நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 30, 2013

மார்கழிப் பனியில் - 15

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 15. 


எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ 
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன் 
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் 
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக 
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை 
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள் 
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க 
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

திருஆரூர்


எம்பெருமான் - புற்றிடங்கொண்டார், வன்மீக நாதர், தியாகராஜர்
அம்பிகை - கமலை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பிகை
திருக்கோயில் - பூங்கோயில்
தீர்த்தம்  - கமலாலயம், செங்கழுநீரோடை
தேர் - ஆழித்தேர்

கமலாலய திருக்குளக்கரையில் அம்பிகை தவம் இயற்றியதாக ஐதீகம்.

சப்த விடங்கத் திருத்தலங்களுள் முதலாவதானது. வீதி விடங்கர். அஜபா நடனம்.

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. (6/34)

''..ஐயா.. நீர் எப்போது இங்கே கோயில் கொண்டீர்!..'' - என்று - திருநாவுக்கரசர் ஆச்சர்யத்துடன் ஈசனைக் கேட்கும்படிக்கு -  தொன்மையான திருத்தலம்.

ஆதியில் - முசுகுந்த சக்ரவர்த்தி தொழுத திருத்தலம். இந்திரன் அழைத்ததன் பேரில் - தேவர் உலகு சென்று அசுரர்களை வெல்வதற்கு பேருதவி புரிந்தார். 

அவர் அங்கிருந்து பூவுலகு திரும்பும் முன் - அவருக்குத் தன் அன்பின் அடையாளமாக எதையாவது கொடுத்திருக்கலாம் தேவேந்திரன். அதை விடுத்து - 

''..நீர் வேண்டியதைக் கேட்பீராக!..'' -  என்றதும், 

''..நீ வணங்கும் வீதி விடங்கரைத் தருவாயாக!..'' -  என்றார், சக்ரவர்த்தி.

இந்த வீதி விடங்கத் திருமேனி - ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருமார்பினில் இருந்து வெளிப்பட்டதாகும்.

செய்வதறியாது தவித்தான் - இந்திரன்,

''..சரி.. நாளைக்குத் தருகிறேன்!..'' - என்று சொல்லி விட்டு - அதேபோல ஆறு வடிவங்களை உருவாக்கி - மூல விக்ரகத்துடன் சேர்த்து வைத்தான்.

''.. உண்மையானதை நீரே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்!..'' - என்றான். 

இறையருள் கூடி வர - மூல விக்ரகத்தில் - முசுகுந்தரின் தேடல் நிலைத்தது. அவருடைய தூய அன்பினில் வியந்த தேவேந்திரன் - மற்ற ஆறு வடிவங்களையும் அவருக்கே அளித்து விட்டான்.

அந்த ஏழு விடங்கத் திருமேனிகளுள் முதலாவதானதைத் தனது தலை நகராகிய திரு ஆரூரிலும் மற்ற ஆறினையும் இறைவன் அறிவித்தபடி மற்ற சிவாலயங்களிலும் ஸ்தாபித்தார்  முசுகுந்தர்.  

இருப்பினும், வீதிவிடங்கப் பெருமானை மறக்க இயலாத தேவேந்திரன் - ஏனைய வானவர்களுடன் - 

ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் வீதிடங்கப் பெருமானைத் தேடி வந்து வழிபடுவதாக  ஐதீகம். 

எனவே தான் - வீதி விடங்கரின் சந்நிதியில் - 

இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்யும் முகமாக - அதிகார மூர்த்தியாகிய நந்தியம் பெருமான் - இன்றளவும் நின்ற வண்ணமாக இருக்கின்றார்.




தேரா மன்னா செப்புவதுடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் 
புள்ளுறு புன்கண் 
தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடு நா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் 
நெஞ்சு சுடத் தான் தன் 
அரும்பெறற் புதல்வனை 
ஆழியின் மடித்தோன்!..



- என்று பாண்டியன் அவையில் - நீதி கேட்டு நின்ற - கண்ணகியால்  சுட்டிக் காட்டப்படும் -

சிபி சக்ரவர்த்தியின் வழித் தோன்றலாகப் புகழப்படும் -

மனுநீதிச் சோழன் ஆட்சி புரிந்த திருத்தலம்.

தேவார மூவரும் போற்றித் துதித்த திருத்தலம் திருஆரூர்.

மாணிக்கவாசகப் பெருமான் - ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!.. எனத் துதிக்கின்றார்.

கோயில் ஐவேலி, குளம் ஐவேலி - எனப் புகழப்படும் பெருமைக்கு உரியது திருஆரூர்.


தேவார மூவருள் - சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் அபிமானத் திருத்தலம். 

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் முதல் திருமணம்  - பரவை நாச்சியாருடன்  - இங்கே நிகழ்ந்தது. பின் திருஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணம் புரிந்து கொண்டதும் - ஏற்பட்ட ஊடலைத் தீர்க்க வேண்டி  -

வீதி விடங்கப் பெருமான் வீதியில் நடந்ததும் இங்கேதான்.

சங்கிலி நாச்சியாரைப் பிரிந்ததும் பார்வையிழந்த சுந்தரர் - முதற்கண்ணில் பார்வையைப் பெற்றது   - காஞ்சியில்!..

மறு கண்ணில் பார்வையைப் பெற்றது  - திருஆரூரில்!..

அடியார் புகழ் விளங்க - திருத்தொண்டத் தொகை எனும் நூலை - சுந்தரர் பாடியருளியது  - ஆரூர் திரு மூலத்தானத்தில்!..

ஈசன் வழங்கிய பொற்காசுகளை  - திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலத்தில் - அங்கே ஓடும் மணிமுத்தாற்றில் இட்ட  சுந்தரர் - 

அவற்றைத் திரும்ப எடுத்தது - இங்கே  கமலாலய திருக்குளத்தில்!.. 

அதுமட்டுமின்றி - பொன்னை மாற்றுரைத்து சரி பார்க்க அழைக்கப்பட்ட விநாயகர் அமர்ந்திருப்பது கமலாலயத் திருக்குளக்கரையில்!..

குண்டைக்கிழார் எனும் வள்ளல்  அளித்த நெல் மூட்டைகளை - இறைவனின் பூத கணங்களை - வேலையாட்களாகக் கொண்டு, 

நெல் மலையாகக் குவிக்கச் செய்து - அதை  மக்கள் அனைவருக்கும் சுந்தரர் வாரி வழங்கியதும் - திருஆரூரில் தான்!..


அல்லியங்கோதை தன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே!..(1/105) 
- என்று திருஞானசம்பந்தப் பெருமான் நமக்கு அடையாளங்காட்டுகின்றார்.

நிலைபெறுமாறு  எண்ணுதியேல் நெஞ்சே நீ வா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு (6/31)
நெஞ்சே!. நித்தமும் பெருமானின் திருக்கோயில் பணியேற்றால் - நீ, நிலைத்து வாழலாம்!.. என - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது இத்திருத்தலத்தில் தான்!..

திருஆரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்!..(7/39) 
- எனும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் திருவாக்கு ஒன்றே இத்திருத்தலத்தின் பெருமையை  விளக்கும்.

மூர்த்தி தலம் தீர்த்தம் திருவிழா தேர்  - என பெருஞ்சிறப்பினை உடைய தலம். 

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் 
போகமும் திருவும் புணர்ப்பானைப் 
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப் 
பிழையெலாம் தவிரப் பணிப்பானை 
இன்ன தன்மையன் என்று அறியொண்ணா 
எம்மானை எளிவந்த பிரானை 
அன்னம் வைகும் வயற்பழனத்து அணி 
ஆரூரனை மறக்கலுமாமே!..(7/59)
சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

சிவாய திருச்சிற்றம்பலம்.

8 கருத்துகள்:

  1. திரு ஆரூர் பெருமை உணர்ந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருஆரூர் பற்றிய அறியாத சிறப்பு தகவல்களுக்கு நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. திருஆரூர் பற்றிய அறியாத சிறப்பு தகவல்களும், எல்லாப் படங்களும் , ஆண்டாள் பாசுரமும் அழகோ அழகு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. திரு ஆரூர் பற்றிய சிறப்பான தகவல்கள். நான் இன்னும் செல்லாத பல கோவில்களில் இதுவும் உண்டு... .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்,..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..