காவிரித் தென்கரைத் திருவூர்...

திரு ஐயாற்றின்
சப்த ஸ்தான திருத்தலங்களுள்
கண்டியூருக்கு அடுத்த தலம்...

அப்பர் பெருமான் இங்கே
திருமடம் அமைத்து
திருத்தொண்டு புரிந்துள்ளனர்...


ஸ்ரீ வீணாதரர்
திருப்பூந்துருத்தி
மதுரையில் சைவத்தை
மீண்டும் நிலைநாட்டியபின்
சோழ நாட்டிற்கு எழுந்தருளிய
திருஞானசம்பந்தமூர்த்தியை
அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியில் தான்
எதிர்கொண்டு வரவேற்று மகிழ்ந்தனர்...

அப்பர் பெருமானும் ஞானசம்பந்த மூர்த்தியும்
சேர்ந்து வழிபட்ட திருத்தலங்களுள்
திருப்பூந்துருத்தியும் ஒன்று...

அப்பர் பெருமான் அமைத்த திருமடம்
திருக்கோயிலுக்கு வடபுறமாக உள்ளது...

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

ஸ்ரீ மாதொருபாகன்
திருப்பூந்துருத்தி 
மாதினை மதித்தான் ஒரு பாகமாக
காதலாற் கரந்தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன் பூந்துருத்தி நகர்க்கு
ஆதி சேவடிக் கீழ்நாம் இருப்பதே.. (5/32)   

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையா என்நெஞ்சை நினைவித் தானை
கல்லாதன எல்லாங் கற்பித் தானைக்
காணாதன எல்லாங் காட்டினானைச்
சொல்லாதன எல்லாஞ் சொல்லி என்னைத்
தொடர்ந்திங்கு அடியேனை ஆளாக் கொண்டு
பொல்லா என்நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.. (6/43)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 13 - 14


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்..

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்... 



ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

16 கருத்துகள்:

  1. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள்குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    Good Morning.

    பதிலளிநீக்கு
  2. இதுவரை நான் படித்திராத ஒரு குறளையும் , திருப்பாவை, திருப்பாசுரமும் படித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. மனோரஞ்சித மலரின் வாசம் மனதின் வழி நாசியை நிறைக்கிறது.
    திருவெம்பாவையும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. ஆஆஆஆஆஆ இங்கும் ஓம் இல் ஆரம்பம்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் துரை அண்ணன்.

    செண்பகப் பூ இன்றுதான் பார்க்கிறேன்.. பூவைப்பார்க்க பூவரசம்பூப்போல இருக்கு ஆனா கொஞ்சம் டார்க் கலரா இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு இன்றைய மனோகரமான பதிவு நன்று ஜி

    உங்களுக்கும் புத்தான்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. துரை அண்ணா இனிய புத்தாண்டு காலை வணக்கம்!

    எபியில் கொஞ்சம் கும்மி அடித்ததில் இங்கு தாமதம்..ஹா ஹா ஹா

    பூசார் எப்படித்தான் அங்கும் இங்கு ஓடி ஓடி வருகிறாரோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வழக்கம் போல் எல்லா அமுதமும் ரசித்தோம் அண்ணா...

    செண்பகப் பூவின் சிறப்பும் அறிந்தோம்...

    கீதா



    பதிலளிநீக்கு
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

    அமுதம் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.

    இடையில் சில பதிவுகள் வாசிக்க இயலவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறை உறவினர் வருகை, என்று இருந்ததால். தொடர்கிறோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    படங்களும், பாடல்களும் , செண்பகபூ பற்றிய பகிர்வும் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. மனோரஞ்சித வாசனை படிக்கும்போதே வருகிறது

    பதிலளிநீக்கு
  12. இனிய புத்தாண்டு தின நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. 2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள்...


    அப்பக்குடத்தான் தரிசனம் மிக அழகு ...

    அனைத்தும் சிறப்பு ..

    பதிலளிநீக்கு
  14. அப்பக்குடத்தானின் ஊர் வழியாகவே போய் வந்தாலும் இன்னமும் தரிசிக்கப் பேறு கிட்டவில்லை. செண்பகமலர்களை இங்கே தாயார் சந்நிதியில்செண்டாகக் கட்டி விற்பார்கள். வழக்கம்போல் கேஷவின் ஓவியத்துடன் சிறப்பான பதிவு. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தாமதமாக!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..