நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 15, 2021

ஏணிமலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
ஏணிமலை

எங்கள் பிளாக்கில்
கடந்த மூன்று வாரங்களாக
வெளியாகும் அமானுஷ்ய கதை..

நேற்றைய பதிவினைப்
படித்ததும் மனதில்
தோன்றியது இது..
அங்கே பதிவிடுவதற்குள்
இணையம் விடுபட்டுப் போனது..

ஆதலினால்
தனிப்பதிவாக இங்கே
தந்திருக்கின்றேன்..


தேன்மலரின் தித்திப்பாய்
திகழ் அழகில் தேவியவள்..
தேனி மலை வனவாசி..
வளர் வசந்த சுகவாசி..

தோள் கொண்ட அருச்சுனன்
தோள்களில் மாலையாய்
தேன் கொண்ட பூவிதழ்
தேவியும் ஆகினாள்..

அருச்சுனன் அன்பினில் தோள் தழுவிக்
கிடந்த மலர்
தூர்த்தனவன் விழி பட்டு
துன்பத்தில் வீழ்ந்ததம்மா..

ஏணிமலைக் குறு நிலத்தான்
ஏந்திழையைப் பற்றி வந்து
தன்னுடலில் படர்ந்திடவே தளிர்க்
கொடிக்குக் கெடு விதித்தான்..

மடித்து வைத்த மஞ்ச சேலை
விரித்து உடுத்தி வரச் சொல்லி
கவுடன் அவன் வலை விரித்தான்
வஞ்சனையில் நாள் குறித்தான்..

மஞ்சளுடன் வருவாளா?..
மனம் மகிழத் தருவாளா!..
மல்லிகையாய் மார்பினிலே
மங்கையவள் திளைப்பாளா!..

ஏங்கி அங்கு தான் கிடந்த
ஏணிமலைக் கிழவனுக்கு
வாங்கி வந்த வன் குணத்தால்
கோணி மனம் ஆனதையா..

மங்கையவள் மயங்கவில்லை..
மஞ்ச சேலை கசங்கவில்லை..
மலையதுவும் பொடியாகி
காற்றினிலே கரைந்தாலும்
கொடியவனின் ஆசைக்கு
பூங்கொடியும் இசைய வில்லை..

அடைபட்ட அருச்சுனனும்
ஆளுமைச் சிங்கமென
சீறிச் சிவந்தெழுந்தான்
சிறுமதியன் சிரம் அறுத்தான்
சிறைபட்ட சிற்றிடையாள்
சேதமாகினாள் என்று
கண்ணீரில் தான் மூழ்கி
புவிதுறந்தான் கணப்போதில்..

மாசடைந்த கவுடன் உயிர்
அருச்சுனனால் போன கதை
அறியாத பேதையவள்
அவசரத்தில் முடிவெடுத்தாள்
ஆவியாக வடிவெடுத்தாள்..
அக்கம்மா தலை பிரித்தாள்..

அன்பு மலர் அழிந்த விதம்
அறியாத அருச்சுனனும்
ஆவியாக அலைகின்றான்
அழகு மலர் தோள் தேடி!..

அருச்சுனனின் மார்பினிலே
அழகு மலர் இதழ் கனிந்தால்
ஆக்கினையும் தீர்ந்து விடும்
ஆவி ரூபம் மாறி விடும்..

ஊர் அறிந்த கதைக்குள்ளே
ஒளிந்திருக்கும் ரகசியம் தான்..
ஒன்றிரண்டாய் கதை சொல்ல
ஒவ்வொன்றும் அதிசயந்தான்..
***

" ஓ!.. அப்படியானால் இன்னும் பல கதைகள் வரக்கூடும்.. ன்னு சொல்றீங்களா வாத்தியாரே!.. "

* யாமறியோம் பராபரமே!.. "
***
வாழ்க நலம்..
  ஃஃஃ

24 கருத்துகள்:

  1. ஆஹா அற்புதம் அற்புதம் துரை அண்ணா!!!! 5 பார்ட்டை ஒரே கவிதைல சொல்லிட்டீங்களே அதுவும் அரைப் பொழுதில் எழுதி!!!!

    மிக மிக மிகவும் ரசித்தேன் துரை அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..
      தங்களுக்கு நல்வரவு.. நேற்று சாயங்காலமே இந்தக் கவிதையை எழுதி விட்டாலும் பதிவிட முடிய வில்லை...

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..
      மகிழ்ச்சி..

      நீக்கு
  2. அப்ப உங்ககிட்டருந்து இன்னொரு கதையும் வரப் போகுது!!! அட அட!!! செம. துரை அண்ணா கலக்கறீங்க. நீங்க எல்லாம் இலக்கிய உலகில் கொடி கட்டிப் பறந்திருக்கணும். உங்கள் வியத்தகு திறமை அசாத்தியம்!! வாழ்த்துகள் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொன்றும் எழுதுவதற்கு இதுவரையிலும் திட்டமில்லை.. தங்களது வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி.. நன்றி..

      நீக்கு
  3. ஆஹா ! கவிதை சூப்பர். ஏணிமலை கதாசிரியர் இதைப் படித்தால், எழுதும் கதையை மாற்றுவாரோ அல்லது ஏற்றுவாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்திரச் செல்வர் திரு.கௌதம். தங்களை அன்புடன் வரவேற்கிறேன்..

      தாங்கள் சொல்வதைப் பார்த்தால் கதாசிரியர் குழம்பிப் போயிருப்பார் என்று தோன்றுகின்றது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கதையைக் க(வி)தையாக்கி வரப்போகும் 4 மற்றும் 5 தொடர்களையும் ஒரு சேர கொடுத்திருப்பது வியப்பு. (ஆசிரி)யார் என்பது புரிகிறது. கவிதை பாஞ்சாலி சபதம் போன்று உள்ளது. மிக்க நன்று.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு. JK ஐயா அவர்களுக்கு நல்வரவு..

      நான் இதனை விளையாட்டாகத் தான் எழுதினேன்.. மற்றபடி கதாசிரியர் புன்னகைத்தபடி மறைவாக இருக்கின்றார்..

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மிக அழகு.  மொத்த கதையையும் கவிதையாக்கி விட்டீர்கள்.  5 வாரத் தொடர்கதை ஒரே நாளில் சுருங்கி கவிதையாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நல்வரவு..

      சகலகலா வல்லவராகிய தாங்கள் தான் ஏணிமலைக் கதாசிரியர் என்று எல்லாரும் யூகித்திருக்கின்றனர்..

      நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  6. ஆஹா! ஏணிமலை ஐந்து பகுதிகளும் இங்கே கவிதை வடிவிலே! மிக அருமை. இதை வைத்து நீங்கள் புனையப் போகும் அடுத்த கதைக்கும் காத்திருக்கேன். நல்ல கவிதை. நினைத்ததும் பொங்கும் விதமும் அருமை. எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா அவர்களுக்கு நல்வரவு..

      ஏதோ மனதில் தோன்றியது.. எழுதினேன்... ஏணிமலைக் கதை எப்படிப் போகுமோ தெரியவில்லை...

      உங்களைப் போல் நானும் ஆவலாக இருக்கிறேன்..

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை அவர்களுக்கு நல்வரவு...

      தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    நாம் எல்லோரும் விரும்பி படித்து வரும் ஏணிமலை கதையை கவிதையாய் வடிவமைத்து அற்புதமாக இயற்றியுள்ளீர்கள். கவிதையாலேயே கதையின் ஒரு முடிவை தெரிவித்த விதம் அருமை. நிஜமான அந்த முடிவு எப்படி இருக்கிறதோ என்றறியும் ஆவலும் கவிதையை கண்டதும் அதிகரிக்கிறது. உங்களின் கவிதை புனையும் திறமை வியக்க வைக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுக்கள் என்று மட்டும் சொன்னால் போதாது. உங்களின் அற்புதமான திறனுக்கு என் பணிவான வணக்கங்களும் . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    // எல்லாரும் விரும்பிப் படித்து வரும்.. //

    என்னவோ என் மனதிற்கு இப்படித் தோன்றியது.. இப்போது எனக்கும் சந்தேகம் - ஏணிமலையின்
    கதையை ஆசிரியர் எப்படி நினைத்து எழுதி வைத்திருக்கின்றாரோ.. என்று..

    கவிதையை ரசித்து தாங்கள் எழுதியுள்ள கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  10. ஆஹா அற்புதம்! மூன்று வாரங்கள் நடந்ததை ஒரே கவிதையில் தந்து விட்டீர்கள். இதோடு நிறுத்தி விட வேண்டாம். முழு கதையையும் தந்து விடுங்கள்.
    அந்த கதை உங்களை கவிதை புனைய தூண்டியிருக்கிறது என்பது கதாசிரியரின் திறமையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. ஏணிமலை இப்படிப் போகலாம் என்னும் எனது கற்பனையே இக்கவிதை..

      ஏணிமலைக் கதாசிரியர் வாழ்க.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. ஏணிமலை என்ற தலைப்பைப் பார்த்ததும் எங்கள் ப்ளாகில் வரும் கதையை நீங்கள் தான் எழுதுகிறீர்கள் போலும் என்றும் இங்கும் பகிர்வதாக நினைத்தேன்.

    கதையை உங்களின் அழகான தமிழில் அற்புதமாகப் படைத்துவிட்டீர்கள்! கவிதை எழுதும் திறனும், எழுத்தும் உங்கள் வசப்பட்டிருக்கிறது. இறைவன் சித்தம்.

    பாராட்டுகள், வாழ்த்துகள் சார்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      ஏணிமலை மாதிரியெல்லாம் கதை புனைவதற்கு அசாத்தியத் திறமை வேண்டும்..

      தங்களது கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. கதையை கவிதையாக்கியது அருமை.
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலமுடன்..

      நீக்கு
  13. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைகு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..