நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 03, 2021

உயிர்வளி சூழ்கவே

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
உணவே மருந்து எனும்
அமுதமொழி நம்முடையது...

நம்மைச் சூழ்ந்திருக்கும்
இயற்கையே நம்மைப்
பாதுகாக்க வல்லது..

இயற்கையை நாம் பாதுகாத்தால்
இயற்கை நம்மைப் பாதுகாக்கும்..

இன்றைய பதிவில்
தினமலர் நாளிதழில்
வெளியிடப்பட்டுள்ள
விழிப்புணர்வுக் கட்டுரை..


கட்டுரையை வழங்கியுள்ள
தினமலர் நாளிதழுக்கும்
மருத்துவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றி..


-: கட்டுரையாக்கம் :-
டாக்டர் ஆர்.மைதிலி,
ஆயுர்வேத மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர், சென்னை
***

நம்  உடலில் ஆக்சிஜன் அளவை அதிகமாக ஈர்த்துக் கொள்ளக் கூடிய உணவுகளை, 'ஆக்சிஜன் ரேடிகல் அப்சார்ப் கெப்பாசிட்டி' எனப்படும், ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பை வைத்து கண்டுபிடிப்பர். இதில், குறிப்பிட்ட உணவை பரிசோதனை கூடத்தில் வைத்து, ஆராய்ச்சி செய்யப்படும். ஓ.ஆர்.ஏ.சி., அதிகம் உள்ள உணவை, நாம் அன்றாடம் சாப்பிடும் போது, நம் உடலில் ஆக்சிஜன் அளவை சீராக நிர்வகிக்க முடியும்; ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும்.


ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மை அதிகம் உள்ள மசாலா பொருள் கிராம்பு. 100 கிராம் கிராம்பை பரிசோதித்ததில், அதில் மூன்று லட்சம் ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பு உள்ளது தெரிந்தது. இதை மசாலா குழம்பு, தக்காளி சாதம், பிரியாணி என்று அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு கிராம்பாவது நம் உடலுக்கு அவசியம்.



அடுத்து, மஞ்சளில் ஒரு லட்சத்து 2,700 ஓ.ஆர்.ஏ.சி., உள்ளது. மஞ்சளை தேனீரில் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள், மிளகு சேர்த்து பால் குடிக்கலாம். சமையல் அனைத்திலும் தவறாமல் மஞ்சள் சேர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை தரும்; ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்.

அடுத்து, பட்டை. இதை பொடி செய்து டீயில் சேர்த்துக் கொள்ளலாம். சமையலில் எதில் எல்லாம் சேர்க்க முடியுமோ, அவற்றில் எல்லாம் சேர்க்கலாம். கறிவேப்பிலை, சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு இவற்றிலும் ஆக்சிஜனை ஈர்க்கும் தன்மை அதிகம். கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று சாப்பிட பழக வேண்டும்.


துளசிச் செடியை சுற்றி வரும் போது தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்.  பத்து இலைகளைப் பறித்து, சுத்தமாக கழுவிய பின், மென்று சாப்பிடலாம். நம் முன்னோர்கள் செய்வதில் நிச்சயம் அர்த்தம் இருக்கும். துளசிக்கு இதனால் தான் அத்தனை முக்கியத்துவம் கொடுத்தனர்.


இது தவிர, எலுமிச்சையை சாறு பிழிந்து குடிக்காமல், முழு பழத்தை வெட்டி, அப்படியே நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும். பட்டாணி, பீன்ஸ், சோயா, கொண்டைக் கடலை, காராமணி ஆகியவற்றில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும், 'லெகாமா குளோபின்' என்ற கூட்டு வேதிப்பொருள் உள்ளது.

இவை புரதம், இரும்பு சத்து அதிகம் உள்ளவை. இரும்பு சத்து குறைபாடு இருந்தால், ஆக்சிஜன் குறைய வாய்ப்பு உள்ளது. ரத்தத்தில் உள்ள இரும்பும், புரதமும் சேர்ந்த ஹீமோகுளோபின், ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக் கூடியது.
பசலை கீரை, முருங்கை கீரை, தர்பூசணி, அவித்த வேர்க்கடலை, அன்னாசி உட்பட, இந்த சீசனில் கிடைக்கும் இரும்பு சத்து அதிகம் உள்ளவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும்.
***


கொரானா எனும் தீநுண்மியால்
ஏற்பட்டிருக்கும்
இந்த கொடுமையான காலகட்டம்
விரைவில் தொலைவதற்கு
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக் கொள்வோம்

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..

காக்க காக்க கனகவேல் காக்க..
நோக்க நோக்க நொடியினில் நோக்க..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்..
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. இந்தத் தகவலை நானும் எடுத்து என் சில நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்பினேன்.  பயனுள்ள தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      நம் வாழ்வின் எல்லாச் சடங்குகளிலும் மஞ்சளை முன் வைத்த முன்னோர்களை என்னென்று போற்றுவது?..

      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  2. நல்ல பயனுள்ள தகவல்.
    நல்ல காலம் விரைவில் வர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.
    படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சளையும் துளசியையும் நம் வாழ்வுடன் ஒருங்கிணைத்து வைத்த முன்னவர்களைப் போற்றுவோம்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நல்ல பயனுள்ள தகவல்கள் துரை அண்ணா.

    வீட்டில் இவை அனைத்தின் பயன்பாடும் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..

      நம் வாழ்வில் மஞ்சளும் துளசியும் இரண்டறக் கலந்தவை தானே!....

      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இறையே துணை
    தீநுண்மி விலகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. எல்லாமும் சேர்க்கிறோம். மஞ்சள் பொடி சேர்க்காமல் நெல்லிச்சாறு குடிப்பதில்லை. சூப் பண்ணினாலும் மஞ்சள் பொடி சேர்ப்பேன். சமையலிலும் உண்டு. அதே போல் எலுமிச்சை, இஞ்சி, துளசி, ஓமவல்லி ஆகியவற்றின் பயன்பாடும் அதிகம். கிராம்பு வாயில் போட்டு மெல்லுவோம். இல்லைனா சூப் பண்ணும்போது சேர்ப்பேன். லவங்கப்பட்டையும். நம் பாரம்பரிய சமையலில் இவை இல்லாமல் இருக்காதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரம்பரியச் சமையல்...இது ஒன்றே நமக்கு பாதுகாப்பு அரண்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  7. சிறப்பான தகவல்கள். நம் வீட்டு சமையலில் பல விஷயங்கள் இப்படி சேர்க்கப் பட்டு வந்தது. இன்றைக்கு மாடர்ன் சமையல் என பல விஷயங்களை விட்டு விட்டோம்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வெங்கட்..

    பாரம்பரியத்தை மீட்டெடுத்து நம்மை நாமே காத்துக் கொள்வோம்...

    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    நல்ல பயனுள்ள தகவல்கள். மஞ்சளும், துளசியும் மங்கலகரமானவை. எந்த விஷேடத்திற்கும் வந்து முன்னிற்பவை. பொதுவாக எங்கள் வீட்டில் சமையல் அனைத்திலும் மஞ்சள் இடம் பெறும். முன்பு துளசி மடத்தை காலையில் தினமும் சுற்றி நமஸ்கரித்து வரும் பழக்கமும் இருந்தது. துளசி இலைகளை மிளகுடன் கஷாயம் வைத்து வாரம் ஒருமுறை அருந்தினாலும் நல்லது. விரைவில் தொற்று உலகை விட்டு ஓட ஆண்டவன் அருள் புரிய வேண்டும். பயனுள்ள தகவல்களை சேர்த்து தந்திருப்பதற்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. தங்களது வருகை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது...

    எல்லாம் ஈசன் செயல் என்று மனம் ஆறுதல் கொள்ளுங்கள்..

    இறுக்கமான சூழ்நிலையிலும் தளத்திற்கு வந்து கருத்துரைத்ததற்கு நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..