நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 18, 2019

கலை விருந்து 4

தஞ்சை பெரிய கோயிலில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றுடன் இன்றைய பதிவு மலர்கின்றது..

இதற்கு முந்தைய பதிவுகள் இதோ கீழே..







இரு நான்கு திசைகளிலும் தேடிப் பார்த்தாயிற்று.. இறைவனை விடப் பெரியவன் என்று எவரையும் காணோம்!... - என்று சொல்லாமல் சொல்லுரைக்கும் துவாரபாலகர்..


இரண்டாவது ராஜகோபுரமாகிய ராஜராஜன் திருவாயிலின் தென்புறமாக அமைந்துள்ள இந்தத் துவார பாலகருடைய கதாயுதத்தைக் கவனியுங்கள்..

வலிமையுடையது யானை.. அந்த யானையை அதை விட வலிமையுள்ள பாம்பு ஒன்று விழுங்க - அந்தப் பாம்பினை இவர் தனது கதாயுதத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்... இப்படி ஆனை விழுங்கியைக் கையாளும் இவரது பராக்கிரமம் தான் என்ன?... இத்தகைய துவாரபாலகரைப் பராமரிக்கும் இவரது தலைவனாகிய இறைவனின் கீர்த்திதான் என்ன!?..

இப்படியாகிய இறைவன் தான் அங்கே திரு மூலத்தானத்தில் குடி கொண்டுள்ளார்...இறைவனை விடப் பெரியவர் எவரும் இல்லை என்ற ஒன்றினை மட்டும் மனதில் வைத்து நடந்து கொள்ளுங்கள்!?.. என்று அறிவுரையுடன் அறமும் உரைத்து நிற்கின்றார்...

அத்தனை அருமைகளையும் பெருமைகளையும் ஒருகல்லுக்குள் அடக்கி நம் கண் முன்னே நிறுத்தி விட்டது - சோழப் பெருந்தச்சனின் சிற்றுளி..


தஞ்சை பெரிய கோயில் அரசியல் வாதிகளுக்கு ராசியான கோயில் இல்லை. அங்கே ஏதோ மர்ம சக்தி இருக்கின்றது... - என்றெல்லாம் எதிர்மறைக் கருத்துகளை ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகள் பலமுறை சொல்லி விட்டார்கள்...

அதிகார மமதை கொண்டு திரிவோர்க்கு இந்தக் கோயில் என்றில்லை எந்தக் கோயிலும் ஆபத்தானவை தான்...

அது என்ன மர்ம சக்தி!..

மாமன்னன் ராஜராஜ சோழனுடைய திருப்பெயர்களுள் ஒன்று...
மும்முடிச் சோழன் என்பதாகும்...

தனது மணிமுடியுடன் ஏனைய சேர பாண்டியரின் மணி முடிகளையும் தன்னகத்தே கொண்டிருந்தவன் என்பது நிதர்சனம்...

கடல் கடந்தும் தனது படைகளை நடத்தி ஆங்கெல்லாம் புலிக்கொடியைப் பறக்க விட்ட மகா ராஜன்...

அந்தப் பேரரசன் ஆட்சி செய்த நாட்டை நாம் ஆளும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறதே என்ற பணிவு ஒன்றில்லாமல் நான்.. நானே!... என்று தறுக்கித் திரிவோர்க்கு விடை கூறும் வகையில் தான் ஈசன் எம்பெருமானின் மழு ஆயுதம் அவரது திருவாசல் காப்போர் தம் கையினில் திகழ்ந்து கொண்டிருக்கிறது...

அறம் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!...

அப்படி நிகழ்வதனால் தான் இத்திருக்கோயிலுக்குள் நுழைவதற்கு
அறம் பிழைத்தோர் அஞ்சுகின்றனர்...

சாமான்யன் பிழை செய்கின்றான்..
அது ஒவ்வொரு சமயத்தில் மன்னிக்கப்படுகின்றது..

சகலமும் அறிந்தவன் பிழை செய்தால்
அவனுக்குத் தண்டனை பல மடங்காகின்றது...

இது வேதங்களும் புராணங்களும் காட்டும் உண்மை...

அந்தத் தண்டனை அவனைச் சிறைக்குள் தள்ளிப் பூட்டுவது மட்டும் அல்ல!..
எப்படி வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்...

அவரவர் யூகித்து உணர்ந்து கொள்க...

மனங்கெட்ட மனிதருக்கு மழுதான் விடை!.. - என்று உணர்த்தும்படியாக
வலத்திருக்கரத்தில் மழுவுடன் காட்சி தரும் துவார பாலகரைக் கீழுள்ள படத்தில் காண்க..

இத்திருவடிவம் திருமூலத்தானத்தின் வடக்குப்புற வாசலில் திகழ்கின்றது..

இந்த வாசல் வழியாகத்தான் ராஜராஜ சோழன் தரிசனம் செய்ய வருவார் என்று சொல்கின்றார்..

இந்த வடக்கு வாசல் நிலையின் உச்சியில் அஷ்டமங்கலச் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

வடக்குப் புற வாசலின் துவார பாலகர் 
மேலே உள்ள துவாரபாலகர் திருமூலத்தானத்தின் வடக்குப் புற வாசலின் மேல் பக்கத்தில் விளங்குகிறார்...
.
என்ன ஒரு கம்பீரம்!...
நிற்கின்ற நிலையிலேயே வீரம் ததும்புவதைக் காணுங்கள்....

அவரது கோரைப்பல், கை கால் விரல் நகங்களின் கூர்மையை அடுத்துள்ள படங்களில் காணலாம்...

கோரைப்பல்லின் அழகு 
 விரல் நகங்களின் கூர்மை  
கால் விரல்கள் 


மேலும் சில படங்களுடன் அடுத்த பதிவினில் சந்திக்கும் முன்பாக -

பதிவுகளைக் கண்டு கருத்துரையிடும் தங்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றியும் வணக்கமும் ..

உடனுக்குடன் பதில் கூறாதற்கு இயலவில்லை...

கருத்துரைக்குப் பதில் கூறாதோர் பட்டியலில் நானும் ஒருவன் - என அன்புக்குரிய ஒருவர் சொல்லியிருக்கிறார்...

என்ன செய்ய!.. இங்கே சூழ்நிலை இப்படி இருக்கிறது..

விடியற்காலை மூன்றே முக்கால் மணிக்கு எழுந்து குளித்து விட்டு விளக்கேற்றி வணங்கிய பின் கீழே இறங்கி ஓடினால் ஐந்து மணிக்குப் பேருந்து..

ஐந்தரைக்கெல்லாம் வேலைத் தளத்துக்குப் போய் விடலாம்...
அதிலிருந்து மாலை நாலு மணி வரை வேலை ஓயாது.. அவ்வப்போது கையிலுள்ள Smart Phone ல் வலைத் தள நிகழ்வுகளைப் பார்த்து கொள்வேன்..

அதிலும் கட்டை விரலால் அதிகமாக எழுத்துகளைத் தட்டுதற்கு இயலவில்லை..

மாலை ஆறு மணிக்கு அறைக்குத் திரும்பினால் இணையம் இழுவையோ இழுவை என்று இருக்கும்...

ஞானாநந்தை கவியமுத அதிராவின் வலைத் தளத்தை இண்ட்லியோ இட்டிலியோ என்று ஒரு திரை வந்து மறைக்கும்... உள் நுழைய முடியாது..

ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களின் தளம், திருமிகு அனு பிரேம் அவர்களது தளம்
திரு வெங்கட் அவர்களது தளம் இவற்றையெல்லாம் வாசித்து முடிப்பதற்குள் கருத்துரைப் பெட்டி காணாமல் போயிருக்கும் ..

மீண்டும் முயற்சிக்கும்போது இப்படியொரு வலைத்தளமே இல்லை என இணையம் பீதியைக் கிளப்பும்...

இதையெல்லாம் கடந்து தான் ஒவ்வொரு நாளும்...

தங்களது கருத்துரையும் பாராட்டுரையும் வாழ்த்துரைகளும் தான் என்னை இங்கே உற்சாகப்படுத்துவன....

சிற்சில பதிவுகளில் நண்பர்கள் சிலரைக் காணவில்லையெனில் மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்...

எல்லாருடைய மனமும் இப்படித்தான் என்பதை நானறிவேன்..

இந்த அளவில் இதனை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்...

அன்பினால் கட்டுண்டிருக்கட்டும்
ஆழி சூழ் உலகு...

வாழ்க நலம் 
ஃஃஃ  

21 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் துரை அண்ணா...

    படங்கள் சூப்பரா இருக்கே...படிவுக்குப் போய்ட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு முடிஞ்சப்போ, இணையம் ஒழுங்கா இருக்கும்போது வந்து கருத்துச் சொல்லுங்க. ஆனால் எங்கேயுமே காணவில்லை எனில் என்னவாச்சோ என மனம் நினைக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  3. யானையை விழுங்கும் பாம்பா? ஆ....!

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
  4. ஜூனியர் விகடன் வருவதற்கும் முனனரே கூட அந்த வதந்திகள் உண்டு. எம்ஜி ஆருக்கு முதல் உடல் நலக்குறைவு அங்குதான் ஏற்பட்டது என்றுநினைவு. ஆனால் அந்த வதந்தி சம்பந்தமாக நீங்கள் சொல்லி இருக்கும் கருத்துகள் அட்சரலட்சம்.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் எல்லாம் அதி அற்புதம் . அநேகமாய் அங்கே நாலைந்து நாட்களாவது தங்கி இருந்தால் தவிர இப்படிப் படங்கள் எடுக்க முடியாது. சிற்ப அற்புதங்களை அந்தக் காலங்களிலேயே செய்த நம் மக்களின் புத்திசாலித்தனமும், விவேகமும், பக்தியும் இப்போது எங்கே? ஒரே ஒரு இலவசத்துக்கு மயங்குகிறவர்களைத் தான் இப்போது பார்க்க முடிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.

      படங்கள் அழகோ அழகு.

      அதைச் சொல்லிப் பாராட்ட மறந்து விட்டேன்.

      நீக்கு
  6. மொபைலில் நான் கட்டைவிரலால் டைப்புவதில்லை! வலது ஆட்காட்டி விரலால் மட்டுமே! உங்கள் வேலைப்பளு புரிகிறது. மெதுவாய் வாருங்கள். நேரம்கிடைக்கும்போது பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துங்கள். காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. இப்படிப் படங்கள் எடுக்க முடியும்! என வந்திருக்கணும். எதிர்க் கருத்துத் தொனிக்கும்படி வந்து விட்டது. மன்னிக்கவும். :(

    பதிலளிநீக்கு
  8. துரை அண்ணா அந்த துவாரபாலகரின் வீரத்துடன் முகத்தில் கருணையும் இருப்பது போலத் தெரிகிறது இல்லையா?

    படங்கள் அத்தனையும் அழகு...சிற்பங்கள் என்னமா இருக்கு!!!!

    உங்கள் கருத்துகள் மிகவும் சிறப்பு...உண்மைதான்...விகடன் செய்தி எல்லாம் இப்பத்தான் தெரியுது...

    உங்களுக்கு இணையப்பிரச்சனை தெரியும்...பரவாயில்லை எப்போது முடிகிறதோ அப்போது கருத்து கொடுங்க...நம்ம வலைத்தளமும் வந்துச்சுனா பாருங்க...ஒரு வேளை நிறைய படங்கள் இருந்தால் வருவதில்லையோ?!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அற்புதக் கோவில் பற்றி அருமையான பதிவு. எத்தனை கம்பீரமான சிற்பங்கள். அதுவும் விரல்கள்,நகங்கள் என்று எப்படிச் செதுக்கி இருக்கிறார் சிற்பியார்.
    நேர்மையான ஆட்சி நடத்துபவருக்கு இறைவனைக் கண்டால் என்ன பயம்.

    உங்கள் கருத்துகள் அனைத்தும் அருமை. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  10. புகைப் படங்களும் கருத்துக்களும் அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  11. படங்களை அழகா எடுத்திருக்கீங்க. ஆமாம், அந்தக் குட்டியானையை முழுங்கவரும் பாம்பிற்குப் பக்கத்தில் பெரிய முதலை இருக்கிறதே கவனித்தீர்களா? காலின் அளவு (பாதம்) முதலையின் நீளத்தில் முக்கால் என்றால் துவாரபாலர்களின் அளவு விளங்கும்.

    பதிலளிநீக்கு
  12. வடக்குப்புற வாசல் துவாரபாலகர் காலில் விபூதியினால் கைச்சாத்து வைத்திருப்பதைப் பார்த்தீர்களா? கருவறைக்கு வெளியே துவாரபாலகர்கள் பக்கத்தில் இந்தமாதிரி விபூதியினால் நம் மக்கள் அலங்கோலப்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் படத்தை இன்று உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் (நீங்கள் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில்)

    பதிலளிநீக்கு
  13. இந்த இடங்களுக்கு மீண்டும் முனைவர் ஜம்புலிங்கம் சார், கரந்தையார் இவங்களோடு (அந்த இடத்தை முழுவதுமாக அறிந்தவர்களோடு) சென்றுபார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரு புகைப்படமும், அதற்கான விளக்கமும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  15. நீங்கள் தொடர்ந்து எழுதுவதே எங்களுக்குச் சிறப்பு. வாய்ப்பிருப்பின், நேரமிருப்பின் மறுமொழி இடுங்கள். உங்கள் பதிவிலிருந்தே நேரத்தின் அருமையும், உங்கள் சூழலும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  16. முடிந்த போது வந்து பின்னூட்டம் தாருங்கள்.
    எனக்கும் அதிராவின் ப்தைவை படிக்கும் போது அப்படித்தான் வருகிரது, இரண்டு மூன்று முறை முயற்சிக்கு பின் தான் வெற்றிகரமாக உள் நுழைந்து கருத்து இட முடியும் அதிராவின் தளத்தில்.

    என் தளமும் படுத்துகிறது என்று அறிய முடிகிறது.
    உங்கள் பதிவும், படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. எத்தனை எத்தனை செய்திகள் மிக சிறப்பு ..

    பல வேலைகளுக்கு நடுவே நீங்கள் பதிவுகள் இடுவதே பெரும் செயல் ..அதனால் எங்கள் தளங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்கள் கருத்துக்களை இடுங்கள்..

    நாங்கள் காத்திருக்கிறோம் ...

    பதிலளிநீக்கு
  18. படங்களும், அவற்றிர்க்கான விளக்கங்களும் பிரமாதம். அடுத்த முறை தஞ்சை கோவிலுக்கு செல்லும் பொழுது நீங்கள் காட்சி படுத்தியிருக்கும் எல்லாவற்றையும் விடாமல் பார்க்கிறேன். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..