நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 18, 2021

மங்கல மார்கழி 3

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.. (19)

-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் - 3


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்..
*

-: ஆழ்வார் திருமொழி :-


இனிதிரைத் திவலை மோத
எறியும்தண் பரவை மீதே
தனிகிடந் தரசு செய்யும்
தாமரைக் கண்ணன் எம்மான்
கனியிருந் தனைய செவ்வாய்க்
கண்ணணைக் கண்ட கண்கள்
பனியரும் புதிரு மாலோ
என்செய்கேன் பாவி யேனே.. 889
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-
*

-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம்
புள்ளிருக்கு வேளூர்
( வைத்தீஸ்வரன் கோயில்)



இறைவன்
ஸ்ரீ வைத்தீஸ்வரன்
அம்பிகை
ஸ்ரீ தையல்நாயகி

தீர்த்தம் - சித்தாமிர்த தீர்த்தம்
தல விருட்சம் - வேம்பு.

நவக்ரகங்களுள்
அங்காரகனாகிய
செவ்வாய் வழிபட்டு
நலம் பெற்ற திருத்தலம்.
*

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.. (6/54)
 -: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் :-
*
திருவாசகத் தெள்ளமுதம்
திருப்பள்ளியெழுச்சி - 3


கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்
எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே..
*
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 5 - 6


மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்..

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்..
-: ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் :-
***
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஒம்
ஃஃஃ

7 கருத்துகள்:

  1. மார்கழி மூன்றாம் நாள் பாடல்கள் மற்றும் தரிசனம் நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மார்கழி மூன்றாம் நாள் பாசுரங்களை படித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. மார்கழி பாசுரங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மார்கழி மூன்றாம் நாள் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களைப் பாடி மகிழ்ந்தேன். தெய்வீக படங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளது. அனைவரும் வளமுடன் நலமாக வாழ இறைவன் அருள்வான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. பாடல்களை படித்து தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. ஓம் நமோ நாராயணா! ஓம் நமோ சிவாய

    பதிலளிநீக்கு
  7. ஓங்கி உலகளந்த உத்தமன் திருவடிகளே சரணம் ...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..