நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 06, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 12

ஸ்ரீ பந்தள குமரன்..

பந்தள நாடு எங்கும் புன்னகை பூத்துக் கிடந்தது... 

பச்சைப் பசும் வயல் வெளிகள் எல்லாம்
பசுந்தோகை விரித்தாடும் மயில்களைப் போலாகின...
பட்டுக் கிடந்த பாறைகளும் பரவசமாகி கசிந்துருகின...


வனத்தில் - பம்பை நதிக் கரையில் -
கண்டெடுத்து மார்புறத் தழுவிக் கொண்ட அந்த கணம் முதல் - அரண்மனையினுள் நுழையும் வரை - இமைப் பொழுதும்
அன்பு மகனைப் பிரியாதவராக மன்னர் ஸ்ரீராஜசேகர பாண்டியன்... 

அரசரின் திருத்தேர் மாளிகைக்குள் நுழையும் முன்பாகவே
அன்பின் சின்னமான அரசி ஓடோடி வந்தாள்...

எங்கே!.. எங்கே.. என் செல்லம்!.. என்னிடம் கொடுங்களேன்!..


மன்னனின் கைகளில் இருந்த குழந்தையை வாரிக் கொண்டாள்...
வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள்...

ஆனந்தக் கண்ணீர் ஆறாக வழிந்தது...

ஊருக்கும் உலகுக்கும் என்று - வந்த பிள்ளையை -
இவன் என் பிள்ளை!.. இவன் என் பிள்ளை!.. - எனக் கொண்டாடி மகிழ்ந்தாள்... 

அரச மாளிகையின் பொக்கிஷ அறைகள் திறந்து விடப்பட்டன..
ஜனங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று!.. 

ஆனால் - ஜனங்கள் யாரும் அவ்வாறு செய்யவில்லை..
அவ்வாறு செய்வதற்கும் தோன்றவில்லை!.. 


அரசியின் கரங்களில் தவழ்ந்த பிள்ளைச் செல்வத்தைத்
தம் இரு கண்களால்  கண்டதே
ஜனங்களுக்குப் போதுமானதாக இருந்தது...
அதுவே அவர்களுக்குப் பேரின்பமாக இருந்தது...

அடுத்து வந்த ஆனந்த மயமான நாட்களில் - 
அரசிக்கும் மணி வயிறு வாய்த்தது...

தங்கப் பதுமை என, ஆண் குழந்தை பிறக்க
- ராஜராஜன் எனப் பெயரிட்டனர்... 

வளர் நிலவென வளர்ந்த
மணிகண்டன் குருகுலத்திற்குச் செல்லவேண்டிய நாளும் வந்தது... 

குருநாதருக்கு பாத பூஜையுடன் பொன்னாடை போர்த்தப்பட்டது...
மாலை அணிவித்துத் தக்க மரியாதைகள் செய்யப்பட்டன...  

ஞானமும் கல்வியும்  நல்லருட் செல்வமும்
வழங்க வந்த ஞான ஜோதி, 
ஏதும் அறியா இளவலாகக் குருநாதரைப் பணிந்தது...

உலகியலில் தானும் கல்வி கற்க வேண்டும் என - 
முன் நடந்த குருவைத் தொடர்ந்து பின் நடந்தது...

ஆயிற்று சிலகாலம்....

இனி வேறு எதுவும் இல்லை சொல்லிக் கொடுப்பதற்கு
- என்ற நிலையில் - குருகுலக் கல்வி பரிபூரணமாயிற்று...


தகவல் அறிந்த மன்னர் மணிகண்டனை அழைத்து வருவதற்கு
முத்துப் பல்லக்குகளை அனுப்பி வைத்திருந்தார்...

ராஜப் பிரதிநிதிகள்  குருவுக்குக் காணிக்கைப் பொருட்களுடன்
அறச்சாலைக்கு வெளியே காத்திருந்தனர். 

இன்னும் சில நிமிடங்களில்..
- நினைக்கும் போதே குருநாதருக்குக் கண்கள் கலங்கின.

அண்ட சராசரமும் பணிந்து தொழும் திருவடித் தாமரைகள்
- குரு நாதரை வணங்கி வலம் வந்தன.

பணிந்து வணங்கிய மணிகண்டனை மார்புறத் தழுவிக் கொண்டார். மணிகண்டனின் தோள்களில் குருநாதரின் கண்ணீர்த் துளிகள் விழுந்தன.

அனைத்தும் அறிந்த தாங்கள் கலங்கலாமா!..
- வேத முதல்வன் திருவாய் மலர்ந்தான். 

அனைத்தும் அறிந்த அதனால் தானே - கலங்குகின்றேன்!..
- குருநாதர் கசிந்து உருகி கண்ணீர் மல்கினார்.

குருவே!.. எனக்குப் புரியவில்லையே!..

மணிகண்ட மகாப்ரபுவே!..
மக்கள் குறை தீர்க்க வந்த மாமணியே!..
மாதேவனுக்கும் மாதவனுக்கும் பிறந்த அருட்சுடரே!..
உன் பேரொளியை ஊருக்கு ஒளித்து வைத்திருக்கலாம்!..
ஊரும் உலகும் உன்னை இதுநாள் வரை உணராதிருக்கலாம்...
ஆனால் -


உள்ளுணர்ந்த வேதியனாகிய எனக்கு ஒளிக்க முடியுமா?..
உன்னை நான் உணராது இருப்பேனா!..
உன்னை நான் உணராது இருந்தால் நான் கற்றது கல்வியாகுமா?..
என் முன்னோர்கள் செய்த தவம் அல்லவா -
உன்னை நான் நினைப்பதும் பேசுவதும்!...

குருநாதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

குருஸ்வாமி!..
ஈசன் எனக்களித்த கட்டளைப்படி இங்கே வந்துள்ளேன்...
நான் இன்னும் சில காலத்திற்கு என்னை மறைத்தே வாழ வேண்டும்... எனக்கு கல்வி கற்பித்த தங்களுக்கு
நான் என்ன கைமாறு செய்யப் போகின்றேன்!..
நான் தங்களுக்கு - குருதட்சணையாகத் தருவதற்கு -
என் தந்தை  பொன்னும் பொருளும் வாரிக் கொடுத்துள்ளார்...
இன்னும் வேண்டுவது எதுவோ - கேளுங்கள்!..

- மணிகண்டன் கருணையுடன் மொழிந்தான்...

தேவதேவனே...
உனக்கு நான் கல்வி பயிற்றுவித்தேன் என்றா சொல்கின்றாய்!..
இல்லை.. இல்லை... நான் அல்லவோ -
உன்னிடம் இருந்து கற்றுக் கொண்டேன்!..
நான் கற்ற கல்வியை நீ அல்லவோ புதுபித்தாய்!..
குருவுக்கும் குரு ஆன குணக்குன்றே..
உன்னிடம் யான் வேண்டுவது பொன்னும் பொருளும் அல்ல!..  

பின்!?.. - மணிகண்டனின் புருவங்கள் உயர்ந்தன...

முன்னும் பின்னும் அறிந்த முதல்வனே!..
என் மகன் - பேச இயலாதவனாக - பார்வை அற்றவனாக -
மனநலம் குன்றியவனாக - இருப்பதை அறிவாய் தானே!..
அவனுக்கு நல்வாழ்வினைக் கொடு!..

பொன்னையும் பொருளையும் விட - 
என் மகனுக்கு நீ அருளும் நல்வாழ்வே -
நீ எனக்குத் தரும் குரு தட்சணை!..

ஜன்ம ஜன்மாந்திரங்களில் -
அறிந்தும் அறியாமலும் நான் செய்திருக்கும்
பிழைகளை எல்லாம் மன்னித்து அருள்வாய் மணிகண்டா!..

இருகரம் ஏந்தி நின்றார் - குருஸ்வாமி..
அவர் கரங்களைப் பற்றிக் கொண்டான் மணிகண்டன்...

கை கொடுத்த தெய்வம் - கலங்கி நின்ற கண்களைத் துடைத்தது... 

ஆனாலும்  - ரகசியம் காக்க வேண்டும் குருஸ்வாமி!..

அப்படியே ஆகட்டும் மணிகண்டா!..
இருப்பினும், யான் பெற்ற பேறாக
உன்னை அடைந்தார் அனைவரும் -
துன்பம் இன்றி வாழ்வதல் வேண்டும்..
அதற்கு நீ நல்லருள் புரிதல் வேண்டும்!..

தன் குறை தீர்ந்து நலம் விளைந்தாற்போல்
அனைவருடைய குறையும் தீர வேண்டும்..
என -   பிறர் நலமும் பேணி நின்றார் குருநாதர்...

தங்கள் விருப்பப்படியே.. ஆகட்டும் குருஸ்வாமி!..

எல்லாம் அறிந்த ஐயன் - அந்த ஏழைக்கு இரங்கி அருள் புரிந்தான்.  

மணிகண்டனின் திருக்கரங்களின் ஸ்பரிசத்தால் -
குருவின் மகன் புது வாழ்வு பெற்றான்...

குருவும் குரு புத்ரனும்  -
மணிகண்டப் பெருமானை போற்றி வணங்க - 
மணிகண்ட மூர்த்தியோ -


குரு ப்ரம்மா குரு விஷ்ணு குருதேவோ மகேஸ்வர: 
குரு சாட்சாத் பரப்ரம்மா: தஸ்மை குரவே நம:

- என்று, குருவைப் பணிந்து வணங்கினான். 

இப்படி - குருநாதரின் இல்லத்தில் -
ஆனந்தவெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கையில், 


பந்தளத்தின் அரண்மனையில் -

ஓர் இருட்டு மூலையில் - வறட்டு மூளைக்குள் - 
காலம் தன் வேலையைச் செவ்வனே செய்தது!..

நாடகத்தின் அடுத்த காட்சியை அரங்கேற்றியது.

ஓம் ஹரிஹர சுதனே போற்றி!..
மணிகண்ட மகாப்ரபுவே போற்றி!.. போற்றி!..
ஃஃஃ  

9 கருத்துகள்:

  1. அற்புதமான தொடர். அழகிய நடையில் செல்கிறது. தெரிந்த கதை என்றாலும் படிக்கையில் சுவை கூடுகிறது.

    பதிலளிநீக்கு
  2. பொக்கிஷ அறைகள் திறந்து விடப்பட்டனவா? எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லியும் யாரும் எடுக்கவில்லையா? என்ன மக்கள்... என்ன மக்கள்...

    பதிலளிநீக்கு
  3. விதியின் அடுத்த கட்டத்துக்கான காட்சி நிகழப்போகிறதா...

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் 🙏 ஜி.

    தெரிந்த கதை என்றாலும் ஸ்வாரஸ்யம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அருமையாக கதை சொல்கிறீர்கள்.
    படங்கள் அழகு.
    அந்தக்கால மக்களும், மன்னரும் இருந்தது போல் இருக்க முடியுமா?
    ஆசைகள் இல்லாமல், மணிகண்டனை பார்த்தவுடன் நிறைவு ஏற்பட்டு விட்டதே!

    இருட்டு மூலையில் வறட்டு முளையின் சிந்தனை படம் விதியின் அடுத்தக் கட்ட படம் அருமை.

    பதிலளிநீக்கு
  6. அன்றைய மக்கள் நல்ல சிந்தனையோடு வாழ்ந்தார்கள் ஆகவே மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  7. இது வாசித்தேன் அன்றே ஆனா கமென்ட் போடாம விட்டுருக்கேன்...

    ஒருவழியா பந்தளத்துக்கு வந்துட்டேன். தொடர்கிறேன்.

    கீதா

    இது தெரிந்த கதை என்றாலும் சொல்லும் விதம் மிக அழகாக இருக்கிறது ஐயா.

    தொடர்கிறோம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..