நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 16, 2014

திருநிறை திருநீறு

திருநீறு!..

சைவத்தில் திருநீற்றினுக்கு மேல் எதுவுமில்லை!.. 

கோடி கோடியாய்க் கொட்டி - ஒரு கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வித்தாலும் நம் கையில் கடைசியாக வழங்கப்படுவது - ஒரு சிட்டிகை அளவு திருநீறு!..  அதுவே நிறைவு!.. 


திருநீறு - சைவத்தின் தலையாய புனிதங்களுள் ஒன்று. 

விபூதி , பஸ்மம் எனக் குறிக்கப்படும் திருநீறு - ஐஸ்வர்யம் எனவும் வழங்கப்படும்.

தேவாரத்திலும் திருவாசகத்திலும் - நீறு, திருநீறு, வெண்ணீறு, சுண்ணம், சுடலைப் பொடி - என்று பலவாறு புகழ்ந்து போற்றப்படும் திருநீறு திருஞான சம்பந்தப் பெருமானால் - திருப்பதிகம் பெற்ற பெருமையினையும் உடையது.

திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய
திருநீற்றுத் திருப்பதிகம்
இரண்டாம் திருமுறை. திருப்பதிக எண் - 66

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. -1

திருநீறு - கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் - எனும் நான்கு முறைகளில் தயாரிக்கப்படுவது. 

கல்பம் :- கன்றுடன் கூடி விளங்கும் நோயற்ற பசுவின் சாணத்தை - ஒரு அதிகாலைப் பொழுதில் தரையில் விழாதவாறு தாமரை இலையில் தாங்கி, சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி - மூலிகை சமித்துகளினால் அக்னி வளர்த்து - அதில், சாண உருண்டைகளை பஞ்சாட்சர மந்த்ரப் ப்ரயோகங்களுடன் இட்டு எரித்து சாம்பலாக்கி வஸ்திரகாயம் செய்து பெறுவது.

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. -2

அணுகல்பம் :- வனங்களில் மேய்ந்து திரியும் பசுக்களின் சாணத்தை சேகரித்து, கல்ப முறைப்படியே அக்னியில் இட்டு எரித்து சாம்பலாக்கி வஸ்திரகாயம் செய்து பெறுவது.

உபகல்பம் :- மேய்ச்சல் நிலங்களில் மேயும் பசுக்கள் அல்லது தொழுவத்தில் இருக்கும் பசுக்கள் இவற்றின் சாணத்தைச் சேகரித்து, முன் கூறியபடியே அக்னியில் இட்டு எரித்து சாம்பலாக்கி வஸ்திரகாயம் செய்து பெறுவது.

அகல்பம்:- பிறரால் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தை சாதாரண சுள்ளிகளால் எரித்து - சாம்பலாக்கி வஸ்திரகாயம் செய்து பெறுவது.


முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. -3

வீடுகளில் நாமே செய்வது எனில் - தொழுவத்தில் உள்ள பசுவுக்கு சில தினங்களுக்கு அருகம்புல், வைக்கோல் மட்டுமே கொடுத்து  சேகரித்த சாணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்த வேண்டும். 

பின், நெல் உமியைக் குவித்து தீ மூட்டி மூட்டம் இட்டு,  மூன்று நாட்களுக்குப் பிறகு வெந்து தணிந்த மூட்டத்தைப் பிரித்து சாம்பலை சேகரித்து வஸ்திர காயம் செய்து கொள்ள வேண்டும். நறுமணம் வேண்டும் எனில் ஜவ்வாது சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த நீற்றினை அருகில் உள்ள விநாயகர் கோயில் கொடுத்து அபிஷேகித்து கற்பூர ஆராதனை செய்து அதனை சுத்தமான கலசத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இந்த திருநீற்றிற்கு நாமே - மன சுத்தியுடன் பஞ்சாட்சரம் ஜபித்து மந்திர சக்தியினை ஏற்றலாம்.

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.- 4

அதிகாலையும் மாலையும் குளித்து விட்டு ஈசனைத் தியானித்து வழிபடும் முன்னரும் பின்னும் அணிதல் வேண்டும். உணவு உண்ணும் போதும் திருக்கோயிலுக்குச் செல்லும் போதும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் திருநீறு தரிக்க வேண்டும். 

வடக்கு அல்லது கிழக்குத் திசையை நோக்கியபடி அண்ணாந்த நிலையில் பஞ்சாட்சரம் உச்சரித்தபடி கீழே சிந்தாமல் சிதறாமல் பூசிக் கொள்ளுதல் வேண்டும். நெற்றி முழுதும் விரவிப் பூசுவதை - உத்தூளனம் எனவும் மூன்று கோடுகளாகப் பூசுவதை - திரிபுண்டரம் எனவும் வழங்குவர்.


பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. - 5

நமது உடலில் நெற்றி - மிக முக்கிய பாகம். நெற்றி வழியாக  மிக அதிகமாக சக்தி வெளிப்படும். உள் நுழையும். ஆக்ஞா சக்கரம் எனப்படும் நெற்றி  வர்ம ஸ்தானமும் கூட. ஆக்ஞா சக்கரத்தின் நேர் பின்னால் தான் மூளையின் அடியில் முதன்மைச் சுரப்பி என குறிக்கப்படும் பிட்யூட்டரி சுரப்பி உள்ளது. 

உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளின் தலைபீடம் இதுவே!.. இதுவே உடல் சமநிலையை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. நல்லறிவு, நினைவாற்றல், தன்னம்பிக்கை - இவை  அதிகரிப்பது பிட்யூட்டரி சுரப்பி சரிவர வேலை செய்வதனாலேயே!.. 

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. - 6

இந்த பிட்யூட்டரி சுரப்பியினைப் பற்றி சித்தர் பாடல்களில் அரிய தகவல்கள் உள்ளன. 

குண்டலினி யோக தியானத்தில் -  புருவ மத்தியில் மனதை நிலைப்படுத்தும் போது - முதன்மைச் சுரப்பியான பிட்யூட்டரி  சரிவர இயங்குகின்றது என்பது அறியப்படுகின்றது. 

இத்தகைய பிட்யூட்டரி சுரப்பியை தூண்டச் செய்யும் இடம் புருவமத்தி!..

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே. - 7

நெற்றி நடுவில் திருநீறு பூசி - திலகம் வைப்பதும், புருவ மத்தியில் மனதை நிலைப்படுத்தி ஆக்ஞா தியானம் மேற்கொள்வதும் பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டுதற்கே!..

மந்த்ர ப்ரயோகத்தினால் உருவேற்றப்பட்ட திருநீறு தரித்திருப்பவரை - மெஸ்மரிஸ முறைகளினால் மயக்க முடியாது. கண்ணேறு எனப்படும் தேவையில்லாத எண்ணங்கள் நம்முள் ஊடுறுவதை  திருநீறு தடுக்கும்.

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.- 8 

திருநீறு  அணிவதால் - தடையற்ற இறைச் சிந்தனையும் , அறநெறியில் நிலைக்கும் நற்குணங்களும் மனதில் தோன்றுகின்றன.  இதனால் - உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படுகின்றன. 

குறைவற்ற செல்வமும், நல்வாக்கும், நல்லோர் நட்பும் , எல்லா நலங்களும் பெற்று சிறப்புடன் வாழ முடிகின்றது.   நன்மை தீமைகளை ஆராய்ந்து பாவங்களை ஒதுக்கும் மனப் பாங்கு வளர்கின்றது., தொல்லைகள் அனைத்தையும் அழிபடுவதால் - சித்தம் செம்மையுற்று சிவமாகின்றது. 


மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே. - 9

புறசமயத்திலிருந்து சூலை எனும் கொடிய வயிற்று வலியுடன் வந்த மருள் நீக்கியாரின் வயிற்று வலியைத் தீர்த்துடன் - அவரை மீண்டும் சைவத்தின் பக்கம் சேர்த்து - திருநாவுக்கரசர் என்றாக்கியதும் - அவர்தம் சகோதரியான திலகவதியார் வழங்கிய திருநீறே!..

அத்துடன் - தன்மேல் வெகுண்டு யானையை ஏவிய மகேந்திர பல்லவன் மனம் திருந்தவும் சமணத்திலிருந்து சைவத்திற்குத் திரும்பவும் - ஆகிய அருஞ் செயல்களை நிகழ்த்தியது - திருநாவுக்கரசர் வழங்கிய திருநீறே!..

அமணர் கொளுவும் தீ பையவே சென்று பாண்டியர்க்காகவே!.. - என அறமுரைத்து, அதனால் கூன் பாண்டியனுக்கு விளைந்த வெப்பு நோயைத் தீர்த்ததோடு அல்லாமல் - அவனது கூனலையையும் நேராக்கி நின்ற சீர் நெடுமாறன் என்றாக்கியது - திருஞான சம்பந்தர் வழங்கிய திருநீறே!..

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.  - 10

குண்டையூர் வள்ளல் வறுமையால் வாடி சுந்தரருக்கு ஏதும் வழங்க இயலாது வருந்திய போது அவர் பொருட்டு ஈசன் நெல் மலையை தோற்றுவித்ததும் - பின், இரவுப் பொழுதில் பூதகணங்கள் ஆரூர் பெருவீதிகள் முழுதும் அந்த நெல்லைக் கொட்டி வைக்கச் செய்ததும் சுந்தரர் வழங்கிய  திருநீறே!.. 

ஊமையாக இருந்த - ஈழ மன்னனின் மகளைப் பேசுவித்து - தான் கேட்ட வினாக்களுக்கு அவள் வாயினாலேயே, திருச்சாழல் என - விடை தரச் செய்த அருஞ்செயலை நிகழ்த்தியது - மாணிக்க வாசகப் பெருமான் வழங்கிய திருநீறே!..

திருஆனைக்காவில் - திருக்கோயிலுக்கு மதில் எழுப்பிய வேளையில் வேலையாட்கள் கூலியினைப் பெற்றதும் அவரவர் வேலைக்கு ஏற்ற கூலியாக மாறி மின்னியது - இறைவன் வழங்கிய திருநீறே!..





ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் 
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் 
தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணியாயின தீரச் 
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே. - 11

அபிசார மந்த்ர பிரயோகத்தினால் ஸ்ரீ ஆதிசங்கரருக்கு ஏற்பட்ட வயிற்று வலி வலியைத் - தீர்த்து ஒழித்தது - திருச்செந்தூரில் செந்திலாதிபன் வழங்கிய திருநீறே!..

பழனியிலும் சுவாமிமலையிலும் - அற்புதங்கள் பலவற்றை இன்றளவும் நிகழ்த்துவது, எம்பெருமான் முருகவேள் வழங்கும் திருநீறே!..

சபரிமலையில் - திருநடை அடைக்கப்படும் முன் தவநிலையில் வீற்றிருக்கும் ஸ்ரீஹரிஹரசுதன் திருக்கோலங் கொள்வது திருநீற்றுக் காப்பினில்!..

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துஉந் தன்நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே!.. (4/94/6)
திருநாவுக்கரசர். 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

14 கருத்துகள்:

  1. திருநீற்றின் மகிமை சொல்லும்
    தித்திக்கும் பகிர்வு கண்டேன்
    இருள் நீக்கும் பகிர்வு இதற்கோர்
    ஈடில்லா வாழ்த்துச் சொன்னேன் ...

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் வாழ்த்துக்களும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. திருநீறு பற்றிய அனைத்து தகவல்களும் சிறப்பு ஐயா... நன்றிகள் பல...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. நீறில்லா நெற்றி பாழ் நெய்யில்லா உண்டி பாழ் என்பதற் கிணங்க திருநீற்றின் மகிமை பற்றி அனைத்து தகவல்களும் தந்தமை சிறப்பே. நன்றி ! தொடர வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. ஐயா வணக்கம் நீங்கள் ஆன்மீகப் பாதையில் திருநீற்றை அணுகி இருக்கிறீர்.. என் சிறிய தோட்டத்திலும் மாமரத்திலும் பெரிய சிவப்பு எறும்புகள் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன. அவற்றின் மேல் திருநீற்றை தெளிக்கச் சொன்னார்கள். என்ன அதிசயம் எறும்புகள் instant பரலோக கதி அடைந்தன....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. வணக்கம்.
      சிற்றுயிர்கள் சிவகதி அடைந்திருக்கின்றன.
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. திருநீறுபற்றி நிறைவான பகிர்வுகள்..பாராட்டுக்க்ள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. திருநீறு பற்றிய செய்திகள் அறிந்து மகிழ்ந்தேன் ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. திருநீறு பற்றிய தகவல்கள் நன்று.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இப்போது வரும் திருநீறு எல்லாம் இந்த முறைப்படி தயாரிக்கப்படுவதில்லை போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      நீங்கள் சொல்வது உண்மையே!..
      ஆயினும், தஞ்சை மாவட்டத்தின் ஆதீன மடாலயங்களில் முறைப்படி தயாரிக்கப்பட்ட திருநீறு கிடைக்கின்றது.
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..