நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 30, 2019

பூம்புகார் 1

காவேரீ புஷ்ப நகரிணீம் தேவீம்
பகவதீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!..

சேர நாட்டில் கொடுக்கப்படும் மரியாதையும் மகத்துவமும்
நம்நாட்டில் கண்ணகிக்குக் கொடுக்கப்படுகின்றதா?...

- என்ற வினாவினை முந்தைய பதிவினில் வைத்திருந்தேன்..

கருத்துரையில் ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்கள்
மதுரை கோவலன் பொட்டல் , ஸ்ரீ செல்லியம்மன் கோயில் பற்றி எழுதியிருந்தார்கள்...

ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் பூம்புகாரை அடுத்த மேலையூரில் உள்ள கண்ணகி கோயிலைப் பற்றிக் குறித்திருந்தார்கள்...

ஸ்ரீமதி வல்லி சிம்ஹன் அவர்கள்
தனிப்பதிவு ஒன்றினை தங்கப்பதுமை படப் பாடலுடன்
வழங்கியிருந்தார்கள்...

அவர்களுக்கெல்லாம் அன்பின் நன்றி..

அவர்கள் சொல்லியிருந்த செய்திகளை நான் அறிவேன்..
என்றாலும் எனது கேள்வியின் நோக்கம் -

உணர்வு பூர்வமாக கற்புக்கரசியைக் கொண்டாடி
நல்லொழுக்கத்துடன் வாழ்வதற்குத் தலைப்படுகின்றதா - தமிழகம்?..

- என்பது தான்!...

1964 ல் பூம்புகார் என - கண்ணகி வரலாறு திரைப்படமாக்கப்பட்டபோது
திரைக்கதை ஆசிரியர் அவரது விருப்பத்துக்கு காவிய நிகழ்வை மாற்றியிருந்தார்...

பழுதடைந்த சிலம்பினை பொற்கொல்லரிடம் ஒப்படைக்கும்
அரசு ஊழியனே சிலம்பினைக் கையாடல் செய்து நடத்தை கெடுவது 
போல தீர்க்க தரிசனத்துடன் இருக்கும் அந்தக் காட்சி..

அது போகட்டும்!..

1969 ல் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பிறகு
1975 ல் காவிரிப்பூம்பட்டினத்தில் - வெகு ஆடம்பரமாக சிலப்பதிகாரக் கலைக்கூடம் திறந்து வைக்கப்பட்டது...

பாவை மன்றமும் இலஞ்சி மன்றமும் நெடுங்கல் மாடமும் உருவாகியிருந்தன...

காவிரிப் பூம்பட்டினத்தைப் பார்த்திருக்கியாடி?..
கண்ணகி பொறந்தது எங்க ஊருதான்டி!...

- என்று, கவியரசர் திரைப்பாட்டு ஒன்றில் கேட்டிருப்பார்..
அப்படிக் கேட்டது 1964 ல்.. 

சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைக்கப்பட்ட பிறகுதான் காவிரிப்பூம்பட்டினம் பூம்புகார் என்று ஆகியது..

நான் முதன்முதலில் பூம்புகாருக்குச் சென்ற ஆண்டு 1981..

அப்போது கூட
இந்தக் கலை மன்றங்கள் எல்லாம் பளிச் என்று தான் இருந்தன...

அதற்குப் பின் வந்த அரசு
திராவிடத்தைக் காப்போம் என்று
தோள் தட்டிக் கொண்டாலும் பூம்புகாரைக் கை விட்டது...

M.G.R. ஆட்சிக்குப் பின் மீண்டும்
கலைஞர் ஆட்சி பீடத்தில் அமர்ந்த போது பூம்புகார் பொலிவு பெற்றதா?..

தெரியவில்லை...

அதற்குப் பின் வந்த அரசும் அப்படியே...
முழுதாகவே பூம்புகாரைக் கை விட்டது...

சரி.. சரி.. நமக்கெதற்கு ஊர்வம்பு?...

சென்ற ஆண்டில் ஒருநாள் -
வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடவூர், திருவெண்காடு ஆகிய தலங்களைத் தரிசனம் செய்து வருவதற்குப் புறப்பட்டபோது இடையில் பூம்புகாரும் சேர்ந்து கொண்டது...

திருக்கடவூரில் தரிசனம் முடித்தபோது மதியமாகி விட்டது..

திருவெண்காடு நடை திறக்கப்படும் நேரம்
உத்தேசமாக மாலை நான்கு மணி...

இடைப்பட்ட நேரத்தைக் கழிப்பதற்கு - அருகாமையில் பூம்புகார்...

இப்படியான பயணத் திட்டத்துடன்
வழியில் சிறு உணவகம் ஒன்றில் மதிய உணவை முடித்து விட்டு
ஆயிரம் கனவுகளுடன் பூம்புகாரில் அடியெடுத்து வைத்தபோது பகல் 12:45..

இதற்கு மேல் - இதோ நேர்முக வர்ணனை...

பூம்புகார்...

சோழ மண்டலத்தில் தொன்மை மிக்க நகர்களுள் ஒன்று....

கி.மு. ஆறு முதல் கி.பி. பன்னிரண்டு வரை சிறந்து விளங்கியதாகக் குறிக்கப்படும் துறைமுக நகர்...

பழந்தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை முதலான நூல்களிள் புகழ்ந்து பேசப்படுவது...

மேலை நாடுகள் பலவற்றுடன் ஈழம் சீனம் முதலான நாடுகளுடனும் வாணிகத் தொடர்பில் சிறப்புற்று விளங்கிய நகரம்...

ஆழிப் பேரலையால் கடலுள் ஆழ்ந்த நகரம்...

இதெல்லாம் அங்கே எழுதி விவரமாக வைத்திருக்கின்றார்கள்..
ஆனாலும் அவற்றை நின்று படிக்கத்தான் எவருக்கும் நேரம் இல்லை...

பூம்புகாரைச் சென்றடைந்ததுமே பெயரளவுக்கு
ஒரு நிழல் கூரையுடன் பேருந்து நிலையம்...

அங்கிருந்து நேராக அரை கி.மீ., தொலைவில் கடற்கரை...
வழியின் இருபுறமும் அகற்றப்படாத பல்வேறு குப்பைகள்...

சாலையின் தென்புறம் சற்றே உட்புறமாக
ஸ்ரீசீதளா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்...

அம்மனைத் தரிசிக்கச் சென்றோம்...



சப்த கன்னியர்.. ஆனாலும் அறுவர் தான்
அலைபேசியின் விழி வழியே... 
நடையடைக்கும் நேரம்.. எனினும்
அம்பிகையின் தரிசனம் கிடைத்தது...

கடற்கரைக்குச் செல்லும் வழியிலேயே
வலப்புறத்தில் கடலடி அருங்காட்சியகம்..

நாலு மணிக்குப் பிறகுதான் திறக்கப்படும் என்றார்கள்...

அதைக் கடந்ததும் சிலப்பதிகார கலைக்கூடம்..
அதுவும் பூட்டிக் கிடந்தது..


சிலப்பதிகாரக் கலைக்கூடத்தின் அருகில்.. 
என்ன இது.. வெறும் பாட்டிலா!...
ஒரு துளி கூட மிச்சம் வைக்கலையா!?.. 
எதை நோக்கிப் பயணம்!?.. 
எதற்காக ஆர்ப்பரிக்கின்றது கடல்?...
வடபுறமாக பாவை மன்றம் - அடர்ந்த புதர்களுக்குள்...

அப்படியே நேராக நடந்தால் - காவிய நாயகி கண்ணகி...
கடலை நோக்கிய வண்ணமாக நின்று கொண்டிருக்கிறாள்...

இடது புறமாக சிறு தடாகத்துடன் கூடிய இலஞ்சி மன்றம்...

அங்கிருந்து ஐம்பதடி தூரத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல்...


அந்த மதிய வேளையிலும் - பூம்புகார்க் கடற்கரையில்...
தலையில் துணியைப் போட்டுக் கொண்ட இளம் பெண்கள்...
பரட்டைத் தலையுடன் இளந்தாடி இளைஞர்கள்...

பெரும்பாலானோர் ஏதோ ஒரு சுமையைச் சுமந்தபடி
அந்த வெயிலில் - வெட்ட வெளியில் அலைந்து கொண்டிருந்தனர்....

இணை இணையாக வருகின்ற வாலிப வயதினர்
அழகின் மன்றமாக உருவாக்கப்பட்டிருக்கும் பாவ மன்றத்தின் பின்னால் அடர்ந்திருக்கும் கருவைக் காட்டுக்குள் மறைந்து விடுகின்றனர்...

இலஞ்சி மன்றத்தின் கிழக்காக அமைக்கப்பட்டுள்ள பார்வை மாடத்தின் வளைவான படிக்கட்டுகளில் ஆணும் பெண்ணுமாக!..

பதிவின் படங்கள் சிலவற்றை உற்றுக் கவனித்தால்
பட்டப்பகலில் நடக்கும் ஒழுக்கக்கேடுகள் புலனாகும்...

இவற்றையெல்லாம் இப்படிக் கூற வேண்டிய அவசியம் இல்லை...

ஆனாலும் -
அங்கு சென்றதும் கண்ணில் தென்பட்ட காட்சிகள் இவைதான்!..

நெடுங்கல் மாடம்

கடற்கரை ஓரமாக தென்புறம் கொஞ்ச தூரம் நடந்தால் நெடுங்கல் மாடம்...

அங்கிருந்து சற்று தூரத்தில் புதிய கலங்கரை விளக்கு...

அதற்கு அப்பால் காவிரியின் முகத்வாரம்...
அதையொட்டி மீனவர் குடியிருப்புகள்...

கடற்காற்று இதமாக இருந்தாலும் வெயில் அதிகம்...

அதுமட்டுமல்லாமல் நெடுங்கல் மாடத்தின் படிக்கட்டுகளிலும்
மனதை நோகடிக்கும்படியான காட்சிகள்...

நெடுங்கல் மாடத்தின் தூண்களுக்குப் பின்னால் அநாகரிக சேட்டைகள்..

நெடுங்கல் மாடத்துடன் திரும்பி விட்டோம்..

அந்தப் பக்கம் கலங்கரை விளக்கிற்குச் செல்லவில்லை...

அங்கிருந்து திரும்பி நடந்து - இலஞ்சி மன்றத்தின்
பார்வை மாட படிக்கட்டுகளுக்கு அருகே சென்றபோது
ஏனடா.. இங்கு வந்தோம்?... - என்றிருந்தது...


இலஞ்சி மன்றமும் பார்வை மாடமும் 

இலஞ்சி மன்றமும் - தடாகமும்  
வளைவான படிக்கட்டுகள் எல்லாம்
இளையோரின் அடாத செயல்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது...

ஆதி புகார் நகரில் - நோயாளர்கள் இறங்கிக் குளித்தால்
அவர்தம் பிணியை நீக்கும் அற்புதத் தடாகம் ஒன்று இருந்ததாம்...

அதன் நினைவாக அமைக்கப்பட்டது தான்
இலஞ்சி மன்றத்தின் எதிரில் இருக்கும் தடாகம்..

ஆனால் அந்தத் தடாகத்தின் அவல நிலை - இதோ கீழே!..


குளத்தில் கிடக்கும் குப்பைகள்  

அந்தத் தடாகத்தில் எப்போதோ தண்ணீர் இருந்திருக்கலாம்...
தற்போது பழுதான குழாய்களின் கசிவினால் சிறிதளவு நீர் தேங்கி
அதில் குப்பை கூளங்கள் தாராளமாகக் கிடந்தன...




தடாகத்தின் கரையைச் சுற்றி அழகழகாக யானை சிற்பங்கள்...
நடை தளத்தில் எழிலான சிற்பக் கோலங்கள்...


நடை தளத்தில் சிற்பக் கோலங்கள்  
ஆனாலும் அவற்றைக் கண்டு ரசிப்பவர் எவருமில்லை..

அங்கிருந்து விலகி -
பாவை மன்றத்துக்கு வந்தால் அங்கேயும் அப்படியே!...

பாவை மாடத்துப் பதுமை  
பெருந்தூண்களுடன் கூடிய மன்றம்...
கலையழகு கொஞ்சும் கவினுறு சிற்பங்கள் எல்லாத் தூண்களிலும்...

ஆனாலும் பறவைகளின் எச்சங்களுடன் அவலத்தின் உச்சத்தில்!..

பாவை மன்றத்தைச் சுற்றிலும் குப்பைக் கூளங்கள்...
துப்புரவு என்பதையே அறியாதிருந்தது - அந்தப் பகுதி..

அதையும் மிஞ்சியதாக இளங்காமுகர்கள் -
அந்தப் புதர் இடுக்குகளில்...

காரைக்காலை அடுத்துள்ள ஊரிலிருந்து இளஞ்சிறார்களை சுற்றுலா அழைத்து வந்திருந்திருந்த ஆசிரியைகள் நிலை குலைந்து - ...
அவசர அவசரமாக பிள்ளைகளுடன் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்...



மனம் வருந்தியது... என்ன செய்வது?.. எல்லாம் காலத்தின் கோலம்!...

இன்றைய பதிவில் நெடுங்கல் மாடம் மற்றும் இலஞ்சி மன்றம் 
ஆகிய இடங்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன......

பாவை மன்றத்தின் படங்கள் தொடரும் பதிவுகளில்...

நல்லன எல்லாம்
நலங்கொண்டு வாழ்க 
ஃஃஃ 

21 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    பூம்புகாரின் அவலநிலையை படம்பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள். வேதனைதான் மிச்சம். நம் வரலாற்றுப் பெருமைகளை நாம் இப்படிதான் பாதுகாக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் தெளிவாக அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருவெண்காடு வரை போயிருந்தும் இன்னமும் பூம்புகார் போக நேரம் வாய்க்கவில்லை. ஆனால் உங்கள் பதிவைப் பார்த்தால் மனம் வருந்துகிறது. இதே போல் தான் சென்னை வள்ளுவர் கோட்டமும் ஆக்கிரமிப்புக்களால் பாழாகிக் கொண்டிருந்தது. இப்போது எப்படியோ! மக்கள் ஒழுக்கம் என்னும் சொல்லை மறந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      உண்மைதான் தாங்கள் சொல்வது... இளையோர் மனதில் நல்லொழுக்கம் என்பதை விதைக்கத் தவறி விட்டது - இன்றைய கல்வி முறை..

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பழமையைப் போற்றுவது என்பது தமிழர்களிடம் அறவே கிடையாது. இல்லை எனில் கிடைத்தற்கரிய கோயில்களை இப்படி எல்லாம் நாசம் செய்து கொண்டு இருப்பார்களா? பூம்புகார் சரித்திரப் பிரசித்தி பெற்ற நகரம். அதில் அமைக்கப்பட்ட இடங்கள் எந்த ஆட்சியால் அமைக்கப்பட்டால் என்ன? அவற்றைப் பாதுகாக்க வேண்டும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதானே...

      எந்த ஆட்சியானால் என்ன?...
      கலையழகுகளைப் பாதுக்காக்க வேண்டாமா?...

      ஆற்றாமை தான்... என்ன செய்வது?...

      நீக்கு
  5. சிலம்பின் பாதை என்ற தலைப்பிலோ என்னவோ ஓர் பயணக்கட்டுரை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் கல்கியில் வந்தது. படிக்கையில் அந்தப் பாதையில் எல்லாம் நாங்களும் பலமுறை பயணித்திருக்கிறோம் என நினைத்து மெய் சிலிர்த்தது. அதுவும் மதுரை நகருக்கு வெளியே உள்ள ஆய்ச்சியர் இல்லங்கள் நான் பள்ளி மாணவியாக இருந்த காலத்திலும் இருந்தன. எங்களுக்கு வாடிக்கையாக வெண்ணெய், நெய் கொடுக்கும் பெண்மணியும் மற்ற ஆய்ச்சியப் பெண்களும் மதுரை நகரின் யானைக்கல் அருகே வைகை நதிக் கீழ்ப்பாலம் முடியும் இடத்தில் தான் குடி இருந்தார்கள். வரிசையாக அமைந்திருக்கும் அந்தக் குடி இருப்பு. அந்தப்பாதை எல்லாம் சிலம்பின் பாதை எனத் தெரிந்து மனம் சிலிர்த்துப் போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 20/30 ஆண்டுகளுக்கு முன் சிலம்பின் பாதையில் சிறப்புப் பயணம் மேற்கொண்டார்கள் என நினைக்கின்றேன்.. சரியாக நினைவில் இல்லை...

      மேலதிகத் தகவல்களுடன் மீள்வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. பூம்புகார் சென்று வரலாம் என அவ்வப்போது தோன்றும். ஆனால் உங்கள் பதிவு பார்த்த பிறகு செல்லாமல் இருப்பதே மேல் எனத் தோன்றுகிறது!

    பல இடங்களில் இந்த நிலை தான். தில்லியில் இருக்கும் பூங்காக்களில் இன்னும் மோசமான நிலை. குடும்பத்துடன் சென்று வரலாம் என்றால் ரொம்பவே யோசிக்க வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      பூம்புகாருக்கு உண்டான இடையூறுகளை அந்த ஊர்க்காரர்களே நீக்கித் தரவேண்டும்... அங்கே சுற்றுலா தழைக்க வேண்டும்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. படங்கள் அற்புதம்

    //இதெல்லாம் அங்கே எழுதி விவரமாக வைத்திருக்கின்றார்கள்..
    ஆனாலும் அவற்றை நின்று படிக்கத்தான் எவருக்கும் நேரம் இல்லை...//

    சவுக்கடி வார்த்தைகள் ஜி

    பதிலளிநீக்கு
  8. பூம்புகார் ஒரு காலத்தில் நன்றாக இருந்தது. வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களை அழைத்துக் கொண்டு போவோம்.

    கடல்சீற்றத்தால் இலஞ்சிமன்றம், கண்ணகி சிலைவரை கடல்நீர் உள்ளே வந்து விட்டது. அதனால் கற்கள் போட்டு கடல் அழைகை பார்க்கமுடியாதபடி செய்து விட்டார்கள். கடற்கரையும், மிக மோசமாக குப்பைக்கூளமாக மாறி விட்டது.

    நெடுங்கல் மன்றம், காவிரியும், கடலும் சங்கமம் ஆகும் இடம் எல்லாம் போவதே இல்லை. பயமாய் இருக்கும். அதற்கு பின் கடல் பார்க்க ஆசை பட்டால் தரங்கம்பாடி அழைத்து செல்வோம்.


    நம் மக்கள் அதை பாழ்படுத்தி விட்டார்கள், கடற்காற்று கொஞ்சம் சிதைத்து விட்டது. கட்டியவர் ஆட்சிக் காலத்தில் நன்றாக இருந்தது. பின்னால் மற்ற ஆட்சியாளர்கள் கவனிப்பதை விட்டு விட்டார்கள்.

    இந்திரவிழா சிறப்பாக நடந்த காலத்தில் பூம்புகார் கல்லூரி முதல்வர் நடனம் ஆடினார். பூம்புகார் கலைக்கலுலூரியில்தான் சார் தமிழ்துறைதலைவராக வேலைப்பார்த்து ஓய்வு பெற்றார்கள். கல்லூரி மேலையூரில் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      மேலதிகத் தகவல்களுடன் கருத்துரை அழகு...

      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  9. படங்கள் அழகு...

    குப்பைகள் வேதனை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. மனம் வேதனை அடைகிறது. யார் கட்டினால் என்ன? அடுத்து வரும் அரசு அதை பாதுகாக்காமல் பாழடிப்பது நம் ஊர் பழக்கம். வள்ளுவர் கோட்டம், முக்கொம்பு, இப்படி இன்னும் சில சொல்லலாம்.
    நகருக்கு நடுவே இருந்த ஒரு பெரிய தோட்டம் அழிக்கப்பட்டு சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டது. அது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஆனால் அப்படி மாற்றியவர் அதில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் தனியார் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மக்களின் வரிப்பணம் 500 கோடி ஆத்தோடு போச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      மக்கள் வரிப்பணம் ஆத்தோடு போச்சு...
      அந்த ஆறும் குளமும் காத்தோடு போச்சு...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. பூம்புஹார் செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது யோசிக்க வைத்தாலும் குழந்தைகளுக்கு இதைக் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. படங்கள் எல்லாம் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. அண்ணா மிகவும் அழகான படங்கள். தெளிவாக இருக்கின்றன. பூம்புகார் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு அதுவும் கடல் கொண்ட நகரம் என்றும் ஆசை பார்க்க. வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்க வேண்டும்.

    குறிப்பாக இது கடல் சார்ந்த பகுதி என்பதாலும் காவிரியின் முகத்துவாரம் கடலோடு கலப்பது எல்லாம் பார்க்க வேண்டும் என்ற அவா உள்ள

    சில மனதை வேதனைப்படுத்துகிறது குப்பைகள், வேண்டாதவை நடப்பது இதெல்லாம்...பள்ளி மாணவர்கள் வரும் இடத்தில் இப்படி இஎஉந்தால் எப்படிக் காட்ட முடியும். சூப்பர் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..