நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆண்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 29, 2023

கோதையின் இல்லம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 16
 சனிக்கிழமை


காணொளி பார்க்கும் போதே 
மேனி சிலிர்க்கும்..

நன்றி
விஷ்ணு நிவாஸம்


ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகள் போற்றி..
ஸ்ரீ ஆண்டாள்
திருவடிகள் போற்றி..

ஓம் ஹரி ஓம்
***

வெள்ளி, ஜூலை 24, 2020

வெள்ளி மணி 2

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று மங்கலகரமான நாள்..

ஆடி மாதத்தின் பூர நட்சத்திரம்..
அம்பிகை - பொங்கும் மங்கலத்தில் பூத்து நின்ற நாள்!..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி - திருவையாறு
ஊழிகளின் தொடக்கத்தில் -
புவனம் முழுதையும் பூத்து அருள்வதற்காக - ஜகத் ஜனனியாகிய அம்பிகை - புஷ்பவதியாக பூத்து நின்றருளினள்.

அந்த மங்கலம் அனுசரிக்கப்படும் நாளே - ஆடிப் பூரம்!..

அம்மன் சந்நிதிகள் கோலாகலமாக விளங்கும் நாள் - ஆடிப்பூரம்!..

ஸ்ரீநீலாயதாக்ஷி

திருமயிலை ஸ்ரீ கற்பகவல்லி நாகை ஸ்ரீ நீலாயதாக்ஷி
திருச்சி ஸ்ரீ மட்டுவார்குழலி, திருஆனைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லி, இராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தனி

- என தமிழகம் எங்கும் அம்பிகைக்கு சிறப்பான வைபவங்கள் திருக் கோயிலின் உள்ளேயே நிகழ்கின்றன..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
திருவையாற்றில் - ஐயாறப்பருடன் இனிது உறையும் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகிக்கும் ஆடிப்பூர விழா நிகழ்ந்து கொண்டிருக்கின்றது..

நாளும் சிறப்பு அலங்கார ஆராதனைகள் செய்விக்கப்படுகின்றன..

ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கில் எழுந்தருளிய அம்பிகை - இரவில் ரிஷபம், சேஷம், கிளி, காமதேனு - என வாகனங்களில் வீதி வலம் கண்டாள்.

ஆடிப்பூரத்தன்று - திருத்தேரில் பவனி வருகின்றாள்..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
முந்தைய ஆண்டின் திருவிழாப் படங்கள் இவை..
ஸ்ரீ மட்டுவார்குழலி - திருச்சி
ஸ்ரீ மட்டுவார்குழலி - திருச்சி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
ஸ்ரீ அபிராமவல்லி
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!..(013)
-: அபிராமி பட்டர் :-

அன்னை ஸ்ரீ காந்திமதி
நெல்லையில் ஆடிப்பூர வைபவம் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் சிறப்புடன் நடைபெறுவது..

திருவிழாவின் நான்காம் நாளன்று நண்பகலில் காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம்..



வளையல்கள் மற்றும் மங்கலங்களைச் சமர்ப்பித்து - காந்திமதியம்மனை பக்தர்கள் வழிபடுவர்.

திருவிழாவின் பத்தாம் நாள் அம்மன் சந்நிதியின் முன்னுள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கொட்டு வைபவம்...

இந்த வைபவங்கள் எல்லாம் தற்போது நிலவும் சூழ்நிலையால் திருக்கோயில் வளாகத்திலேயே நிகழ்கின்றன..

நெல்லை ஸ்ரீ காந்திமதியம்மையின் திருக் கோலங்கள் நெல்லை பக்தர் பேரவையினரால் வெளியிடப்பட்டவை..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
மங்கலங்களுடன் மங்கலமாக -
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருஅவதாரத் திருநாளாகவும் திகழ்கின்றது - ஆடிப்பூரம்!..







ஸ்ரீ வில்லிபுத்தூர் திருவிழாவின் ஒன்பதாம் திருநாள் திருத்தேரோட்ட்ம்.. 

அன்றைய தினம்- ஸ்ரீரங்கத்திலிருந்து -
ஸ்ரீ ஆண்டாளுக்கும் ஸ்ரீ ரங்க மன்னாருக்கும் வஸ்திர மரியாதை செய்யப்படுவது வழக்கம்...

வஸ்திர மரியாதையை ஏற்றுக் கொண்டு - ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருடன் திருத் தேரில் எழுந்தருளும் திருக்காட்சியைத் தரிசிக்க ஆயிரக் கணக்கில் பக்தர்கள் திரள்வது வழக்கம்....

அந்த கோலாகலம் எல்லாம் இனி வரும் ஆண்டுகளில் தான்...

ஆடித் தள்ளுபடி!..
அந்தத் தள்ளுபடி!.. இந்தத் தள்ளுபடி!.. 
-  என அலைவோர் மத்தியில் - ஐயனையும் அம்பிகையையும் 
வழிபட்டு உய்வடைவோர் ஆயிரம்.. ஆயிரம்..

எத்தனை எத்தனையோ மங்கலங்களுக்கு இருப்பிடம் ஆடி மாதம்!..

இந்த நாட்களில் - ஒருவருக்கொருவர் முகமன் கூறி - அன்பினைப் பரிமாறிக் கொள்ளுவதே சிறந்த நலன்களுக்கு அடிப்படை என்கின்றனர் ஆன்றோர்.

ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் - வீண் ஆடம்பரமின்றி -
ஏழை எளியவர்க்கு கூழ் வார்த்து வேண்டுதல் செய்வது அன்பின் வெளிப்பாடு..

மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல் இவற்றுடன் தாம்பூலம் வைத்து அக்கம்பக்கம் அண்டை அயலாருடன் நட்பைப் பேணுதல் சிறப்பு..

அதிலும் முக்கியமாக -

ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இயன்றவரை புத்தாடை வளையல்களை வழங்கி மகிழ்வித்தால் - அம்பிகையை மகிழ்வித்ததாக ஆகின்றது..

அம்பிகை மனம் மகிழ்ந்தால் -
நிலையான செல்வம் நமது வீட்டில் குடி கொள்ளும் என்பது திருக்குறிப்பு...

சூழ்நிலையை அனுசரித்து
பழைய பதிவு ஒன்றினை ஒழுங்கமைத்து
இன்று வெளியிட்டுள்ளேன்...

ஆயுளும் ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் பெருகி - இல்லத்தில்
மகிழ்ச்சி நிலையாக குடிகொள்வதில் அனைவருக்கும் விருப்பம்!..

அவ்வண்ணம் நிகழ்வதற்கு அம்பிகையை வேண்டுவோம்!..

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து..

ஓம் சக்தி ஓம்..
* * *

திங்கள், ஜனவரி 13, 2014

மார்கழிப் பனியில் - 29

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 29. 


சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன் 
பொற்றாமரை அடியே போற்றும்பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ 
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது 
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா 
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு 
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் 
மற்றைக் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!..

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 30.


வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை 
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி 
அங்கப்பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் 
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன 
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே 
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் 
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!.. 


திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே 
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே 
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே 
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தாள் வாழியே 
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..








இந்த அளவில் திருப்பாவை பாடல்கள் நிறைவடைகின்றன.

என் இல்லத்தில்
சுடர் விளக்கேற்றி வைத்த சுடர்க்கொடியாளே
ஏழேழ் பிறவிக்கும் - என் சிந்தை உன் திருவடியில்!..

அரங்கன் திருவடிகளே சரணம்!..
ஆண்டாள் திருவடிகளே சரணம்!..

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

தஞ்சை தளிக்குளம் - தஞ்சாவூர்

  
இறைவன் - ஸ்ரீ பிரகதீஸ்வரர் - பெருவுடையார்
அம்பிகை - ஸ்ரீபிரகந்நாயகி - பெரியநாயகி
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - சிவகங்கை

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் (6/51/8) - தாம் சமணர் தம் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடந்தபோது தன்னை மீட்டெடுத்த சிவபெருமான் - உறையும் திருத்தலங்களைக் குறிப்பிட்டுக் கூறும் போது தஞ்சைத் தளிக்குளத்தார் என போற்றிப் புகழ்வதனைக் கொண்டு  - தஞ்சையின் பழைமையினை அறிந்து கொள்ளமுடியும். மேலும் -

இறைவன் விரும்பி உறையும் தலங்களைப் புகழ்ந்து -

கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறும்
குளம் களம் கா என அனைத்துங் கூறுவோமே!.. 

- என, அப்பர் பெருமான் திருத்தாண்டகத்தில்  திருத்தலங்களை குறிக்கும் போது -  தஞ்சை (6/70/8) எனவும் தளிக்குளம் (6/71/10) எனவும்  அருள்கின்றார்.

திருஞானசம்பந்தப்பெருமான் தாம் பாடியருளிய க்ஷேத்ர கோவையில் குளம்   என மறைபொருளாக தளிக்குளம் குறிப்பிடப்படுவதாகக் கருதுவர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் க்ஷேத்ர கோவையில் (7/12/9) குறிப்பிடும் தஞ்சை -  இன்றைய தஞ்சை அல்ல..  அது வேறு ஒரு ஊர் - என்று வாதிடுவோர்களும் உண்டு.

மகா நந்தி
ஆழ்வாராதிகள் - திருப்பாசுரம் பாடி - திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்தருளும் போது - திருமங்கையாழ்வார் - மாமணிக்கோயில் விளங்கும் திருத்தலத்தினை - 

வம்புலாம் சோலை மாமதில் தஞ்சை - என்று புகழ்கின்றார். 

சைவ வைணவ நெறிகளில் சற்றே மாற்றத்துடன் குறிப்பிடப்படுகின்றது -  தஞ்சையின் தலவரலாறு. 

அரக்க குணம் படைத்த தஞ்சகன் (தஞ்சன்),   தன் பெயராலேயே இந்த ஊர் விளங்க வேண்டும் - என வீர நரசிங்கப் பெருமாளிடம் (கோடியம்மனிடம்) கேட்டுக் கொண்டதாலேயே - தஞ்சாவூர் என வழங்கலாயிற்று என்பதே ஐதீகம். 

எனினும் - பராசரர் பர்ணசாலை அமைத்து தவம் இயற்றியதால்  பராசர க்ஷேத்ரம் எனவும், மஹாவிஷ்ணு வராக மூர்த்தியாகி தண்டகனை அழித்ததால் வராஹ க்ஷேத்ரம் எனவும், குபேரன் வழிபட்டதால் அளகாபுரி எனவும், இத்தலத்தில் அனைத்து உயிர்களும் ஈசனை தஞ்சமடைந்து நின்றதால் தஞ்சபுரி எனவும் - வழங்கப்பட்ட பெருமையினை உடையது தஞ்சை.

இத்தனைப் புகழுடைய தஞ்சையில்  - தஞ்சைத் தளிக்குளம் எனும் திருக் கோயில் எங்கே இருக்கின்றது என்றால் - யாரும் அறிய மாட்டார்கள்!..

சிவகங்கை குளம்
பலரும் கூறுகின்றார்கள் - இன்றைய தஞ்சையில் சிவகங்கைப் பூங்காவில் - சிவகங்கைக் குளத்தின் நடுவில் உள்ள திட்டில் அமைந்துள்ள சிவலிங்கமும் நந்தியுமே - தஞ்சைத் தளிக்குளம்!.. - என்று. இந்தக் கூற்றும் ஒரு யூகம் தான்!..

இன்னொரு புறம்  - தஞ்சையின் தனிப்பெரும் அடையாளமாக வானுயர்ந்து விளங்கும் ராஜராஜேஸ்வரம் எனும் பெரிய கோயிலின் மேற்குத் திருச்சுற்றில் - விளங்கும் சிவலிங்கங்கங்களுக்கு மத்தியில் நடுநாயகமாக  -

அம்பிகை அருகிருக்க நந்தியுடன் ஒரு சிவலிங்கத்திருமேனி திகழ்கின்றது. 
இத்திருமேனிதான் - தளிக்குளத்தார் - எனவும் கூறுவர்!.. எது எப்படியோ -

''..ராஜராஜனே!.. உன் பெயரை நம்நாட்டு மக்கள் மட்டுமன்றி  இந்த உலகமே போற்றிப் புகழ வேண்டும்.  தஞ்சை மும்முடிச் சோழமண்டலத்தின் தலைநகர் என தலைநிமிர்ந்து விளங்குவதைப் போல தஞ்சையில் விளங்கும் தளிக் குளத்தார் திருக்கோயிலும்  சைவசமயத்தாரும் கலைவல்லுனரும் போற்றும் படிக்கு வானளாவ உயர்ந்து விளங்க வேண்டும்!..'' 

- என , குந்தவை நாச்சியார் தன் தம்பியிடம் அன்புடன் கேட்டுக் கொண்டதன் விளைவே -
 
ஸ்ரீ தட்க்ஷிண மேரு

ஸ்ரீ தட்க்ஷிண மேரு   - என வானாளவ விளங்கும் தஞ்சை ராஜராஜேஸ்வரம்!..

நோக்கும் இடம் எங்கும் நீர் வளமும் நில வளமும் நிறையப் பெற்று - பச்சைப் பசேல் என விளங்கும் - குளிர்ச்சியான வயல்களால் சூழப்பட்டிருந்ததால் - 
 தண் (குளிர்ந்த) + செய் (வயல்) தண்செய் = தஞ்சை.

சோழர் தம் வரலாறு புராணத்துடன் இணைந்த முசுகுந்த சக்ரவர்த்தி புறாவினுக்காக தன் சதையை அரிந்து கொடுத்த சிபி சக்ரவர்த்தி நீதியின் பொருட்டு தன்மகனை தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன் ஆகியோருடன் தொடங்கி - 

இளஞ்சேட்சென்னி, கரிகாலன், கிள்ளிவளவன், கோச்செங்கணான், பெருநற்கிள்ளி - எனத் தொடர்ந்து -  அதன் பின் ஏறத்தாழ அறுநூறு ஆண்டுகள் புகழ் மங்கிக் கிடந்து,

கி.பி. 848ல் விஜயாலய சோழன் தஞ்சையைத் தனது தலைநகராகக்  கொண்டான். 

அலங்கார ஸ்வரூபிணி
அதன் பின்  இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக  அஷ்ட லக்ஷ்மிகளும் சோழர் பக்கமே இருந்தனர்.

கி.பி.985ல் பட்டமேற்று அரியணையில் அமர்ந்த ராஜராஜ சோழ மாமன்னன் - தனது இருபத்தைந்தாவது ஆட்சி ஆண்டில் எழுப்பியதே

தஞ்சை ராஜராஜேஸ்வரம்!..

நர்மதைக்குத் தெற்கே இருந்து  குமரி முனை வரையிலான தமிழகத்திற்கும் கடல் கடந்த ஈழத்திற்கும் முன்னீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரம் எனப்பட்ட மாலத்தீவுகளுக்கும் - 

தலைநகராக விளங்கியது - தஞ்சை மாநகர்!..

தஞ்சை மாநகரில் ராஜராஜ சோழன் எழுப்பிய திருக்கோயிலின் அருமை பெருமைகள் முழுமையாக இதுவரையிலும் சொல்லப்படவில்லை.

பார்க்கும் இடமெங்கும் ஒரு நீக்கமற நிறைந்து விளங்கும் பரிபூரணனாகிய பரம் பொருள் -  திருக்கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் - ஒவ்வொரு முறையும் - ஒரு உன்னதத்தினை உணர்த்திக் கொண்டிருக்கின்றார்.

பசித்துக் கிடந்தவனுக்கு - பாற்கடல் அமுதம் கிடைத்தாற்போன்றதொரு பரவசம்!..

கி.பி. 1003ல் திருக்கோயில் பணிகள் தொடங்கப் பெற்றன. பச்சைமலையில் இருந்தும் நார்த்தாமலையில் இருந்தும் கொண்டு வரப்பட்ட கருங்கற்கள் கலை வடிவங்களாக வானுயர்ந்து எழுந்த வேளையில் -


நர்மதை நதியில் இருந்து பெறப்பட்ட பாணம்!.. ஆவுடையில் சரியாகப் பொருந்தியும்  - அஷ்டபந்தன மருந்து இறுகாமல்  - இளகி நின்றது.

பெருந்தச்சனாகிய வீரசோழ குஞ்சரமல்லனும் மற்றையோரும் தவித்தனர்.

இவர்களுடைய தவிப்பினை -  இமாசலத்தில் பனிமலைச் சிகரத்தில் நிஷ்டையிலிருந்த ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி அறிந்தார். பழனியில் ஸ்ரீ தண்டாயுதபாணியின் சந்நிதியில் யோகநிலையில் இருந்த சித்தர் பெருமான் போகர் அறிந்தார்.

ஸ்ரீ வராஹி அம்மன்
இருவரும் பரிபாஷையில் கலந்தனர். போகர் தனது மாணாக்கராகிய கருவூராரை அழைத்தார். அவரிடம் மறை பொருள் உணர்த்தி  - அஷ்ட பந்தனம் இறுகுவதற்கான மாற்று  ஒன்றினையும் வழங்கினார். 

வான மார்க்கமாக - தஞ்சைக்கு விரைந்து வந்த கருவூரார் - கருவறைக்குள் நுழைந்து -  இறுகாமல்  அடம் பிடித்துக் கொண்டிருந்த அஷ்ட பந்தனத்தில் தனது வாயிலிருந்த தாம்பூலத்தினை உமிழ்ந்தார். அனைவருக்கும் அதிர்ச்சி!..

ஆனால் - அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே - இளகி இழைந்த அஷ்ட பந்தனம் - இறுகியது.

ஐயன் கருவூரார்
ஒரு கணம்!.. பிரமிப்பின் எல்லைக்குச் சென்ற அனைவரும் ஐயன் கருவூரார் திருவடிகளில் ஹரஹர மகாதேவா என்று முழங்கியபடி வீழ்ந்து வணங்கினர்.

ஐயன் கருவூராரோ - இறைவனை வணங்கும்படிக்கு  காட்டினார்.

அஷ்டபந்தனம் இறுகுவதற்கென போகர் வழங்கிய குளிகை - மகத்தானது. மகா வீரியமானது. அதைக் கையாளும் திறன் படைத்தவர் கருவூரார் ஒருவரே!..

அந்த குளிகையுடன் நீரோ காற்றோ பட்டால் - விபரீத விளைவுகள் உண்டாகும். எனவே தான் அந்தக் குளிகையை தாம்பூலத்துடன் தனது வாய்க்குள் வைத்துக் கொண்டார் கருவூரார்.

இத்திருத்தலத்தில் - அருட்சித்தரான கருவூரார் நிகழ்த்தும் அற்புதங்களுக்கு அளவேயில்லை.

வெள்ளையம்மாள்
தஞ்சை ஸ்ரீராஜராஜேஸ்வரமுடைய பெருமானை - திருஇசைப்பா எனும் பத்துப் பாடல்களால் புகழ்ந்து பாடினார் கருவூரார்.

அன்று முதல் ஆயிரம் ஆயிரமாய் அன்பர்கள்  -  தரிசனம் செய்தாலும் அவர்கள் கண்களில் நிறைவது - திருக்கோயிலின் பிரம்மாண்டமே!..


ஆயினும்  - இத்திருக்கோயிலில் அபூர்வ  ரகசியங்கள் நிறைந்திருக்கின்றன.
உணர்வு ஒன்றி உள்குவார்க்கு அவை - உணர்த்தப்படுகின்றன.

ஸ்ரீ பிரகந்நாயகி உடனாகிய பிரகஹதீஸ்வரர் திருக்கோயிலைப் பற்றி இன்னும் எழுத வேண்டும். அதற்கு அந்த பெருமானே அருள் புரிய வேண்டும்.

பன்நெடுங்காலம் பணி செய்து பழையோர்
தாம்பலர் ஏம்பலித்து இருக்க
என்நெடுங்கோயில் நெஞ்சு வீற்றிருந்த 
எளிமையை என்றும் நான் மறக்கேன் 
மின்நெடும் புருவத்து இளமயில் அனையார் 
விலங்கல் செய் நாடக சாலை 
இன்நடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை 
இராசராசேச்சரத்து இவர்க்கே!..
கருவூரார்

சிவாய திருச்சிற்றம்பலம்.

ஞாயிறு, ஜனவரி 12, 2014

மார்கழிப் பனியில் - 28

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 28.



கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் 
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் 
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் 
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு 
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது 
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை 
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே 
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!..

 ஓம் ஹரி ஓம்

ஆலயதரிசனம்

கரந்தை - தஞ்சாவூர்


இறைவன் - ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீபிரஹந்நாயகி
தலவிருட்சம் - வன்னி
தீர்த்தம் - சந்திர தீர்த்தம் - வசிஷ்ட தீர்த்தம்.

பிரம ஞானிகளுள் தலை சிறந்தவரான - வசிஷ்டமகரிஷி, உலவாப் பதியாகிய தென்குடித் திட்டையில் சிவபூஜை செய்த புண்ணியத்தின் நற்பயனாக - தான் செய்து வரும் நித்யாக்னிஹோத்ரம் முதலான ஆசார அனுஷ்டானங்களுக்கு உதவும் வகையில் தெய்வப் பசுவாகிய காமதேனுவைப் பெற்றார். 

வசிஷ்ட மகரிஷி - அருந்ததி தம்பதியருடன்  இருந்து, அவர்களுடைய தவ நெறிகளில் காமதேனுவும் தன் மக்களாகிய நந்தினி, கமலினியுடன் பங்கெடுத்துக் கொண்டது. 

அதன் பயனாக - 

தெய்வப் பசுக்களாகிய -  நந்தினியும் , கமலினியும் தங்கள் தாயாகிய காமதேனுவைப் போலவே எவ்வுலகத்துக்கும் செல்லும் ஆற்றலையும், தீய அரக்கர்களை எதிர்க்கும் சக்தியையும் பெற்றன.

இத்தகைய சூழலில் - வசிஷ்ட மகரிஷிக்கு - கால மாற்றங்களினால் - தோல் நோய் ஏற்பட்டது. 

இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவிக்கும் மகோன்னதமான குணம் படைத்தவராகிய வசிஷ்ட மகரிஷி - இதன் காரணத்தினை அறிய விரும்பி  - இறைவனிடம் வேண்டி நின்றார்.

''..உலகோர் உய்வடையும் பொருட்டு - இத்திருத்தலத்தின் தென்மேற்கு மூலையிலுள்ள கரந்தை வனத்தில் எம்மை பிரதிஷ்டை செய்வீராக!. அங்கே உமக்கு நலமும் பலமும் கிடைக்கும்!..''  - என ஈசன் மறுமொழி அளித்தனன்.   

அந்த அளவில் பின் வரும் ஒரு நன்மையின் பொருட்டு வசிஷ்டர் அருந்ததி அம்மையுடன் தென்மேற்காகப் பயணித்து ஈசன் குறிப்பிட்ட கரந்தை வனத்தை அடைந்தார். அங்கே வசிஷ்ட மகரிஷி தனது - நித்ய வழிபாட்டுக்கு என ஒரு குளத்தை உருவாக்கினார். 

அக்குளத்தை சந்திரன் தனது அமுத கலைகளால் நிரப்பினான். அக்குளத்தில் நீராடி - ஈசன் அருளியபடி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் வசிஷ்டர். 

அவருடன் அந்த வனத்திலிருந்த ஏனைய முனிவர்களும் யாக வேள்வி பூஜைகளில் கலந்து கொண்டனர்.

இதை அறிந்த யமதர்மராஜன்  - 

கரந்தை வனத்திற்கு வந்து வசிஷ்டரையும் அவர் ஸ்தாபித்த சிவலிங்கத்தையும் பணிந்து வணங்கி நின்றான். 

சாயாதேவியின் சாபம் யமதர்மனை விட்டு விலகியது.  

சாப விமோசனம் பெற்று தென் திசைக்குத் தலைவன் ஆனான். 

வசிஷ்ட மகரிஷியை வந்து வணங்கிய ஆதிசேஷன் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரரின் அனுக்ரகத்தால் - தளர்ச்சியின்றி  பூவுலகைத் தாங்கும் திறன் பெற்றான். 

அத்துடன் தன் இனத்தவரால்  - எட்டுத் திக்கிலும் ஒரு குரோசம் (இரண்டரை மைல் = 4 கி.மீ) தொலைவுக்கு விஷ பயம் கிடையாது என வாக்கு கொடுத்தான்.

கரந்தை என்பது எது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் - திருநீற்றுப் பச்சை எனும்  மூலிகைச் செடி என்று கொள்வர்.

இது துளசி இனத்தை (OCIMUM BASILICUM.) சேர்ந்தது. 


திருநீற்றுப் பச்சிலையின் சாற்றில் வசம்பைக் குழைத்துத் தடவினால் முகப் பருக்கள் குணமாகும்.   

திருநீற்றுப் பச்சிலையின் சாற்றை  நோய் கண்ட இடத்தில் பூசி வர - படை முதலிய சரும நோய்கள்  எளிதில் மறையும். 

திருநீற்றுப் பச்சையின் இலை, வேர், விதை - என அனைத்தும் பலவிதமான மருத்துவ குணங்களை உடையன. அவற்றைத் தகுதியான சித்த மருத்துவர் வழிகாட்டுதலின் பேரிலேயே பயன்படுத்த வேண்டும். 

அது அனைவருக்கும் எளிதானது அல்ல என்பதினால் தான் ஈசன் வசிஷ்ட மகரிஷியின் மூலமாக ஒரு திருவிளையாடலை இத்தலத்தில் நடத்தினான்.

இப்போது கூட - திருநீற்றுப் பச்சையின் அருங்குணங்களைத் தேடிப் பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக அருட்குரு கோரக்க சித்தர் எதிரில் வந்து அருள் பாலித்தார்.

ஒருகணம்  - அதிர்ச்சி, ஆச்சர்யம், ஆனந்தம்!..

அருட்குரு கோரக்க சித்தர் 
திருவடிகள் போற்றி!.. போற்றி!..

இகபர செளபாக்யங்களை அருள்வதற்கு அவதாரம் செய்த ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு குருவாக விளங்கியவர்  - ஸ்ரீவசிஷ்ட மகரிஷி.

அவர் இங்கே வந்து சிவபிரதிஷ்டை செய்து தவமிருக்கின்றார் என்பதை அறிந்த  - அருட்குரு கோரக்க சித்தர் - ஸ்ரீவசிஷ்ட மகரிஷியை வந்து வணங்கி இன்புற்றிருக்கின்றார்.  அது என்றோ நடந்த விஷயம் இல்லை. 

இன்றும் - அருட்குரு கோரக்க சித்தர் ஒவ்வொரு  வியாழன் அன்றும் இரவு குரு ஹோரையில் - கரந்தை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்து ஸ்வாமியையும் ஸ்ரீவசிஷ்ட மகரிஷியையும் வணங்கி மகிழ்கின்றார் என்பது நிதர்சனம்.

அதனை முன்னிட்டு - 

கரந்தை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள  அருட்குரு கோரக்க சித்தர் பீடத்தில் - வியாழக்கிழமை மற்றும் பெளர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள்,   அவர்தம் அடியார்களால் சிறப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. 

அருட்குரு கோரக்க சித்தர் - தம் அடியார்களுடன் எளியேனும் ஒருவன். எனவே,  அடியார்களுடன் உடன் வரும் அருள் வள்ளலான என் குரு - என்னை வழிநடத்த  எதிரில் வந்தார்.

தனது சந்திரரேகை எனும் ஞான நூலில் திருநீற்றுப் பச்சிலை (144 -145) - சாபமற்ற மூலிகை - குரு மூலிகை - வில்வம், துளசி ஆகியனவற்றுக்கு இணையானது என்று அருளுகின்றார். 
 
திருக்கோயிலுக்கு எதிரில் உள்ள வசிஷ்ட தீர்த்தத்தில் நீராடி கரிகால் சோழன் தோல் நோய் நீங்கப் பெற்றதாக ஐதீகம்.

வசிஷ்ட தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாள்கள் மூழ்கி, வசிஷ்டேஸ்வரரை வழிபட்டால் சரும நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஆனால் , இன்று திருக்குளத்தின் நிலை பரிதாபமாக உள்ளது.

இரண்டாம் திருச்சுற்றில் - கோயிலின்  நான்கு மூலைகளிலும் நான்கு விநாயகர் சந்நிதிகள் உள்ளன.

வசிஷ்டர்  லிங்க பிரதிஷ்டை செய்ததால் - இறைவன் ஸ்ரீவசிஷ்டேஸ்வரர். 

ஆலயத்தின் கிழக்கு வாசலில் திருக்குளமானதால் - கிழக்கு முகமாக கோயிலினுள் நுழைய முடியாது. கிழக்கு ராஜகோபுரம் கிடையாது.  தெற்கு கோபுர வாசல் தான் பிரதானம்.  மூன்று நிலை கோபுரம்.

அம்பிகை தனி சந்நிதியில் திகழ்கின்றனள். தெற்கு நோக்கிய அம்பிகைக்கு தனியே ஒரு கொடிமரம். தெற்கு வாசலில் அம்பிகையை நோக்கியவாறு பிரத்யேக நந்தி மண்டபம் விளங்குகின்றது.

இறைவன் கருவறை கோஷ்டத்தில் உள்ள சிற்பங்கள் மிகுந்த கலை துணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

தெற்கு கோஷ்டத்தில் விரித்த சடையுடன் முயலகன் மீது காலை ஊன்றி நடமாடும்  நடராஜப் பெருமானின் இருபுறமும் அப்பரும் திருஞானசம்பந்தரும் திகழ்கின்றனர். 

கோஷ்டத்தில் தட்க்ஷிணாமூர்த்தியை அடுத்து வசிஷ்டருக்கும் அருந்ததி அம்மையாருக்கும் விக்ரகங்கள் உள்ளன. 

கோஷ்டத்தில்  விநாயகர், பிட்க்ஷாடனர், கங்காதரர், கங்காளர்,லிங்கோத்பவர், வலம் இடம் மாறி விளங்கும் அர்த்தநாரீஸ்வரர், காலாந்தகர், துர்கை - என வெகு சிறப்புடைய திருமேனிகள் விளங்குகின்றன. 

அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தில் - உமை வலப் புறமும், ஈசன் இடப்புறமும் மாறித் திகழ்கின்றனர்.

மன்னன் கரிகால் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில். 

பின்னர் முதலாம் பராந்தக சோழரால்  கருங்கல் கோயிலாக சிற்பச் செறிவுடன் திகழ்கின்றது. கருவறைச் சுவரில் நிறைய கல்வெட்டுக்கள்  உள்ளன.

பெருந்திருவிழாக்கள்  - தேரோட்டத்துடன் நிகழ்ந்த தலம்.  ஆனால், இப்போது தேர் போய்ச் சேர்ந்த இடம் தெரிய வில்லை. 

பிரதோஷம், சோமவாரம், பெளர்ணமி, திருக்கார்த்திகை முதலான விசேஷங்கள் சிறப்புடன் நிகழ்கின்றன. 

தைப்பூச நன்னாளில் இறைவனுக்கும் அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம். அதே நேரத்தில் - வசிஷ்டர் - அருந்ததி தம்பதியருக்கும் திருக்கல்யாணம் வெகு சிறப்புடன் நிகழும்.

தீண்டுவீராகில் எமைத் திருநீலகண்டம்  - என்று மனையாள் சூளுரைத்ததால் - இளமையைத் துறந்த திருநீலகண்ட நாயனாருக்கு வாழ்வும் வளமும் நல்கிய வைபவம் ஆண்டுதோறும் நிகழ்கின்றது. 

ஆண்டு தோறும் மாசி மாதம் உதயத்தின் போது கதிர்கள் கருவறையில் படர்ந்து இறைவனின் திருப்பாதம் பணிய சூரிய பூஜை நிகழும் திருத்தலம். 

திருநாவுக்கரசர் - தன் திருவாக்கினால் - இத்தலத்தை க்ஷேத்ர கோவையில் குறிப்பிட்டுள்ளார். 

இன்று திருக்கோயில் கருணாசுவாமி கோயில் எனவும் திருத்தலம் கரந்தை எனவும் கரந்தட்டாங்குடி எனவும் வழங்கப்படுகின்றது.

தஞ்சை மாநகரில் வடவாற்றின் -  வட கரையில்  விளங்கும் கரந்தையில் தான், 


1919ஆம் ஆண்டிலேயே - தமிழைச் செம்மொழி என அறிந்தேற்க வேண்டும் எனவும் தமிழுக்குப் பல்கலைக் கழகம் அமைக்கவேண்டும் எனவும் முழங்கிய  பெருந்தகை -

தமிழவேள் த. வே. உமாமகேசுவரனார் அவர்களின் பெருமுயற்சியினால் உருவான கரந்தைத் தமிழ்ச் சங்கம் உள்ளது. 

கரந்தைத் தமிழ்ச்சங்கம் பற்றி மேலும் நயமுடன் கூறுகின்றார் அன்பின் திரு. - கரந்தை ஜெயக்குமார்   அவர்கள்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு, திருக்காட்டுப் பள்ளி, பாபநாசம் செல்லும் பேருந்துகள் கரந்தை வழியாகவே செல்கின்றன.

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி
கருந்திட்டைக்குடி கடையக் குடிகா ணுங்கால்
விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக் குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே!..(6/71)
திருநாவுக்கரசர். 

சிவாய திருச்சிற்றம்பலம்.

சனி, ஜனவரி 11, 2014

மார்கழிப் பனியில் - 27

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 27. 


இன்று பாவை நோன்பின் மிக முக்கியமான, உயர்ந்த நாளான  - கூடார வல்லி. 

பாவை நோன்பு நோற்கும் போது - துறந்த பொன் அணிகளை மீண்டும் சூடிக்கொண்டு புத்தாடை அணிந்து புத்தரிசியில் பாற்சோறு பொங்கலிட்டு நிறைந்த நெய்யுடன் அனைவருடனும் கூடி இருந்து, கோவிந்தனைக் கும்பிட்டு குதுகலமுடன் உண்டு மகிழ்வதாக  - கோதை நாச்சியார் குறிப்பிடுகின்றாள்.

அந்த வைபவத்தினை அனைவருக்கும் பிரசாதிக்கும்படி பெருமானை வேண்டிக் கொள்வோம்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் 
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் 
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் 
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே 
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் 
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு 
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் 
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

இன்று வைகுந்த ஏகாதசி

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!..
நம்மாழ்வார்

ஆலயதரிசனம் 
  
தஞ்சை


1. தஞ்சை மாமணிக் கோயில்
மூலவர் - நீலமேகப்பெருமாள்
தாயார் - செங்கமலவல்லி 
விமானம் - செளந்தர்ய விமானம்




2. மணிக்குன்றம்
மூலவர் - மணிக்குன்றப்பெருமாள்
தாயார் - அம்புஜவல்லி 
விமானம் - மணிக்கூட விமானம்




3. தஞ்சை யாளி நகர்
மூலவர் - வீர நரஸிம்மன்
தாயார் - தஞ்சை நாயகி 
விமானம்  - வேதசுந்தர விமானம்



மூன்று திருக்கோயில்களிலும் எம்பெருமான் வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். ஸ்ரீபராசர மகரிஷி ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷி ஆகியோருக்குப் பிரத்யக்ஷம். 

தலவிருட்சம் - மகிழமரம். தீர்த்தம்  - வெண்ணாறு. ப்ரத்யேகமாக அம்ருத தீர்த்தம், கன்னிகா புஷ்கரிணி, சூர்ய புஷ்கரிணி, ஸ்ரீ ராமதீர்த்தம் ஆகியனவும் விளங்குகின்றன.

திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகிய புண்ணியர் தம் திருவாக்கினால் மூன்று திருமேனிகளுடன் கூடிய சாந்நித்யங்களை ஏக திவ்ய தேசமாக மங்களாசாசனம் செய்விக்கப்பட்டதிருத்தலம்.

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் பெரும்பதி - தஞ்சையம்பதி. 

பிரம்மாண்ட புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், சோழ மண்டல சதகம், பிரகதீசுவர மகாத்மியம் முதலிய நூல்கள் இத்தலத்தின் மகத்துவத்தைப் பற்றி சிறப்பித்துப் புகழ்கின்றன.

வானளாவ உயர்ந்த - அடர்ந்த சோலைகள் சூழ்ந்த விசாலமாக விளங்கிய தஞ்சபுரி. இதன் பேரழகும்  வளமும் பராசர மகரிஷியை மிகவும் கவர்ந்தது. தம் சீடர்களுடன் இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து  தவம் மேற்கொண்டார். 

பராசர மகரிஷி தேவலோகத்தில் தான் பெற்ற அமுதத்தைத் தன் குடிலுக்கு அருகில் இருந்த புஷ்கரணியில் கலந்து விட - இந்த அமிர்த புஷ்கரணியால் அந்த இடம் மேலும் செழித்து விளங்கியது. அங்கிருந்த சகல உயிர்களும் நோய் நொடியின்றி மகிழ்ந்து வாழ்ந்தன.

இந்நிலையில் வடக்கே இருந்த தண்டகாரண்யம் மழையின்றி வறண்டு போனது. அங்கிருந்து வளமையான பகுதியினைத் தேடி தென்திசை நோக்கி வந்தவர்கள் - தஞ்சன், தாரகன், தண்டகன் ஆகியோர்.  


வானளாவிய மரங்களுடன் சோலைகளுடன் செழித்து விளங்கிய பகுதியில்  குடியேறினர்.  வாழ்வும் வளமும் பெருகியதால் அவர்களுடைய நற்குணங்கள் உருமாறின. அரக்க குணங்களுக்கு ஆட்பட்ட அவர்களால் - முனிவர்களுக்கு தீராத இடையூறு ஏற்பட்டது.

பராசர மகரிஷி இதனை முறையிட்டு  ஸ்ரீமந் நாராயணனைக் குறித்துத் தவம் செய்தார். 

மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கிய பெருமாள், முதலில் நீலமேகமாகத் தோன்றி அமிர்த புஷ்கரணி நீரைப் பருகினார். 

பின்னர் - ஸ்ரீநீலமேகப் பெருமாளாய் அவதாரம் செய்தார்.


தண்டகன் -  பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். பெருமாள் ஸ்ரீவராஹ மூர்த்தி எனத் தோன்றி  பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பெருமாள் வராஹ மூர்த்தியாக எழுந்ததால் -

இந்த தலத்துக்கு வராஹ க்ஷேத்ரம் எனும் பெயரும் உண்டு.

தாரகனை - பெருமானுடன் தோன்றிய ஸ்ரீகாளி வதைத்தருளினாள்.

தஞ்சகன் கோரமான யானை வடிவத்துடன் எதிர்க்க - மகாவிஷ்ணு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி என எதிர்நின்றார். 

புகழ் தஞ்சை யாளியைப் பொன் பெயரோன் தன் நெஞ்சம் அன்றிடந்தவனை -  

- என திருமங்கை ஆழ்வார் புகழ்ந்துரைப்பது - இந்தத் திருக்கோலத்தையே!.

பெருமானின் திருக்கரங்களுக்குள் சிக்கினான் தஞ்சகன்.  ஸ்பரிச தீட்சை ஆனதால் - அந்த அளவில் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் நீங்கப் பெற்ற அவன் பெருமானைப் பணிந்து -

என் பொருட்டு நரசிம்மமூர்த்தியாக வந்த தாங்கள் இங்கேயே தங்கி சகல மக்களுக்கும் அருள வேண்டும். எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்!.. - என வரங்கேட்டான். 

பெருமாளும் அவ்வாறே  அருள் புரிந்தார்.


அரக்கர்களை அழித்து  அனைவரையும் காப்பாற்றினார். அதன்பின்,  ஸ்ரீபராசர மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமந் நாராயணன், இத்தலத்திலேயே ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாளாய் எழுந்தருளி, இன்றளவும் சேவை சாதிக்கிறார்.

அசுரர்களை அழித்து கருட வாகனத்தில் தேவியுடன் பெருமாள் காட்சி கொடுத்த நாள் -  வைகாசி  திருஓணம். 

அந்நாளை அக்காலத்திலேயே சிறப்புற பெருவிழாவாகக் கொண்டாடினார்கள். இருப்பினும், தஞ்சையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் இடையில் சிலகாலம் தடைப்பட்டிருந்தது.  


தற்போது - வருடந்தோறும் வைகாசித் திங்கள் திருஓண நட்சத்திரத்தன்று  கருட மகோத்சவம், ஸ்ரீ நீலமேகப் பெருமாளின் பேரருளால் சிறப்புற கொண்டாடப்பட்டு வருகின்றது.

கருட மகோத்சவத்தில் ஆரம்ப தினம் முற்பகல் திருமங்கை மன்னன் எழுந்தருளி திவ்ய தேசப் பெருமாள்களை மங்களாசாசனம் செய்விப்பார். 

அன்றிரவு திவ்ய தரிசன சேவை.  

மறுநாள் காலை - திவ்ய தேச பெருமாள் கருட வாகனத்திலும், ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருள்வர். 


நகரிலுள்ள ஏனைய சந்நிதிகளிலிருந்தும், பெருமாள் கருட வாகனத்தில் ஆரோகணித்து உடன் வர - தஞ்சாவூர் கோட்டை நான்கு ராஜ வீதிகளிலும் கண்கொள்ளாக் காட்சியாக கருட சேவை நிகழும். 

இந்த ஆண்டு நிகழ்ந்த 23 கருட சேவை பற்றி மேலும் அறிய ---  23 கருட சேவை

மூன்றாம் நாள்  வெண்ணெய்த் தாழி. நவநீத கிருஷ்ண அலங்காரத்தில் சேவை.  நான்கு ராஜவீதிகளிலும் கோலாகலமாக திருவீதியுலாக் காட்சி.  



நிறைவாக விடையாற்றி நடத்துவதும், எல்லா நாள்களிலும் பாமரர் முதல் பக்தர்கள் வரை அனைவருக்கும் அன்னதானம் செய்வதும் சிறப்பாக நிகழ்கின்றது.

தஞ்சை மாமணிக் கோயில்கள்  - தஞ்சை மாநகரின் வடக்கே - வெண்ணாற்றின் தென்கரையில் அருகருகே அமைந்துள்ளன.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், திருக்கருகாவூர் - செல்லும்  நகரப் பேருந்துகள் -

ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் திருக்கோயில் வாசல் வழியே செல்கின்றன. 

நல்லனவெல்லாம் அருளும் நாயகன்  - ஸ்ரீமந் நாராயணன் - ஸ்ரீவீரநரசிங்கப் பெருமாளாக, ஸ்ரீமணிக்குன்றப் பெருமாளாக, ஸ்ரீநீலமேகப் பெருமாளாக - சேவை சாதிக்க - 

சனிக்கிழமைகளிலும், பிரதோஷ வேளைகளிலும் தஞ்சையம்பதியின் மிகப் பழமையான -  திவ்ய தேசத்தை மக்கள் தரிசித்து இன்புறுகின்றனர். 

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் 
எனக்கரசு என்னுடை வாழ்நாள் 
அம்பினால் அரக்கர் வெருக்கொள 
நெருக்கி அவருயிர் செகுத்த எம்அண்ணல் 
வம்புலாஞ்சோலை மாமதில் 
தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி 
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் 
நாராயணா என்னும் நாமம். 
திருமங்கை ஆழ்வார்.

ஓம் ஹரி ஓம்.