நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 10, 2023

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 24
வெள்ளிக்கிழமை

இன்று
பொதுத் திருப்புகழ்
-::-
அனைவரும் நோயின்றி வாழ்வதற்கு
இத்திருப்புகழ் வழியாக வேண்டிக் 
கொள்கின்றார் 
அருணகிரி நாதர்..

தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ... தனதான


வாதந் தலைவலி சூலம் பெருவயி 
றாகும் பிணியிவை ... யணுகாதே

மாயம் பொதிதரு காயந் தனின்மிசை
வாழுங் கருவழி ... மருவாதே

ஓதம் பெறுகடல் மோதுந் திரையது
போலும் பிறவியி ... லுழலாதே

ஓதும் பலஅடி யாருங் கதிபெற
யானுன் கழலிணை ... பெறுவேனோ..

கீதம் புகழிசை நாதங் கனிவொடு
வேதங் கிளர்தர ... மொழிவார்தம்

கேடின் பெருவலி மாளும் படியவ
ரோடுங் கெழுமுத ... லுடையோனே

வேதந் தொழுதிரு மாலும் பிரமனு
மேவும் பதமுடை ... விறல்வீரா

மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட 
வேல்கொண் டமர்செய்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


வாதம், தலைவலி, வயிற்று வலி (சூலை) 
மகோதரம்  (வயிற்றில் நீர் வீக்கம்) எனும்
நோய்களாகிய இவற்றில் எதுவும் 
என்னை அணுகாமல்

மாயையான உடல் கொண்டு 
வாழும்படியான கரு வழியில் 
மீண்டும் என்னைச் சேர்க்காமல்

பெருங்கடலில் மேன்மேலும்
வீசுகின்ற அலைகளைப் போல 
பல பிறப்புகளில்  கிடந்து உழலாமல்

உனது புகழைப் பாடும் பற்பல 
அடியார்களைப் போல் நானும்
நற்கதி அடையவதற்கு உனது
 திருவடிகளைப் பெறுவேனோ?..

இன்னிசை கீதமும், 
உன் புகழைப் பாடும் நாதமும், 

வேதங்கள் விளங்கும்படி 
அவற்றை ஓதுபவர்களை
ஊழ்வினை வருத்தாமல் அதனை அழித்து 
அவர்களோடு எப்போதும் உடனிருந்து காத்து 
நிற்கின்ற திருவருளை உடையவனே..

வேதங்கள் தொழுகின்ற
திருமாலும், பிரமனும்
போற்றுகின்ற திருவடிகளை உடைய 
வீரனே வெற்றி வடிவேலனே..

சினத்துடன் மேலெழுந்து வந்து 
போர் புரிந்த சூரன் பொடிப் பொடியாகிப் போகும்படி
போர் புரிந்த வேலாயுதப் பெருமாளே!..
**
 
முருகா முருகா..
முருகா முருகா..

ஓம் சிவாய 
 திருச்சிற்றம்பலம்
***

12 கருத்துகள்:

  1. நோயின்றி வாழ முருகப் பெருமான் திருவடிகளை சரணடைவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா முருகா..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. நலமே விளையட்டும். அருணகிரிநாதர் பாடலும் நீங்கள் எழுதிய பாடலும் சிறப்பு. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா முருகா..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி வெங்கட்..

      நீக்கு
  3. உங்கள் பாடல் நன்று

    அவனருளால் நோய்கள் இன்றி அனைவரும் நலமாக வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவனருளால் நோய்கள் இன்றி அனைவரும் நலமாக வேண்டுவோம்.

      முருகா முருகா..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி..

      நீக்கு
  4. நலம் காக்க
    பாடல் அரும
    நலம் தானே தாங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கின்றீர்கள்..

      நான் நலம் தான்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி..

      முருகா முருகா..

      நீக்கு
  5. திருப்புகழ் பாடலை பாடி முருகனை வேண்டி கொண்டேன்.
    அனைவரையும் ஆரோக்கியமாக வைக்கட்டும் முருகன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரையும் ஆரோக்கியமாக வைக்கட்டும் முருகன்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி..

      முருகா முருகா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..