நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

உத்திர சேர்த்தி

அன்று - ஆயில்யம்!.. சோழ வளநாட்டின் உறையூருக்கு உலகளந்த நாயகன் வருகின்றான்!..

அதிகாலையில் இருந்தே ஒவ்வொருவர் வீட்டிலும் பரபரப்பு!...

இருக்காதா...பின்னே!... கமலவல்லியின் காதல்  மணாளன், காவிரியின் கரை கடந்து - இதைத்தான் கரை கடந்த வெள்ளம் என்பதா!.. - அதுவும் கமல வல்லியின்  பிறந்த நாளான ஆயில்யத்தன்று உறையூருக்கு வருகின்றான் என்றால் சும்மாவா!... என்ன பரிசு கொண்டு வருகின்றானோ!...


பரிசா... அது எதற்கு?... அவனே ஒரு பரிசு ..   அவன் வருகையே பெரும் பரிசு!...

வழி நெடுகிலும் - இந்த மண்ணுக்கே உரிய பச்சைப் பசேல் என மின்னும் வாழை மரங்கள்  - தோரணங்கள் கட்டியாகி விட்டது!. வீதியெல்லாம் நீர் தெளித்து வீட்டின் வாசலில் மாக்கோலம் போட்டு, வண்ண மலர்களைத் தூவி அலங்கரித்து நடுவில் குத்து விளக்கும் ஏற்றியாகி விட்டது.

நம்ம வீட்டுக்கே மாப்பிள்ளை வருகின்றார்  - என மங்கலத்துடன் மகிழ்ச்சி ஆரவாரம்!..

ஸ்ரீரங்கத்தில் இருந்து  பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள்  - அம்மா மண்டபம் வழியாக  காவிரியைக் கடந்து, உறையூரை நெருங்கி  வருகிறார்.

வருகிறார்.. வருகிறார்.. இதோ வந்து விட்டார்!.. வாண வேடிக்கைகள் ஒருபுறம்!.. மங்கல வாத்தியங்களின் இன்னிசை மறுபுறம்!..

'' வாங்க.. மாப்பிள்ள!.. வாங்க!..'' - என்று சிறப்பான வரவேற்பு. ஏழ்தலம் புகழ் காவிரிக்கரை வரவேற்பு என்றால் கேட்கவும் வேண்டுமா!..

ஸ்ரீரங்கனின் சிந்தை குளிர்கின்றது.. வேண்டுவோர்க்கு வேண்டியதெல்லாம் ப்ரசாதித்துக் கொண்டு, உறையூருக்குள் - வழி மாறிப் பாய்ந்த காவிரி வெள்ளம் போலப் பிரவாகித்த மக்களின் ஊடாக - ஸ்ரீரங்கனின் பல்லக்கு மிதக்கின்றது.

ஆயிற்று.. ஒரு வழியாக கமலவல்லி நாச்சியாரின் ஆலயத் திருவாசலை அடைந்தாயிற்று!..

கோயிலுக்கு வந்து விட்டார் ஸ்வாமி. மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். அன்னம் போல தாயார் வருகிறாள்.. கண்கள் கசிகின்றன காதலால்,

''..நலம்.. நலமறிய ஆவல்..'' என,  ஏககாலத்தில் விழிகளால் பரிமாறிக் கொள்கின்றனர் இருவரும் .

அப்படியே ஓடி வந்து கட்டித் தழுவிக் கண்ணீரால் நீராட்ட, கைகள் பரபரத்தாலும் ... நாணம் தடுக்கின்றது!.. பிள்ளைகளின் முன்பாகவா!..

ஐயனைக் கண்டு - அன்னையின் கண்களில் ஆனந்தம். அத்துடன் ஆதங்கம்..


''..என்ன இது!.. இளைத்த மாதிரி இருக்கிறீர்கள்!.. ஓடி ஓடி ஊருக்கு உழைத்தாலும், நேரத்துக்கு ஒருவாய் சாப்பிட வேண்டாமா!..''

''.. குறை ஒன்றுமில்லை!.. கொடியேற்றத்திலிருந்து - இந்த வாகனம் மாறி அந்த வாகனம்!.. அந்த வாகனம் மாறி இந்த வாகனம்!.. வழி எல்லாம் வலியாக அல்லவா இருக்கின்றது - குண்டுங்குழியுமாக!.. அன்றைக்குக்கூட வழி நடையாய்   ஜீயபுரத்தில் ஆஸ்தான மண்டப சேவை!.. '' - என்ற ஸ்வாமியை, கமலவல்லி மனங்குளிர்ந்து முகம் மலர்ந்து -   வரவேற்றாள்.

மங்கல வாத்தியங்கள் முழங்க ஆலயத்தினுள் பிரவேசித்து பிரகாரத்திலுள்ள சேர்த்தி மண்டபத்திற்கு ஸ்வாமி செல்ல, நாச்சியாரும் பின் தொடர்ந்து -  இருவரும் மணக்கோலத்தில் வீற்றிருந்து சேர்த்தி சேவை சாதிக்கின்றனர்.

மாதவனின் கழுத்திலிருந்த மாலையை மதுசூதனக் காமினி கமலவல்லி அணிந்து கொள்கிறாள்.  அவள் கழுத்திலிருந்த மாலையை அணிந்து கொண்டு அரங்கன் ஆனந்திக்கின்றான்.

யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில்,  விரலிலிருந்த கணையாழியைத் தன் அன்பின் அடையாளமாக அணிவிக்கின்றான் அரங்கன்..

கார்மேகனும் கமலவல்லியும்
'' இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?.. என் பிறந்த நாளும் அதுவுமாக நீங்கள் என் பக்கத்தில் இருப்பதை விட.. '' -  அன்னை இப்படி ஆனந்திக்க,

'' உன் பிறந்த நாளில் உன் பக்கத்தில் இருப்பதை விட, எனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?...'' - என்று ஐயன் குதுகலிக்க,

பொழுது போய்க் கொண்டிருந்தது.

கண்டு கொள்!.. - எனக் கண்டதால் மனம் நிறைந்தது. உண்டு கொள்!.. -  என உவந்ததால் உயிரும் இனித்தது.

இரவாகி விட்டது. இப்போது -  மணி பத்தரைக்கு மேல்!..

தாயார் தன் மூலஸ்தானத்திற்குத் திரும்பவேண்டும். ஸ்வாமியும் - ஸ்ரீரங்கம் செல்லவேண்டும். பிரியாவிடை பெற்றுக் கொள்கின்றார். மறுபடியும் சந்திக்க  இன்னும் ... ஒரு வருடமா!.. - அடுத்த சேர்த்தி பற்றி நினக்கின்றது உள்ளம்.

''.. உன் பங்கு நான்.. என் பங்கு நீ.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி... போய் வரவா!..''

''.. ம்.. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்!..''

கமலவல்லி மூலஸ்தானத்திற்குத் திரும்ப - ஸ்வாமியின் பல்லக்கு ஸ்ரீரங்கம் நோக்கி விரைகின்றது!..

அதற்கு முன்னரே,  அரங்கன் இருப்பது உறையூரில் என்று - தூபம் இடப்பட்டது -  அரங்கநாயகி சந்நிதியில்!..

எங்கு செல்வது!..  - அழகிய மணவாளனின் முகத்தில் ஆயிரம் சிந்தனைகள்!..

நேராக கண்ணாடி மண்டம் .. அதுதான் சரி.. அங்கே ஓய்வு!.


அதன்பிறகு,  வையாளியில் ஆரோகணித்து - சித்திரை வீதியில் சுற்றிக் களித்திருந்த போது ,  எதிர் வந்து நின்றது - உத்திரம்!..

ஆஹா!.. அரங்க நாயகியின் திருநட்சத்திரம்!.. அவளைக் காண வேண்டுமே!..

இப்படி நினைத்தாலும்  - அவள் காண வேண்டுமே  - என்பது தான் பிரதான நோக்கம்!..

ஓடோடி  வந்த அரங்கனுக்கு திடுக்கென்றது!. கைவிரலில் இருந்ததே..எங்கே.. போயிற்று?.. கணையாழி.. அவளுக்குத் தெரிந்தால்.. அவள் முதலில் விரலைத் தானே பார்ப்பாள்!.. என்ன செய்வது?...

திரும்பவும் உறையூருக்கா!.. வேறு வினையே வேண்டாம்!..

அரங்கனின் பதற்றத்தைக் கண்டு - ஒருவர் சொன்னார் - ''..நான் கூட பார்த்தேனே!..''

கணையாழி காணாமல் போன விஷயம் இப்படியே பரவி - உடன் வந்தவர்கள் தேடிப் பார்த்துக் களைப்பதற்குள், சந்நிதியில் யாருடைய காதில் விழ வேண்டுமோ - அவர் காதில் சரியாகச் சென்று சேர்ந்து விட்டது.

வேறு வழியின்றி வேர்த்து விறுவிறுத்து - அரங்கநாயகியைத் தேடி - உள்ளே நுழைந்தால் - அந்த நேரம் பார்த்து,

அடையா நெடுங்கதவு அடைத்துக் கொண்டது - '' படார் '' என்று!..

பழைய காலத்துக் கதவாயிற்றே - என்றுகூட பார்க்கவில்லை!..

அத்தனை கோபம்.. அரங்கநாயகிக்கு!..

உறையூருக்குப் போனது தப்பு இல்லை!.. கமலவல்லியின் கரங்களைப் பற்றியது கூட தப்பு இல்லை!.. கணையாழி காணாமல் போனதுதான் தப்பு!.. என்ன கஷ்டமடா சாமீ!.. அது அவள் பாற்கடலில் தோன்றினாள் அல்லவா!.. அப்போது தாய் வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்த கணையாழி!.. அது தான் இத்தனைக்கும் காரணம்!..

''..இப்படிப் போற இடத்தில எல்லாம் பொறுப்பில்லாமல் எதையாவது தொலைத்து விட்டு வந்தால் சும்மா இருக்க முடியுமா!..'' - ஒரே கூச்சல்!.. ஆரவாரம்!..

''.. ஆஹா!.. யாரது இவங்க எல்லாம்!..''

''.. பொண்ணு வீட்டுக்காரங்களாம்.. பேச வந்திருக்காங்க!.''

''.. ஏன்.. அவங்க வீட்டுப்  பொண்ணுக்குப் பேசத் தெரியாதுன்னா?..''

''.. சரி.. சரி.. விடுங்கப்பா.. நம்ம பக்கமும் தப்பு இருக்கு!...''

அரங்கன் திகைத்தான். ''..என்ன சொல்கின்றான் இவன்!..  என்னிடமா.. தப்பு!..''

அதற்குள் மணிக்கதவம் ஒரு புறமாகத் திறக்கின்றது. உள்ளேயிருந்து அரங்க நாயகியின் குரல்!.. தேனாகத் தித்தித்தது அரங்கனின் திருச்செவிகளில்!.. என்ன சொல்கின்றாள்.. ஆர்வமாக உற்றுக் கேட்டான்!..

''அதென்ன.. திருக்கழுத்து எங்கும் கீறலாமே!..  திரு அதரங்கள் அதீதமாய் வெளுத்தும் திருநேத்ரங்கள்  சிவந்தும் கிடக்கின்றதாமே!.. கார்மேகனின் கருங் குழற் கற்றைகள் கலைந்து காணச் சகிக்கவில்லையாமே!..''

அரங்கன் மறுபடியும் அதிர்ந்தான்..

உடன் இருக்கும் உளவாளி யார்?..

''..இதெல்லாம் யார் உனக்குச் சொன்னது?..''

''..யாரும் தனியா வந்து சொல்லணுமா?.. அதான் ஊரே பார்த்து ரசிக்கின்றதே!..''

''..இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?.. நீதான் படிதாண்டா பத்னியாயிற்றே!.. ''

''..எப்படியோ தெரியும்.. இனிமேல் இங்கே வேலை இல்லை.. உறையூரிலேயே இருந்து கொள்ளும்!..''

''..உறையூரோ.. மறையூரோ!..  உன் உள்ளம் தானே - நான் உவந்து உறையும் ஊர்!..''

''.. இந்தக் கள்ளம் எல்லாம் வேண்டாம்.. நீர் அங்கேயே போய் இரும்!..''

வார்த்தைகளோடு வேறு பலவும் உள்ளிருந்து - ஆலம் விழுது என -   அன்பின் விழுது என -  அரங்கனின் மேல் வந்து விழுந்தன.

நெடுங்கதவு மறுபடியும் அடைத்துக் கொண்டது.

பூக்களையும் வெண்ணெய் உருண்டைகளையும் வீசியது கூட பரவாயில்லை.. திருக்கதவைச் சாத்தியது கூட சரிதான்!.. 

கையில் கிடைத்த வாழை மட்டையால் சாத்தலாமா!..

அரங்கன் பரிதவித்துப் போனான்!..

அந்த நேரம் பார்த்து - அருகில் ஒரு பல்லக்கு வந்து நிற்கிறது.   உள்ளிருந்து பதைபதைப்புடன் இறங்கினார் நம்மாழ்வார்! அவருக்கு மனசு தாங்கவில்லை.

நம்மாழ்வார்
அண்டபகிரண்டமும் அரற்றியவாறு, அரங்கனைக் காணவேண்டி அல்லவோ - காத்துக் கிடக்கின்றது. அத்தகையவன் - தன் திருமேனி முழுதும் வியர்த்து அழகெல்லாம் கலைந்து, ஒரு குழந்தையைப் போல விக்கித்து நிற்பதுவும் சரியா!.. அரங்கனுக்கா இந்த நிலை!..

விறுவிறு - என நடந்து,  பிராட்டியாரின் வாசல் திருக்கதவைத் தட்டுகிறார்.

''..ஆயிரம்தான் இருந்தாலும் இதைப்போல செய்யலாமா நீ!.. கமலவல்லியின் கரம் பிடிக்க மனம் உவந்தவளும் நீ!.. ஓங்கி உலகளந்த உத்தமனின் உள்ளத்துள் உவந்து இருப்பவளும் நீ!.. இப்போது உன் முகங்காட்ட மறுத்து மட்டையால் அடிப்பவளும் நீ!.. நீ இன்றி அவளில்லை!.. அவளின்றி நீ இல்லை!.. அனைத்தும் அறிந்த நீ அரங்கனை அல்லல்படுத்தலாமா?.. இது நியாயமா?.. அம்மா?.."

ஆழ்வாருக்குத் தொண்டையை அடைத்தது.

''...உறையூரில் கமலவல்லி கரத்தினைப் பற்றியிருந்த வேளையில் கூட, உன் நினைவையும் அல்லவா அரங்கன் பற்றியிருந்தான்!.. அந்த நினைவுக்கு நீ தரும் பரிசு இதுதானா?.. 

கணையாழி தொலைந்த இடம் எது என்று உனக்குத்தெரியாதா!..சற்றே எண்ணிப் பார்.. உன் நினைவில் பால்பழங்கூட கொள்ளாமல், உன்னை எண்ணி ஓடி வந்தவனின் முகத்தைப் பார்.. 

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. ஆனால் தொண்டருக்கெல்லாம் தொண்டன் -  உண்ணாமல் உறங்காமல் மயங்கியிருப்பதைப் பார்!..''

இதற்குமேல் தாங்கிக் கொள்ளமுடியவில்லை அரங்கநாயகிக்கு...

''.. இதை அப்பவே சொல்றதுக்கென்ன!.. இன்னும் சாப்பிடலைன்னு!.. கணையாழி போனாப்  போறது!.. நீங்க வாங்க!..''

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்! அதனால்- தாள் எல்லாம் தூள் ஆனது!

அரங்கநாயகி  சொன்னாள்,

''..இதுக்காக யாராவது பெரியவங்களைத் தொந்தரவு செய்வார்களோ? சரியான பைத்தியம்!..''

அரங்கன் புன்னகைத்தான்!..  அரங்கநாயகி புன்னகைத்தாள்!..

ஆழ்வாரும் புன்னகைத்தார். அவர்களுடன் அனைத்துலகும் புன்னகையாய் பூத்தது!..

அரங்கனும் நாச்சியாரும் சேர்த்தியாய் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்தார்கள்!..

அமிழ்தினும்இனிய அன்பினில் குழைந்த அக்காரஅடிசில் நிவேதனமாகின்றது.

அரங்கனும் அரங்கநாயகியும்
அன்பினில் கலந்த இருவரும், அகளங்கன் திருச்சுற்றில் வில்வ மரத்தடியில் மாதவிப்பந்தல் எனும் மல்லிகைப்பந்தலின் கீழ், ''சேர்த்தி மண்டபத்தில்'' ஒன்றாக எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதித்து இன்புற்றனர். அவர்தம் அன்பினில் அனைத்துலகும் இன்புற்றது.

* * *

பின்வந்த நாட்களில் ஸ்ரீ ராமானுஜர் - இந்த சேர்த்தி வேளையில் தான் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் (கத்ய த்ரயம்) பாடியருளி அரங்கனைச் சேவித்தார். இது - இன்றும் அரையர் சேவையில் நிகழ்வுறுகின்றது.

பங்குனி உத்திரச் சேர்த்தி அன்று -  18 முறை விடிய விடிய திருமஞ்சனம்  நடைபெறுகிறது. ஒருமுறைக்கு ஆறு  என  மொத்தம் 108 கலசங்கள்.


திருமஞ்சனத்திற்குப் பின் திவ்ய தரிசனம்.  திருத்தேருக்கு எழுந்தருள நேரம் நெருங்குகின்றது. கண்கள் கசிகின்றன. மீண்டும் கமலவல்லியிடம் சொன்ன அதே வார்த்தைகள்!..

''.. உன் பங்கு நான்.. என் பங்கு நீ!.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி!..''

பத்தாம் நாள் காலையில் பங்குனித் தேரோட்டம். மங்கல மாவிலைத் தோரணங்கள் ஆடும் சித்திரை வீதியில் திவ்ய ப்ரபந்தத் திருப்பாசுரங்களைக் கேட்டவாறே அரங்கன் அன்பர்களுக்கு அருள் பொழிகின்றான்.

மறுநாள் ஆடும் பல்லக்கு. அடுத்து துவஜஅவரோகணம்.
மங்களகரமான பங்குனி உத்திரப் பெருவிழா இனிதே நிறைவுறுகின்றது!..

* * * 

அது சரி... காணாமல் போன  கணையாழி கிடைக்கவே.. இல்லையா!..

அது எப்போது காணாமல் போனது ?.. இப்போது கிடைப்பதற்கு!.. அரங்கனும் அரங்கநாயகியும் சேர்ந்து நடத்திய நாடகம் தான் மட்டையடி!.. 

அந்தக் கணையாழி - கமலவல்லி விரலிலும்  அரங்க நாயகி விரலிலும், 
அதே சமயம் - அரங்கனின் விரலிலும் பத்திரமாக உள்ளது!..

* * * 

இன்று (13/4) பங்குனி உத்திரம். சக்திக்கேற்ப - வெண்ணெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் சேர்த்த திருஅமுது  நிவேதனம் செய்வது மரபு.

சென்ற ஆண்டின் பதிவு இது!.. சில திருத்தங்களுடன் மீண்டும்!..

அரங்கனின் நினைவே ஆனந்தம்!..  
அடியவர் குழாமும் வாழ்க!...அரங்க மாநகரும் வாழ்க!...
அரங்கனும் வாழ்க!... அன்னையும் வாழ்க!...
அவர் தம் அன்பினில் அவனியும் வாழ்க!..

8 கருத்துகள்:

  1. அன்பே அனைத்தும்... அரங்கனின் நினைவே ஆனந்தம்... அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன் ..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. குறை ஒன்றுமில்லை திவ்ய தரிசனம்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அரங்கனின் நினைவே ஆனந்தம்...
    படிக்கும் போது அப்படியே அரங்கனையும் நாயகியையும் கண் முன் நிறுத்தியது.,...
    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி

      நீக்கு
  4. அருமையான பதிவு. சேர்த்தி பற்றிய தகவல்களை படிக்கும்போதே ஆனந்தம்....

    பதிலளிநீக்கு
  5. இந்த மடலை பலரும் காப்பி அடுத்து தாங்கள் எழுதியது போல் போடிகிறார்களே? https://m.facebook.com/storyofmahabharatham/photos/a.670482809703550/2798584320226711/?type=3&source=57&__tn__=EH-R https://xiaomi.dailyhunt.in/news/india/nepali/swasthiktv-epaper-swasthik/serthi+sevai+sbeshal-newsid-173211968?pgs=N&pgn=1&mode=wap&&nsk=home-updates-home

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..