நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016

வேம்பின் நிழலில்..

வேம்பு!..

தாம் பெற்ற பிள்ளைகளுக்கு அன்பின் அடையாளமாக இந்தப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் - தமிழர்கள்..


பாரதம் முழுதும் வேம்பின் அருமை பெருமை பரவியிருந்தாலும் -

வேம்பினை வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வைத்துச் சிறப்பித்தவர்கள் - தமிழர்களே!..



இந்த வேம்பின் பலன்கள் எண்ணற்றவை...

அதனாலேயே - இந்த மரத்தை தெய்வீக மரம் என்று முன்னோர்கள் கட்டிக் காத்து சிறப்பித்தனர்..


அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலேயே -

வேப்ப மரத்தில் அம்மன் குடியிருப்பதாகச் சொல்லி வைத்தார்கள்...

அந்த அர்த்தம் நாளடைவில் அனர்த்தமாகிப் போனது...


வேப்ப மரத்தின் மீதேறி விளையாடுவது தான் வீரம் என்றும்

அதைத் தடுப்பது வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகள் என்றும் சொல்லப்பட்டது..

வேப்பமரம் மட்டுமல்ல - வேறு பல மரங்களின் மீதேறி விளையாடி கீழே விழுந்து கை கால்களை முறித்துக் கொண்டால் -


அதற்கான விலையை யார் கொடுப்பார்கள் என்று சிந்திக்கவில்லை..


அதீத பகுத்தறிவு தலைக்கேறிய சூழ்நிலையில்
நம்மவர்களின் செயல்பாடுகள் வேம்பிற்கு எதிராக இருந்தது...

அந்த விநாடிக்காகக் காத்திருந்த அமெரிக்கா அதைக் கச்சிதமாகக் கைப்பற்றிக் கொண்டு - வேம்பு எங்களுடையதே!.. - என்று கொக்கரித்தது...


அமெரிக்கனின் கண்ணும் கையும் இங்கே நீண்டு வேம்பின் மீது உரிமை கொண்டாடியதை - முறியடித்து வேம்பினை மீட்டெடுத்தது மிகப்பெரிய வெற்றி...


அதை நிகழ்ந்த்தியவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பது தலையாய கடமை..


வேம்பு மீட்டெடுக்கப்பட்டதற்குப் பிறகு தான் - நம்மவர்களுக்கு பாரம்பர்யங்களின் மீது பற்று உண்டாயிற்று என்றால் அது மிகையல்ல..




மகிழ்ச்சியின் அடையாளம் - இனிப்பு என்றார்கள்..

ஆனால் -அந்த இனிப்பினால் உண்டான துன்பத்தைத் துடைப்பது - கசப்பு..


கசப்பு.. அது தான் உண்மை..


கற்கும் போது கல்வி கசப்பு..
கற்றபின் அதுவே இனிப்பு!..

- என்பது முதுமொழி..

தவறு என்று தெரிந்தும் அதிலே நின்று திளைப்பவர்களுக்கு

நல்லது என்று எதைச் சொன்னாலும் அது கசப்பாகவே படுகின்றது..

பெற்றவர்களாகட்டும் பிள்ளைகளாகட்டும் அண்ணன் தம்பியாகட்டும்

உற்றார் உறவினர்களாகட்டும் நண்பர்களாகட்டும்..

ஏன்!..


ஆசிரியர் தனது மாணாக்கனுக்குச் சொல்வதாகட்டும்...


கசப்பாகவே இருக்கின்றது...


நல்ல வார்த்தைகளின் வடிவம் - கசப்பு என்பதாகி விட்டது..

  ஆனால் - அதனால் விளையும் நன்மை!..

அதற்கு ஈடு இணையில்லை என்பதே உண்மை...


நல்லொழுக்கத்தைப் பேணாமல் - பிறழ்ந்ததே நலிவுகளுக்கெல்லாம் காரணம்..


இந்த வேம்பும் அப்படித்தான்...


காலையில் எழுந்ததும் பல்விளக்க வேண்டும்.. முகம் கழுவ வேண்டும்..

சற்றைக்கெல்லாம் - இயற்கைக் கடன்களைக் கழித்து நன்றாகக் குளித்து முடித்து அன்றாடப் பணிகளுக்கு ஆயத்தமாக வேண்டும்..

இன்றைய நாட்களில் - இது அனைவராலும் ஆகக் கூடிய காரியமா?..

ஆனால் - அன்றைக்கு இப்படித்தான் ஒவ்வொரு நாளும் தொடங்கியிருக்கின்றன..


ஆலும் வேலும் பல்லுக்குறுதி!.. 
- என்று பெரியோர்கள் சொல்லி வைத்தார்கள்....

ஆனால் - அர்த்தம் புரியாமல்,

இன்றைக்கு வேப்பங்குச்சியை ஒடித்து பல்லைத் துலக்குகின்றார்கள்..

அது பெருந்தவறு என்று மனதில் உறைப்பதேயில்லை..


ஆலும் வேலும் என்று தான் சொன்னார்கள்..


ஆலும் வேம்பும் என்று சொல்லவில்லை..


ஆல் என்றால் ஆல மரம்..
வேல் என்றால் வேல மரம்..

வேல மரத்தில் இரு வகை.. கருவேல மரம் மற்றும் வெள் வேல மரம்..

கருவேல மரத்தின் முட்கள் வெள்ளையாய் நீண்டிருக்கும்..

வெள்வேல மரத்தின் முட்கள் கறுப்பாக சிறிதாக இருக்கும்..

ஆல மரத்தின் பட்டையும் வேல மரத்தின் பட்டையும் மருத்துவ குணம் உடையவை.. துவர்ப்பு சுவையுடையவை..


இந்த மரங்களின் பட்டையை உலர்த்தி இடித்து சலித்து எடுத்த தூள் பற்களுக்கு நல்லது..


சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரியாமல் -

ஆலம் விழுதையும் வேப்பங்குச்சியையும் ஒடித்து பற்களில் தேய்க்கின்றான்..

விழுதுகளின் இளங்குருத்தை முறித்தால் ஆலமரம் சேதாரம் ஆகி விடும் என்ற அறிவு இல்லாமல் போனது..


எளிதாகக் கைக்கெட்டும் வேப்பங் குருத்தையும் பிடித்து ஒடித்தால் வேம்பு கெட்டு விடும் என்பதும் புரியாமல் போனது..


இவர்களுக்காகச் சொல்லப்பட்டது தான் -

வெட்டிக் கெட்டது வேம்பு..
வெட்டாமல் கெட்டது பூவரசு!..

சீராக வளர்ந்து கொண்டிருக்கும் வேப்பங்குருத்தை ஒடித்து விட்டால் -
தாறுமாறாகக் கிளைத்து வரும்.. சமயத்தில் அந்தக் கிளையே பாழாகி விடும்..

எதற்காக வேம்பைப் பராமரிக்க வேண்டும்?.. 

வேப்பங்கிளைகள் தாறுமாறாகப் போனாலோ அல்லது 
பாழாகி பட்டுப் போனாலோ யாருக்கு என்ன கேடு?..

வேம்பினைப் பராமரிக்காமல் விட்டால் -

அடிப்படைத் தொழிலான விவசாயம் தொட்டு 
அதனை அண்டி வாழும் அனைவருக்கும் கஷ்டம்.. நஷ்டம் தான்!..

வேப்பிலைகள் - சிறந்த பசுந்தாள் உரம்..

வேப்பம் புண்ணாக்கு - சிறந்த மேலுரம்.. அத்துடன் பூச்சிக் கொல்லியாகவும் பூஞ்சாணக் கொல்லியாகவும் செயலாற்றுகின்றது...

வேப்பம் புண்ணாக்கை ஊற வைத்த நீரை செடி கொடிகளின் மேல் தெளித்தால் அசுவினிப் பூச்சிகள் ஓடிப் போகும்..

வேம்பின் மருத்துவ குணம் இவ்வாறாக ஆரம்பிப்பதாகக் கொள்வோம்..


இளங்காலைப் பொழுதில் -


வேம்பின் இளந்தளிர்கள் சிவற்றைக் கிள்ளி எடுத்து வாயிலிட்டு மென்று விழுங்கினால் - குடற்புழுக்கள் தொலைந்து போகும்.. நோய் எதிப்பு சக்தி பெருகும்.. 


வேம்பின் பட்டைகளைக் கொதிக்க வைத்த நீர் ஆறியதும் அதைக் கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மட்டுமின்றி பற்குத்து அரணை என்பனவும் விலகும்..


அதைக் கைக்கொண்டு தான் - தந்திரக்கார நரிகள் 

(உண்மையான நரிகள் தயவு செய்து மன்னிக்கவும்) 
நீம் பேஸ்ட் (Neem Paste) பற்களுக்கு நல்லது என ஊளையிடுகின்றன..

பித்தளை அண்டாவில் தண்ணீரை வைத்து அதனுடன் வேப்ப இலைகளைப் போட்டு - முற்பகல் வெயிலில் வைத்தால் ஒரு மணி நேரத்தில் சூடாகி விடும்..


அந்த வெதுவெதுப்பான நீரில் குளித்தால் - வியர்க்குரு தேமல் போன்றவை சொல்லிக் கொள்ளாமல் ஓடி விடும்..


வேப்பெண்ணெயைச் சிறிதளவு தலையில் தேய்த்துக் கொண்டால் - 
பெண்களுக்கு பேன் பொடுகு தொல்லை இருக்காது..

என்ன ஒரு விஷயம் என்றால் - வேப்பெண்ணையின் வாசம் தான்!..


விடலைகள் கிண்டலடிப்பார்கள்...

வேப்பெண்ணையைப் பூசிக்கிட்டு
வெறுங் கையால சீவிக்கிட்டு
வேடு கட்டும் கூந்தலிலே - செங்கமலம்
காக்கா கூடு கட்டப்பார்க்குதடி ருக்குமணி!..

பாகப்பிரிவினை கன்னையனும் பொன்னியும் நினைவுக்கு வருகின்றார்களா!.. 

இதையெல்லாம் பெரியவர்கள் சொன்னபோது கேட்கவே இல்லை..


மதிய வேளையில் -

உண்பதற்கென தலை வாழையிலையை விரித்துக் கொண்டு உட்கார்ந்தால் - வேப்பம்பூ பச்சடி வேம்பு ரசம் என்றெல்லாம் பரிமாறப்படுகின்றன..

சாப்பிடும் போதும் கசப்பு தானா?.. செங்கமலம்.. உனக்கு வேறு எதுவுமே கிடைக்கவில்லையா?..

அதான் உடம்புக்கு நல்லது.. பேசாம சாப்பிடுங்க!..

சமையலறைக்குள் கடமுடா.. என்று ஏதேதோ உருள்கின்றன!!....

கரண்டி, பூரிக்கட்டை - எல்லாம் நினைவுக்கு வருகின்றன..

நல்லவேளை அம்மிக் குழவி இல்லை.. தலை தப்பியது!..
அதற்காக நன்றி சொல்ல வேண்டும்..

தம்பி.. நீ கொஞ்சம் சாப்பிடுடா!..

அய்யய்யே!.. எனக்கெல்லாம் வேணாம்!.. நீங்களே சாப்பிடுங்க.. அப்பா!..

என்ன அங்கே சத்தம்!?..

இல்லே.. ஒன்னும் இல்லே!!..

வேப்பம்பூ பச்சடியும் வேம்பு ரசமும் -
சத்தமில்லாமல் தொண்டைக் குழியைக் கடந்து செல்கின்றன..

வேப்பம்பூ பச்சடியும் வேம்பு ரசமும் அந்த நேரத்தில் கசந்தாலும் - 

அதனால் ஏற்பட்ட நன்மைகளால் உடல் ஆரோக்கியத்துடன் திகழும்போது - 

மனைவி ஒரு மாணிக்கம் - என்றாகின்றாள்..


வேப்பங்கொழுந்து - குடல் புழு நீக்கி.. பெரிதாய் செலவில்லாமல் எளிய வைத்தியம்..


புதிதாய் வாங்கிய செருப்பு.. நன்றியில்லாமல் கடித்து விட்டது..

கார்ப்பரேட் மருத்துவமனைக்கு விஜயம்.. நாலாயிரம் ரூபாய்க்கு வேட்டு..


அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னால் கேட்டால் தானே?..


வேப்ப எண்ணெயை சற்றே சூடுபடுத்தி அதனுடன் கொஞ்சமாக மஞ்சள் தூளைக் கலந்து குழப்பி செருப்பு கடித்த காயத்தில் தடவிட்டு சற்றே ஓய்வு..


ஒரு நாள் பொழுதிற்குள் - காயம் உலர்ந்திருக்கும்.. மறு நாள் காயம் இருந்த இடமே கண்ணில் தெரியாது..


சொன்னால் - யார் கேட்கிறார்கள்?..


சொறி, சிரங்கு, அரிப்பு படை இவற்றுக்கெல்லாம் வேப்ப எண்ணெய் சிறந்த நிவாரணி..


பத்து விதமான தோல் நோய்களுக்கு!... அப்படின்னு ஆட்டம் கொண்டாட்டம் ஆரவார விளம்பரம் என்றால் ஜனக்கூட்டம் அங்கே வரிசை கட்டி நிற்கின்றது..


மாலை நேரம்.. 

இருள் குவிகின்றது.. இரவாகி விட்டது..

திடு..திடு!.. - என்று போருக்குச் செல்வது போல கவச உடைகள்..  


யாரோ ரெண்டு பெண்கள் நீள நீளமான பட்டாக் கத்திகளை எடுத்துக் கொண்டு சண்டை போடுகின்றார்கள்..

யாரோடு சண்டை என்று கவனித்தால் அற்பக் கொசுக்களோடு!..


அடக் கஷ்டமே.. அதற்குள்ளாக சுவரைப் பிளந்து கொண்டு ஏதோ ஒன்று வருகின்றது.. 


ஏதேதோ சொல்கின்றது.. ஏதேதோ செய்கின்றது.. பார்த்தால் கொசுக்கள் எல்லாம் சுருண்டு விழுந்து செத்துப் போகின்றன.


ஆனால், அத்தனையும் அந்த நிமிடத்துக்குத் தான்... நிரந்தரத் தீர்வல்ல!..


சரி.. என்ன செய்யலாம்..


வீட்டைச் சுற்றிலும் குப்பை கூளம் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் - அனைத்தையும் அகற்றி விட்டு வேப்பம் புண்ணாக்கை சிறிது தண்ணீரில் கரைத்துத் தெளிப்பது நல்லது..


விஷப்பூச்சிகளின் நடமாட்டம் குறையும்.. 

உலர்ந்த வேப்பிலை வேப்பம் பட்டைகளை தணலில் மூட்டம் இட்டால் -

கொசுக்கள் எல்லாம் குடும்பத்தோடு ஊரைக் காலி செய்து விட்டு ஓடி விடும்..

சொன்னால் - யார் கேட்கிறார்கள்?..

மாதந்தோறும் கொசுவர்த்திச் சுருளுக்காக வீட்டில் - தனியாக நிதிநிலை அறிக்கை.. அதுவே பெருந்தலைவலி..

கொசுக்கடி இல்லாத இரவு.. மகிழ்ச்சியான சூழ்நிலை.. 


அந்தக் காலத்தில் நிறைய புள்ளை குட்டிகளைப் பெற்றுக் கொண்டாலும்

வேப்ப எண்ணெய் கருத்தடைக்கும் பயன்பட்டிருக்கின்றது.. - என்பது கூடுதல் செய்தி..
 
நிம்மதியான தூக்கம்..

பொழுது சந்தோஷமாக விடிகின்றது...

ஆரோக்கிய வாழ்வினையே காப்பது!??... 


அந்த சோப்.. இந்த சோப்.. அதெல்லாம் காரணம் இல்லை..

வீட்டருகில் முளைத்து நம்முடனே வாழ்ந்து 

நம்முடனே வளர்ந்து வரும் வேம்பு தான் காரணம்..

அம்மை நோய் கண்டவர்களுக்கு வேப்பிலையே அருமருந்து..

வெக்கை தணியட்டும் என்று - 
வேப்ப இலைகளால் விசிறி விட்டுக் கொண்டிருப்பார்கள்..

வீட்டில் விசேஷமாகட்டும்.. ஊரில் திருவிழாவாகட்டும்..

அலங்காரமாக வேப்பிலைத் தோரணங்களைக் காணலாம்..

காரணம் - மிகச் சிறந்த கிருமி நாசினி - வேப்பிலை..



பொன்னிறமான வேப்பம்பழங்கள் இனிப்புச் சுவையுடையவை..

சித்திரையில் வேம்பு பூத்து காய்த்து கனிந்து விட்டால்
காக்கைகளுக்கும் மைனாக்களுக்கும் கொண்டாட்டம் தான்..

எந்நேரமும் வேப்பமரத்தில் இசைக் கச்சேரி ஆர்ப்பாட்டம் தான்..

முழுப்பழத்தையும் விழுங்கி விட்டு - 
அங்கிங்கெனாதபடிக்கு வேம்பினை விதைப்பவர்கள் - பறவைகளே!.. 

வேப்ப மரங்களின் ஊடாக வரும் காற்று காச நோயை விரட்டும்..

தஞ்சை செங்கிப்பட்டி - காசநோய் மருத்துவமனையைச் சுற்றிலும் ஏராளமான வேப்ப மரங்கள் தான்..

வீட்டின் தலைவாசலில் வேப்பிலைகளைச் செருகி விட்டாலே போதும்..

பகலில் நோட்டமிடும் திருடர்கள் கூட -
இரவுப் பொழுதில் உள்ளே நுழைய மாட்டார்கள்..

அந்தக்காலத்திலும் சரி... இந்தக் காலத்திலும் சரி..

பண்பாட்டினை மறக்காதவர்களின் இல்லங்களில்
பெண் பிள்ளைகள் சடங்காகி விட்டால் - 
ஒதுங்கியிருக்கும் ஓலைக் குடிலில் கட்டப்படுவது வேப்பிலைகள் தான் !..

நிறை கர்ப்பிணிப் பெண்ணுக்கு
ஏழாம் மாதம் செய்யப்படும் வளைகாப்பு சடங்கின் போது -
முதலில் அணிவிக்கப்படுவது வேப்பிலை வளையல்கள் தான்!..

நல்லபடியாக பேறுகாலம் முடிந்து -
குழந்தைக்கு பதினாறாம் நாள் சடங்கின் போது முதலில் அணிவிக்கப்படுவது வேப்பிலைக் காப்பு தான்!..

மூன்று மாதங்கள் முடிந்து -
பிள்ளையுடன் கணவன் வீட்டுக்குப் பயணமாகும்போது
தாயின் கூந்தலிலும் குழந்தையின் அரைஞாண் கொடியிலும்
வைக்கப்படுவது - வேப்பிலைதான்!.. 

மாந்திரீகத்தில் பேய் பிசாசுகளை விரட்டுவதற்கு வேப்பிலைகள் தான்!..

வேப்பிலைகளைக் கொண்டு, சாத்து.. சாத்து என்று சாத்துகின்றார்கள்..

ஆனால் - அதை மென்மையாகக் கையாள வேண்டும் என்பது நியதி..

விஷ முறிவு வைத்தியத்தில் மந்திரங்களை உருவேற்றி
விஷத்தை முறிப்பதற்கும் இறக்குவதற்கும் வேப்பிலைகளே!..

குளத்தங்கரையில் அரச மரமும் வேப்ப மரமும் இருந்து விட்டால் - அங்கே விடியற்காலைப் பொழுதில் அபரிமிதமாக ஓசோன் பரவியிருக்கின்றது..

கொழுந்து, இலை, பூ, காய், கனி, பட்டை, எண்ணெய், புண்ணாக்கு என அனைத்தும் மருந்தாகித் திகழும் சிறப்புடையது - வேம்பு..

மண் வாசம் மறக்காத மக்களுக்கு வேப்பிலையே உற்றதுணை..
அதனால் தான் வேம்பினைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்...

இத்தகைய வேம்பு - பிணி தீர்க்கும் தலமாகிய
வைத்தீஸ்வரன் திருக்கோயிலிலும் குடந்தை காசி விஸ்வநாதர் திருக்கோயிலிலும் தல விருட்சம்..



வேப்ப மரத்தைக் தமது குடும்பத்தில் ஒருவராகக் கருதியதால் தான்
அதற்கு மஞ்சள் பூசினார்கள்.. குங்குமப் பொட்டு வைத்தார்கள்.. 
பூக்களைச் சூட்டினார்கள்.. புதுச்சேலை அணிவித்து மகிழ்ந்தார்கள்...

வேப்ப மரத்திற்கு யாரும் ஊறு ஏற்படுத்தக்கூடாது - 

என்பதற்காகத் தான் அதன் அருகில் ஆயுதங்களை 
அடையாளமாக வைத்து எச்சரிக்கை செய்தார்கள்...

வாழ்வில் நல்வாழ்வு எனும் ஒளி ஏற்றியது வேம்பு!.. - என்ற நன்றியின்

காரணமாகத் தான் அதன் வேரடியில் விளக்கேற்றி வைத்தான் - தமிழன்..

அப்பனும் பாட்டனும் - ஓய்வென்று நார்க் கட்டிலில் படுத்துக் கிடந்தது வேம்பின் நிழலில் தான்.. 


அவர்கள் போய்ச் சேர்ந்த பிறகு வேம்பின் நிழல் அவர்களது நினைவிடம் என்றானது..


நடுகல் என்பது நம்மவர்களின் பழக்கம்..


பேரனும் பேத்தியும் பாட்டன் பாட்டியின் நினைவாக வைத்தனர்..


மகனும் மகளும் தாய் தகப்பனின் நினைவாக வைத்தனர்...


தாயும் தந்தையும் வாழ்ந்திருந்த வேம்பின் நிழல் இவர்களுக்கு புனிதமான இடமாயிற்று..

குடும்பத்தில் அன்றாட பட்டி தொட்டி பால் கணக்கு முதல் விதை நெல் வெள்ளாமை மகசூல் வரைக்கும் அவ்விடத்தில் பேசப்பட்டது

பாட்டனும் பாட்டியும் தாயும் தந்தையும் கண்ணறியும் தெய்வங்களாக 
வாழ்வாங்கு வாழ்ந்தவர்களல்லவா!..

அதனால், அவர்களும் தெய்வங்களாகி நின்றார்கள்...


வீட்டுக்கு ஒரு வேம்பு வளர்க்கப்பட்டால் வியாதிகளுக்கு இடமில்லாமலே போய் விடும்...

ஆனால், அது ஆகக் கூடிய செயலா!..

ஆயினும் , அன்னை அவள் நினைத்தால் எதுவும் ஆகக்கூடும்!..


கடந்த மூன்று வாரங்களில், மஞ்சளும் குங்குமமும் எலுமிச்சையும் அன்னையின் திருப்பாதங்களில் அன்புடன் சமர்ப்பிக்கப்பட்டன..

இன்னும் ஊற்று போல் வேம்பைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன..
ஆயினும் இந்த அளவில் - வேப்பிலை மாலையாகச் சூட்டுகின்றேன்..


வேப்பிலை யானவள் ஓம் சக்தி..
வேதனை தீர்த்தவள் ஓம் சக்தி.. 
காப்பென வந்தவள் ஓம் சக்தி.. 
கவலை அழித்தவள் ஓம் சக்தி.. 

நெஞ்சினில் நின்றவள் ஓம் சக்தி.. 
நிம்மதி தந்தவள் ஓம் சக்தி.. 
அச்சம் அழித்தவள் ஓம் சக்தி.. 
ஆண்மை வளர்த்தவள் ஓம் சக்தி.. 

தழலென பூத்தவள் ஓம் சக்தி.. 
தண்ணிழல் ஆனவள் ஓம் சக்தி.. 
அழலென ஆர்த்தவள் ஓம் சக்தி.. 
அருமழை ஆனவள் ஓம் சக்தி.. 


காற்றென கடலென ஓம் சக்தி.. 
காத்தாயி மகமாயி ஓம் சக்தி.. 
முகிலென மழையென ஓம் சக்தி.. 
செல்லாயி சிலம்பாயி ஓம் சக்தி.. 

நீரென நிலமென ஓம் சக்தி.. 
பேச்சாயி பெரியாயி ஓம் சக்தி.. 
புல்லாகி நெல்லாகி ஓம் சக்தி.. 
பூவாயி ராக்காயி ஓம் சக்தி.. 

கத்தியென வேப்பிலை ஓம் சக்தி.. 
காளி கபாலினி ஓம் சக்தி.. 
ஈட்டியென வேப்பிலை ஓம் சக்தி.. 
எங்கெங்கு காணினும் ஓம் சக்தி..  

ஓம் சக்தி.. அம்மா.. ஓம் சக்தி.. 
ஓம் சக்தி.. அம்மா.. ஓம் சக்தி.. 
***

7 கருத்துகள்:

  1. வேம்பிற்குத் தான் எத்தனை சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. வேம்பைப் பற்றிய அரிய செய்திகளின் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு பதிவும் சிறந்த செய்திகளாய்ப் பரிணமிக்கிறது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பயனுள்ள பதிவு. வேம்பின் சிறப்பை விரிவாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..