நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 30, 2019

கீழ்வேளூர் 3

எம்மைப் பாடுக!..

அண்ணாமலைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழந்த
அருணகிரியைக் காப்பாற்றியருளிய எம்பெருமான்
தனது திருவாய் மலர்ந்து ஆணையிட்டான்...

எந்தையே!.. எங்ஙனம் பாடுவேன்?..
எப்படிப் பாடுவேன்?.. ஏதுமறியாத மூடன் நான்!..

அருணகிரி திகைத்து நின்றார்..
ஐயன் புன்னகையுடன் அனுக்கிரகித்தான்.. 

முத்து முத்தாகப் பாடுக!...


அப்போது பிறந்ததே -

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக் கொரு வித்துக் குருபர எனவோதும்... எனும் திருப்புகழ்...

முத்துக்களைப் போல புன்னகை திகழும்
தெய்வ யானையின் மணாளனே!...
சக்தி உமைபாலனே.. சரவணனே..
முத்திக்கொரு வித்தானவனே..
பரமனுக்குக் குரு என நிற்கும் குமரனே..
அயன் ஹரி எனும் இருவருடன்
முப்பத்து முக்கோடி தேவரும்
வணங்கிடத் திகழும் முருகனே!...

பத்துத் தலையிருந்தும் பதராகி நின்ற ராவணனை
ஒற்றைக் கணையால் வீழ்த்திய ராமனாகவும்
பாற்கடலைக் கடையும்போது கூர்மனாகவும்
பக்தனுக்காக ரதத்தை நடத்திய கிருஷ்ணனாகவும்
அவதாரம் கொண்ட ஸ்ரீ ஹரிபரந்தாமனின் மருகனே...
நீ என்னையும் காத்து அருள்கின்ற நாளாக இந்நாள் ஆனதே!..

வருமொரு கோடி அசுர பதாதி மடிய அநேக இசைபாடி
முருகா நீ வேல் விடுத்து போர் நடத்திய அவ்வேளையில் -

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதுகள் ஆடினவே!...

அது மட்டுமா!...
திக்குத் திசை காக்கும் பயிரவ மூர்த்தியும்

தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு - என ,
உடுக்கையை முழங்கியபடி திரி கடக எனும் தாளத்துடன்
பவுரி எனும் அழகிய கூத்தினை நிகழ்த்தினரே!...


இப்படி பயிரவரும் பயிரவியும் ஆனந்தக் கூத்தாடி 
மகிழும்படிக்கு போர் நடத்தி 

அசுரர்களின் குலகிரியாகிய
கிரவுஞ்ச மலையைத் தூளாக்கி 

வெற்றி கொண்ட வேலனே!...




- என்று வியந்து போற்றுகின்றார்...

தேவயானையை இந்திரன் வளர்த்தாலும்
அவளுடைய தாய் 
ஸ்ரீமஹாலக்ஷ்மி..

அதனால் அல்லவோ தன் மருமகனுக்காக
இலந்தை மரமாக நிழல் கொடுத்து நின்றாள்...

திவ்ய தேசமாகிய திருவதரி எனும் பத்ரிநாத்திலும்
இலந்தை மரமாக நிழல் கொடுத்து நிற்பவள் ஸ்ரீமஹாலக்ஷ்மியே!..

இப்படியான புகழுடன்
சிவபூஜைக்கென அமர்ந்த முருகனுக்கும் இடையூறுகள்..  

அசுர குலம் போரில் அழிந்துபட்டாலும் 
அவை செய்த தவத்தால் 
சூட்சும ரூபங்களாக அலைந்து கொண்டிருந்தன...


அவைதான் முருகப்பெருமானின்
சிவ வழிபாட்டுக்கு இன்னல் விளைத்தவை... 


ஒரு கணம் தவித்து நின்றான் கந்தப்பெருமான்...

கடைக் கண் விழித்து நோக்கினாலும் போதும்...

அந்த மாயைகள் அனைத்தும்
சருகுகளாகக் கருகிப் போய்விடக்கூடியவை தான்!...

ஆனாலும் சிந்தையை சிவபூஜையில் செலுத்திய பின்
வேறொன்றைக் கருத்தில் கொள்வதா?...

சற்றே, மனம் உருகியது..
அம்மையே... அப்பனே!... இதுவும் தகுமோ?...

அக்னி சேஷம், சத்ரு சேஷம், ரண சேஷம் , ருண சேஷம்..

தீ, பகை, காயம்,  கடன் -
இவற்றில் மிச்சம் வைக்கவே கூடாது...
முற்றாகத் தீர்த்து விடவேண்டும் - என்பர் ஆன்றோர்...

அன்றைக்கு இத்தோடு போகட்டும் என்று விட்டதனால்
ஆவியான நிலையிலும் ஆர்ப்பாட்டம் கொண்டு நின்றனர் அசுரர்கள்...

இனி ஒருக்கணமும் தாமதிக்கக் கூடாது...

பரமேஸ்வரன் மலர்ந்த புன்னகையுடன்
அருகிருந்த தேவியை நோக்கியருளினார்...

அந்த மட்டில் அம்பிகைக்கு உற்சாகம் பீறிட்டெழுந்தது...

அது தானே வேண்டும் அவளுக்கு!...

ஆங்கார ரூபங்கொண்ட அம்பிகை
மண்ணுக்கும் விண்ணுக்குமாக சதிராடி நின்றாள்...

நாற்றிசைகளும் நடுநடுங்க ஆகாயம் அதிர்ந்து நின்றது...

ஒரு குஞ்சு குளுவானைக் கூட விடாமல் 
வளைத்துப் பிடித்து

காலடியில் போட்டு மிதித்துச் சகதியாக்கினாள் சக்தி...


அஞ்சு வட்டம் ஆடி நிற்கும் காளி அல்லவோ - அவள்
அடங்காத ஆவியர்க்கும் சூலி அல்லவோ.. 
நெஞ்சு கொண்ட நீதியர்க்கு நீலி அல்லவோ - தமிழ்த்
தடங்கொண்டு வாழ்பவர்க்கு வேலி அல்லவோ!..


- என்று, பம்பையும் உடுக்கையும் முழங்கி நின்றன...

திருமுருகன் சிவபூஜையை இனிதே நடாத்தி
தீர்த்தமும் திருநீறும் வழங்கி அருள்பாலித்தனன்...

அறுமுகனின் அல்லல் அகற்றியவளாக
அஞ்சு வட்டத்து அம்மை - எனத் திருப்பெயர் கொண்டு
வடக்கு நோக்கி அமர்ந்து வாடி நிற்கும்
உயிர்களின் வாட்டம் தீர்த்து அருள்கின்றாள் அம்பிகை...



நான்கு திசைகளிலும் ஆகாயத்திலும்

நான்கொடு ஒன்று ஐந்தென அம்பிகை வட்டமிட்டு ஆடி
ஆவிகளின் ஆர்பாட்டத்தை அடக்கி ஒழித்ததால்
அஞ்சு வட்டத்து அம்மை என்று திருப்பெயர் கொண்டாள்...

திருக்கோயிலின் வடக்குப் பிரகாரத்தில்
தனி சந்நிதி கொண்டு அருள்கின்றாள் அஞ்சுவட்டத்து அம்மன்..



ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் விசேஷம்..
பௌர்ணமி நாட்களில் சிறப்பு அலங்கார ஆராதனைகள்..


அஞ்சு வட்டத்து அம்மையின் சந்நிதி  
அம்மையின் சந்நிதி - பின்புறத் தோற்றம்  
இன்றைய பதிவினில் காணப்படும்
அஞ்சு வட்டத்தம்மனின் படங்கள் FB ல் கிடைத்தவை...

மற்றபடி திருக்கோயிலில் நானெடுத்த படங்கள்
தங்களைக் கவர்ந்திருக்கும் என நம்புகின்றேன்...

மேலும் சில படங்களுடன்
அடுத்த பதிவினில் சந்திப்போம்.. 



பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினிசூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.. (077)
-: அபிராமி பட்டர் :-

ஓம் சக்தி ஓம் 
ஃஃஃ 

18 கருத்துகள்:

  1. முதல் படத்தில் சாந்தமாகக் காட்சி அளிக்கும் அஞ்சு வட்டத்து அம்பிகை அடுத்தடுத்த படங்களில் தன் உக்கிரத்தைக் காட்டுகிறாள். நீங்கள் எடுத்திருக்கும் எல்லாப் படங்களும் அருமை! முகநூல் மூலம் அளித்திருக்கும் அஞ்சு வட்டத்து அம்மனும் அழகு! அம்பிகையின் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்தனைகள், பொருத்தமான அபிராமி அந்தாதிப் பாடல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு நல்வரவு...
      கருத்துரை கண்டு மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  2. குட்மார்னிங்.

    எல்லாப் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. முத்தைத்தரு பத்தித் திரு நகை
    பாடல் கேட்டதுமே பொங்கி எழும் உற்சாகத்தை என்றுமே

    அடக்க முடிந்ததில்லை.
    திருமுருகன் அருளும்,அருணகிரி நாதர் பெருமையும் அளவில் அடங்குமா.
    மகனைக் காக்க வந்த அம்பிகையின் சாந்தமும், உக்கிரமும்
    கண்கூடாகத் தெரிகிறது. படங்களின் அழகு
    மிக அருமை.
    அஞ்சுவட்டத்து அம்மன் பெயர்க்காரணம் கிடைக்கவில்லை
    எனக்கு.
    மிக நன்றி அன்பு துரை செல்வராஜு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா....

      அம்பாளின் பெயர்க் காரணத்தைக் குறிக்கத்தவறி விட்டேன்..மன்னிக்கவும்..
      தங்கள் கருத்துரை கண்டு திருத்தம் செய்துள்ளேன்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அற்புதமான பாடலைக் குறித்த விளக்க வரலாறு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. அஞ்சு வட்டத்து அம்மன் பார்த்தது நினைவு இருக்கிறது.
    நாங்கள் போனபொதும் திருவிழா முடிந்து இருந்த சமயம் மிக அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள்.

    படங்கள் எல்லாம் மிக அழகு.
    முருகனின் கருணையும், மஹாலட்சுமியின் கருணையும் பற்றி சொன்ன விதம் அருமை.
    நேற்று பழமுதிர் சோலையும் போகும் வழியில் உள்ள பத்ரிநாத் கோவிலும் போய் வழி பட்டு வந்தோம்.

    பத்ரிநாத் கோவில் பதிவு போட்டு இருந்தேன் படித்து இருப்பீர்கள்.

    கார்த்திகை, வைஷ்ணவ ஏகாதசி, கூர்மஜெயந்தி அதனால் போய் வந்தோம்.

    நீங்களும் எழுதி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

      கார்த்திகை, ஏகாதசி,கூர்மஜயந்தி
      எத்தனை புண்ணிய நாட்கள்...

      மாமனுக்கும் மருகனுக்கும் வைபவங்கள் சிறப்பானவை...

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி...

      நீக்கு
  6. காளிதேவியின் படங்கள் மனதைக் கவர்ந்தன.

    முத்தைத்தரு - படிக்கும்போதே டி.எம்.எஸ் அவர்கள், கணீர்க் குரலில் என் காதுகளில் பாடுவது கேட்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பாடல் விளக்கமும் அம்மனின் படங்களும் அருமை.
    தளம் குறித்து அறியத் தந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. சிறப்பான பாடல்கள் மற்றும் விளக்கமும் சிறப்பு.

    படங்கள் மிகவும் அருமை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பாடல்கள் விளக்கம், அஞ்சு வட்டத்து அம்மன் படங்கள் மற்றும் நீங்கள் எடுத்த படங்கள் எல்லாமே மிக மிக அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  10. துரை அண்ணா நீங்கள் எடுத்த படங்களும் மிக அழகாக இருக்கின்றன. முத்தைத் தரு பத்தித் திருநகை திருப்புகழ்ப்பாடலை நினைத்தாலே டி எம் எஸ் குரல் தான் ஒலிக்கும்.

    விளக்கங்கள் எல்லாமே அருமை. அஞ்சுவட்டத்து அம்மன் புதிதாகக் கேள்விப்படுகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..