நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 13, 2019

மங்கல மார்கழி 29

ஓம் 

தமிழமுதம் 

முயற்சி திருவினையாக்கும்முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.. (616)
*

அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 29 


சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்..
*
இந்த இளங்காலைப் பொழுதில்
எழுந்து நீராடி முடித்து
உன்னைச் சேவித்து
உனது பொற்றாமரைத் திருவடிகளைப் போற்றி
நிற்பதற்கான காரணம் தான் என்ன!..

அன்புடன் பசுக்களை மேய்த்து
அதனால் விளையும் நலன்களைத் துய்த்து வாழும்
ஆயர் குலத்தில் பிறந்த நீ
எங்களது பணியினை ஏற்றுக் கொள்ளாமல்
எங்கள் ஆவல் தீராது...

மங்கலம் எனும் பறைகளைக் கொள்வதற்காக
இன்று உன்னிடத்தே வந்தாலும்
இன்றைக்கும் இனிவரும் ஏழேழ் பிறவிக்கும்

உனக்கு உற்றவர்களாக ஆவோம்...
உனக்கே நாங்கள் ஆட்செய்வோம்...

அதற்கான வரத்தினைக் கேட்டுப் பெறவே
நாங்கள் கூடி வந்தோம்...

இப்பெரு வரத்தினை நீ நல்கும் வேளையில்
வேறெந்த ஆசைகளும் எம் மனதில் விளையாதபடிக்கும்
நல்லருள் புரிதல் வேண்டும்...

கோவிந்த சரணம்..
கோவிந்தா சரணம்!...
*

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள்
மகர்நோன்புச்சாவடி, தஞ்சை.. 
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய் எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறருளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று.. (2333)   
-: ஸ்ரீ பேயாழ்வார் :- 

இயற்கையின் சீதனம் 

நிலக்கடலை


கண்டு பூ பூத்து
காணாமல் காய் காய்க்கும் சிறப்பினை உடையது..

கடலைக்குக் களையெடுக்கப் போய்
தம்பிக்குப் பெண் பார்த்தான்!..
- என்று பழமொழி...

கடலைக் காட்டில்
பாடுபடும் பெண்ணானவள்
குடும்பத்தை மென்மேலும் முன்னேற்றுவாள்
என்பது பாரம்பர்ய நம்பிக்கை...


தமிழ் மண்ணோடு பின்னிப் பிணைந்தது
நிலக்கடலை..

இந்த Refind Oil வகையறாக்களைக் கண்டு
மதிமயங்கிய மக்களால் ஒழித்துக் கட்டப்பட்டதே
கடலெண்ணெய்...

ஊருக்கு நாலு இடத்தில் செக்குகள் இருந்த
அந்தக் காலத்தில் மக்களின்
வாழ்வையும் வனப்பையும் மேம்படுத்தியவை
தேங்காயும் கடலையும் எள்ளும்!...

நவீன வர்த்தகம்
காண்பித்த எண்ணெய் வகைகளால்
வாழ்க்கை பாழ்பட்டது தான் மிச்சம்..

இன்று நலம் நாடும் மக்கள் தேடுவது
இயற்கையாகப் பிழியப்படும்
எண்ணெய் வகைகளைத்தான் என்பது
குறிப்பிடத்தக்கது...



பால் மணம் மாறாத
பச்சைக் கடலையை அதிகமாகத் தின்றால்
அது பித்தத்தைத் தூண்டி விடும்..
வயிற்றுப் போக்காகும்..

அதற்கு ஒரே மருந்து வெல்லம்...

பச்சைக் கடலையுடன் வெல்லத்தைச்
சேர்த்துத் தின்றால் மிகச் சுவையாக இருக்கும்..

சற்று காய வைத்து
வறுத்துத் தின்றாலோ.. ஆகா!...



சர்க்கரைப் பாகு காய்ச்சி
வறுத்த கடலையைப் போட்டு
உருண்டையாகப் பிடித்து விட்டாலோ
ஆகா.. ஆகாகா!..

மண்மணம் மாறாத
பச்சைக் கடலையைக் கொண்டு
குருமா வைத்தால் ஊர் முழுதும் மணக்கும்...

கடலைக்காடு காய்த்து விட்டது என்றால்
எலிகளுக்கும் குழி முயல்களுக்கும் நரிகளுக்கும்
கொண்டாட்டம் தான்....

காரணம்
இந்த சிறு விலங்குகளின்
இனப் பெருக்கம்
கடலையினால் தூண்டப்படுகிறது..   
*

சிவதரிசனம் 
திரு தென்குடித்திட்டை 

ஸ்ரீ வசிஸ்டேஸ்வரர்.. 
இறைவன்
ஸ்ரீ வசிஸ்டேஸ்வரர், ஸ்ரீ பசுபதீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ சுகந்தகுந்தளாம்பிகை, ஸ்ரீ மங்களாம்பிகை

ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை.. 
தலவிருட்சம் - சண்பகம்..  
தீர்த்தம் - சூல தீர்த்தம்

வசிஷ்ட மகரிஷி
காமதேனுவின் பால் கொண்டு அபிஷேகித்து
வழிபாடு செய்த திருத்தலம்...

சிவலிங்கத்திற்கு நேர் மேலே
ஸ்ரீ விமானத்தின் உட்புறமாக
சந்திரகாந்தக் கல் பொருத்தப்பட்டுள்ளது..

இதனால் காற்றிலுள்ள ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு
24 நிமிடங்களுக்கு ஒருமுறையாக
ஒரு நீர்த் துளி
ஈசனுக்கு அபிஷேகமாகின்றது..

ஸ்ரீ பிரகஸ்பதி - குரு பகவான்.. 
இத்தலத்தில் தான்
நவக்கிரக மண்டலத்தில் விளங்கும்
தேவ குருவாகிய ஸ்ரீ பிரகஸ்பதி
தமது இன்னல் தீரும்படிக்கு
சிவவழிபாடு செய்து நலம் பெற்றார்..


திருக்கோயிலில்
கிழக்கு முகமாக விளங்கும் ஈசனுக்கும்
தெற்கு முகமாக விளங்கும் அம்பிகைக்கும்
நடுவில் - நின்ற திருக்கோலமாக
ஸ்ரீ பிரகஸ்பதி எழுந்தருளியுள்ளார்..

இதுவே
குரு ஸ்தலம்...

தஞ்சையிலிருந்து
ஆவூர் - பட்டீஸ்வரம் சாலையில்
5 கி.மீ., தொலைவிலுள்ளது...

பழைய பேருந்து நிலையத்திலிருந்து
திட்டை வழியாக திருக்கருகாவூர்
செல்லும் பேருந்துகள்
திருக்கோயிலின் அருகில் நின்று
செல்கின்றன...

தஞ்சை மயிலாடுதுறை இருப்புப் பாதை வழியில்
தஞ்சையை அடுத்த ஸ்டேஷன்..

எல்லா பாசஞ்சர் ரயில்களும்
திட்டை நிலையத்தில் நின்று செல்கின்றன...

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு 


முன்னைநாள் மறையவை முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.. (3/35)  

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம் 

அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி
அருமறையோடு ஐம்பூதந் தானே ஆகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே ஆகிப்
பால்மதியோடு ஆதியாய்ப் பான்மை ஆகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி ஆகிக்
கடலாகி மலையாகிக் கழியும் ஆகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வன் ஆகி
எழுஞ்சுடராய் எம்அடிகள் நின்ற வாறே.. (6/94)
*

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத் தொகை
திருப்பாடல் 09


கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.. (7/39) 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

20 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங். நேற்று சென்ற தடைநீக்கும் பெருமாள் கோவிலில் ஒரு பெண்மணி ஒரு அடுக்கில் தயிர்சாதத்தை வைத்து பெருமாளுக்கு நிவேதனம் செய்து கொடுக்கச் சொல்லி பட்டரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக சாதாரண சனிக்கிழமைகளிலேயே தயிர்சாதம் நிவேதனம் செய்வது விசேஷமாகச் சொல்வார்கள். நேற்றோ 28 ஆம் நாள் பாசுரம். நேற்றைய நிவேதமே தயிர் சாதம் தானே! அதான் கொண்டு வந்திருப்பார்! )))))

      நீக்கு
  3. 29-ஆம் நாள் பாசுரம் வெகு சிறப்பு.

    வேர்க்கடலை எனக்கு மிகவும் பிடித்தது - அதுவும் உருண்டையாக......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திட்டை கோவில் சென்றது உண்டு.

    பதிலளிநீக்கு
  5. திருப்பாவை ரசித்தேன். மகர்நோன்புசாவடி ... பேச்சு வழக்கில் அது மானம்பூச்சாவடி என்றழைக்கப்பட்டது! ஆனால் அந்த இடத்துப்பெருமாளை இப்போதுதான் தரிசனம் செய்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நிலக்கடலை பயன்கள் அறிந்தேன். ஆனால் நான் அதிகம் சாப்பிடுவதில்லை. ஒத்துக்கொள்ளாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      ஒருகட்டத்தில் கடலை சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை தான்..

      நீக்கு
  7. நிலக்கடலை விடயங்கள் வியப்பூட்டுகின்றது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. கோவிந்தா சரணம், கோவிந்தா சரணம்.
    கருடசேவை தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.வழியில் வாங்கிய
    (சின்ன வயதில்) சூடான நிலக்கடலை கொறித்துக் கொண்டே நடந்து வருவோம்.
    குளிர்காலத்தில் சூடான கடலை சுவையாக இருக்கும்.
    ஸ்ரீராம் சொல்வது போல் இப்போது நிலக்கடலை சாப்பிட்டால் தலைவலி வருகிறது.

    தெங்குடித்திட்டை தரிசனம் செய்து இருக்கிறோம்.
    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
    கருத்துரைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  10. நவகிரஹ கோயில்களும் 2003--2004 ஆம் ஆண்டுகளில் கண்டு களித்திருக்கோம். கேஷவின் படம் வழக்கம்போல் அருமை. பாசுர விளக்கமும் கடலை குறித்த தகவல்களும் நன்றாக உள்ளன. வேர்க்கடலை பிடிககதோர் யார்? ஒரு காலத்தில் எங்க பிறந்த வீட்டில் எங்க பூர்விக கிராமம் ஆன மேல்மங்கலத்தில் இருந்து புஞ்சை விளைச்சல் ஆன வேர்க்கடலை மூட்டையாக வரும்! என்ன செய்யறதுனு தெரியாது! அம்பாரமாகக் குவித்து இருப்பார்கள். எண்ணெய் ஆட்டி இருக்கலாம். ஆனால் அப்பாவுக்குக் கடலை எண்ணெய் ஒத்துக்காது, பிடிக்காது! ஆகவே தெரிந்தவர்களுக்குக் கொடுத்து ஆட்டிக்கச் சொல்வோம்.

    பதிலளிநீக்கு
  11. நேற்று வர முடியலை துரை அண்ணா...இனிய காலை வணக்கம்..

    போஹி வாழ்த்துகள்!

    அருமையான பாசுரம் இது...இற்றகுக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்று சரணாகதி தத்துவம் பாடல்...

    கோயில்கள் சென்றதில்லை.

    ஆஹா நிலக்கடலை...ரொம்பப் பிடிக்கும்...கடலை எண்ணை பயன்படுத்துவதுண்டு...உருண்டை படம் போட்டு நாவில் நீர் சுரக்க வைச்சுட்டீங்க...

    வறுத்த நிலக்கடலை கொஞ்சம் அரைத்துவிட்டு பீன்ஸ், காரட், வெங்காயம் போட்டு வதக்கி சூப் செய்யலாம் சூப்பரா இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..