நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 08, 2018

கந்தன் கருணை 1

ஆதியில்
கங்கைக் கரையில் - முனிவர் ஒருவர்,
தமது மகனுடன் தபோவனம் அமைத்து
தவ நெறியில் ஒழுகி வந்தார்..

அப்போது, ஒருநாள் - 
சூழ்நிலையால் தவறிழைத்த ஒருவன் -
பாவ விமோசனம் தேடி முனிவரைக் காண வந்தான். 

அது முனிவர் அறச்சாலையில் இல்லாத சமயம்.  

அப்போது அங்கிருந்த முனி குமாரன் - 
அந்த எளியவனுக்கு - திருநாமம் ஒன்றினை உபதேசித்து, 
இதனை மும்முறை உச்சரித்தால் உன் பாவம் தீரும்!...
- என்று சொல்லி அனுப்பி விட்டான். 

முனிகுமாரன் உபதேசித்த திருப்பெயர்
- கந்தப் பெருமானின் திருப்பெயர்களுள் ஒன்று!.. 

சிறிது நேரம் கழித்து ஆசிரமத்துக்கு வந்த முனிவர், 
நிகழ்ந்ததை அறிந்து கொண்டார்...

கந்தனின் ஒற்றைத் திருநாமம்
பலகோடித் திருநாமங்களுக்கு சமமானதாயிற்றே!..
அவனது திருப்பெயரை ஒருமுறை உச்சரித்தாலும் போதுமே!.. 

அப்படியிருக்க -
நீ ஏன் மூன்று முறை சொல்லும்படி சொன்னாய்?..
பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டாயே!..


கடுஞ்சீற்றத்துடன் - 
தன் மகனைச் சபித்து விட்டார்...

பிழை பொறுத்தருள வேண்டும் எந்தையே!..
- என, பணிந்து நின்றான் - மகன்.. 

ஸ்ரீ ஹரிபரந்தாமனாகிய வைகுந்த வாசன் - 
ஸ்ரீராமன் என, அவதார நோக்கங்கொண்டு
கங்கை கரைக்கு எழுந்தருளும் போது - 
நீ ஓடம் செலுத்தி ஸ்ரீராமனுக்கு சேவை செய்து 
இந்தப் பாவத்தினின்று நீங்கப்பெறுவாய்!..

- என்று, தன் மகனுக்கு சாப விமோசனம் அளித்தார் முனிவர்...

இந்த முனிகுமாரனே - பின்னாளில்,
கங்கைக் கரையில் ஓடத்துறை தலைவனாகிய - குகன்!..


இதனால்தான் - அருணகிரிநாதர்,

மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்!..- என்கின்றார். 

முருகப் பெருமானின் பெருமைகள் அளவிடற்கரியன... 

ஆயுதம் தரித்த சேனாபதிகளுள் நான் ஸ்கந்தனாக திகழ்கின்றேன்!.. 

- என்று, 
ஸ்ரீஹரிபரந்தாமன் கீதையில் பறைசாற்றியதற்கு மேல் - 
வேறு ஒரு சொல்லும் உண்டோ!..


சரவணத்தில் வடிவெடுத்தான்...
செந்தூரில் பகை முடித்தான்... 
தேவர்களின் வினை தொலைத்தான்...

இதுவே எம்பெருமானின் திரு அவதாரத்தின் நோக்கம்..

திரு அண்ணாமலையில் முருகப்பெருமானால்
ஆட்கொள்ளப்படுகின்றார் -  அருணகிரி...

அப்படி ஆட்கொள்ளப்பட்டவுடன்
முருகப் பெருமானின் திருவருளால்
கவி பாடும் வல்லமையை அடைகின்றார்...

அந்தவேளையில் -
முருகப்பெருமானின் ஆணைப்படி பாடப்பட்டதே
முத்தைத்தரு பத்தித் திருநகை - எனும் திருப்பாடல்!... 

அந்த முதல் திருப்பாடலிலேயே
முருகப்பெருமானின் திரு அவதார நோக்கமாகிய
சூர சங்காரத்தினை கோலாகலமாக வர்ணிக்கின்றார் - அருணகிரியார்...


முத்தைத்தரு பத்தித் திருநகை 
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர - எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் - அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் - இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் - ஒருநாளே..

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு - கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக - எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென - முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல - பெருமாளே!...


இன்று
கந்த சஷ்டித் திருவிழாவின் முதல் நாள்...

கந்தன் புகழ்பாடி
களித்திருப்போம்!..
காலமெலாம் வாழ்வில்
செழித்திருப்போம்!...

வெற்றி வேல்..
வீரவேல்!...
ஃஃஃ

20 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    எல்லாம்வல்ல எம்பெருமான் முருகப்பெருமான் அருளாலே இந்தப் பதிவினை வழங்கியிருக்கும் துரை செல்வராஜூ ஸாருக்கு நன்றி கூறி அமைகிறேன்!(வாரியார் குரலில்படிக்கவும்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு....

      நீக்கு
    2. இன்னிக்கு என்ன நீங்க இங்க வாரியார் குரல் என அங்கு எபி பதிவுக்கு டிடி அழகான கருத்தும் டி எம் எஸ், முத்தைத் தரு, வாரியார் என்று பதித்துவிட்டார்...

      கீதா

      நீக்கு
  2. குகனின் முன்கதை இன்றே அறிந்தேன்.

    ஒருமுறை சொன்னாலே கோடி புண்ணியம்.. மூன்று முறை சொன்னால் மூன்று கோடிபுண்ணியம்... இதில் முனிவருக்கு கோபம் எதற்கு? பின்னாளில் ஒரு பரிசலோட்டிதேவைப்பட்டானோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே...
      இப்படியும் ஒரு கோணம்!...

      அருமை.. ஆனாலும்,
      அந்த முனிவர் நினைத்திருக்க மாட்டார்....

      இப்படியெல்லாம் சிந்திப்பார்கள் என்று!...

      நீக்கு
    2. ஸ்ரீராம் ஹைஃபைவ்! நான் கேட்க நினைத்தேன் அதுவும் நல்லதுதானே என்று...உடனே எதுக்குப் பிடி சாபம்?!! இதைக் கேட்க நினைத்ததும் உடனே உங்களின் பதிவு சொற்முகூர்த்தம் நினைவுக்கு வந்தது....

      கீதா

      நீக்கு
  3. படிக்கும்போதே பாடலைப் பாடினேன். அதாவது பாட முயற்சித்தேன். இருமல்தான் வருகுதய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமரர் TMS அவர்களைப் போல - இன்னொருவர் கிடைக்கவும் கூடுமோ!?...

      நீக்கு
  4. மிக அருமையான பதிவு. நானும் ஸ்ரீராமைப் போல் தான் நினைத்தேன். இதுக்கெல்லாம் ஏன் சாபம் கொடுக்கணும்னு! ஆனால் காரண, காரியங்கள் இருக்கும் நிச்சயமாக. அதைத் தேடணும். பார்க்கலாம். கந்த சஷ்டியை அமோகமாக ஆரம்பிச்சு வைச்சுட்டீங்க!

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஜி
    இப்பாடல் வரிகளை அவரைவிட சிறப்பாக வேறொருவர் பாடவே முடியாது.

    நான் விரும்பும் பாடல்களில் இது முக்கியமானது.

    "இசைக்கடவுள்" என்ற பதிவில் இப்பாடல் காட்சியை இணைத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. திண்டுக்கல் ஜி எங்கள் பிளாக்கில் சொன்ன கருத்தை இங்கும் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  7. முத்தைத்தரு..... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ரசித்து எழுதியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. மனதை எப்போதும் ஆட்கொள்ளும் பாடல்...

    பதிலளிநீக்கு
  9. பள்ளி பருவத்தில் ஞானஒளி என்ற கிறித்துவ மதத்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியருக்கு இந்த திருப்புகழ் பாட்டு மிகவும் பிடிக்கும்.

    எட்டாவது படிக்கும் ஒரு மாணவி மிக அருமையாக இந்த பாடலை பாடுவார். அந்த மாணவியை காலை பிரார்த்தனை நேரத்தில் இந்த பாடலை பாடச் சொல்லி கேட்டு மகிழ்வார்.
    கந்தசஷ்டி விழா ஆரம்பித்து விட்டது உங்கள் தளத்தில்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. முத்தைத்திரு டி எம் எஸ் தவிர வேறு யாராலும் பாட இயலாது. நானும் எத்தனையோ முறை பாட முயற்சித்திருக்கிறேன்...ம்ஹூம் பாடாட்டாலும் சும்மா சொல்லிப் பார்ப்போமே என்றும்...ம் ஹூம் அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. குகனின் முற்பிறப்புக் கதையை இப்பத்தான் அறிந்தேன்...அண்ணா

    அது சரி கிருஷ்ணரே ஸ்கந்தனும் நானே அப்படினு சொன்னப்புறம் ஸ்கந்தனில் கிருஷ்ணரை ஏன் ஒரு சிலர் பார்க்க மாட்டேங்கறாங்கனு தெரியலை....!!!

    எத்தனை வடிவங்கள் வந்தாலும் எல்லாம் ஒருவரே! இறைவன்...

    நல்ல பதிவு அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. முத்தைத் திரு பாடலுக்கு பொருள் கூறிஒரு பதிவு எழுதி இருந்தேன் பதிவைத்தேடி எடுக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  13. தேடி எடுத்து விட்டேன் பதிவின் சுட்டி இதோ /https://gmbat1649.blogspot.com/2012/08/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  14. மாலை வணக்கம் ஜி...

    இனிய பகிர்வு. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இந்த பாடல்.

    கந்தனின் கருணைப் பார்வை அனைத்து மக்களுக்கும் கிடைக்கட்டும்....

    பதிலளிநீக்கு
  15. ஆஹா...

    கந்தா சரணம் ..

    முருகா சரணம் ...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..