நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 16, 2021

மங்கல மார்கழி 1

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
" மாதங்களில் நான்
மார்கழி.. " - என்றான்
மாதவன்..

அத்தகைய
மார்கழியின் முதல் நாள்
இன்று..

மங்கல மரபுகளின்
வழி நின்று
நல்லறம் பேணுவோம்..


குறளமுதம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு..(001)
*

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றுந் தா..
 -: ஔவையார் :-

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை..


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.. 1

ஆழ்வார் திருமொழி


பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே. என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே.. (873)
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-

-: சிவ தரிசனம் :-

தேவாரத் தேனமுதம்


திருத்தலம்
திருக்கோயில் - தில்லைத் திருச்சிற்றம்பலம்

இறைவன்
திருமூலநாதர்
ஆனந்த நடராஜ மூர்த்தி

அம்பிகை
ஏலவார்குழலி
சிவகாமசுந்தரி

தீர்த்தம் - சிவகங்கை
தலவிருட்சம் - தில்லை, வன்னி

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. (6/1)
-: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் :-

திருவாசகத் தெள்ளமுதம்


திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 1

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே..
*
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 1 - 2

சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்..

பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்..
-: ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் :-
-:-
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. இப்போதுதான் கடந்த மாதிரி இருந்தது. மறுபடியும் ஒரு மார்கழி.  வாழ்த்துகள்.  மாலவன் துணை நமக்கு கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
  2. அமுதங்களை பருகினேன்... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. அருமையான பக்தி ரசமுடன் கூடிய பாடல்களும்,அழகான படங்களுமாக மார்கழி மாதத்தின் முதல் நாள் புலர்ந்து விட்டது. பக்தி ரசம் சொட்டும் பாடல்களை பாடி மகிழ்ந்தேன். ஸ்ரீமன்நாராயணன் அனைவருக்கும் நன்மைகளை அள்ளி வழங்குமாறு மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    ஹரி ஓம் நமோ நாராயணாய நமஃ.
    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்.

    பகிர்வினுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. மார்கழி 1 இனிமையான தொடக்கம்! அமுதமாக!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. மார்கழி...இனிய ஆரம்பம்...தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. பக்தி ரசத்துடன் இனிய அமுதங்களின் ஆரம்பம். ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. மிக சிறப்பு ...

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..