நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 14, 2019

களக்கோடிக் காவலன்

இன்று சித்திரை முதல் நாள்..
அனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...


அன்புக்குரிய ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் தமது தளத்தில் அவர்களது குலதெய்வமாகிய ஸ்ரீ களக்கோடி சாஸ்தாவைப் பற்றி எழுதி 
களக்கோடி தர்மசாஸ்தாவின் திருக்கோலத்தையும் வெளியிட்டிருந்தார்கள்..

அந்த ஸ்வாமியின் அழகு கண்டு நெஞ்சில் எழுந்ததே இப்பாடல்..
இதை அப்போதே அவர்களது தளத்தில் பதிவு செய்திருந்தேன்..

ஆயினும்
அந்தப்பாடல் ஒன்பது கண்ணிகளை மட்டுமே உடையதாக இருந்தது...

பதினெட்டுத் திருப்படிகளை உடையவனுக்கு ஆகட்டும்!..
- என, மேலும் ஒன்பது கண்ணிகளுடன்

அந்தப் பாடல் இன்று நமது தளத்தில்....

புத்தாண்டாகிய இப்புண்ணிய நாளில்
எல்லாருக்கும் எல்லா நலன்களையும்
ஐயன் தந்தருள்வாராக...
***
ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீ புஷ்கலா தேவியருடன்
ஸ்ரீ களக்கோடி தர்ம சாஸ்தா..
பணிக்கோடி இரைக்கோடி பரிதவிக்கும் இவ்வுலகில்
துணைதேடி ஓடிவந்தோம் ஸ்வாமியே...1

உனைத்தேடி உனைத்தேடி இவ்வுயிரும் தவிக்கையிலே
எனைத்தேடி எழுந்துவந்த ஸ்வாமியே!...2

களக்கோடி நாயகனே.. கவலையெல்லாம் தீர்ப்பவனே..
புகழ்க்கோடி பேர் சொல்லிப் போற்றினேன்....3

வளங்கோடி தந்தருளி நலங்கோடி காத்தருள
பூக்கோடி தூவி தீபம் ஏற்றினேன்!...4

நீரோடி நிலம் செழிக்க காற்றோடி கதிர் கொழிக்க
நாகோடி தமிழ் உரைக்க வேணுமே...5

உனைத்தேடி வருவோர்க்கு தருங்கோடி நலமெல்லாம்
ஊர்கோடி கண்டு உணர வேணுமே...6

வரங்கோடி தந்தருளும் வடிவுடையாள் திருமகனே
களக்கோடி கண்மணியே சரணமே!...7

மனைதேடி வருபவனே.. மனந்தேடி அமர்பவனே..
களக்கோடி காவலனே சரணமே...8  

கடைக்கோடி மனிதருக்கும் கதிகாட்டும் கோமகனே
களக்கோடி காவலனே சரணமே...9

விடைதேடி நிற்போர்க்கு வழிகாட்டும் நாயகனே
களக்கோடி கண்மணியே சரணமே...10

திருக்கோடிக் காஉறையும் சிவநாதன் திருமகனே
களக்கோடி தானமர்ந்த தூயனே...11

வினைகோடி என்றாலும் பகைகோடி என்றாலும்
விரைந்தோடி நலஞ்சேர்க்கும் நாதனே...12

களக்கோடி என்னுங்கால் களிறேறி வரவேணும்
கண்கோடி காணும்படி ஸ்வாமியே...13

விழிகோடி தமிழ்கொடுக்க வில்லேந்தி வரவேணும்
பண்கோடி பாடும்படி ஸ்வாமியே...14

பொன்கோடி குவிந்தாலும் புகழ்கோடி விரிந்தாலும்
களக்கோடிக் காவலனே காரணன்..15

பூச்சூடிப் பொற்கலையும் பூங்கலையும் அருகிருக்க
கதிர்கோடி எனக்காட்டும் பூரணன்...16

வழிந்தோடி விழிநீரும் திருவடியில் மலராகும்
களக்கோடி கண்மணியே சரணமே...17

நெகிழ்ந்தோடி நெஞ்சகத்தில் நின்பெயரே நின்றாடும்
களக்கோடி காவலனே சரணமே...18
***

மீண்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் நல்வரவு...

      நீக்கு
  2. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

      நீக்கு
  3. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பு வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வணக்கம் வாழ்க வளமுடன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
    களக்கோடி சாஸ்தா கவிதையை என் தளத்தில் பகிர எண்ணி இருந்தேன்.
    மேலும் ஒன்பது கண்ணிகள் வந்த பின் பகிர வேண்டும் என்று சாஸ்தா விருப்பம் போலும் !.

    விழிநீர் வழிந்தோட வாழ்த்துகிறேன்.
    அருமையான கவிதை பாராட்டுக்களை சார் சொல்ல சொன்னார்கள்.
    உங்கள் தளத்தில் எடுக்க முடியாது, மேலும் ஒன்பது கண்ணிகளை எனக்கு அனுப்பி அருள வேண்டுகிறேன்.



    பதிலளிநீக்கு
  6. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

    ஐயனின் அடியனாக இருந்தாலும்
    அவனது புகழைப் பலவிதமாகப் பாடியிருந்தாலும்

    களக்கோடிக் காவலன் - தங்கள் வழியாக என்னையும் ஆண்டு கொண்டான்...

    நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்....

    இப்போது வேலையில் இருக்கிறேன்.. மாலை அறைக்குத் திரும்பியதும் இணைய வேகத்தைப் பொறுத்து தங்களது தளத்துக்கு அனுப்பி வைக்கிறேன்...

    தாங்கள் அங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம்....

    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    அன்பின் நல்வாழ்த்துகளுடன்...

    பதிலளிநீக்கு
  7. பாடலை ரசித்தேன். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. புத்தாண்டு நன்னாளில் அழகான விநாயகர் மற்றும் களக்கோடி சாஸ்தாவின் தரிசனமும், பாடலும் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. உண்மையான பக்தி எல்லோரையும் இப்படிச் சென்று அடைகிறது.
    அன்பு கோமதிக்கும் அருமையான கவிதை வரிகளால்
    அனைவரையும் களக்கோடி சாஸ்தா வந்தடைச் செய்த உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு துரை செல்வராஜு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அம்மா..
      தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..