நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 22, 2014

மார்கழிக் கோலம் 07

குறளமுதம்

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு (075)

அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையினால் அல்லவோ
உலகில் இன்பமுற்று வாழ்கின்றவர் சிறப்பு எய்துகின்றனர்.

* * *

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை - 07.


கீசு கீசு என்று எங்கும் ஆனைசாத்தன் கலந்து 
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே 
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து 
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் 
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ 
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி 
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ 
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்
* * *

ஆலய தரிசனம்
மன்னார்குடி


மூலவர் - வாசுதேவப்பெருமாள். 
தாயார் - செங்கமல நாச்சியார். 
உற்சவர் - ராஜகோபாலன். 

தல விருட்சம் - செண்பக மரம். 
தீர்த்தம் ஹரித்ரா நதி. 

ஆகமம் - பஞ்சராத்ரம். ஸ்ரீ விமானம் - ஸ்வயம்பு. 

ஸ்ரீகிருஷ்ண தரிசனம் வேண்டி மகரிஷிகள் தவமிருந்த திருத்தலம். செண்பகாரண்யம் என்னும் திருப்பெயர் உடையது. 

அவர்களுக்காக  - கண்ணன் இங்கே 32 லீலைகளை நிகழ்த்திக் காட்டியதாக ஐதீகம். 

கண்ணனோடு யமுனா நதியில்  விளையாடிக் களித்த கோபியரின் திருமேனியில் இருந்த மஞ்சளால் பொலிந்த தீர்த்தம் என்பதனால் ஹரித்ரா தீர்த்தம். 

இது குளம் எனினும் நதியின் பெயரினால் வழங்கப்படுவது. 


ஆனி மாதப் பெருந் திருவிழாவின் பத்தாம் நாள் பெளர்ணமியை அனுசரித்து - தெப்பத் திருவிழா சிறப்புற நிகழ்வது இத்திருக்குளத்தில் தான்!.. 

இதன் நடுவே உள்ள திருக்கோயிலில் ஸ்ரீ வேணுகோபாலன் விளங்குகின்றார். 

திருக்கோயிலில் ஸ்ரீராஜகோபாலன் - பாலகனாக, வேட்டி தலைப்பாகையுடன் விளங்குகின்றார். திருக்கரத்தில் சாட்டையுடன் விளங்கும் ஸ்வாமியின் திருவடிகளில் கொலுசு, தண்டை, சலங்கை முதலான ஆபரணங்கள் இலங்குகின்றன.


ராஜகோபாலனின் அழகுக்கு இணை ஏதும் இல்லை!.. 
ராஜகோபாலனின் வெண்ணெய்த் தாழி உற்சவம் சுற்று வட்டாரத்தில் வெகு பிரசித்தம்.

பங்குனியில் பதினெட்டு நாட்கள் பிரம்மோத்ஸவம். பதினாறாம் நாள் வெண்ணெய்த் தாழி. 

ஸ்வாமி வெண்ணெய்க் குடத்துடன் தவழ்ந்த திருக்கோலத்தில் வீதியுலா!.. 

திருக்கோயிலைச் சுற்றி வலம் வந்து ஊருக்குள் வெண்ணெய்த்தாழி மண்டபத்துக்குச் செல்லும் போது, வழி நெடுகிலும் பக்தர்கள் வெண்ணெய் வீசி மகிழ்கின்றனர்.

செண்பகாரண்யம் எனப்படும் மன்னார்குடி அபிமானத் திருத்தலம்.

ஆழ்வார்களின் திருவாக்கினால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம்  இல்லை - எனினும் இங்கே, மகத்துவத்துக்குக் குறைவில்லை.


மக்களின் மனம் நிறைந்தவன்  ராஜகோபாலன். 

அவன் கீர்த்திகளை எடுத்துரைக்க  - வார்த்தைகளே இல்லை!..

பல்வேறு சிறப்புகளுடன் - நகரத்திற்குரிய வசதிகளையும்  கிராமத்திற்கே உரிய  - அழகையும் தன்னகத்தே கொண்டு விளங்குவது  - மன்னார்குடி 

கிழக்கே திருஆரூர், தெற்கே பட்டுக்கோட்டை, மேற்கே தஞ்சாவூர், வடக்கே கும்பகோணம் - என  சிறப்பான நகரங்களால் சூழப்பட்ட மன்னார்குடி,  

தற்போது  - சென்னை, திருப்பதி, கோவை, மானாமதுரை ஆகிய நகரங்களில் இருந்து நேரடி இரயில் வசதியுடன்  திகழ்கின்றது. 

தஞ்சையில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலை வழியில் தான் - புகழ் பெற்ற வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் உள்ளது.


பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் 
உள்ளம் பரவசம் மிகவாகுதே - கண்ணா!..

- என வாஞ்சையுடன் துதித்து மகிழும் அன்பர்களின் உள்ளங்களில் நித்ய வாசம் செய்பவன் கண்ணன்!.. 

மக்களின் மனங்களை ஆள்பவன் ஸ்ரீ ராஜகோபாலன்!.. 

திருக்கலந்து சேருமார்ப தேவதேவ தேவனே
இருக்கலந்த வேதநீதியாகி நின்ற நின்மலா
கருக்கலந்த காளமேக மேனியாய நின்பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரைசெயே!..(854)
திருமழிசைப்பிரான்.
* * *

சிவதரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 06



மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோக்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!..

***

திருக்கோயில்
திருக்கருகாவூர்


இறைவன் - ஸ்ரீ முல்லைவனநாதர்
அம்பிகை - ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகை
தீர்த்தம் - க்ஷீர தீர்த்தம் 
தலவிருட்சம் - முல்லைக் கொடி

தலப்பெருமை

காவிரியின் தென் கரையில் உள்ள பஞ்ச வனங்களில் முதலாவதான க்ஷேத்திரம். மாதவி வனம் என்றும் முல்லை வனம் என்றும் புகழப்படுவது.

ஈசன் முல்லை வனத்தில் சுயம்புவாகத் தோன்றிய மூர்த்தி. சிவலிங்கத் திருமேனியில் முல்லைக் கொடி சுற்றிக் கொண்டிருந்ததனால் உண்டான தழும்புகளைக் காணலாம்.

இத்தலத்தில் நந்தியம்பெருமான், விநாயகர், சிவலிங்கம் - என மூவருமே - சுயம்பு திருமேனிகள்.

ஊர்த்துவ ரிஷியின் சாபத்தினால் நித்துவ ரிஷியின் மனைவி வேதிகைக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது.


ஆதரவற்று இருந்த இருந்த அபலைக்கு மனம் இரங்கிய அம்பிகை தானே முன்னின்று வேதிகையின் கருவினைக் காத்து அருளினாள்.

நழுவிய கருவினை மூலிகைக் கலசத்தில் இட்டு பாதுகாத்து குழந்தையாக்கி வழங்கினள்.. அத்துடன் -

குழந்தைக்கு பாலூட்டும் படி காமதேனுவுக்கும் ஆணையிட்டனள்.

தேவலோகத்தில் யக்ஞம் நிகழ்த்தச் சென்றிருந்த நித்துவ மகரிஷி திரும்பி வந்ததும் நடந்தவற்றை அறிந்து முல்லைவன நாதரையும் கருகாத்த அம்பிகையையும் பணிந்து வணங்கி -

இத்தலத்தில் - அனைவருக்குமாக அம்பிகை இவ்வண்ணம் அருள் பாலிக்க வேண்டும் !.. - என வேண்டிக் கொண்டனர்.

அது முதற்கொண்டு மாதவி வனம் - முல்லை வனம் என்றிருந்த தலம் திருக்கருகாவூர் எனப் புகழ் பெற்றது.

கருகாத்த நாயகியின் பேரருள் கண்முன்னே நிதர்சனம்!..

நாளும் இங்கே அவளை நாடி நலம் பெறும் பெண்கள் ஆயிரம் ஆயிரம்!..

பல்வேறு பிரச்னைகளுக்கிடையில் - கர்ப்பம் தரிக்க இயலாத பெண்களுக்கும்,  அடிக்கடி கரு நழுவி - அல்லலுறும் பெண்களுக்கும் அன்னை முன்னின்று நலம் அருள்கின்றனள்..


அம்பிகையின் மூலஸ்தானத்தின் திருப்படியினை சுத்தமான நெய்யினால் மெழுகி அந்த நெய்யினை - நாளும் உட்கொண்டு வர அதுவே அரும் மருந்தாகின்றது.

கருவுற்ற பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் பொருட்டு அம்பிகையின் பாதத்தில் வைத்து விளக்கெண்ணெய் மந்திரித்து தரப்படுகின்றது.

பேறுகாலத்தில் இந்த எண்ணெயை வயிற்றில் தடவி வர சுகப்பிரசவம் ஆகும் என்பதும் நிதர்சனம்..

இதெல்லாம் வெறும் கட்டுக் கதையல்ல!..

கண்முன்னே நிகழும் அதிசயங்கள்..

மாற்று சமயத்தினர் கூட அன்னையின் சந்நிதியில் வந்து வணங்கி நலம் பெறுவதைக் காண்கின்றோம்.

அம்பிகைக்கு நேர்ந்து கொண்டவர்கள் - கரு தங்கியதும் - அவள் சந்நிதியில் வளைகாப்பு வைபத்தினை நடத்துகின்றனர்.

பிரசவம் ஆனதும் - அவள் சந்நிதிக்கு வந்து குழந்தையைத் தொட்டிலில் இட்டு மகிழ்ந்து அவளுக்கு நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.

அப்பர் சுவாமிகள் முல்லை வனநாதரை -  கருகாவூர் கற்பகம்!.. என்று போற்றுகின்றார்.

இங்கே விநாயகர் - கற்பக விநாயகர்..

அம்பிகையும் கருகாத்தருளும் கற்பகமாகப் பொலிகின்றாள்..

கிழக்கு நோக்கிய சந்நிதி அம்பிகையினுடையது.


ஸ்வாமி சந்நிதிக்கும் அம்பிகை சந்நிதிக்கும் இடையில் முருகன் சந்நிதி அமைந்து சோமாஸ்கந்த அம்சமாக - திருக்கோயில் திகழ்கின்றது.

ஞானசம்பந்தப்பெருமானும் திருநாவுக்கரசரும் பாடிப் பரவிய திருத்தலம். 

தஞ்சை - கும்பகோணம் சாலையில் பாபநாசத்திற்கு அருகில் உள்ளது இத்திருத்தலம்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன.

விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்கு
அமுத நீழல்அக லாததோர் செல்வமாங்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே!.. (3/46)

திருஞானசம்பந்தர்.

குருகாம் வயிரமாம் கூறுநாளாம்
கொள்ளும் கிழமையாங் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகாலுமையாளோர் பாகனுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையாடியாங்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே!..(6/15)
திருநாவுக்கரசர்.

திருச்சிற்றம்பலம்.
* * *

10 கருத்துகள்:

  1. செண்பகாரண்யம் ஆலயத்தின் சிறப்பை அறிந்தேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. திருக்கருகாவூர் சென்று வந்த நினைவலைகள்
    மீண்டும் எழுகின்றன
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆலயம் ...காலையில்...
    அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக..
      தங்கள் பதிவில் முள்ளங்கி சுவைக்குழம்பு அருமை!..

      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருக்கருகாவூர் சென்றதுண்டு. இதுவரை மன்னார்குடி பயணம் தான் வாய்க்கவில்லை.....

    தகவல்கள், படங்கள் என அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மன்னார்குடி ராஜகோபால்ர் படம் வெகு அழகு. வெகு அருமை.
    திருக்கருகாவூர் படம் எல்லாம் அழகு. பாடல்கள் பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..