நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 23, 2018

தீபத் திருமலை

இன்று கார்த்திகைத் திருநாள்..

அஞ்ஞானம் எனும் இருள் அகலவும்
ஞானம் எனும் பேரொளி எங்கும் விளங்கிடவும்
வேண்டிக் கொள்வோம்!...

ஆதி மனிதன் தீயை வணங்கியதன் தொடர்ச்சியாக
தொன்றுதொட்டு நடந்து வரும் திருநாள் இது...

திருஞானசம்பந்தப்பெருமான் -
திருமயிலையில் பூம்பாவையை குடத்துள்ளிருந்து எழுப்பும்போது,

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்தேந்திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு .... -

-என்று வர்ணித்தருள்கின்றார்...


இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..
-: திருநாவுக்கரசர் :-

இந்த விளக்கு தான் -
இறைவனாகிய சிவபெருமான்!..
- என்றருள்கின்றார் திருநாவுக்கரசு ஸ்வாமிகள்..

தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்...

வள்ளுவப்பெருமானின் திருவாக்கு அது... 

மனசாட்சியை அக்னியின் வடிவம் என்பதோடு -
ஞானம் எனும் நல்லறிவினை சுடர் என்கின்றோம்...

அவ்வளவு ஏன்!...

கண்ணின் பார்வையையே ஒளி என்று தான் சொல்கின்றோம்...

ஸ்ரீஹரி மற்றும் நான்முகன்
இவர்களுள் யார் பெரியவர் என்றெழுந்த பிரச்னையின் போது
இவர்களின் நடுவே செந்தீப்பிழம்பாய் எழுந்தது சிவப்பரம்பொருள்...

அது கொண்டே ஜோதிமலையாய் புகழப்படுவது - அண்ணாமலை...

சிவபெருமானுக்கு உரியதாகக்
கொண்டாடப்படும் கார்த்திகைத் திருநாளில்
ஜோதியில் ஆர்பவித்தெழுந்த அறுமுகனும்
வழிபடப்படுகின்றான் என்பது பெருஞ்சிறப்பு...

கார்த்திகைத்திருநாள் சகல சிவாலயங்களிலும்
சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும்
தீபத் திருநாளுக்கே உரித்தான திருத்தலமாக விளங்குவது -
திரு அண்ணாமலை!...

திருஅண்ணாமலையில்
நிகழ்ந்து கொண்டிருக்கும் தீபத் திருவிழாவின்
நிகழ்வுகளுள் சிலவற்றை இன்றைய பதிவில்
வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்...

வழக்கம்போல
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
மனமார்ந்த நன்றி...

திருத்தலம்
திருஅண்ணாமலை


இறைவன் - அண்ணாமலையார்
அம்பிகை - உண்ணாமுலையாள்
தலவிருட்சம் - மகிழ மரம்..
தீர்த்தம் - சிவகங்கைத் தீர்த்தம்

பஞ்சபூத திருத்தலங்களுள்
அக்னியாக விளங்கும் திருத்தலம்...

அருள் திரு அண்ணாமலையார் 
அருள்நிறை உண்ணாமுலையாள்   
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்மு ழவதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே!.. (1/10)
-: திருஞானசம்பந்தர் :-



பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக் குறுநோய் அடையாவே!.. (1/10) 
-: திருஞானசம்பந்தர் :-


பூவார்மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள் செய்தார்
தூமாமழை நின்று அதிர வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே!.. (1/69) 
-: திருஞானசம்பந்தர் :-

எனைத்தோரூழி அடியாரேத்த இமையோர் பெருமானார்
நினைத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலர் உறைகோயில்
கனைத்தமேதி காணாது ஆயன் கைம்மேற் குழலூத
அனைத்துஞ் சென்று திரளுஞ் சாரல் அண்ணாமலையாரே!.. (1/69) 
-: திருஞானசம்பந்தர் :-



ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோள் சுடர்மழுப் படையினானே
ஆதியே அமரர் கோவே அணியணா மலையுளானே
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவி லேனே!.. (4/63) 
-: திருநாவுக்கரசர் :-

பண்டனை வென்ற இன்சொல் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே அணியணா மலையுளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல்லி லேனே!.. (4/63) 
--: திருநாவுக்கரசர் :-



காற்றனைக் கலக்கும் வினை போயறத்
தேற்றனைத் திருஅண்ணா மலையனைக்
கூற்றனைக் கொடியார் புரம் மூன்றெய்த
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ.. (5/4)
-: திருநாவுக்கரசர் :-

மின்னனை வினைதீர்த்து எனையாட் கொண்ட
தென்னனைத் திரு அண்ணா மலையனை
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்றெய்த
அன்னனை அடியேன் மறந்து உய்வனோ.. (5/4)
-: திருநாவுக்கரசர் :-



பெற்றம் ஏறுவர் பெய்பலிக் கென்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்றந் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நற்ற வத்தோடு ஞானத் திருப்பரே.. (5/5) 
-: திருநாவுக்கரசர் :-

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடிவந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும் நமதுள்ள வினைகளே!.. (5/5) 
-: திருநாவுக்கரசர் :-


மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும் கொப்பரை 
அனைவருக்கும்
தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்..

இவ்வேளையில்
கரை கடந்த புயலால் இடருற்றிருக்கும் மக்கள்
இயல்பு நிலைக்குத் திரும்புதற்கு
வேண்டிக் கொள்வோம்!...
***

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
அண்ணாமலையானுக்கு அரோகரா..
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. குட்மார்னிங். திருக்கார்த்திகைப் பதிவுன்னா இப்படிப் போடணும்...

    பதிலளிநீக்கு
  2. கார்த்திகை பற்றி நினைக்கக் கூடிய நிலையில் இல்லாதிருக்கும் மக்கள் சீக்கிரம் மீண்டெழ பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  3. வெள்ளியின் காலை கார்த்திகை தீபங்களுடன் தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
  4. தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
    மக்களின் துன்ப இருள் அகன்று அவர்களின் வாழ்வில் வெளிச்சம் பரவட்டும்.
    இறைவன் அருள் புரிய பிரார்த்திப்போம்.

    படங்களும், செய்திகளும், பாடல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. பாதிக்கப்பட்ட அனைவரது வாழ்வும் ஒளி பெற வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  6. கார்த்திகை நன்னாளில் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  7. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வேண்டும். இந்தக் கார்த்திகைத் திருநாளில் அவர்களுக்கும் சேர்த்து விளக்குகள் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம். நல்ல அருமையான பதிவு. விளக்கங்கள், பகிர்ந்த பாடல்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  8. பாடல்களில் இருக்கும் உட்பொருள் டெரிந்து வழிபட்டால் நலமாயிருக்குஆனால் நாமோ சக்கையையே பொருள்புரியாது போற்றுகிறோம்

    பதிலளிநீக்கு
  9. தீபத்திருநாள் வாழ்த்துகள்.

    எத்தனை எத்தனை பாடல்கள். இவற்றை எல்லாம் பொருளுடன் படிக்க விருப்பம் வருகிறது.

    படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
  10. தீபத்திருநாள் பதிவு நன்றாக இருக்கிறது ஐயா/ துரை அண்ணா.

    வழக்கம் போல் பாடல்கள் விளக்கங்கள் படங்கள் என்று அருமை.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..