நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2016

பூரம் எனும் பொன்னாள்

இன்று மங்கலகரமான நாள்..

ஆடி மாதத்தின் பூர நட்சத்திரம்..

அம்பிகை - பொங்கும் மங்கலத்தில் பூத்து நின்ற நாள்!..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி - திருவையாறு
ஊழிகளின் தொடக்கத்தில் - புவனம் முழுதையும் பூத்து அருள்வதற்காக - ஜகத் ஜனனியாகிய அம்பிகை - புஷ்பவதியாக பூத்து நின்றருளினள்.

அந்த மங்கலம் அனுசரிக்கப்படும் நாளே - ஆடிப் பூரம்!..

அம்மன் சந்நிதிகள் கோலாகலமாக விளங்கும் நாள் - ஆடிப்பூரம்!..

ஸ்ரீ கற்பகவல்லி
திருமயிலை ஸ்ரீ கற்பகவல்லி நாகை ஸ்ரீ நீலாயதாக்ஷி
திருச்சி ஸ்ரீ மட்டுவார்குழலி, திருஆனைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லி, இராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தனி

- என தமிழகம் எங்கும் அம்பிகைக்கு சிறப்பான வைபவங்கள் நிகழ்கின்றன..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
திருவையாற்றில் - ஐயாறப்பருடன் இனிது உறையும் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகிக்கும் ஆடிப்பூர விழா நிகழ்ந்து கொண்டிருக்கின்றது..

நாளும் சிறப்பு அலங்கார ஆராதனைகள் செய்விக்கப்படுகின்றன..

ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கில் எழுந்தருளிய அம்பிகை - இரவில் ரிஷபம், சேஷம், கிளி, காமதேனு - என வாகனங்களில் வீதி வலம் கண்டாள்.

ஆடிப்பூரத்தன்று - திருத்தேரில் பவனி வருகின்றாள்..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
திருவையாறு ஆடிப்பூர திருவிழா படங்களை அளித்தவர்கள் -
உழவாரம் திருப்பணிக் குழு. அவர் தமக்கு மனமார்ந்த நன்றி!..

ஸ்ரீ பர்வத வர்த்தனி
ஸ்ரீ பர்வத வர்த்தனி
ஸ்ரீ மட்டுவார்குழலி - திருச்சி
ஸ்ரீ மட்டுவார்குழலி - திருச்சி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
ஸ்ரீ அபிராமவல்லி
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!..(013)
-: அபிராமி பட்டர் :-


நெல்லையில் ஆடிப்பூர வைபவம் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் சிறப்புடன் நடைபெறுகின்றது..

முதலாம் திருநாள் தொடங்கி - காந்திமதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நிகழ்ந்தன..

நான்காம் நாளன்று நண்பகலில் காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம்..

ஸ்ரீ காந்திமதி - நெல்லை
வளையல்கள் மற்றும் மங்கலங்களைச் சமர்ப்பித்து - காந்திமதியம்மனை பக்தர்கள் வழிபடுவர்.

திருவிழாவின் பத்தாம் நாள் அம்மன் சந்நிதியின் முன்னுள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கொட்டு வைபவம்...

விரதமிருந்த பெண்கள் நவதான்ய முளைப்பாரிகளை எடுத்து வந்ததுடன் - பட்சணங்களைப் படைத்து வழிபடுவர்..

இதே சமயத்தில்
பாளையங்கோட்டையில் ஸ்ரீ திரிபுராந்தேஸ்வரருடன் இனிது உறையும்
ஸ்ரீ கோமதி அம்மனுக்கும் - வளையல்களுடன் சீர்வரிசை வழங்கி வழிபடுவர்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
மங்கலங்களுடன் மங்கலமாக -

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருஅவதாரத் திருநாளாகவும் திகழ்கின்றது - ஆடிப்பூரம்!..

திரு ஆடிப்பூரம் - கோதை நாச்சியாரின் திரு அவதாரத் திருத்தலமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது..

கடந்த ஜூலை 28 வியாழக்கிழமையன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது..

ஆண்டாள் திருக்கோலங்களை வழங்கியவர் -
அரையர் பால முகுந்தாச்சார்யார்.. அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..


ஐந்தாம் திருநாளன்று ஐந்து கருட சேவை நடைபெற்றது..

ஏழாம் திருநாளான நேற்று முன்தினம் (ஆகஸ்ட்/03) கிருஷ்ணன் கோயிலில் - ஸ்ரீ ஆண்டாள் மடியில் ஸ்ரீரங்க மன்னார் சயனத் திருக்கோல சேவை சாதித்தருளினார்..





எட்டாம் திருநாளான நேற்று புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினாள்.

ஒன்பதாம் திருநாளான (ஆகஸ்ட்/05) இன்று திருத்தேரோட்டம்..

இதை முன்னிட்டு - ஸ்ரீரங்கத்திலிருந்து -
ஸ்ரீ ஆண்டாளுக்கும் ஸ்ரீ ரங்க மன்னாருக்கும் வஸ்திர மரியாதை செய்யப் பெற்றது..

பட்டு வேஷ்டி, பட்டுப் புடவை முதலான சீர்வரிசைகள் பதினைந்து தட்டுகளில் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


ஸ்ரீ ரங்கனின் சீர்வரிசை
வஸ்திர மரியாதையை ஏற்றுக் கொண்டு - ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருடன் திருத்தேரில் எழுந்தருள்கின்றாள்..

பன்னிரண்டாம் திருநாளன்று (ஆகஸ்ட்/08) புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைகின்றது..

ஸ்ரீ உண்ணாமுலையாள்
ஆடித் தள்ளுபடி!.. அந்தத் தள்ளுபடி!.. இந்தத் தள்ளுபடி!.. 
-  என அலைவோர் மத்தியில் - ஐயனையும் அம்பிகையையும் 
வழிபட்டு உய்வடைவோர் ஆயிரம்.. ஆயிரம்..

எத்தனை எத்தனையோ மங்கலங்களுக்கு இருப்பிடம் ஆடி மாதம்!..

இந்த நாட்களில் - ஒருவருக்கொருவர் முகமன் கூறி - அன்பினைப் பரிமாறிக் கொள்ளுவதே சிறந்த நலன்களுக்கு அடிப்படை என்கின்றனர் ஆன்றோர்.

ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் - வீண் ஆடம்பரமின்றி -
ஏழை எளியவர்க்கு கூழ் வார்த்து வேண்டுதல் செய்வது அன்பின் வெளிப்பாடு..

மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல் இவற்றுடன் தாம்பூலம் வைத்து அக்கம்பக்கம் அண்டை அயலாருடன் நட்பைப் பேணுதல் சிறப்பு..

அதிலும் முக்கியமாக -

ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இயன்றவரை புத்தாடை வளையல்களை வழங்கி மகிழ்வித்தால் - அம்பிகையை மகிழ்வித்ததாக ஆகின்றது..

அம்பிகை மனம் மகிழ்ந்தால் -
நிலையான செல்வம் நமது வீட்டில் குடி கொள்ளும் என்பது திருக்குறிப்பு..

ஆயுளும் ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் பெருகி - இல்லத்தில்
மகிழ்ச்சி நிலையாக குடிகொள்வதில் அனைவருக்கும் விருப்பம்!..

அவ்வண்ணம் நிகழ்வதற்கு அம்பிகையை வேண்டுவோம்!..

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து..

ஓம் சக்தி ஓம்..
* * *

16 கருத்துகள்:

  1. ஆஹா... ஆடிப்பூரம் குறித்து அற்புதமான பகிர்வு ஐயா...
    அன்னைதான் எத்தனை அழகு...
    அங்கயற்கன்னி முதல் பர்வதவர்த்தினி வரை பார்த்து ரசித்தேன் ஐயா...
    அருமை... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. இந்த இனிய நல்ல நாளில் பல்வேறு கோயில்களில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அம்பாள் அனைவரையும், இங்கு ஒரே இடத்தில் தரிஸித்து மன மகிழ்ச்சியடைந்தேன்.

    அருமையான அசத்தலான படங்களுடன் கூடிய பகிர்வுக்குப் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள் + மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் அன்பின் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி
    ஆடிப்பூரம் பற்றிய அழகிய புகைப்படங்கள் அனைத்தும் விவரமும் நன்று வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஆடிப்பூர செய்திகள் படங்கள் எல்லாம் மிக அருமை . இன்று எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து பாடி மகிழ்ந்தோம், மாலை கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீங்கள் சொல்வது போல் ஏழை பெண்ணுக்கு வளையல் கொடுத்தோம். உறவும் நட்பும் வீட்டுக்கு வாங்க வெற்றிலை பாக்கு மஞ்சள் எடுத்துக் கொள்ள என்று கூப்பிட்டு மகிழும் நாள்.
    அருமையான பதிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் வெளியூர் சென்றிருக்கக்கூடும் என நினைத்திருந்தேன்..

      துர்கை அம்மனுக்கு ஆராதனை செய்த விவரம் அறிந்து சந்தோஷம்..
      ஏழைகளுக்கு இயன்றவரை செய்வதே பெரும் பாக்கியம்..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஆடிப்பூர விழாவை நேரில் கண்ட உணர்வு பதிவின் மூலம் கிடைக்க பெற்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பதிவின் பயனை அடையப் பெற்றேன்..
      தங்கள் மீள்வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆடிப்பூரம் அறிந்தேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  7. ஆடியை வைத்துக்கொண்டு பணம் பண்ணும் வணிகர்கள் பலர் இருக்கிறார்கள். நம்மில் பலருக்கும் ஆடியை தள்ளுபடி நிலையில்தான் தெரிகிறது. தெய்வீக நோக்கில் மனதுக்கு இதம் தரும் வகையிலான ஆடிப்பூர நாளை அம்மனின் அற்புதமான கோலங்களில் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      ஆடியை வைத்துக் கொண்டு வணிகர்கள் கல்லா கட்டுவதைப் போலவே - ஆன்மீக ஏடு என்று சொல்லிக் கொண்டு சில பத்திரிக்கைகளும் நன்றாகவே பணம் பார்க்கின்றார்கள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமையான படங்கள். சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..