நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 15, 2018

கந்தன் கருணை 8

நேற்றைய பதிவின் கருத்துரையில்
மதிப்புக்குரிய கீதா சாம்பசிவம் அவர்கள்
தெய்வானை திருமணக் காட்சிகளைக்
காண விழைவதாகச் சொல்லியிருந்தார்கள்...

அவர்களுடைய ஆவலினை
ஐயன் முருகப் பெருமான் நிறைவேற்றித் தந்துள்ளான்...

இன்று காலையில் கிடைத்த
தெய்வயானை திருமணத் திருக்காட்சிகள்...

ஸ்ரீ தேவகுஞ்சரியுடன் - திருமுருகன்..
திருப்பரங்குன்றம்..
 
சந்ததம் பந்தத் - தொடராலே
சஞ்சலந் துஞ்சித் - திரியாதே
கந்தனென் றென்றுற் - றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் - றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் - புணர்வோனே
சங்கரன் பங்கிற் - சிவைபாலா
செந்திலங் கண்டிக் - கதிர்வேலா
தென்பரங் குன்றிற் - பெருமாளே...
-: அருணகிரியார் :-  
***

இப்போதெல்லாம்
திருக்கோயில் நிகழ்வுகளைக் காணொளியாக வழங்குகின்றார்கள்...

அது ஒரு விதத்தில் நல்லதென்றாலும் -
அதனை தரவிறக்கம் செய்து மீண்டும் வலையேற்றம் செய்வது
இணைய வேகம் சரியில்லாத நேரத்தில் மிகவும் கடினம்...

என்றாலும் -
நல்லதொரு பணியினைச் செய்வதாக
தளத்தில் பதிவிடும் வேளையில்
அடெல்லாம் ஒரு பொருட்டே அல்ல!...

வழக்கம் போல
படங்களையும் காணொளியையும் வழங்கியோர்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...

கீழுள்ள காணொளி -
சிக்கல் ஸ்ரீசிங்கார வேலனின் ஆனந்தக் கோலாகலம்...


சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவன்..
ஸ்ரீ சிங்கார வேலவன் - ஸ்ரீ தெய்வயானை..
சிக்கல்.. 
ஸ்ரீ தெய்வயானை மணாளன்
குமாரவயலூர்..  
ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் திருக்குமரன்
குமார வயலூர்.. 
சோலைமலை அழகன்.,
பழமுதிர்சோலை.,
தேவியருடன் திருமுருகன்.,
பழமுதிர்ச்சோலை..
திருப்பரங்குன்றம்.. 
செண்பகமாலைகளுடன் செவ்வேள் குமரன் - தெய்வானை
திருப்பரங்குன்றம்.. 
முருகா என்றதும் உருகாதா மனம் 
மோகன குஞ்சரி மணவாளா!..
உருகாதா மனம் உருகாதா!...
முறை கேளாயோ.. குறை தீராயோ...
மான் மகள் வள்ளியின் மணவாளா!...
உருகாதா மனம் உருகாதா!..
-: தஞ்சை ராமையா தாஸ் :-
*** 

கந்த சஷ்டி பதிவுகளின் போது
தொடர்ந்து ஊக்கமளித்த
அனைவருக்கும்
மனமார்ந்த நன்றி...

வள்ளி மணவாளனாகிய முருகப்பெருமான் 
தன் அடியார்கள் வாடும்படிக்குச் செய்ததேயில்லை...
தேவகுஞ்சரி கேள்வனாகிய கந்தப்பெருமான்
தன் அடியார்களை விட்டுப் பிரிந்ததேயில்லை!...

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்!.. 
ஃஃஃ  

11 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அழகிய காட்சிகளை கண்ணுக்கு விருந்தாக்கிய தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. துரை செல்வராஜு சார்... நீங்கள் ஒரு பாடலைப் போட்டால், அதன் அர்த்தம் தெரியாமல் மனம் அடுத்த வரிகளைப் படிப்பதில்லை. முதலில் போட்டிருந்த அருணகிரிநாதர் பாடல் அர்த்தம் உடனடியாகப் புரியவில்லை. ஒருவேளை தட்டச்சுப் பிழைகள் இருக்குமோ என்றும் தோன்றியது. பிறகு பாடலின் அர்த்தத்தைத் தேடிக்கண்டுகொண்டேன்.

    பாசம் என்ற அன்பு வலையினாலே துயரத்தால் சோர்ந்து திரியாமல் - அப்படீன்னா பாசம் எங்க இருந்தாலும் அது துயரைத்தான் கொண்டுவந்து தரும் என்று சொல்கிறார். (சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலந் துஞ்சித் திரியாதே)

    "தந்தியின் கொம்பைப் புணர்வோனே' - ஐராவதம் யானை வளர்த்த கொடிபோன்ற தேவயானையை மணந்தவனே

    "சங்கரன் பங்கிற் சிவைபாலா" - சிவனின் பங்காகிய பார்வதியின் மகனே

    "செந்திலங் கண்டிக் கதிர்வேலா" - இதுலேர்ந்து கண்டி கதிர்காமம் பல காலமாக மிகவும் புகழ் பெற்றது என்பது தெரியும்.

    படங்கள் மிக அருமை. குமரன் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அருமை.

    எங்கள் அலுவலக முருக பக்தர், - மேலதிகாரி இரவும் அவரைப் பணியில் இருத்தி கொடுமைப்படுத்திக்கொண்டிருக்க, திடீரென சென்ற மின்சாரம் நெடுநேரம் திரும்பாமலிருக்க உடனே கிளம்பி விட்டார்களாம். நேராகக் கோவில்ஸ் என்று முருக தரிசனம் செய்து விட்டு எனக்கு அலைபேசினார். முருகன் கைவிடுவதில்லை!

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அத்தனையும் அருமை. முருகன் தெய்வானை திருமணக்காட்சி கண்டு தரிசனம்..மிக்க நன்றி ஐயா/ அண்ணா

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  5. மிக அருமை, இங்கு வந்தாலே போதும் வேறு எந்தக் கோயிலுக்கும் போகத் த்ரெவையில்லை.. அவ்ளோ படங்கள் போடுறீங்க..

    பதிலளிநீக்கு
  6. அருமை...

    கீதா சாம்பசிவம் அம்மாவிற்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  7. காணொளிகள் பதிவிட்டால் அவற்றைப் பொறுமையாகப் பார்க்கிறார்களா

    பதிலளிநீக்கு
  8. நேத்திக்குப் போட்டிருக்கீங்க போல! நான் இதைக் கவனிக்கலை! இன்றைய ஐயப்பன் பதிவையே பார்த்தேன். என் பதிவுக்கு வந்து சொன்னதுக்கு நன்றி. அருமையான காட்சிகளைக் கண்ணாரக் கண்டேன். மிக்க நன்றி மீண்டும் மீண்டும்!

    பதிலளிநீக்கு
  9. பல்லக்குத் தூக்கிகளுடன் சிங்காரவேலன் ஆட்டம் அருமை! ஆனால் அங்கேயும் நாதஸ்வரம் இல்லையோ? வாத்தியம் செண்டை மேளம் மாதிரிக் கேட்கிறது! :( அது கொஞ்சம் இல்லை நிறையவே வருத்தம் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் முதல்கொண்டு செண்டை மேளம் வர ஆரம்பித்து பல வருடங்களாகிவிட்டதே... அது மலையாள தேசத்தின் இசை என்று யாருக்கும் தெரியவில்லையா? நாதஸ்வரத்தையும் தவிலையும் புறக்கணிக்கிறார்களே என்று நான் நினைக்காத நேரம் கிடையாது. இவங்கதான் 'தமிழன் என்றொரு இனம் உண்டு', 'நாமெல்லோரும் தமிழர்' என்று வாயில் வடை சுடுகிறார்கள். (அப்படியே அறையலாம் என்று கோபம் வரும்).

      சமீபத்தில் பெங்களூரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் மிக அருமையான நாகஸ்வரம் கேட்டேன். அவங்க ஆந்திராவைச் சேர்ந்தவங்களாம். நம்ம ஊரின் திறமைசாலிகளை நாம் போற்றலைனா, கலையே அழிந்துவிடாதோ?

      இதைப்பற்றி துரை செல்வராஜு சாரோ நீங்களோ ஒரு இடுகை போடணும்.

      நீக்கு
    2. அன்பின் நெ.த.,

      சிக்கல் கோயிலில் ஒலிப்பது நாகஸ்வரமும் தவிலும் தான்...
      கேரளத்து செண்டை மேளம் அல்ல!...

      தவிரவும் பாரம்பர்ய இசைக்கருவிகளை மீட்டெடுத்து
      சிவகண வாத்யக்குழு என்று சிவனடியார் திருக்கூட்டத்தினர் இசைக்கின்றனர்..

      எல்லாவற்றையும் பதிவு செய்ய ஆவல் தான்...
      பெருமான் அருள் புரியட்டும்!...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..