நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 28, 2019

காளீம் ஸ்ரீகண்ணகீம்

தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற்கடை மணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான் தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என்பதியே.. அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனே ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப 
சூழ்கழல் மன்னா நின் நகர்ப் புகுந்து இங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என் பெயரே!...


அன்றொருத்தி அஞ்சா நெஞ்சினளாய்
அயல் நாட்டு மன்னனின் சபை நடுவே நின்று உதிர்த்த வீரமொழிகள்...

அந்த தீரத்துடன் இன்றைக்கு
ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரிடம் இப்படிப் பேசவும் கூடுமோ!..  

ஆடவன் ஒருவனால் கூட இயலாது!.. - என்பதே உண்மை...

அத்தகைய பெண்ணரசியை
நாம் எந்த அளவுக்குக் கொண்டாடியிருக்கிறோம்?..

மௌனம் தான் மிச்சம்...

ஆனால் -
அருகிருக்கும் கேரளத்தில்
பத்ரகாளியாக - பகவதி அம்பிகையாக
கண்ணகி தேவியாகக் கொண்டாடப்படுகின்றாள்....


கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோயிலில்
இந்தக் கொண்டாட்டம் மிகவும் பிரசித்தம்...

மாசி மாத்தின் பரணி தொட்டு
பங்குனி மாதத்தின் பரணி நட்சத்திரம் வரை
மீன பரணி என்று மஹோத்ஸவம் நிகழ்கின்றது...

சென்ற மாதத்தில் ஒருநாள்
இந்த மீனபரணி மகோத்ஸவத்தைக் குறிப்பிட்டு
FB யில் ஒரு தகவல் வந்தது...

அதில் கண்ணகி தேவிக்கான ஸ்லோகம் கண்டு கண்கள் குளமாகின...


கனக விஜய சிரோத்ருத
கங்கா தீர்த்த அபிஷிக்தாம்
கஜபாஹ ராஜ சேவிதாம்
காளீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!..

பீஜக விருக்ஷ சாயாஸ்திதாம்
பராசக்தி ஸ்வரூப நாயகீம்
காவேரீ புஷ்ப நகரிணீம் தேவீம்
பகவதீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!..

ஆகாச மார்க்க காமினீம்
ஆனந்த சாகர ஸ்வரூபிணீம்
ஆச்சர்ய சரித்ரமயீம் காமாக்ஷீம்
அம்பிகாம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!..

விரதமிருந்து கோயிலை நாடிவரும் பக்தர்கள் 

நன்றி - மனோஜ் மகாதேவ் 
கொடுங்கல்லூர் பகவதியம்மன் திருக்கோயிலில்
கண்ணகி நீதி கேட்டு சிலம்பை உடைக்கும் காட்சி
சித்திரமாக வைக்கப்பட்டிருப்பது கண்டு நெஞ்சம் விம்மியது...


சேர நாட்டில் மட்டுமின்றி
ஈழத்திலும் கண்ணகி வழிபாடு சிறப்புற நிகழ்கின்றது...

ஈழத்தில் வற்றாப்பளை எனும் ஊரில்
பேரிளம் பெண்ணாக கண்ணகி வழிபடப்படுகின்றாள்...

கண்ணகி - வற்றாப்பளை 
சத்பத்தினி
சிங்கள மக்களிடமும்
சத்பத்தினி என்ற பேரில் கண்ணகி வழிபாடு உள்ளது..

இதெல்லாம் இணையம் தரும் செய்திகள்...

சரி.. அங்கெல்லாம் கொடுக்கப்படும் மரியாதையும் மகத்துவமும்
நம் தமிழகத்தில் கண்ணகிக்குக் கொடுக்கப்படுகின்றதா?...

இல்லை!...

ஏன் இல்லை?...

தெரியவில்லை!... தெரிந்து கொள்வதற்கு என்னவெல்லாமோ
இருக்கும் போது கண்ணகி வரலாற்றைத் தெரிந்து கொண்டு
என்ன ஆகப் போகின்றது!..

- என்பதனால் யாரும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை!...

இன்றைய நாட்களில் -
வெட்டி மன்றங்களாகி விட்ட பட்டி மன்றங்களில் இகழ்ந்து ஏளனம் செய்வதற்கான கருப்பொருள்களுள் ஒன்றாகி விட்டது கண்ணகி - வரலாறு...

கேரளத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும்
கண்ணகி பிறந்த ஊரைத் தரிசிப்போம் என்று
வருவோர்க்கு - மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிலையில்
இருக்கின்றதா - பூம்புகார்!?...

அதனை அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்!...

காவேரீ புஷ்ப நகரிணீம் தேவீம்
பகவதீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!..

ஓம் சக்தி ஓம் 
ஃஃஃ 

11 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    தலைப்பு முதலில் ஈர்த்தது. உள்ளே அதன் பாடலைப் படித்ததும் இனித்தது. முதல் பாடல் படித்ததும் புல்லரித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. வெட்டி மன்றங்களாகிவிட்ட பட்டி மன்றங்கள்-

    உண்மைதான். வெறும் பொழுது நகைச்சுவைத் தோரணங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர - மற்றவை எல்லாம்
      ஒருவரை ஒருவர் ஏளனம் செய்து கொள்ளவும்
      அதைக்கேட்டு பார்வையாளர் நகைக்கவும்...
      - இதுதான் இன்றைய நிலை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. அருமையா இருக்கு பதிவு. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதற்கேற்ப முன்வினைப்பயன்களே கண்ணகியின் வாழ்க்கைக்குக் காரணம் என்றாலும் மதுரையிலும் அவள் செல்லத்தம்மனாக வழிபடப் படுகிறாள். செல்லத்தம்மன் கோயிலில் கண்ணகிக்கு எனத் தனிச் சந்நிதி உண்டு. கோவலன் பொட்டல் அதே பெயரிலேயே இன்றும் இருக்கிறது. முன்னெல்லாம் அந்தப் பக்கம் பகல் வேளையில் போகவே அச்சப்படுவார்கள். இப்போது அது ஓர் சுறுசுறுப்பான இடமாகி விட்டது.அங்கே ஓர் மிகப் பெரிய ஆலமரம் இருந்தது. நம் மக்களுக்குத் தான் மரங்களே பிடிக்காதே! வெட்டி விட்டார்கள் போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      மேலதிகத் தகவல்களும் கண்டு மகிழ்ச்சி..

      நானும் மதுரை செல்லியம்மன் கோயிலைப் பற்றிக் கேட்டிருக்கின்றேன்..
      ஆனால் போனதில்லை...

      நன்றி.. மகிழ்ச்சி...

      நீக்கு
  4. கண்ணகி அம்மனுக்கு ஸ்லோகம் மிக அருமை.
    படங்கள் செய்திகள் சேகரிப்பு அனைத்தும் மிக அருமை.

    பூம்புகாரில் பட்டினத்தார் திருவிழா மட்டும் தான் சிறப்பாக நடக்கும்.
    மேலையூர் என்ற இடத்தில் கண்ணகிக்கு கோவில் இருக்கிறது . அங்கு வழிபாடுகள் எப்போது நடக்கும் என்றே தெரியாது, எப்போதும் அடைத்தே கிடக்கும்.

    பதிலளிநீக்கு
  5. பட்டிமன்றங்களின் போக்கு வேறு வகையில் செல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. தமிழ்ப் பெருமையை அந்தக் காலங்களில் பட்டிமன்றங்கள் தூக்கிப்பிடித்தன. குன்றக்குடி அடிகளார் போன்று பலர் உண்டு....

    இந்தக் காலத்தில் சினிமா, நடிகை, சிரிப்புத் தோரணங்கள், சமயங்களை கலாய்ப்பது, அரசியல் எதிரிகளைத் தூற்றுவது என்று பட்டிமன்றங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. காசு கொடுத்தால் எதையும் பேசலாம் என்ற அளவில் இவைகள் ஆனதற்கு தொலைக்காட்சிகளே முழுமுதல் காரணம். அவற்றில் மெகா டீவியில் உருப்படியான பட்டிமன்றங்களை நான் காண்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. கேரளத்தில் கண்ணகி வழிபாடு மிக முக்கியாமாகவும் கருதப்படுகிறதுதான். ஐயப்பன் கோயில் வருபவர்கள் எல்லோரும் கண்ணகி கோயில் செல்லாமல் செல்வதில்லை.

    மிக மிக அருமையான பதிவு. தொடர்கிறோம்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..