நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 24, 2023

தஞ்சை மணிக்கூண்டு

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 10
புதன் கிழமை


தஞ்சையில் பெரிய கோயில் எனப்படும் ராஜராஜேஸ்வரம், சிவகங்கைப் பூங்கா,  பழைமையான அரண்மனை, கலைக்கூடம், பெரிய பீரங்கி இவற்றுடன் மேலும் ஒரு சிறப்பு  - தஞ்சை மணிக் கூண்டு..

 நன்றி விக்கி
ராணீஸ் டவர் (Ranees Tower -  1883) என்று அழைக்கப்படும்
தஞ்சை மணிக்கூண்டு நூற்று நாற்பது (140) ஆண்டுகளைக் கடந்து விட்டது.. 

தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவ மனை வளாகத்தின் வடகிழக்கு மூலையில் விளங்கும் இந்த மணிக் கூண்டு கோபுரத்தினை அப்போதைய தஞ்சாவூர் மகாராணி வழங்கிய பொருளுதவியுடன் ஆங்கிலேயர்  அமைத்தனர்..

இதைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்ட போது  கட்டுவதற்கு இடமும் பண உதவியும் (பணம் 12,000) தஞ்சை ராணி காமாட்சி அம்பா  சாஹேப் அவர்கள் 
செய்திருக்கின்றார்..
இவர் இரண்டாம்  சரபோஜி மன்னர் அவர்களது பெயர்த்தி ஆவார்.. 

மணிக்கூண்டு கட்டப்பட்ட ஆண்டு 1883..

அகற்றப்பட்ட வளைவு
விக்டோரியா மகாராணி முடிசூடி அறுபது ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூர்ந்து இந்த மணிக் கூண்டின் அருகே அமைக்கப்பட்ட (வைர விழா நினைவு)  அலங்கார வளைவு சாலை விரிவாக்கத்துக்காக 1995 ல்  அகற்றப்பட்டது..

முழுவதும் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டுள்ள இதன் உயரம் 130 அடி..

இந்த மணிக்கூண்டு எவ்வித வெளிப் பூச்சும் இல்லாமல் மிகுந்த கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 

மணிக்கூண்டின் கீழ்ப்பகுதி 20 அடி உயரம் வரை சதுர வடிவிலும்  (மணிக் கூண்டின் பிரதான கட்டிடம்) அதற்கு மேல் 60 அடி உயரத்துக்கு எண்கோண வடிவிலும், அதற்கு மேல் 40 அடி உயரத்துக்கு சதுர வடிவிலும், அதற்கு மேல் உச்சி 10 அடி உயரத்துக்கு தஞ்சை கோயில் விமானத்தைப் போலவும்  வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனுள் நூறு படிகளுக்கு மேல் இருக்கின்றனவாம்..

மணிக்கூண்டின் நான்கு புறங்களிலும்  வாசல்கள் உள்ளன..

மணிக்கூண்டின் நான்கு புறங்களிலும்  அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஜன்னல்களும் உப்பரிகை மாடமும் உள்ளன..

நான்கு புறங்களிலும்பளிங்கு கற்களுக்கு மத்தியில் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட.
கடிகாரங்களும் பொருத்தப்பட்டிருந்தன.



முதல் உலகப் போரில் (1914 - 1919) தஞ்சையில் இருந்து அறுபத்தோரு பேர்  ஈடுபடுத்தப் பட்டனர். அவர்களுள் நால்வர் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தியுடன் கூடிய பளிங்குக் கல் ஒன்றும் மணிக்கூண்டின் கிழக்குப் புற சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.. 

பழைய படம் 

பழைய படம்
பின்னாளில் போர் நினைவு இடமாக மாறிய இங்கு 
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் 
மார்பளவுச் சிலையும் உள்ளது..

மணிக்கூண்டைச் சுற்றிலும் வண்ண மயமான பூக்களுடன் பூங்கா அமைக்கப்பட்டு Ranees Park என்று பெயர் சூட்டப்பட்டிருந்ததாம் ..

காற்றினில் வானொலி தவழ்ந்த காலத்தில் இந்தப் பூங்காவில் வானொலிப் பெட்டியும் அமைக்கப்பட்டு நல்ல பராமரிப்பில் இருந்திருக்கின்றது..

இப்படியான ராணீஸ் டவர் - என்ன காரணத்தால் ராஜப்பா பூங்கா என்று ஆனது?..
தெரியவில்லை.. 

1970 களில் ராஜப்பா பூங்காவின் கிழக்குப் புறத்திலும் வடக்குப் புறத்திலும் நகராட்சி நிர்வாகம் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டது.. 

அதன் பின்  ராஜப்பா பூங்காவுக்குள் வெட்டிக் கும்பல் ஒன்று எந்நேரமும் இருந்தது..

அந்தக் காலத்தில் (1950 வரை) ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை  ஒலித்த மணிக்கூண்டு கடிகாரங்கள் 
நாளடைவில் பழுதாகி விட்டன..

தற்போது அவற்றின் நிலை என்ன என்று தெரியவில்லை..

தஞ்சையில் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்தின் அருகே மருத்துவமனை வளாகத்தில் கம்பீரமாக விளங்குகின்றது மணிக்கூண்டு..



ராஜப்பா பூங்கா என்று சொல்லப்படும் இங்கு எவ்வித பூக்களும் இப்போது இல்லை.. சீரமைக்கப்பட்ட நடைபாதையுடன் ஒன்றிரண்டு சிறு மரங்கள் மட்டுமே..

நன்றி விக்கி
பழைமையான இந்த மணிக்கூண்டு சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நான்கு கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது..
 

தற்போது மாலை நேரத்தில் மட்டும் நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையும்  சனி ஞாயிறு நாட்களில் கூடுதலாக காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரையில்  பொதுமக்களுக்கு  திறக்கப்படுவதாக அறிவிப்பு உள்ளது..

வாழ்க நலம்
வளர்க நலம்
***

7 கருத்துகள்:

  1. என் அப்பா ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்திருக்கிறார்.  அங்கிருந்த காலங்களில் மணிக்கூண்டைப் பார்த்திருக்கிறேன்,

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்லும் வளைவு என்பது தஞ்சை (பழைய) பஸ்ஸ்டேண்டிலிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் இருக்குமா?  அங்குதான் ஒரு வளைவு பார்த்த நினைவு.  வாழவைத்த தாண்டியதும் இடது புறம் மங்களாம்பிகா.  அப்படியே இடதுபுறம் போனால் முனையில் ஒரு ஹோட்டல்.  உள்ளே போனால் ராஜா கலையரங்கம் தியேட்டர்.

    பதிலளிநீக்கு
  3. ராஜப்பா என்பது ஒரு பிரபலத்தின் பெயர் போலும். மேம்பாலம் திரும்பி கணபதி நகர் தாண்டினால் அங்கு ஒரு ராஜப்பா நகர் வருமே..

    பதிலளிநீக்கு
  4. கடிகாரங்களை புதுப்பிக்க கூட மாநகராட்சிக்கு மனம் இல்லையா, பணம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  5. தஞ்சை ஊரின் படங்கள் நன்றாக இருக்கிறது.
    மணிக்கூண்டில் மணி ஒலித்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..