நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 29, 2018

மங்கல மார்கழி 14

ஓம்  

தமிழமுதம் 

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.. (131)
*
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 14 




உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் 
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் 
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் 
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்..
***

எங்களையெல்லாம் வந்து எழுப்புவதாகக் கூறிவிட்டு
இன்னும் உறங்கிக் கிடக்கின்றனையே!..

தோட்டத்துக் குளத்தின் ஆம்பல் வாய் கூம்பிட
செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்தனவே!..

புள்ளினங்களும் பூவினங்களும்
புலர்ந்தது பொழுதென பூரித்திருக்க
நீ மட்டும் விழி திறவாதிருப்பதென்ன?...

யோகியரும் வேதியரும் நீராடி முடித்து
திருக்கோயிலில் சங்க நாதம் செய்தற்கு என்று
சென்று கொண்டிருக்கின்றனரே!..

நாணாத நாவுடைய நங்காய்.. எழுந்திராய்!..

சங்கொடு சக்கரம் தாங்கி நிற்கும்
நாரணனை பரிபூரணனை
பங்கயக் கண்ணனைப் பாடுதற்கு
பாவாய்.. பனிமுகம் மலர்ந்து வாராய்!...
*

தித்திக்கும் திருப்பாசுரம்



ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி வரைநாட்டு நீளரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொன்னரகைப்
பற்றிக் கடத்தும் படை.. (2162)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்  
***  

இயற்கையின் சீதனம் 

முல்லை


காணும்போதே மன மகிழ்ச்சியையும்
முக மலர்ச்சியையும் அளிப்பது..
பெண்மையின் அழகுக்கு அழகு சேர்ப்பது..

முல்லைப் பூவினை
ஒரு செம்பு சுத்தமான தண்ணீருடன்
மண்பானையில் இட்டு
இரவு முழுதும் ஊறிய பின் மறுநாள் காலையில்
அந்த நீரால் முகத்தையும் கண்களையும் கழுவினால்
முகமும் கண்களும் பொலிவு பெறும்...

அவ்வளவு தானா!?..
வேறு மருத்துவப் பயன்களே இல்லையா?..


மனமகிழ்ச்சியும் முக மலர்ச்சியும் 
இருந்து விட்டால்
வேறு மருத்துவம் தான் எதற்கு?..




பெண்களுக்கு பால் சுரப்பு குறைவதற்கு
இரவில் முல்லை அல்லது மல்லிகை ம்லர்களை
மார்பில் கட்டிக் கொள்ளச் சொல்வது சித்த மருத்துவம்...

இதை விட வேறொரு முக்கியமான விஷயம்..

அந்த விவரத்தினை
ஸ்ரீ பேச்சியம்மனைப் பற்றி எழுத இருக்கும்
பதிவினில் தருகிறேன்..

இதெல்லாம் - தவிர,
தம்பதியர்க்கு மனமயக்கத்தை விளைவிக்கும்
பூக்களில் முல்லையும் ஒன்று...

காரணம்
மன்மதனின் ஐவகைப் பூங்கணைகளில்
முல்லையும் ஒன்று..  
*

சிவ தரிசனம்
திருக்கருகாவூர்




இறைவன்
அருள்திரு முல்லைவனநாதர்
ஸ்ரீ மாதவிவனேஸ்வரர்

அம்பிகை
அருள்திரு கருகாத்த நாயகி
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை

தல விருட்சம் - முல்லை 
தீர்த்தம் - க்ஷீர தீர்த்தம் (பாற்குளம்)

முல்லை வனம் என்பதுவும் திருத்தலப் பெயர்..




திருமணமாகி பல ஆண்டுகளாகியும் 
மகப்பேறு அடையாதவர்களுக்கும்

குழந்தைப் பேறு உண்டாகி
அடிக்கடி கரு நழுவும் குறைபாடு உள்ளவர்களுக்கும்

மகப்பேறு எய்தியவர்களுக்கு
சுகப்ரசவம் நிகழ்வதற்கும்
கண்கண்ட திருத்தலம்
திருக்கருகாவூர்..

எளியோர்க்கு இரங்கும் தாயாக
விளங்குகின்றனள் - அம்பிகை...

அம்பிகையின் திருவிளையாடல்களை
கண்ணுக்குக் கண்ணாகக்
காணக்கூடிய திருத்தலம்...

மாற்று சமயத்தவரும் இங்கே வந்து
வணங்கி நிற்பதைக் காணலாம்...

அம்பிகையின் மூலஸ்தானத் திருப்படியை
சுத்தமான பசு நெய்யினால் மெழுகி
அந்த நெய்யினை மகப்பேறு வேண்டி நிற்கும் பெண்
48 நாட்களுக்கு - வீட்டு விலக்கு தவிர்த்த நாட்களில் -
அருந்த வேண்டும் என்பது சம்பிரதாயம்...

ஒருமுறை மெழுகி எடுத்த நெய் தீர்ந்து விடும் முன்
அதனுடன் வேறு நெய்யைக் கலந்து கொள்ளலாம்...

மறூபடியும் நெய் மெழுக வேண்டும் என்பதில்லை...

அடிக்கடி கரு நழுவுறும் பெண்களுக்கும்
அம்பிகை அருள்மழை பொழிகின்றாள்...

வேண்டி நிற்பார் வேண்டுதலை
விருப்புடன் நிறைவேற்றித் தருகிறாள் அம்பிகை...

ஆனால் இப்போது
கோயிலிலேயே நெய் விற்கிறார்கள்...
அஞ்சலிலும் அனுப்பி வைக்கின்றார்கள்...

தஞ்சை பழைய பேருந்து நிலையங்கள் இரண்டிலிருந்தும்
திட்டை வழியாகவும், சாலியமங்கலம் வழியாகவும்
நகர பேருந்துகள் அடிக்கடி இயங்குகின்றன...
*

ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவே
மத்த யானை மறுகஉரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம் அழல் வண்ணமே.. (3/46)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகா லுமையோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையா டியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.. (6/15)
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை..
திருப்பாடல்கள் 07 - 08

ஸ்ரீ சிவகாம சுந்தரியுடன் எம்பெருமான்
கோனேரிராஜபுரம்.. 
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுது என்றெல்லாமும் 
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னமும் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!.. 7

கோழி சிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.. 8

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..  
***

9 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங். மெதுவான இணைய இணைப்பையும் வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய இடுகையை தினமும் தயார் செய்யும் உங்களுக்கு முதலில் எங்கள் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. திருக்கருகாவூர்-கர்பரக்ஷகாம்பிகை பற்றி இங்கும் அறிந்தேன்.

    சென்னையில் இப்பெயரில் மருத்துவமனையே இருக்கு..கோடம்பாக்கத்தில். டாக்டர் ஜெயம் கண்ணன் மற்றும் அவங்க பெண் ப்ரியா இருவருமே நல்ல ஃப்ரென்ட்லியா பார்ப்பாங்க...

    அவங்க இந்தக் கோயிலுக்கும் நிறைய செய்வாங்கன்னும் சொல்லுவாங்க.

    முல்லை மலரின் சிறப்பும் அருமை அண்ணா. நீங்கள் கொடுத்திருக்கும் இரு தகவல்களும் சொல்லக் கேட்டிருக்கேன்....

    எல்லா அமுதமும் இனிமை. படங்கள் வெகு அழகு..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம்.

    சிறப்பான பகிர்வு ஜி. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நாணாதாய் நாவுடையாய்... விளக்கம் என்ன தந்து இருக்கிறீர்கள் என்று பார்த்தேன். முல்லை மலர்மேலே திருப்பசுரத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. திருக்கருகாவூர் போயிருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். சரியாய் நினைவில்லை. அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. முல்லை குறித்த விளக்கம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  8. அருமையான இடுகை! முல்லைவன நாதரைப் பல முறைகள் பார்த்திருக்கேன். இங்கேயும் தரிசனம் கிட்டியது. அற்புதமான கேஷவின் ஓவியத்தோடு கூடிய பாசுரத்தின் விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..