நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 04, 2014

பங்குனிப் பெருவிழா

ஸ்ரீ விஜய வருடம் மங்கலகரமாக  - விடைபெறும் வேளை இது!..

அனைவருக்கும் அவரவர் பூர்வ ஜன்ம புண்ணிய வாசகப்படி -  ஆண்டளக்கும் ஐயனின் கருணையினால் அனைத்தும் அளக்கப்பட்டிருக்கும்.


இவ்வேளையில் - பங்குனி மாத நிறைவு நாட்களில் மிகச்சிறப்பான உத்திர திருவிழாக்கள் கோலாகலமாகத் தொடங்குகின்றன.


அம்பிகை இமவான் மகளாகத் தோன்றியபோது, பார்வதி - பரமேஸ்வரன் திருமணமும், ஆதியில் மீனாக்ஷி சுந்தரேசர் திருமணமும்,  தெய்வயானை - திருமுருகன் திருமணமும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் - ரங்கமன்னார் திருமணமும் - பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்ததாகக் கூறுவர்.

வள்ளியம்மையின் திருநட்சத்திரமும் ஸ்ரீ ஹரிஹரசுதனின் திருநட்சத்திரமும் உத்திரமே!..

மிதிலையில்,  ஸ்ரீராமன் -  ஜானகியின் கைத்தலம் பற்றியதும் பங்குனி உத்திர நன்னாளில் தான். லக்ஷ்மணன், பரதன், சத்ருகனன் ஆகியோர் ஜானகியின் சகோதரிகளான ஊர்மிளா, மாண்டவி, ச்ருதகீர்த்தி ஆகியோருடன் மனையறம் ஏற்றதும் இந்நாளில் தான்!..

குமரன் உறையும் திருக்கோயில்களில்  எல்லாம் - சிறப்புற விசேஷங்கள் நிகழ்வதும் பங்குனி உத்திரத்தில் தான்!..


தஞ்சையை அடுத்துள்ள திருப்பரிதி நியமம் என்னும் பரிதியப்பர் திருக் கோயிலில் நிகழும் பங்குனித் திருவிழா மிகச்சிறப்பானது. திருமுருகன் பேர் பாடி ஆயிரமாய் பால் காவடிகள் ஆடி வரும் அழகே அழகு!..

பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள - உளூர் கிராமத்திலிருந்து உள்புறமாக மூன்று கி.மீ தொலைவில் உள்ளது -  பரிதியப்பர் திருக்கோயில்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் இயங்குகின்றன.

சபரிமலையில் பங்குனி உத்திரத் திருவிழா .


பத்து நாட்கள் நடைபெறும் ஆராட்டு விழா  இன்று (ஏப்ரல் 4) துவங்குகிறது. 

இதற்காக - நேற்று (ஏப்ரல் 3) மாலை  5:30 மணி அளவில் திருநடை திறக்கப் பட்டது. 

அப்போது விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை. 
விபூதித் திருக்காப்பில் ஐயப்பனின் திவ்ய தரிசனம் மட்டுமே.

சபரிமலையில் பங்குனி உத்திரத் திருவிழா, இன்று (ஏப்ரல் 4) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 

அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் வழக்கமான சிறப்பு பூஜைகள்.

அதன் பின், காலை 9:30 அளவில் கொடியேற்றம் நடக்கிறது.

விழா நாட்களில் -

வழக்கமான - கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை ஆகியவற்றுடன்,

உத்சவ பலி, சிறப்பு பூஜைகளான படி பூஜை, உதயஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம் போன்றவையும் நடைபெறும்.

 ஏப்ரல்-12 இரவு சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது.
 
மறுநாள் அதிகாலையில்  சந்நிதானத்தில் இருந்து - யானை மீது ஐயன் ஆரோகணித்து பம்பைக்கு எழுந்தருள்வார்.


பம்பா நதியில் திரிவேணி சங்கமத்தில் சுவாமி ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழும்.
 
அன்று இரவு 10 மணிக்கு ஸ்ரீகோயில் திருநடை அடைக்கப்பட்டு  திருவிழா நிறைவடைகிறது.

பின்னர் சித்திரை விஷுவை முன்னிட்டு ஏப்ரல் 14  திருநடை திறக்கப்பட்டு வழக்கமான வழிபாடுகள் நடைபெறுகின்றன.   

மறுநாள் (15 செவ்வாய் ) விஷு பண்டிகை.  காலை 4 மணி முதல் 7 மணி வரை விஷு கனி தரிசனம்.  

தந்திரி, மேல் சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு விஷு கைநீட்டம் வழங்குவர்.

தொடர்ந்து  வழக்கமான வழிபாடுகள். ஏப்ரல் 18 இரவு 10.30 மணிக்கு ஹரிவாசனம்  இசைக்கப்பட்டு திருநடை அடைக்கப்படும்.

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் பங்குனித் திருவிழா!...


வைணவத் திருத்தலங்கள் நூற்றெட்டினுள் முதன்மையானது - ஸ்ரீரங்கம்,

அயோத்தியில் ஸ்ரீராமசந்திர மூர்த்தியால் பூஜித்து வணங்கப்பட்ட திருமேனி விளங்கும் திருத்தலம்.

அரங்கநாதர் திருக்கோயிலில் பங்குனித் தேர்த் திருவிழா வருகிற ஐந்தாம் தேதி தொடங்குகிறது.

ஸ்ரீரங்கத்தில் பங்குனி மாதம்  நடைபெறும் ஆதி பிரம்மோற்சவம் விபீஷணனால் தொடங்கப்பட்டது என்கிறது புராணம்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நிகழும் முக்கிய வைபவமான உத்திரச் சேர்த்தி பங்குனித் திருவிழாவின் போது தான்!..  

எதிர்வரும் ஐந்தாம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி பதினைந்தாம் தேதி முடிய பங்குனித் திருவிழா நடைபெறுகின்றது.

வருகிற ஐந்தாம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு கொடியேற்ற மண்டபம் சென்றடைகிறார். அப்போது கருடன் திருவடிவம் எழுதப்பட்ட கொடியும் எடுத்துச் செல்லப்படுகின்றது.

அதிகாலை ஐந்து மணியளவில் கொடியேற்றம். கொடி மண்டபத்திலிருந்து  காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடாகி 7 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

அன்று மாலை  நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடாகி சித்திரை வீதிகள் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தன மண்டபம் சென்று அங்கிருந்து யாகசாலை சேருகிறார்.

திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் அங்கிருந்து புறப்பாடாகி - நள்ளிரவு ஒரு மணியளவில் கண்ணாடி மண்டபம் சென்றடைகிறார்.

பதினோரு நாட்கள் நடைபெறும்  விழாவில், இரண்டாம் திருநாளன்று - ஜீயர் புரம் எழுந்தருளல்.
 
நான்காம் திருநாள் (8/4)  கருட சேவை.

ஆறாம் திருநாளன்று நம்பெருமாள் உறையூருக்குப் புறப்பாடாகி - ஸ்ரீகமல நாச்சியாருடன் சேர்த்தி வைபவம்.


ஒன்பதாம் திருநாள் (13/4 ) பங்குனி உத்திர சேர்த்தித் திருவிழா.

பத்தாம் திருநாள் - பங்குனி தேரோட்டம்.

நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து  காலை 5.45 மணி அளவில் தேருக்கு எழுந்தருளி 7.15 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது.

ஆயிரமாயிரம் பக்தர்கள் வடம் பிடித்து  இழுக்க -  பெருமாள் மனங்கனிந்து தேரினில் பவனி வரும் திருக்காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா.

தமிழகத்தில் விளங்கும் சக்தி பீடங்களில் சமயபுரம் மாரியம்மன் திருக் கோயில் புகழ் பெற்றதாகும்.
 
கடந்த மாசி - கடைசி ஞாயிறன்று (மார்ச்-9)  அம்பாள் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டாள். அது முதற்கொண்டு -  நான்கு வாரங்களும் ஞாயிற்றுக் கிழமைகளில் பூச்சொரிதல் வைபவம் தொடந்து நிகழ்ந்தது.

வருகிற பங்குனி கடைசி ஞாயிறன்று (6/4) அம்மனின் பச்சைப் பட்டினி விரதம் நிறைவடைகின்றது. 


எனவே - அன்று காலை ஏழு மணி அளவில் சித்திரை தேர்த் திருவிழாவிற்காக கொடியேற்றப்படுகிறது.

இரவு 7.30 மணிக்கு - அம்பாள் கேடயத்தில் திருவீதி உலா.  அதன் பின், 

கண்ணாரக் கண்டு தரிசிக்கும் முகமாக - தினமும் வெவ்வேறு வாகனங்களில் கோலாகலமாகத் திருவீதி  எழுந்தருள்கின்றாள் - சமயபுரத்தாள்!..

திருவிழாவின் பத்தாம் நாளான ஏப்ரல் 15 அன்று காலை 10.31 மணிக்கு சித்திரை தேரோட்டம்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கிறார்கள்.  ஏப்ரல் 18 - பதின்மூன்றாம் திருநாளன்று தெப்ப உற்சவம்.

பின் - மஞ்சள் நீராட்டுடன் மங்கலகரமாக - திருவிழா நிறைவு பெறும்.

திருவிழாக்கள் சமுதாய ஒற்றுமைக்காக நிகழ்வன. 
ஊர்கூடித் தேர் இழுப்பது உயிர்க் குலத்தின் உயர்வினுக்காக!..

உயிர்க் குலம் வாழ்வதற்கும் ஊர் வளம் ஓங்குதற்கும்
உள்ளிருந்து ஒளிரும் உயர் பொருள் அருள்க!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

18 கருத்துகள்:

  1. பங்குனிப் பெருவிழா செய்திகள் அறிந்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. விளக்கமான செய்திகள் அனைத்திற்கும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. அருமையான பங்குனிதிருவிழாக்கள்ப்பற்றிய செய்திகள்.
    நன்றி.

    பங்குனி திருவிழா வைத்தீஸ்வரன் கோவிலும் ஏப்ரல் 4ம் தேதி ஆரம்பிக்கிறது.
    குலதெய்வம் கோவில்களில் பங்குனி உத்திரம் தான் மிக விஷேசம்.

    உயிர் குலம் வாழ்வதற்கு இறை நம்பிக்கையும் அந்த நம்பிக்கையை வளர்க்க திருவிழாக்களும் அவசியம் தான்.
    மக்களின் ஒற்றுமை வளர்க! நலம் தருக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. பங்குனியின் உத்திரத்திருநாளைப் பற்றி
    பாங்கான பதிவுகள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் பாராட்டுரைக்கு நன்றி!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  5. உத்திரத்திற்கு இத்தனை மகிமையா. தெய்வத்திருமணங்கள் பல் நடந்திருக்கின்றன. பங்குனி உத்திர செய்திகள் படங்களுடன் பார்க்கக் கிடைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. பங்குனி உத்திரத் திரு நாட்களை எம் தாய் நாடில் இருந்த போது
    மகிழ்ந்து கொண்டாடினோம் ,இறை வழிபாட்டில் ஊறிக் கிடந்தோம்
    அந்நாட்களை எண்ணிப் பார்க்க வைத்த அருமையான பகிர்வுக்குப்
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து மலரும் நினைவுகளாக - பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..

      நீக்கு
  7. பங்குனிப்பெருவிழா தொடர்பான செய்திகளைத் தொகுத்து அழகான புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. பங்குனி உத்திரம் சமயத்தில் நடக்கும் விழாக்கள் பற்றிய விரிவான தகவல்களுக்கு நன்றி.

    நெய்வேலியிலும் மிகச் சிறப்பாக இருக்கும். சிறு வயதில் நிறைய ரசித்திருக்கிறேன். ஒரு பதிவும் இங்கே இருக்கிறது.

    பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://venkatnagaraj.blogspot.com/2013/03/blog-post_27.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
      தங்களது - பதிவையும் கண்டேன்.. அருமை..

      நீக்கு
  9. பெயரில்லா06 ஏப்ரல், 2014 13:18

    வணக்கம் அய்யா ,..பங்குனி திருவிழா பற்றி நல்லா சொல்லி இருக்கீங்க ..உங்க படங்கள் எல்லாமே அழகு ..எங்க இருந்து எடுத்து போடுறிங்க ...சூப்பர் ஆ இருக்கு ...நன்றிங்க அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கலை..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.. சிறிய வயதில் இருந்தே படங்கள் சேகரிப்பது பொழுது போக்கு..
      ஆயினும், இவை - இணையத்தில் இருந்து பெறப்பட்டவை..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..