நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 22, 2014

வாழ்க வையகம்

புவி நாள் (Earth day) இன்று. 

கெட்டுப் போவதில் இருந்து - 

பூமியும் அதன் சுற்றுச்சூழலும் காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி  - வருடந்தோறும் - 175 நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் நாள்.


பூமி ஏன் காக்கப்பட வேண்டும்?..

அண்டார்டிகாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பனிமலைகள் உருகிச் சரிகின்றன. காரணம் - வெப்ப நிலை அதிகரித்துவிட்டது. 

உலகை நவீன மயமாக்கி விட்டதால்  ஏற்பட்ட விளவு!..

அப்படியானால்,  உலகம் நவீனமாக வேண்டாமா!?.. வேண்டும் தான்!.. 

ஆனால் - பின் விளைவுகளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் போனதே!..

மிதமிஞ்சிய கரியமில வாயுவின் தாக்கத்தால் - ஓசோன் படலம் கிழிந்து போய்விட்டது. கிழிந்து போனால் என்ன!..

பஞ்ச பூதங்களில் அக்னியைத் தவிர மற்ற நான்கும் மாசடைந்து விட்டன.

மண் கெட்டதால் - நீரும், காற்றும் மாசடைந்தன. அதனாலேயே - ஓசோனில் கிழிசல்!.. இதனால் பலநாடுகளிலும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு விட்டது. 

 
இயற்கை வளம் மிக்கதாக இருந்த பூமியின் காடுகளை அழித்தான் மனிதன். இதனால், இயற்கைச் சங்கிலியின்  கண்ணிகளான - மற்ற உயிர்க் குலமும் நாசம் அடைந்தன. 

எத்தனை எத்தனையோ உயிரினங்கள்  - இன்று பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில்!.. 

பலவிதமான பலன்களை நல்கிய  தாவரங்கள் முற்றிலுமாக அழிந்தே விட்டன. விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டன. 

அவற்றை வாழ விடாமல் செய்து விட்டோம். வளி மண்டலம் ஒரு வழியானது. சகல ஜீவராசிகளுக்கும் வலியானது. 

பருவநிலை மாற்றத்தால் பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. 

இதன் விளைவே  அடிக்கடி நிகழும் - நிலநடுக்கம், ஆழிப்பேரலை , கடுங்கோடை, வெப்பம், வறட்சி, பனிப்பாறை உருகி வெள்ளம் போன்றவை!.. 

இவற்றுக்கெல்லாம் மனிதர்களாகிய நாமே காரணம். 


நம்முடைய தவறுகளால் வாழ்வாங்கு வாழ வேண்டி வையத்துள் வந்த உயிர்கள் அனைத்தும் பரிதவித்து நிற்கின்றன.

இந்நிலையில் - பூமியைக் காக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக அமைந்ததே - பூமிநாள்!..

1990 ஏப்ரல் 22 முதல் அனுசரிக்கப்பட்டு வரும் இந்நாளின் வரலாறு!..

{விக்கி பீடியா - வழங்கியுள்ள தகவல்கள் - இதன் கீழ் குறிப்பிடப்படுகின்றன}

1969-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சாண்டா பார்பரா  கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான எண்ணெய் சிதறலைப் பார்வையிடுவதற்காக அமெரிக்க சுற்றுச் சூழலியல் நிபுணரும் செனட்டரும் ஆன - கெய்லார்ட் நெல்சன் என்பவர்,  பயணம் மேற்கொண்டார். 

Gaylord Nelson.
அங்கே எண்ணெய் சிதறலை நேரில் கண்டு ஆய்வு செய்தபின்,  தலைநகர் வாஷிங்டனுக்குத் திரும்பிய கெய்லார்ட் நெல்சன்  ஏப்ரல் 22-ஆம் நாளைத் தேசியச் சுற்றுச் சூழல் நாளாக அறிவிக்கும் மசோதாவை  சமர்ப்பித்தார்.  

John McConnell
அதே 1969ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு  நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல் கொடுத்த ஒரு மாமனிதர். 

மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காப்பாற்ற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் கருதினார். 

அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்று - ஒருநாளை அனுசரிப்பது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார்.

இந்த சமயத்தில் தான் ,  கேலார்ட் நெல்சன் - சுற்றுச் சூழல் பற்றிய அறிவைப் பரப்புதற்கு -  அழைப்பு விடுத்தார். 


இதனைத் தொடர்ந்து - சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில்  புவி நாளை - 1970 ஏப்ரல் 22-ல் கொண்டாடுவது பற்றி  ஜான் மெக்கானெல் அறிவித்தார்.

இந்த நாளின்போது புவியின் வட கோளப் பகுதி வசந்த காலமாகவும், தென் கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

1990-ம் ஆண்டு புவி நாளன்று 141 நாடுகளில் 20 கோடி மக்களைத் திரட்டிச் சுற்றுச்சூழல் பிரச்னைகளை உலகறியச் செய்ததன் மூலம், மறுசுழற்சி முயற்சிகளுக்கு மிகப் பெரிய உத்வேகம் கிடைத்தது. 

இது, நவீன சுற்றுச்சூழல் போராட்டத்தின் தொடக்கம் என குறிக்கப்படுகின்றது. 
 
{விக்கி பீடியா வழங்கிய தகவல்களுக்கு நன்றி}


உலகில் நகரங்களே பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக இருக்கின்றன. 

இந்த பாதிப்பால் அதிக அளவில் மக்கள் அவதியுறுவது நகரங்களில்தான். 

எனவே, நகரங்களைக் கூடுமானவரை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும். அதற்கு சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்  - என இந்தப் புவி நாள் வலியுறுத்துகிறது. 

நாமும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நடைமுறைகளைக் கடைபிடித்து புவியினைக்  காத்து நிற்போம்!.. 


இந்த மாதிரியான குறியீட்டு தினங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே-

நம்முடைய முன்னோர்கள் - நாம் வாழும் புவியை எப்படி வாழ வைப்பது என்பதில் கருத்தாக இருந்தனர்.

வேதங்களிலும் இதிகாசங்களிலும் தேவார திருமுறைகளிலும் ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

நம்முடைய புராணங்களில், பூமியைப்  பெண்ணாக உருவகித்து, ஸ்ரீபூமாதேவி எனப் பெயரும் சூட்டி - அவளைக் காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவின் பத்தினியாகப் பாவித்துக் கொண்டாடுவது மரபாக இருக்கின்றது. 

படித்ததில் பிடித்தது..!..

நெற்றியில் உள்ள திருமண் குறியினைக் கொண்டு எவனும் வைஷ்ணவன் என்று ஆவதில்லை. மற்ற உயிரினங்களின் துயரங்களை யார் ஒருவன் தனது துயராகக் கொண்டு உதவுகின்றானோ - அவனே வைஷ்ணவன்!.. உலக நன்மையைத் தன் கருத்தினில் கொண்டுள்ளவன் எவனோ - அவனே வைஷ்ணவன்!..

காலே வர்ஷது பர்ஜன்ய
பிருத்வி சஸ்ய ஷாலினி 
தேசோ யாம் க்ஷோப ரஹித 
சஜ்ஜன சந்து நிர்பய.

மழைக் காலத்தில்,  மழை - அமோகமாகப் பெய்யட்டும். இந்தப் பூமி  - இளம் பயிர்களால் நன்கு சூழப்படட்டும். தேசம் பிரச்னைகள் இன்றி சுபமாக இருக்கட்டும். நல்ல மக்கள் பயம் இன்றி இருக்கட்டும். 



ஓம் 
சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது
சர்வேஷாம் சாந்திர் பவது
சர்வேஷாம் பூர்ணம் பவது
சர்வேஷாம் மங்களம் பவது
ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

பரந்து விரிந்த ப்ரபஞ்சம்

எங்கும் நன்மை உண்டாகட்டும்
எங்கும் அமைதி உண்டாகட்டும்
எங்கும் முழுமை உண்டாகட்டும்
எங்கும் வளம் உண்டாகட்டும்!..



வையகத்தை நாம் காப்போம்!.. 
வையகம் நம்மை காக்கும்!..  
லோகா சமஸ்தா சுகினோ பவந்து.

11 கருத்துகள்:

  1. உணர வேண்டிய தகவல் கருத்துகளுடன் சிறப்பான பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  2. அனைவரும் அறிய வேண்டிய உணர வேண்டிய தகவல்கள் ஐயா.
    உலகம் வாழட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி...

      நீக்கு
  3. பூமி நாளைக்கு ஏற்ற பதிவு. தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன், நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. வையகத்தை நாம் காப்போம்!..
    வையகம் நம்மை காக்கும்!..
    லோகா சமஸ்தா சுகினோ பவந்து.

    அர்த்தமுள்ள வரிகளை
    அருமையாகப் பகிர்ந்த விழிப்புணர்வு பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் பாராட்டும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. இயற்கையைக் காக்க வேண்டிய கடமை மனிதனுக்கு உண்டு. ஆனால் அரசும் ஒத்துழைக்க வேண்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் கூறுவது மெய்யே.. அவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் சிந்திப்பதற்கு நேரம் இருக்கின்றதா தெரியவில்லை.
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  6. அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம்.... மேலும் மாசு படாமல் காக்க உதவுவோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      இயற்கையை முடிந்த வரைக்கும் பாதுகாப்பது நமது கடமை..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..