நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 15, 2020

மங்கலமாவது நீறு

நாடும் வீடும் நலம் பெறட்டும்
பகையும் பிணியும் விடை பெறட்டும்!..

இன்றைய பதிவில்
திருஞான சம்பந்தப்பெருமான் அருளிச் செய்த
திருநீற்றுப் பதிகம்

திருமுறைகளில் நாட்டம் உடையவர்கள்
அறிவார்கள் இத்திருப்பதிகத்தின் அருமை பெருமைகளை!..

தென்னன் உடலுற்ற தீப்பிணியாயினவற்றைத்
தீர்த்தருளிய திருநீறு வீட்டிற்கும் நாட்டிற்கும்
நன்மைகளை அருளட்டும்...

இரண்டாம் திருமுறை
திருப்பதிக எண் 66

திருத்தலம் - திருஆலவாய்
மதுரையம்பதி 


இறைவன் - ஸ்ரீ சுந்தரேசப்பெருமான்
அம்பிகை - ஸ்ரீ மீனாக்ஷி அம்பிகை

தலவிருட்சம் - கடம்ப மரம்
தீர்த்தம் - பொற்றாமரைக் குளம் வைகை மாநதி


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.. 1

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.. 2



முக்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.. 3

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.. 4


பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே.. 5

அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத் தகுமாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.. 6


எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியம் ஆவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருஆலவாயான் திருநீறே.. 7

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்ப்து நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆலவாயான் திருநீறே.. 8


மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலனது உண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.. 9

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட
கண் திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத் தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே.. 10



ஆற்றல் அடல் விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றி தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் நல்லவர் வல்லவர் தாமே.. 11
-: திருச்சிற்றம்பலம் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

16 கருத்துகள்:

  1. திருநீறு அணியாத நாளில்லை. ஆலவாய் அழகன் அகிலம் யாவையும் காக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      சிவாய நம ஓம்...
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதிகம் பாடி மீனாட்சி, சொக்கநாதரை தரிசனம் செய்து கொண்டேன்.
    திருநீறு அணிந்து ஓம் நம சிவாய சொல்லுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சிறப்பான பதிகம்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      நலமே விளையட்டும்...
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நலமே விளைக
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அண்மைக்காலமாக தினமும் ஒருமுறையாவது எங்கள் வீட்டில் நாங்கள் கேட்கும் பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. திருநீலகண்டப் பதிகமும் திருநீற்றுப் பதிகமும் தான் இப்போதைய கொடிய நோயிலிருந்து மக்களைக் காக்கும் அருமருந்து. இதை யூ ட்யூபில் போட்டு அடிக்கடி கேட்பேன். அருமையான பதிகங்கள். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியக்கா...

      இவ்விரண்டு பதிகங்களின் மகத்துவமும் அளவிட முடியாதவை....

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  8. திருநீற்றுப் பதிகம் கேட்டதுண்டு. சிறப்பான பதிகம்

    நன்மை விளைந்திட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..

      எங்கும் நலமே விளைந்திடட்டும்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..