நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 01, 2014

சங்காபிஷேகம் - 1

இன்று கார்த்திகை சோமவாரம்.

சிவாலயங்களில் சங்காபிஷேகம் நிகழ்த்தப்படும் நன்னாள்.

கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சங்காபிஷேகம் நிகழ்வது ஏன்!..

தட்சனின் சாபத்தினால் உருக்குலைந்த சந்திரன் அபயம் என்று விழுந்தது - அம்மையப்பனின் திருவடிகளில்!..

சந்திரனின் அவலத்தைக் கண்ட எம்பெருமான் - தட்சனின் சாபத்திலிருந்து அவனுக்கு அபயமளித்து -

நீ நாளும் வளர்ந்து பூரணமாகப் பொலிவாய்!.. - என வரமும் அளித்தார்.


அத்துடன் - தேய்ந்து நின்ற அவனது கலையினைத் தன் ஜடாமகுடத்தில் சூட்டிக் கொண்டு - ஸ்ரீசந்திரசேகரர் எனத் திகழ்ந்தார்.

தனது சங்கடம் தீர்ந்ததால் மனம் மகிழ்ந்த சந்திரன் - நன்றி மறவாதவனாக - தனக்கு சாபவிமோசனம் நல்கிய இறைவனை - தன்னிடமிருந்து பெருகிய அமிர்தத் துளிகளால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தான்.

மனோகாரகனாகிய சந்திரன் மனம் ஒன்றி செய்ததே - சங்காபிஷேகம். 

பாற்கடலில் அமுதம் தோன்றுவதற்கு முன் தோன்றிய சங்கு அஷ்ட மங்கலப் பொருட்களுள் ஒன்றாகும்.

சங்கும் சந்திரனும் மகாலக்ஷ்மியும் பாற்கடலில் தோன்றியவர்களே..

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுர பூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே!..

என்பது, இந்திரன் துதித்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தின் முதலாவது ஸ்தோத்திரம்.


சங்கு சக்ரதாரி என்று போற்றப்படும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருக்கரத்தில் திகழும் சங்கு - பாஞ்சஜன்யம்.

சிவபெருமான் - ஸ்ரீஹரிபரந்தாமனுக்கு சங்கு வழங்கியதாக தலபுராணம் விளங்கும் தலங்கள் இரண்டு. 

அவை திருவலம்புரம் மற்றும் திருத்தலைச்சங்காடு என்பன.

திருவலம்புரம்
திருவலம்புரம்
இறைவன் - ஸ்ரீவலம்புர நாதர்
அம்பிகை - ஸ்ரீ வடுவகிர்கண்ணியம்மை
தீர்த்தம் - பிரம தீர்த்தம்
தலவிருட்சம் - பனை


பரந்தாமனுக்கு சங்கினை வழங்கிய பரமனின் சங்கு - கௌரி சங்கம்.

விநாயகரின் திருக்கரங்களில் சங்கு விளங்குகின்றது.

அழகாபுத்தூர் முருகனின் திருக்கரத்தினில் சங்கும் சக்கரமும் திகழ்கின்றன.

தஞ்சைப் பெரிய கோயிலின் முருகன் சந்நிதியின் - முன் மண்டபத் தூணில் நடராஜப் பெருமான் சங்கு சக்ரத்துடன் நடனம் ஆடும் சிற்பம் ஒன்றுள்ளது.

துர்காம்பிகையின் திருக்கரத்தில் சங்கு விளங்குகின்றது.

ஸ்ரீ கிருஷ்ணனின் பாஞ்சஜன்யத்தைத் தொடர்ந்தே யுத்தம் ஆரம்பமாகின்றது.


இந்த சங்கினிடம் தான் - சூடிக்கொடுத்த சுடர்க்கொடி கோதை நாச்சியார் மனம் விட்டுப் பேசுகின்றாள்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழ! நான்

மத்தளமும் சங்கும் ஒலிக்க முத்துப் பந்தலின் கீழ், மாப்பிள்ளை என மதுசூதனன்  - என் கரத்தினைப் பற்றிடக் கனாக் கண்டேன் தோழி!.. - எனப் பரவசமாகும் ஆண்டாள் -

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்ஆழி வெண் சங்கே!..

என - மாதவனின் திருக்கரத்திலிருக்கும் வெண்சங்கிடம் - விருப்புற்றுக் கேட்கிறாள் ரகசியமாய்!..

மிகுந்த சிறப்புகளுக்குரியது சங்கு!.. 

சங்கு என்பது கடலிலோ ஆற்றிலோ வாழும் நத்தையின் மேல் ஓடு தான்.

பெரும்பாலானவை இடப்புறமாகச் சுழன்றுள்ள இடம்புரிச் சங்குகளே. 
தொன்மைக் காலத்திலிருந்தே சிறப்பானவை வலம்புரிச் சங்குகள்.

சங்கின் தன்மையைப் பொறுத்து அவற்றுக்கு பெயர்கள் உள்ளன .

பண்டைய தமிழர்கள் சங்குகளால் செய்யப்பட்ட வளையல்களையும் மற்ற அணிகலன்களையும் அணிந்திருந்தனர் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.  


வினை தீர்க்கும் விநாயகரின் வடிவங்களுள் வலம்புரி வடிவம் சிறப்பானது.

வலம்புரிச் சங்கு வீட்டில் இருப்பது - மஹாலக்ஷ்மி வாசம் செய்வது போல!..

அத்துடன் நாமும் நன்னெறியில் நடந்து வந்தால் - பிறவிப் பிணி தீர்ந்து பெரும் பேறு எய்தலாம் என்பது திருக்குறிப்பு.

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் மூதுரை

மேன்மக்களுக்கு அடையாளமாக சங்கினைக் குறிப்பிடுகின்றார் ஔவையார். 

அந்நாளில் தமிழர் தம் வாழ்வில் இடம் பெற்றிருந்த சங்கின் பெருமையை பட்டினத்தடிகள் பாடலின் மூலமாக அறியலாம்.

முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும் அம்மட்டோ இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்.

பாலூட்டும் சங்கை முதற்சங்கு எனவும்
திருமண பந்தத்தின் போது ஒலிக்கும் சங்கினை இடைச்சங்கு எனவும்
இறுதி யாத்திரையின் போது ஒலிக்கும் சங்கினை கடைச்சங்கு எனவும் பட்டினத்தடிகள் நயமுடன் குறிக்கின்றார்.

அந்தக் காலத்தில் - தான் பெற்ற பிள்ளையைத் தூங்க வைக்கும் போது - வலம்புரிச் சங்கில் பாலூட்டுவதாக தாலாட்டு பாடுவது  ஒவ்வொரு தாய்க்கும் மகிழ்வாக இருந்திருக்கின்றது.

அப்போதெல்லாம் - மார்கழி முழுவதும் விடியற்காலைக்கு முன்பாகவே - பண்டாரத்தார் என்பவர்கள் - சங்கினை முழங்கியவாறு தெருக்களில் சுற்றி வருவார்கள்.

நள்ளிரவில் நடைபெறும் காளிபூஜையில் சங்கு இன்றியமையாதது.


வீட்டு வாசலில் இடப்படும் சங்கு கோலம் மிகவும் விசேஷமானது.

வட திசைக்கு அதிபதியாகிய குபேரனிடம் உள்ள நிதிகளுள் சிறப்பானவை - சங்க நிதி பதும நிதி என்பவை.

சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே. (6/95)

இறையன்பு இல்லாமல் சங்க நிதி, பதும நிதி - இவற்றைத் தருபவரை விட, சிவ அன்பில் திளைக்கும் தொழு நோயாளரும் புலையரும் நாம் வணங்கும் கடவுளர் ஆவர் என்பது திருநாவுக்கரசு சுவாமிகளின் சங்க நாதம் ஆகும்!..

அது மட்டுமல்ல - சிவபூஜையின் போது வெண்சங்கு ஒலிக்காத ஊர்களும், ரிஷபக் கொடி பறக்காத ஊர்களும் - காடுகளுக்குச் சமம்!.. - என்கின்றார்.

சங்கின் ஒலி வீரத்தையும் விழிப்புணர்வையும் தூண்டக்கூடியது.

போர்ப் பரணியில் சங்க நாதமே முன்னோடி!..

தலை தாழ்ந்து கிடந்த தமிழனை எழுப்புதற்காக -

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!..  - என முழங்கிய பாவேந்தர்,

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு!..

- என்று ஆர்ப்பரிக்கின்றார். 

இத்தகைய பெருமைகளை உடையவை சங்குகள்.

சங்குகளைக் கொண்டு கார்த்திகை மாதத்தின் முதல் அல்லது மூன்றாவது அல்லது கடைசி சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு நடந்து வரும் வைபவமாகும்.

அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவார சங்காபிஷேகமும்  ஆராதனைகளும்  சிறப்பாக செய்யப்படுகின்றன.

சோமவாரத்தன்று மாலை வேளையில் சிவ சந்நிதிக்கு முன்பாக உசிதமான வரிசைகளில் தலைவாழை இலையில் பச்சரிசியை பரப்பி - சாதாரண வெண்ணிறச் சங்குகளை வைப்பர்.


சங்குகளை வாசனை திரவியங்கள் தோய்ந்த நீரால் நிறைத்து சங்குகளுக்கு சந்தனம், குங்குமம் வைத்து தர்ப்பைப் புல்லுடன் பலவித நறுமலர்களையும் கொண்டு அலங்கரிப்பர்.

இந்தச் சாதாரண சங்குகளின் நடுவில் ஒரு தட்டில் பட்டுத் துணியில் பெரிய வலம்புரிச் சங்கை வைத்து, அதை வாசனை திரவியங்களாலும் சுத்தமான நீராலும் நிரப்புவர்.

மேலும் - சிவபெருமானைக் கலசத்தில் ஆவாகனம் செய்து நடுநாயகமாக வைத்து ஏக காலமாக யாகத்தைத் தொடங்குவர்.

தஞ்சை பெரியகோயிலில் சங்கு பூஜை
சங்குகளை - சிவலிங்கம், ஸ்வஸ்திகம், தாமரை அல்லது வில்வம் எனும்   வடிவங்களிலோ சக்கர வடிவாகவோ சதுர வடிவாகவோ அலங்கரித்து வைத்து யாக பூஜைகளை நிகழ்த்துவர்.

சங்கின் வடிவாகவே அமைத்து வழிபடுவதும் உண்டு.

யாக முடிவில் பூர்ணாஹுதியுடன் ஆராதனை நிகழும். அதன் பின் புனித சங்கு தீர்த்தத்தினைக் கொண்டு சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் நிகழும். 

சோமவாரத்தில் நிகழும் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும். தீராத நோய்கள் தீரும் என்பர் - ஆன்றோர்.

இறைவனுக்குச் செய்த சங்காபிஷேக தீர்த்தத்தினை வீட்டில் தெளித்தால் தோஷங்களும் தீயசக்திகளும் நம்மை விட்டு விலகும் என்பதும் நம்பிக்கை.

கடலில் பிறந்த சங்கு சந்திரனின் அம்சமாகப் புகழப்படுகின்றது.
சந்திரனுக்கு உரிய மங்கலங்களுள் ஒன்றாகியது சங்கு. 


அந்தச் சங்குகளில் நீர் நிறைத்து பூஜை செய்து - அந்த சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது எல்லா நன்மைகளையும் தரவல்லது.

இயன்றவரை - சிவாலயங்களில் பெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வித்து வைத்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்க வேண்டும்.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருஅண்ணாலையில் நிகழும் தீபத் திருவிழாவின் மூன்றாம் நாளில், அண்ணாமலையாருக்கு சங்காபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி -

அண்ணாமலையில் சங்கு பூஜை
கடந்த வெள்ளிக்கிழமை ( 28/11) காலை 10 மணி முதல் 11.30 மணி வரை கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள  நந்தி அருகே ஆயிரத்தெட்டு சங்குகள் வைத்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னர், சங்குகளில் இருந்த புனித நீரால் - மூலவர் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.


இல்லறத்தில் கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் விளங்கவும், இல்லத்தில் பிள்ளைகளுடன் சுற்றம் சூழ தீர்க்காயுளுடனும் நல்வாழ்வு வாழவும் இந்த சங்காபிஷேக வழிபாட்டினைச் செய்யலாம்.

அவ்வாறு செய்விக்க இயலாதோர் -  இந்நாளில் குடும்பத்துடன் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று வழிபட வேண்டும்.

திங்கட் கிழமைக்கு உரிய  சந்திரன்  மனோகாரகன் எனப்படுபவன்.

நமக்கு விளையும் நன்மைக்கும் தீமைக்கும் மனமே  மூல காரணம்.

மனம் கொண்டு விளைந்த அவலங்களுக்கு வருந்தி, அவற்றிலிருந்து - நாம் விலகுவதற்கே வழிபாடு.

இந்த நாளில் மனம் ஒன்றி வழிபடும் எவரும் 
நல்வழிப்படுவர் என்பதே திருக்குறிப்பு!..

எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே!.. (7/72)
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

10 கருத்துகள்:

  1. சங்கின் தலபுராணம் உட்பட அனைத்தும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      வாழ்க நலம்..

      நீக்கு
  2. ஆலயதரிசனம் தொடருக்கு முன்பாக கார்த்திகை சோமவாரமும் சங்குகளும் முன்னுரிமை பெற்று விட்டன. நாங்கள் இராமேஸ்வரம் சென்றிருந்த போது ஒரு வலம்புரிச் சங்கு வாங்கி வந்தோம். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      ஒரு அவசியம் கருதியே - இந்தப் பதிவு..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அருமையான தகவல்கள்.... நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சங்கின் பல்வகையான பெருமைகளைத் தங்களது பதிவின் மூலமாக அறிந்தேன். இணைத்துள்ள புகைப்படங்கள் செய்திக்கு இன்னும் சிறப்பைச் சேர்க்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சங்கி பூஜா முறைகள் எப்படி செய்கிறார்கள் என அறிந்தேன். சங்கின் முக்கியத்துவம், பல தகவல்கள் இப்போது தான் அறிந்தேன். நன்று ஐயா.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..