நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 08, 2022

மாமழை போற்றி

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று ஸ்ரீராம் அவர்களுக்கான தேடலில் கிடைத்த நற்றிணைப் பாடல்..


ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.. (0014)

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார் - என்பது திரு. மு.வரதராசனார் அவர்களது உரை..

இந்தத் திருக்குறளில்
புயல் என்பது மழை/ நீர் என்னும் பொருளில் வருகின்றது..

புயல் என்பது காற்று, இடி, மேகம், மழை - முதலியவற்றிற்கு வழங்கப்படும் ஒரு சொல். 

“புயல்” என்றால் கடும் வேகத்துடன் வீசுகின்ற காற்று..

சென்னையின் இயல்பு வாழ்க்கைக்கு மாறானது.. பெருநகர மக்கள் துன்பப்படுவதற்கும்  பாதிக்கப்படுவதற்கும் பல்வேறு இழப்புகளுக்கும் காரணமாக இருக்கின்ற ஒன்று - என்பதாகவே இன்றைய ஊடகங்களின் செயலால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது..

மழைக் காலங்களிலும் தேர்தல் நேரத்திலும் மட்டுமே எல்லாராலும் பேசப்படுகின்ற செந்தமிழ்ச் சொல் சூறாவளி..

சரி.. மழை எப்படிப் பெய்கின்றது?..

கடல் மற்றும் பிற நீர்நிலைகளில் இருக்கும் நீரானது கதிரவனின் வெப்பத்தால் ஆவியாகி வானை நோக்கி மேலெழுந்து ஒருநிலையில் மேகங்களாகின்றது.. 

அப்படி உருவாகிய மேகங்கள் மேலும் குளிர்ச்சி அடைந்து புவியின் ஈர்ப்பு விசை காரணமாக , மீண்டும் - துளிகளாக திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் 
விழுகின்றன.. 

இதையே மழை என்கின்றோம்..

இந்தத் தேசத்துக்கு அறிவொளி காட்டுவதற்காக கப்பல் ஏறி வந்த   மேற்கத்தியன் நம்முடைய நிலத்தில் கால் பதித்துக் கொண்டு நம்மிடம் இப்படிச் சொல்லிக் கொடுத்தான்..


ஆனால் அதற்கு நூறு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மழையின் விளக்கம் நமது முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டு விட்டது என்பதே விந்தை..

ஆம்..

இதோ.. நற்றிணை காட்டுகின்ற மாமழை!..

இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே..
- நற்றிணை 329:10

நமக்கு இதைச் சொல்லிய நல்லாசான்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் என்பவர்.. 
( நன்றி: tamilvu)

கூட்டத்தோடு சென்று கடலில் நீர் முகந்த  மேகங்கள்
கருமையுடன் வானில் பெரும் சத்தத்துடன் 
இடி இடித்துக் கொண்டும்  மின்னலிட்டுக் கொண்டும் திரண்டு வருகின்றன.. 

இதோ.. திருப்பாவை காட்டுகின்ற  மாமழை!..

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..(04)


பெரும் மழைக்குக் காரணமான தலைவனே.. (வருணனே) நீ உன் கையில் மழையை கொஞ்சமும் ஒளித்து வைத்துக் கொள்ளாமல் முழுதாகப் பொழிதல் வேண்டும்..

கடலில் உள்ள நீரினை எடுத்துக் கொண்டு ஆவியாகி மேலே சென்று உலகாளும் முதல்வனான கண்ணனின் திருமேனி நிறத்தினை போல் கருமேகங்களாகத் திரள்வாயாக..

பரந்த அழகிய தோள்களை உடையவனும் கொப்பூழில் தோன்றிய தாமரை மலரில் பிரம்மனைத் தாங்குபவனும் ஆகிய திருமாலின் வலது கையின் சக்கரத்தைப் போல ஒளியுடன் மின்னுவாயாக..

இடது கையின் பாஞ்சஜன்யம் என்னும் வலம்புரிச் சங்கின் ஒலியைப் போல் இடி முழக்கம் செய்வாயாக..

பெருமானின் வில்லாகிய சார்ங்கத்தினின்று  புறப்படும் அம்புகளைப் போல் சரம் சரமாகப் பொழிவாயாக..

அம்மழையால் இவ்வுலகில் மகிழ்ந்து வாழ்வோம்.. மார்கழியில் நீராடுவதற்கு ஏதுவாக நீர்நிலைகள் எல்லாவற்றையும் நிரப்பி எங்களை மகிழ்விப்பாயாக!..


இதோ.. திருவெம்பாவை காட்டுகின்ற மாமழை!..

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்..(16)


மேகமே!.. முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு மேலே எழுந்து எம்மை உடையவளாகிய அம்பிகையின் திருமேனி போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாகக் கொண்டவளது சிற்றிடை போல மின்னி விளங்கி எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன் சிலம்பு போல ஒலித்து அவளது திருப்புருவம் என்னும் வான வில்லாக விளங்கி நம்மை அடிமையாக உடையவளாகிய அம்பிகையினின்றும் பிரிதல் இல்லாத எங்கள் தலைவனாகிய இறைவனது அடியார்களுக்கும் பெண்களாகிய நமக்கும் அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இன்னருளைப் போன்று பொழிவாயாக..

இதோ.. சிலம்பு காட்டுகின்ற மாமழை!..

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்..


இமயத்தை வலம் வருகின்ற ஞாயிறு - நீர் சூழ்ந்த உலகிற்கு வழங்கும்  கொடை போன்று மேல் நின்று மேகம் பொழிவதால் சிறப்புடைய மழையே  போற்றி.. போற்றி!..

மாமழை போற்றுதும்
மாமழை போற்றுதும்!..

புயலவன்.. 
புயல் இயக்கும்  தொழிலவன்
போற்றி.. போற்றி!..
***

9 கருத்துகள்:

  1. சென்னைக்கு வந்து விசாகப்பட்டணத்துக்கு திசை மாறும் புயல் போல பதிவின் தேடல் திசை மாறினாலும், சுவாரஸ்யமான ஆராய்ச்சி, தேடல்கள்.    ஒன்று தேடும்போதுதானே மற்ற முத்துக்களும் கிடைக்கும்?!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் துல்லியமான அழகு. நீலவண்ண கண்ணனை கருநீல மாமழை மேகத்தில் தரிசித்துக் கொண்டேன். புயல் பற்றிய விரிவான விளக்கத்திற்குரிய பாடல்களுக்கு நன்றி.

    முந்தைய பதிவுகளையும் பிறகு படிக்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான விளக்கம் பதிலாக ஜி

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான விளக்கங்கள். தேடத்தேட முத்துக்கள் ஆழ்கடலில் இருந்து கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான விளக்கம். பரமாச்சார்யார் ஒரு முறை சொன்னது போல, இங்கு, பாரத பூமியில் இல்லாதது வேறு எங்கும் கிடையாது.

    பதிலளிநீக்கு
  6. அருமையான விளக்கம்.
    தேடலில் நல் முத்துக்கள் கிடைத்து இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. துரை அண்ணா அருமையான தேடல் மற்றும் விளக்கம். நானும் அட திருப்பாவை, திருவெம்பாவைல கூட வருமே என்று நினைத்தேன் கீழே நீங்களும் சொல்லியிருக்கீங்க. அதானே துரை அண்ணா எப்படிச் சொல்லாமல் இருப்பார் அவருக்குத் தெரியாததா என்ன!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. மாமழை போற்றி விரிவான விளக்கம்.அழகிய படங்களுடன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..