நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2016

கலைவாணர்

அதற்கு முன்னும் - பின்னும் தன்னேரில்லாத தகைமையாளர்..

தனது நகைச்சுவையினால் மக்களைச்
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்..

வறுமையுற்ற காலத்திலும்
வள்ளல் தன்மையிலிருந்து சற்றும் வழுவாதவர்..

அமரர் திரு N.S. கிருஷ்ணன்..

29 நவம்பர் 1908 - 30 ஆகஸ்ட் 1957
மக்களின் மனங்கவர்ந்து - தனித்ததோர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்..

எவரையும் புண்படுத்தாத பாணி அவருடையது..

வீட்டிற்குள் வெளியிடத்தில் காணும் இடங்களில் எல்லாம்
நம்முடனேயே வரும் இயல்பான நகைச்சுவை.. 

முல்லை மொட்டாக மலர்ந்து மணம் பரப்பி - மனம் நிறைக்கும் தன்மை..

தான் நடிக்கும் காட்சிகளுக்கான நகைச்சுவை அமைப்பினை 
தானே உருவாக்கிக் கொள்ளும் வல்லமையுடையவர்..

வில்லுப் பாட்டு, நாடகம், இசைக் கதாகாலட்சேபம் எனும் 
பன்முகத் திறமையால் அவருடைய கருத்துகள் நகைச்சுவையாக
எல்லா தரப்பு மக்களையும் எளிதாகச் சென்றடைந்தது...


கலைவாணர் அவர்கள் தனது மனைவி T.A. மதுரம் அவர்களுடன் வழங்கிய நகைச்சுவைக் காட்சிகள் காலத்தால் அழியாதது..

கலைவாணர் அவர்களுடைய நகைச்சுவை சொற்சித்திரங்களை மக்களிடையே நிலைநிறுத்தியதில் -

நமது வானொலி நிலையங்களுக்கு சற்றும் தொடர்பு இருந்ததேயில்லை...

கலைவாணர் அவர்களும் T.A. மதுரம் அவர்களும் நடித்திருந்த 
பல்வேறு நகைச்சுவைக் காட்சிகளை வழங்கிய பெருமை அனைத்தும்

அன்றைய இலங்கை வானொலிக்கே உரியது..

அந்த வகையில் நெஞ்சில் பதிந்த காட்சிகள் ஏராளம்.. ஏராளம்!..

நகைச்சுவை ததும்பிய பாடல்கள் தான் எத்தனை.. எத்தனை!..

அந்த மலரும் நினைவுகளைப் பதிவு செய்வதற்கே - பல பதிவுகள் வேண்டும்..

கிந்தனார் சரித்திரம் - எனும் காலட்சேபத்தினை மறப்பாரும் உண்டோ!..

மக்கள் திலகத்துடன் - மதுரை வீரன்
நடிகர் திலகத்துடன் - ராஜா ராணி
1967ல் N.S. கிருஷ்ணன் - என்றொரு திரைத் தொகுப்பு அப்போது வெளியிடப்பட்டது... 

அதில் கலைவாணர் நடித்த படங்களின் சிறந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன..

மக்கள் திலகம் அவர்கள் அறிமுகமான சதி லீலாவதி தான் கலைவாணர் அவர்களுக்கும் முதல் படம்..

நூற்றைம்பது திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர்..

நல்லதம்பி எனும் படம் அவருடையது. கதை வசனம் அறிஞர் அண்ணா..


1951ல் மணமகள் எனும் தனது சொந்தப் படத்தைத் தானே இயக்கினார்..

இந்தப் படத்தில் தான், 
நாட்டியப் பேரொளி பத்மினி - கதாநாயகி என அறிமுகம் ஆனார்..


1952ல் பணம் எனும் திரைப்படத்தை இயக்கினார்..
இந்தப் படத்திற்கு கதை வசனம் - கலைஞர் கருணாநிதி..

நடிகர் திலகம், பத்மினி இணைந்து நடித்த இந்த திரைப்படத்தில் -
M.S. விஸ்வநாதன் அவர்களுடன் T.K.ராமமூர்த்தி அவர்களை இணைத்து 
புதிய இசைக் கூட்டணிக்கு வித்திட்டார் - கலைவாணர்...
கலைவாணர் அவர்களின் கருத்துக்களை இனிய பாடலாக வடித்துத் தந்தவர்
உடுமலை நாராயணகவி அவர்கள்..


தனது உழைப்பினால் ஈட்டிய பொருளை சக கலைஞர்களுக்கு 
தாராளமாக வாரி வழங்குவதில் மகிழ்ந்திருக்கின்றார்...

இவரது மனதை அறிந்து கொண்ட ஒருவர் - ஓயாமல் உதவி என்று வந்து நின்றிருக்கின்றார்..

கலைவாணரிடத்தில் உண்மையை மற்றொருவர் சொல்லியிருக்கின்றார்..

அதற்கு கலைவாணர் அவர்கள் அளித்த பதில் -

போகட்டும் விடு.. அவன் என்ன கோட்டையா கட்டப் போகின்றான்.. வயித்துக்கு சாப்பிடப் போகின்றான்.. அவ்வளவு தானே!..

கலைவாணர் அவர்களின் இயல்பான நகைச்சுவைக்கு இன்னொரு நிகழ்வு..

குறித்த நேரத்தில் வரவேண்டிய ஒருவர் சற்று தாமதமாக வந்திருக்கின்றார்..

ஏன் தாமதம்.. என்று வினவுகின்றார் - கலைவாணர்..

ஐயா.. கேட்டு மூடிட்டாங்க!..

அந்த பதிலுக்கு - வழியில் இருந்த Railway Gate மூடப்பட்டதாக அர்த்தம்..

அதற்கு - கலைவாணர் அவர்கள் மெல்லிய புன்னகையுடன் சொன்னார்..

கேட்டு தானே மூடினாங்க.. கேட்க்காமல் மூடலையே!..



அந்த காலகட்டத்தில் - வளர்ந்து வந்த திராவிட இயக்கங்களின் தலைவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தாலும் 

மகாத்மாவின் கொள்கைகளால் கவரப்பட்டவராக இருந்தார்..

காந்திஜியின் மறைவுக்குப் பிறகு -  நாகர்கோயில் நகராட்சிப் பூங்காவில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தனது சொந்தப் பணத்தைக் கொண்டு ஸ்தூபி ஒன்றினை எழுப்பி காந்திஜிக்கு அஞ்சலி செய்தார்..

தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாகக் காரணமாக இருந்ததோடு
தனது நிலத்தையும் வழங்கியிருக்கின்றார்..

ஆனால் - புகழுடன் இருந்த காலத்தின் ஊடாக.
கொலை வழக்கு ஒன்றில் சிக்கிப் போராடியதில் - பொருளாதாரத்தை இழந்திருக்கின்றார்..

ஆயினும், கலைவாணர் அவர்கள் -
தனது நகைச்சுவையையும் வள்ளல் தன்மையையும் இழக்காதவராக திகழ்ந்திருக்கின்றார்..

கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
சிகிச்சை பலனளிக்காமல் 1957 ஆகஸ்ட் 30 அன்று காலமானார்..

அன்பின் துணையைப் பிரிந்த T.A. மதுரம் அவர்கள் -
1974 நவம்பர் 27 அன்று இயற்கை எய்தினார்..


மேலே உள்ள காட்சி இடம் பெற்ற திரைப்படம் அம்பிகாபதி..

அடுத்துள்ள புகழ் மிக்க பாடல் இடம் பெற்ற திரைப்படம் ராஜா ராணி..


வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள்..

கலைவாணர் அவர்களும் T.A. மதுரம் அவர்களும் வழங்கிய நகைச்சுவையினால் கவலைகள் மாறுகின்றன..

இன்று ஆகஸ்ட் 30

கலைவாணர் அவர்களின் நினைவு நாள்

காலங்கள் மாறலாம்.. காட்சிகளும் மாறலாம்..
கலைவாணர் அவர்கள் நமக்களித்த மகிழ்ச்சி என்றும் மாறாதது..

நல்ல மனமும் நகைச்சுவை உணர்வும்
கலைவாணர் அவர்களின் வடிவாக 
என்றென்றும் நம்மிடையே
நிலைத்திருக்கும்..
***

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சாதாரணமாக நாம்பேசும் வார்த்தைகளே கலைவாணரிடமிருந்து வரும்போது நகைச் சுவையுடன் மிளிரும் என்பார் என் தந்தை. கலை வாணரின் கிந்தனார் சரித்திரம் கதா காலட் சேபம் கெட்கக் கேட்கத் திகட்டாதது “ கரகர வெனச் சக்கரம் சுழல கனவேகத்தில் வரும் ரயிலே......”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் மேலதிக தகவலும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமை வாய்விட்டுச் சிரிப்போம் நோய்விட்டுப் போக !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அவரை நினைத்தாலே நமக்கு நகைச்சுவை உணர்வு மேலிடும். அத்துடன் அவருடைய ஆழமான தத்துவக் கருத்துகள் நம் மனதிற்குள் வரும். அருமையான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நகைச்சுவையுடன் நல்ல கருத்துக்களையும் வழங்கியவர் - கலைவாணர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மறக்க முடியாதவர். அவரது பாடல்களும் தான்... நல்ல பகிர்வு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கலைவாணர் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.
    வள்ளல். அவர் புகழ் என்றும் பேசபடும். அவரை பற்றிய சிறப்பான பதிவு.
    படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அவரது புகழ் என்றும் பேசப்படும்.. முற்றிலும் உண்மை..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கலைவாணர் குறித்து மிகச் சிறப்பான பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      கலைவாணர் அவர்கள் மனதில் நிற்கும் மகத்தான கலைஞர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..