நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 24, 2021

மங்கல மார்கழி 9

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
(81)
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 9


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-


போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன்
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு
கலந்திலே னதுதன் னாலே
ஏதிலே னரங்கர்க்கு எல்லே
என்செய்வான் தோன்றி னேனே.. 897
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம் - திரு ஆரூர்


இறைவன்
ஸ்ரீ வன்மீக நாதர்
தியாகேசப் பெருமான்


அம்பிகை
ஸ்ரீ நீலோத்பலாம்பிகை
ஸ்ரீ கமலாம்பிகை
தீர்த்தம் - கமலாலயம்
தலவிருட்சம் - பாதிரி

இறைவன் புற்றுருவாக
எழுந்தருளியுள்ளார்..

பஞ்சபூதத் தலங்களுள்
மண்ணின் பகுப்பு..

சப்த விடங்கத் தலங்களுள்
முதலாவதான திருத்தலம்...

இங்கு பிறப்பதற்குப் பெருந்தவம் செய்திருக்கவேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு..

எண்ணிறந்த அற்புதங்கள் நிகழ்ந்த திருத்தலம்..
அருளாளர் பலர் வாழ்ந்த தலம்..

கோயில் ஐந்து வேலி
குளம் ஐந்து வேலி
எனும் பெருமை உடையது..
*

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிகை  ஏந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர் கோயிலாக் கொண்ட நாளே..(6/34)
-: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் :-
*
திருவாசகத் தெள்ளமுதம் :-

திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் எண் - 9


விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டார்
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே...
*
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 17 - 18


செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 

அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

6 கருத்துகள்:

  1. தரிசனம் நலமே... வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் அருமை. பாடல்களை பாடி பணிந்து பரந்தாமனையும், திருவாரூர் பார்வதி, பரமேஸ்வரரையும், பக்தியுடன் நமஸ்கரித்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. நமசியவாய என்று சொல்வோமே நன்மைகள் யாவும் வெல்வோமே...
    நாராயணா என்று சொல்வோமே நால்வகை செல்வமும் பெறுவோமே 

    பதிலளிநீக்கு
  4. யோகத்தில் இருக்கும் கமலாம்பிகையின் அழகு கண்களையும், மனதையும் கவர்கிறது.

    பதிலளிநீக்கு
  5. மாமாயன் !
    மாதவன் !!
    வைகுந்தன் !!! ...திருவடிகளே சரணம் ..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..