நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 19, 2018

கரை கடந்த கஜா

ஒருவழியாக சூறாவளி கரையைக் கடந்து விட்டது...

ஆனாலும்,
அந்த சூறாவளி விளைவித்துச் சென்ற
சேதங்கள் சொல்லுக்கு அடங்காதது...


புயல் போன பாதையில் நின்று
லட்சக் கணக்கான செல்ஃபிகள்...

பாதிப்பு குறித்து ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள்...
சமூக வலைத் தளங்கள் எல்லாம் அதிர்கின்றன...

தமிழகத்தின் ஏனைய மாவட்ட மக்கள் அனைவரும் -
அங்கே இருக்குறவங்களும் நம்ம ஆளுங்க தானே!..
- என்று, உதவிக் கரம் நீட்டியதால்

தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்தும்
நிவாரணப் பொருட்கள் அணி வகுத்திருக்கின்றன...

நடிக நடிகையர்கள் உட்பட - சும்மா கிடந்தவர்கள் எல்லாரும்
ஆளுக்கொரு சாயத் துணியை - கொடி என்று பிடித்தபடி
தத்தக்கா பித்தக்கா!... - என்று, செந்தமிழில் பேட்டி...

புல்டோஸரை வைத்து தண்ணீரை எல்லாம் அள்ளியாயிற்று..

சேதம் விளைத்த புயலைப் பிடித்து இழுத்து வந்து
ஒரு தடிக் கம்பால் நாலு சாத்து சாத்தியாயிற்று...


வெகு சாமார்த்தியத்துடன் புயலைக் கையாண்டதாக
உயர்நிலையில் உள்ளவர்கள் எல்லாம் அவர்களுக்கு
அவர்களே விழா நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்...

மக்கள் எல்லாரும் புன்னகைத்தபடி
வேலை வெட்டிக்குச் சென்று விட்டுத் திரும்பினர்..

உலகில் முதன் முறையாக
டண்டணக்கா தொலைக்காட்சியில்
மாபெரும் கலைத் திருவிழா....

நாயகன்: அவன் எங்கே தொட்டான்?..
கோரஸ்: தொட்டான்.. தொட்டான்!..


நாயகன்: இவன் எங்கே தொட்டான்?..
கோரஸ்: தொட்டான்.. தொட்டான்!..

நாயகி: நீ எங்கே எங்கே தொட்டியோ
               அங்கே அங்கே அவனும் தொட்டான்!...
கோரஸ்: டான்.. டான்.. டான்!....

என்ற - வரலாற்றுச் சிறப்பு மிக்க பாடல்
அரைகுறை ஆடையுடன் அரங்கேறிக் கொண்டிருக்க
ஊரெங்கும் கோலாகலம்.. கொண்டாட்டம்!...


வறுத்த முந்திரிப் பருப்பு மசாலா டீயுடன்
மாலைப் பொழுது இனிதே கழிந்தது!..

கஜா - நாசாவின் செயற்கைக் கோள் படம் 
என்னங்க இது!...
காஜா புயல்... ன்னுட்டு என்னென்னவோ சொல்றீங்க...
அப்போ புயல் காத்து எல்லாம் சும்மா கதை தானா!?..

காஜா இல்லீங்க!.. கஜா!... 
டெல்டாவை படுமோசமா புரட்டிப் போட்டுடுச்சு!...
தொண்ணூறு சதவீதம் சேதம்!...

இவ்வளவு நடந்தும் உங்களுக்கு 
ஒன்னும் விவரமாத் தெரியலை...

கஜா ரியலி டெரிபிள்... நா பாத்து அழுதுச்சு...
டோண்ட் கிரைய் பேபி....ன்னு மம்மி சொன்னுச்சு!..

அப்பிடின்னு
ஏதாவது ஜால்ரா தொலைக்காட்சி வழியா
யாராவது திரைத் தாரகை சொல்லியிருந்தா
உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும்....

தஞ்சை பேருந்து நிலையம் 


ராஜராஜ சோழன் பூங்கா வாசல்



நாகப்பட்டினம் புகை வண்டி நிலையம்  







என்ன செய்யிறது... 
ரொmபவும் பாதிக்கப்பட்டவங்க விவசாயிகள் ஆயிற்றே!...
நாலு நாளா பல இடங்கள்...ல மின்சாரம் இல்லை...

ஒட்டு மொத்த தஞ்சாவூர் மாவட்டமும் 
பழைய நிலைக்குத் திரும்பறதுக்கு
பத்து வருசம் ஆகும்..ன்னு சொல்றாங்க...

கடற்கரைகள் கூட சீக்கிரமா இயல்பு நிலைக்கு வந்திடும்...
வயல்வெளிகள் கூட அடுத்த வருசத்து சரியாயிடும்...
தென்னந்தோப்புகளும் மாந்தோப்புகளும் தழைச்சு வர்றதுக்கு
இன்னும் எத்தனை வருசமாகுமோ!...



பட்டுக்கோட்டையை அடுத்துள்ள
தாமரங்கோட்டை எனும் கிராமத்தின் சோகமான சூழல்..
இதோ - இந்தக் காணொளியில்!..


நிவாரணப் பணிகளின் வேகம் தாள மாட்டாமல்
ஆங்காங்கே மக்கள் தாங்களே களத்தில் இறங்கியுள்ளனர்...

கீழே உள்ள காணொளியில்
தங்களுக்கு விவரம் புரியும்!...


தகவல் தொடர்புகள் - சமூக ஊடகங்கள்
இந்த அளவிற்கு இல்லாத கடந்த காலங்களில் -
இதை விடவும் மோசமான சூழ்நிலைகளை மக்கள் சந்தித்ததுண்டு...

அதிலிருந்தெல்லாம் மீண்டு வந்தவர்கள் நம் மக்கள்...

அதுபோலவே இப்போதும்
மீண்டு வருவார்கள்..

மீண்டும் வருவார்கள்!...
தெய்வம் துணை நிற்கும்..

வாழ்க நலம்..
ஃஃஃ

20 கருத்துகள்:

  1. குட்மார்னிங். சென்னையில் வசிப்பவர்கள் மட்டும்தான் மனிதர்களா? அங்கு ஒரு துன்பம் என்றால் மட்டும்தான் ஊடகங்களும், நிவாரணங்களை கிடைக்குமா என்றெல்லாம் கேட்டு வாட்ஸாப் தகவல்கள் வேதனையுடன் அணிவகுத்துக்கொண்டே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. முகநூலில் தஞ்சை மருத்துவர் ஒருவர் இருக்கிறார். மயிலப்பன் என்று பெயர். அவரே குமுறி இருக்கிறார். கேரளா புயலுக்கு இலட்சம் இலட்சமாகக் காட்டிக்கொடுத்த நம் நடிகை நடிகையர் ஒருவரும் இன்னும் இதை சேதாரங்களின் மதிப்பை உணரக்காணோம்.

    பதிலளிநீக்கு
  3. பதிவை எழுதியவர் நண்பர்: Mayilan Chinnappan

    ரொம்ப கோர்வையாகவெல்லாம் எழுதவரவில்லை.

    என் சொந்த கிராமம் சூரப்பள்ளத்தில் (பட்டுக்கோட்டை தாலுக்கா) விளை நிலங்கள் சுடுகாடு போல ஆகியிருக்கின்றன. மாத அருப்பு இருபதாயிரத்திற்கு தென்னையை நம்பி இருந்த பல சொந்தங்கள் அதிர்ச்சியில் தேங்கிப்போயிருக்கிறார்கள். கறவை மாடுகள் செத்துப்போயிருக்கின்றன. குடி நீர் இணைப்பு முற்றிலுமாக துண்டாகியிருக்கிறது. அரசு சாலைகளின் ஓரத்திலிருக்கும் வெள்ளை கோட்டு எல்லையை தாண்டி விழுந்த மரங்களை அப்புறப்படுத்தலில் மட்டுமே கவனம் கொள்கிறது. செத்த மரங்களை போக்குவரத்து இடையூறு என்ற அளவில் மட்டும் பார்க்கும் தொணியில் பணிகள் நடக்கின்றன என்று அறிகிறேன். குடி நீரையும் மின்சாரத்தையும் கொடுத்துவிட்டு அரசு ஒதுங்கிவிட்டால் இதைவிட மிக பெரிய துரோகம் எதுவுமே இருக்கமுடியாது. இன்றைய நிலைப்படி குடி நீரையும் ஊரில் டாங்கர் வைத்திருக்கின்ற அண்ணன் ஒருவர் சொந்த செலவில் எல்லோருக்கும் கொண்டுவந்திருக்கிறார்.

    விழுந்த ஒவ்வொரு தென்னை மரமும் பல குடும்பங்களின் ஒரு வேளை சோறு. போர்க்கால அடிப்படையில் ரொட்டிகளையும், குடி நீரையும், மின்சாரத்தையும் கொடுத்துவிட்டு அரசு கிளம்பிய பின்னர் பட்டுக்கோட்டை, அதிராமப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவுர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சார்ந்த கிராமங்களில் இனி வாரம் ஒரு விவசாய பட்டினி தற்கொலை நடக்கும். மீளவே முடியாத பெருந்துயரத்தில் தத்தளிக்கும் எங்கள் ஊர்களைப் பற்றி, நிழலுக்கு நின்ற மரங்களை வர்தாவில் பறிகொடுத்தவர்களுக்கு புரியவே புரியாது.

    நான் உங்களிடம் இங்கு வந்து துணி, உணவு, பால், மருந்துகள் கேட்கவில்லை. அதை நீந்தி கடக்க எங்களுக்கு தெரியும். தோள்கொடுக்க நல்லுள்ளங்கள் இருக்கிறார்கள். நான் எனக்கு ஃபேஸ்புக்கில் சமுதாய பொறுப்புள்ள நண்பர்களை வைத்திருக்கிறேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களிடம் பிச்சை கேட்கிறேன். உங்களுக்கு சாத்தியமான களங்களில் எங்கள் ஊர்களைப் பற்றி கொஞ்சம் எழுதுங்கள். நீங்கள் அச்சு அல்லது காட்சி ஊடகத்தில் இருப்பவரெனில் அருள்கூர்ந்து உங்கள் கவனத்தை எங்கள் பக்கம் திருப்புங்கள். முதல்வரா எதிர்கட்சி தலைவரா என்று எங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள். உங்களால் முடிந்தால் குறைந்தது பத்தாண்டு முதலீடான முறிந்து போன எங்கள் ஒவ்வொரு தென்னைக்கும் எங்களுக்கான நிவாரணம் வாங்கிக்கொடுக்க எங்களுக்காக குரல் கொடுங்கள். ஆம். ஒவ்வொரு தென்னைக்கும். செத்துப்போன மாடுகளுக்கும், சேதமான வீடுகளுக்கும் நிவாரணம் கோர எங்களுடன் நில்லுங்கள். உங்களால் முடிந்தால் குறைந்தது ஒரு தற்கொலையையாவது தடுத்து நிறுத்த உதவி செய்யுங்கள். நீங்களும் சேர்ந்து தட்டினால்தான் கதவுகள் திறக்கப்படும். நயந்தாராகளுக்கு அடுத்த வருடமும் பிறந்த நாள் வரும். கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் தகவலில் மருத்துவர் பெயரைத் தவறாகச் சொல்லி இருக்கிறேன். இதோ... அந்தப் பதிவையே எடுத்துக் போட்டிருக்கிறேன்.

      நீக்கு
    2. வேதனை ஒரு வரி...நிழலுக்கு நின்ற மரங்களை வார்தாவில் பறிகொடுத்தவர்களுக்குப் புரியவே புரியாது//

      சத்தியமான வார்த்தைகள். கிராமப்புறங்களில் தான் நம் ஜீவாதாரமே இருக்கிறது. இழந்த ஜீவனம் தரும் தோப்புகளை மீட்டெடுக்க எத்தனை வருடங்கள் ஆகும்..அரசு கண்டிப்பாக உதவிட வேண்டும்....

      அண்ணா படங்கள் மனதை என்னவோ செய்கின்றன குறிப்பாக மரங்களின் நிலை...நாம் பிரார்த்திப்போம் முடிந்தால் உதவிடுவோம்...

      என்ன சொல்ல என்று தெரியவில்லை

      கீதா

      நீக்கு
  4. இந்தப் புயலில் அதிகம் பாதிப்புத் தென்னை, வாழை மரங்களுக்குத் தான் எனச் சொல்கின்றனர். ஒரு சில தொலைக்காட்சிகளும் தென்னை மரங்கள் அடியோடு விழுந்திருக்கும் காட்சிகளைக் காட்டின. உரிய நிவாரணம் கொடுத்தாலோ அறிவித்தாலோ மட்டும் போதாது. அது உரியவர்களுக்குச் சென்று பயன் அடையவும் வேண்டும். நம்மால் முடிந்தது இறைவனைப் பிரார்த்திப்போம். முடிந்த உதவிகளைச் செய்வோம்.

    பதிலளிநீக்கு
  5. மக்களைப்பற்றி நினைக்க ஆட்சியாளர்களுக்கு எப்பொழுதுமே நேரமில்லை.

    எல்லா மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. பொங்கல் சமயம் தேங்காய், கரும்பு, வாழை நன்கு வியபாரம் ஆகும் இந்த சமயத்தில் அனைத்தும் நாசம் ஆகி விட்டது. தென்னைமரங்களை நம்பி வாழ்பவர் தோப்புகள் அழிந்து விட்டது மீளா துயரம்.

    என் தங்கை பெண் புதுக்கோட்டையிலிருந்து புயலின் ஆரம்பதை வீட்டியோ அனுப்பினாள் அம்மாவுக்கு. அப்புறம் அவள் மின்சாரம் போய் விட்டது. வீடு மிகவும் மோசமாய் பாதிக்க பட்டு விட்டது, மாடியில் கண்ணாடி ஜன்னல் எல்லாம் உடைந்து விட்டது. திருச்சியில் உறவினர் வீட்டுக்கு போய் விட்டாள். இன்று அம்மாவீட்டுக்கு வருகிறாள் குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால்.

    நல்ல கட்டிடமே இந்த நிலை என்றால் மண் குடிசைகள், பழைய வீடுகள் எல்லாம் பயங்கர பாதிப்பு.

    நீங்கள் பகிர்ந்து இருக்கும் காணொளிகளும் நிலைமையை சொல்கிறது.
    இயல்பு நிலைக்கு திரும்பி வர நாட்கள் ஆகும்.
    அனைவருக்கும் நிவாரணம் விரைந்து கொடுத்து அவர்களை ஆறுதல் படுத்த வேண்டும்.

    பாதிக்க பட்ட அனைவரும் இறைவன் அருளால் மீண்டு வரட்டும். பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  7. தங்கை பெண் மாடியை வாடகைக்கு விட்டு இருந்தாள். மாடியில் குடியிருபவர்கள் கண்ணாடி ஜன்னல் உடைந்து மழைத்தண்ணீர் அதிவேகமாய் வீட்டுக்குள் புகுந்து விட்டதால் அவர்களுக்கு உணவு எல்லாம் கொடுத்து இருக்கிறாள் தங்கை பெண். கீழ் வீட்டிலும் தண்ணீர் தான் எல்லோரும் கட்டில் மேல், மேஜை மேல் உட்கார்ந்து இருந்தார்களாம், அக்கம் பக்கம் வீடுகளில் தண்ணீருக்கு மோட்டார் போட முடியாத நிலை மின்சாரம் இல்லாமல். இவள் வீட்டில் கிணற்றில் நிறைய நீர் இருந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவள் வீட்டு கிணற்றிலிருந்து நீர் எடுத்து சென்றார்களாம்.
    இது போல் கஷ்டமான சூழ்நிலையில் ஒருத்தருக்கு உதவி கொண்டு இருக்க வேண்டும். உதவுவார்கள்.

    பதிலளிநீக்கு
  8. தென்னை வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தது தான் உச்சக்கட்ட துயரம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழை பொதுவாக சட் என்று தலை சாய்த்துவிடும். நெல் பயிரிட்டவர்களும் பாவப்பட்டவர்கள்தாம். நெற்கதிர்கள் ரெடியாக அறுவடைக்கு இருக்கும். அந்த சமயத்தில் மழை போன்றவை வந்தால் அவர்களுக்கு முழு உழைப்பும் வீணாகிவிடும். நனைந்தால் விதை மணிகள் முளைத்துவிடும்.

      நீக்கு
  9. கஜாவின் கோரத்தாண்டவம், இந்தப் பதிவில் உள்ள படங்களைப் பார்க்கையில் ஒருவாறு யூகிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் இடுகையில் உள்ள படங்கள், புயலின் கோரத்தாண்டவத்தை எடுத்துச் சொல்கிறது. பயங்கரமாக இருக்கிறது.

    தென்னையை இழந்தவர்கள்தான் மிகவும் பாவப்பட்டவர்கள். குடிசைகளையும் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைகளும்தான்..

    பதிலளிநீக்கு
  11. கஜா கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறதுதான்...எப்போதொ வரும் புயலின் பாதிப்பு இப்ப்டி என்றால் தினமும் இப்படியான கிராமமக்களைக் கண்டு கொள்ளாமல் ஓட்டு என்ர பெயரில் சுரண்டித் தின்னு கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை என்ன சொல்வது?

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கேரளத்திலும் கோட்டயம் பகுதிகளில் மழை மிக மிக அதிகமாக இருந்தது. ஒரே நாளில் கொட்டித் தீர்த்துவிட்டது அதுவும் ஒரு குறிப்பிட்ட கோழா என்ற கிராமத்தில். மக்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்க அரசும் சொல்லியிருந்தது. தமிழ்நாடளவு பாதிப்பு இல்லை இச்சமயம் ஆனால் அதற்கு சேர்த்துவைத்து அப்போது அள்ளிச் சென்றுவிட்டதே...இயற்கையின் சீற்றத்தை நாம் என்ன சொல்ல முடியும். ஆனால் பாதிப்படைந்த மக்கள் பாவம். அவர்களுக்காக நாம் பிரார்த்திப்போம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. கஜா கரையைக் கடந்து விட்டது
    ஆனால் பல்லாயிரக் கணக்காணக் குடும்பங்கள் இனி வாழ்வை நகர்த்துவதுதான் சிரமம்

    பதிலளிநீக்கு
  14. கனக்கும் நிமிடங்கள் ...

    பதிலளிநீக்கு
  15. இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகலாம்.

    பதிலளிநீக்கு
  16. ஒரு தென்னை மரம்வளர்ந்து பலன் கொடுக்க ஆண்டுகள்பல ஆகின்றன வாழ்வாடாரமாய் விளங்கும் தென்னன் தோப்புகளே விழுந்துவிட்டால் பாவம் மக்கள் என்னசெய்ய முடியும் நம்மால் எம்பதைஸ் மட்டும்ட்க்ஹான் செய்ய முடிகிறது

    பதிலளிநீக்கு
  17. புயலின் கோரத் தாண்டவம் மனதை கணக்கச் செய்கிறது. தென்னந்தோப்புகளை மீண்டும் கொண்டு வருவதற்கு நிறைய வருடங்கள் ஆகும். குறைவான மழையோ, அதிக மழையோ அதிகம் பாதிக்கபடுவது விவசாயிதான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..