நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 08, 2015

தமிழ்வேள் தரிசனம்

இன்று ஆடிக் கிருத்திகை..

தேவர்களுக்கு விளக்கேற்றும் பொழுதாகிய - தட்சிணாயண காலத்தில் அனுசரிக்கப்படும் கார்த்திகை நாட்களுக்குள் மிகச்சிறப்பானது.


தமிழ் கூறும் நல்லுலகில் -
எங்கெல்லாம் திருக்குமரனின் ஆலயங்கள் இருக்கின்றனவோ - அங்கெல்லாம் அவனுடைய அன்பர்கள் புகழ்பாடி மகிழும் நாள்!..

அடியார்களுக்குள் அவனருள் பெற்று உய்வடைந்தோர் ஆயிரம் ஆயிரம்!..

அவர்களுள் மிகச்சிறந்தவராகக் கருதப்படுபவர் அருணகிரிநாதர்.

முருகன் - தன் திருவருளால் கவி பாடும் வல்லமை பெற்றவர்..

அவர் அருளிய திருப்பாடல்கள் திருப்புகழ் எனப்படுபவை..

கந்தரனுபூதி, கந்தரலங்காரம், கந்தரந்தாதி, மயில் வகுப்பு, வேல் வகுப்பு, சேவல் வகுப்பு என்பனவும் அருணகிரிநாதர் அருளியவையே!..

அறுமுக நாதனின் திருவடிகளை நெஞ்சில் நிறுத்தி -
அருணகிரி நாதரின் திருப்பாடல்களைப் பாடிக் களிக்கும் போது -
வேலோடும் மயிலோடும் திருமுருகன் வந்தருள்வான் என்பது திண்ணம்..

அறுபடை வீடுகளையும் அடியேன் தரிசித்திருக்கின்றேன்..

பின்னும் - மருதமலை, சென்னிமலை, திருச்செங்கோடு, குன்றக்குடி, வயலூர், எட்டிக்குடி, எண்கண், சிக்கல், கந்தகோட்டம் - முதலான திருத்தலங்களையும் தரிசித்துள்ளேன்..

இன்னும் பல தலங்களைத் தரிசிக்க வேண்டும்..

அதற்கான வரத்தினை அறுமுகப்பெருமானே அளித்தருள வேண்டும்..

இன்றைய பதிவில் அறுபடை சுற்றுலாவிற்கு அழைக்கின்றேன்..


திருப்பரங்குன்றம்

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ..

தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே!..
திருப்புகழ்..

திருமுருகனுக்கும் தெய்வானை அம்மைக்கும் திருமணம் நிகழ்ந்த தலம்.

புராதனமான குடைவரைக் கோயில். முருகனின் வேலுக்குத் தான் இங்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

மதுரை மாநகரின் ஒரு பகுதியாக விளங்குகின்றது..


திருச்செந்தூர்

இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி
உனையெனது ளமறியு மன்பைத் தருவாயே..

மயில்தகர்க லிடைய ரந்தத் தினைக் காவல்
வனசகுற மகளை வந்தித் தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் பெருமாளே!..
திருப்புகழ்

தேவர் சிறை மீட்க வந்த எம்பெருமான் -  சூரனை வென்ற பின் - சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம்..

கடற்கரையில் அமைந்துள்ள திருக்கோயில்..

சந்நிதியின் வடபுறமாக ஆதியில் விளங்கிய சந்தன மாமலை இன்னும் திகழ்கின்றது..

திருநெல்வேலியிலிருந்து 55 கி.மீ., தொலைவில் உள்ளது திருச்செந்தூர்..


பழனியம்பதி

வசனமிக வேற்றி மறவாதே
மனதுதுய ராற்றி லுழலாதே
இசைபயில் சடாட்ச ரமதாலே
இகபர சௌபாக்யம் அருள்வாயே..

பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழனிமலை வீற்ற ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர் சிறைமீட்ட பெருமாளே!..
திருப்புகழ்

கந்த வேலன் - பால விளையாட்டாக - ஒரு பழத்தின் பொருட்டு கோபம் கொண்டு - தனி மலையில் நிற்பதாக ஐதீகம்.

சித்த புருஷரான போகரால் வடிவமைக்கப்பட்ட நவபாஷாண திருமேனி -பழனி மலையின் உச்சியில் விளங்குகின்றது..

மலை உச்சியில் திருக்கோயிலுக்கு அருகில் போகரின் ஜீவசமாதியும் அமைந்துள்ளது

பழனி மலையடிவாரத்தில் திருஆவினன்குடி திருக்கோயில் அமைந்துள்ளது..
திண்டுக்கல்லிலிருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ளது பழனி..


சுவாமிமலை

பாதி மதிநதி போது மணிசடை
நாதரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா

காதுமொரு விழி காகமுற அருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காமலுனதிரு
காலில் வழிபட அருள்வாயே..

ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடும் மயிலினில் ஏறிஅமரர்கள்
சூழ வலம்வரும் இளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனில் உறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே!..
திருப்புகழ்

நான்முகன் அறியாத பிரணவத்தின் பொருளை - தந்தைக்கு உபதேசித்தருளிய திருத்தலம்.

திருக்கோயில் கட்டுமலை..  மூன்று தளங்களும் அறுபது படிக்கட்டுகளும் கொண்டு விளங்குகின்றது..

காவிரியின் வடகரையில் உள்ள திருத்தலம்..
தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் - திருவலஞ்சுழியில் இருந்து வடக்கே 2.கி.மீ தொலைவு. கும்பகோணத்திலிருந்து 10.கி.மீ தொலைவு.


திருத்தணிகை

இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமே நீ
ரிழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே

பெருவயிறீளை எரிகுலைசூலை
பெருவலிவேறு முளநோய்கள்
பிறவிகள் தோறும் எனைநலியாத
படியுன தாள்கள் அருள்வாயே..

வருமொருகோடி அசுரர்பதாதி
மடிய அநேக இசைபாடி
வருமொரு கால வயிரவராட
வடிசுடர் வேலை விடுவோனே

தருநிழல் மீதிலுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!..
திருப்புகழ்

திருமுருகன் வள்ளி நாச்சியாரின் திருக்கரம் பற்றிய திருத்தலம்..
பெருமானின் கோபம் தணிந்த தலம். அதனால் தணிகை என்பர்..

மலை உச்சியின் மீது திருக்கோயில்.
சென்னையிலிருந்து 90 கி.மீ., தொலைவிலுள்ளது.


பழமுதிர்சோலை

அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி
அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி - அவர்மேலாய்
இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி வருவோனே
இருநிலமீதில் எளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்..

மகபதியாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறைவேடன் அருளிய பூஜை மகிழ்கதிர்காமம் உடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலைமலைமிசை மேவு பெருமாளே!..
திருப்புகழ்

திருமுருகன் வள்ளி தெய்வயானையுடன் திருக்காட்சி நல்கும் திருத்தலம்.. குன்று தோறாடல் எனவும் கூறுவர்.

அழகர் மலைக்கு மேலே 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோயில்.
மதுரையிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது - பழமுதிர்சோலை.


வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பவன் வெற்றி வேற்குமரன்..

அவனது திருவடிகளை நெஞ்சில் நிறுத்தி வழிபட்டு மேன்மை நலம் எய்துவோமாக!..

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்தோனை விளங்குவள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் 
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே!..
கந்தரலங்காரம்.

முருகா சரணம் முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம் .. சரணம்!..

முருகன் திருவருள் முன்னின்று காக்கும்..
* * *

21 கருத்துகள்:

  1. தங்களின் பதிவால் நாங்கள் முன்னர் பார்த்த முருகன் கோயில்களுக்கு மறுபடியும் செல்லும் பாக்கியம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. 6 படை தரிசனம் கண்டு களித்தேன் ஜி சிறப்பான பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. தங்களால் ஒரு பயணம்மேற்கொண்ட உணர்வு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. துல்லியமான தகவல்களுடன் பதிவு சிறப்பு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஆறுபடைவீடுகளையும் தரிசனம் செய்து வந்த மகிழ்ச்சி உங்கள் பதிவால்.
    நாங்கள் செல்வமுத்துகுமரனை கண்டு வந்தோம் இன்று.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. சிறப்பான தரிசனம்.... நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. அறுபடை வீடுகளையும் சென்னை பெசண்ட் நகரில் ஒரே இடத்தில் நிறுவி இருக்கிறார்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      வட சபரி - வட குருவாயூர் என்று இருக்கின்றன.. ஆறுபடை வீடுகளையும் ஒன்றாக அமைத்துள்ளார்கள்.. வயதானவர்களுக்கும் அங்கெல்லாம் சென்று அலைய முடியாதவர்களுக்கும் நிம்மதியாகின்றது..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. வணக்கம்,
    தங்களுடன் நாங்களும் பயணித்தோம்,
    அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. எம்பெருமான் முருகன் பற்றி அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. தமிழ்கடவுள் எங்களுக்கு மிகவும் பிடித்தவர்...நல்லதோர் தரிசனம் காண வழிவகுத்த தங்களுக்கு எங்கள் நன்றிகள் பல....பதிவும் அருமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. முருகனை பற்றிய பதிவு மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..