நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 03, 2016

திரு மயிலை

மயிலையே கயிலை..
கயிலையே மயிலை!..

என்று அடியார்களால் போற்றிப் புகழப்படும் பெருமைக்கு உரிய திருத்தலம்..

அம்பிகை மயிலாக வடிவெடுத்து ஈசனை வழிபட்டனள் - இங்கே!..


அம்பிகையின் தவங்கண்டு மகிழ்ந்த எம்பெருமான் திருக்காட்சி நல்கினன்..

அதன்பின்,
அம்பிகை மணக்கோலங்கொண்டு ஐயனுடன் கலந்து இன்புற்ற திருத்தலம்..
* * *

பெருஞ்சிறப்புகளை உடைய இத்திருத்தலத்தினில்
வாழ்ந்திருந்தவர் சிவநேசஞ்செட்டியார்..

பெருவணிகரான அவருடைய அன்பு மகள் பூம்பாவை..

ஒருநாள் - தோழியருடன் பூ வனத்தில் மலர் கொய்த வேளையில்
கொடிய நாகந்தீண்டியதால் மாண்டு போனாள் அந்த இளங்கன்னி..

மயிலைக்கு திருஞானசம்பந்தப்பெருமான் - எழுந்தருளும் போது,
தன் மகளை அவருக்குக் கன்யாதானம் செய்து கொடுப்பதற்கு எண்ணம் கொண்டிருந்த செட்டியார் - கலசத்தினுள் அவளது சாம்பலைப் பாதுகாத்து வைத்திருந்தார்..

பின்னாளில் -
மயிலைக்கு எழுந்தருளிய ஞானசம்பந்தப் பெருமான் - திருப்பதிகம் அருளி -
அஸ்திக் கலசத்தினுள்ளிருந்து பூம்பாவையை உயிருடன் எழுப்பி -

அருஞ்செயல் ஒன்றினை நிகழ்த்தினார்..

அறுபத்து மூவருள் ஒருவரான வாயிலார் நாயனார் வாழ்ந்திருந்த திருத்தலம்.


திருமயிலை

இறைவன் - ஸ்ரீ கபாலீஸ்வரன்
அம்பிகை - ஸ்ரீ கற்பகவல்லி
தல விருட்சம் - புன்னை
தீர்த்தம் - கபாலி தீர்த்தம்


கண்ணீர் துடைப்பவள் கற்பகவல்லி..
கைகொடுத்துக் காப்பவள் கற்பகவல்லி..

மேற்கு நோக்கிய திருக்கோயில்..
தொண்டை நாட்டின் இருபத்து நான்காவது திருத்தலம்..

பன்னிரு ஆண்டுகளுக்குப் பின் -
இன்று இத்திருக்கோயிலுக்கு திருக்குடமுழுக்கு நிகழ்ந்துள்ளது..

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து வழிபட்டுள்ளனர்..




தம்பிரான் ஸ்வாமிகள்









இன்று அதிகாலை ஐந்து மணியளவில் பன்னிரண்டாம் கால வேள்வி பூஜைகள் நிறைவு பெற்றன..

அதைத் தொடர்ந்து - காலை 7.45 மணியளவில் கலசங்கள் புறப்பாடு ஆகின..







நன்றி - தினமணி
காலை 9.50 மணிக்குள்ளாக அனைத்து ராஜகோபுரங்களுக்கும் விமானங்களுக்கும் திருக்குடமுழுக்கு மங்கலகரமாக நடந்தேறியது..

முற்பகல் 11.00 மணியளவில் ஸ்வாமிக்கும் அம்பிகைக்கும் மகா அபிஷேகம்..

மாலை நான்கு மணிக்கு - முதல் மண்டலாபிஷேகம்..

தொடர்ந்து திருக்கல்யாண வைபவம்..

இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா..

அப்பர் ஸ்வாமிகள் - திருவொற்றியூரைத் தரிசிக்கும் போது -

வடிவுடைய மங்கையுந் தாமும் எல்லாம்
வருவாரை எதிர்கண்டோம் மயிலாப்புள்ளே!..

என்று, திருமயிலையில் இறைவன் எதிரில் திருக்காட்சியளிக்க -
தாம் தரிசனங்கண்டு மகிழ்ந்ததாகக் குறித்தருள்கின்றார்..

அத்துடன்,

தில்லைத் திருச்சிற்றம்பலத்தில்,

மங்குல் மதி மாடவீதி மயிலாப்பில் உள்ளார்!..

- என்றே முதலெடுத்துத் திருப்பதிகம் பாடி மகிழ்கின்றார்..

மேலும்,

திரு அதிகை வீரட்டானத்தில் திருக்காப்புத் திருப்பதிகத்திலும்

மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர் சடையான்..

- என்று புகழ்ந்தேத்துகின்றார்..
***


திருக்குடமுழுக்கு வைபவத்தின் நிகழ்வுகளை வழங்கியோர் -

தம்பிரான் ஸ்வாமிகள், வசந்த குமார், 
சக்தி விகடன் மற்றும் தந்தி தொலைக்காட்சி..

சிறப்புறும் திருத்தலமாகிய திருமயிலை திருக்குடமுழுக்கு வைபவத்தின் நிகழ்வுகளை வலையில் ஏற்றிய நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி..
***

கற்பகவல்லி கழலடி போற்றி
காபாலீச்சரன் திருவடி போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *