நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 03, 2015

தஞ்சையில் கோலாகலம்

தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் நிகழ்ந்து - ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.


ஸ்ரீ தியாகேசர் - நீலோத்பலாம்பிகை
கடந்த 2013-ல் தஞ்சை பெரிய கோயிலுக்கு என புதிதாக தேர் செய்வதற்கான திருப்பணி தொடங்கியதும் -

மக்களிடம் பொங்கியெழுந்த ஆர்வமும் மகிழ்ச்சியும் கடந்த 29/4 அன்று நிகழ்ந்த தேரோட்டத்தின் போது உற்சாக ஊற்றாக பூரிப்புடன் வெளிப்பட்டது.


20/4 அன்று புதிய தேரின் வெள்ளோட்டம் நிகழ்ந்த போதே - தஞ்சை மாநகர மக்கள் பரவச நிலைக்கு ஆளாகினர்.

அந்த நிலையில் - 29/4 புதன்கிழமை - திருத்தேரினை பக்திப் பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலின் சித்திரைப் பெருவிழா ஏப்ரல்/15 அன்று தொடங்கியது.

இத்திருவிழாவில் பதினைந்தாம் நாள் (29/4 புதன்) திருத்தேர்.
புதன்கிழமை காலை ஐந்து மணியளவில் திருக்கோயிலில் இருந்து - மங்கலவாத்தியங்கள் முழங்க முளைப்பாரி முன் செல்ல - 

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதியாகராஜர் - கமலாம்பிகை, ஸ்ரீபெரியநாயகி அம்மன், ஸ்ரீசண்டீகேசுவரர் - ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி - 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பின்தொடர, ஒன்றன் பின் ஒன்றாக மேல ராஜவீதியில் உள்ள தேர் மண்டபத்தை அடைந்தனர்.



Dr. B. ஜம்புலிங்கம் அவர்களுக்கு நன்றி..
பூர்வாங்க பூஜைகள் நிகழ்ந்ததும் - காலை 6.00 மணியளவில் ஸ்ரீதியாகராஜர் - நீலோத்பலாம்பிகை திருத்தேரில் எழுந்தருளினர்.
இதேபோல - விநாயகர், சுப்ரமணியர், ஸ்ரீபெரிய நாயகி அம்மன், சண்டீகேசுவரர் - தனித்தனி ரதங்களில் எழுந்தருளினர்.

இதையடுத்து, சுவாமி - அம்பாளுக்கு 6.15 மணியளவில் முதல் தீபாராதனை காட்டப்பட்டது.

6.30 மணிக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
விநாயகர், சுப்பிரமணியர் ரதங்கள் முன்னே செல்ல தியாகராஜர் - கமலாம்பாள் எழுந்தருளிய திருத்தேர் பின்னால் சென்றது. 


திருத்தேரினை ஸ்ரீபெரிய நாயகி அம்மன், சண்டீகேசுவரர் - ரதங்கள் பின் தொடர்ந்தன.

கோயில் யானை கம்பீரமாக முன் நடந்தது.

நாகஸ்வர இசையுடன் சிவகண வாத்தியங்கள் முழங்கியவாறு முன் செல்ல -
ஓதுவார் மூர்த்திகள் தேவார திருவாசகம் ஓதியவாறு சென்றனர்.




மேல ராஜவீதியில் புறப்பட்ட தேர் - வடக்கு ராஜ வீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜ வீதி வழியாக மீண்டும் மேல ராஜ வீதி தேர் மண்டபத்தில் பிற்பகல் 1.45 மணியளவில் நிலை நிறுத்தப்பட்டது.

இதனிடையே - முன்னதாக குறிக்கப்பட்ட இடங்களிலும் மற்றும் பல இடங்களிலும் பக்தர்களின் தரிசனத்துக்காக திருத்தேர் நிறுத்தப்பட்டது. 





அப்போது - தேங்காய் உடைத்து , தீபாராதனை செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.  

ஒவ்வொரு இடத்திலும் 15 நிமிஷங்கள் முதல் அரை மணிநேரம் வரை நின்று சென்றது. 

மேலும், திருத்தேரின் முன்னே தப்பாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் - என கோலாகலமாக நிகழ்த்தப்பட்டது.

தேரோட்டத் திருநாளன்று - உடனுக்குடன் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன.

இப்படியொரு - பக்தி வெள்ளத்தை தஞ்சையில் இதுவரைக்கும் யாரும் கண்டதில்லை..




ஸ்ரீபிரஹந்நாயகி உடனாகிய பெருவுடையாரின் நல்லருள் துணையுடன் திருத்தேரோட்டம் பிரம்மாண்டமாக வெகு சிறப்பாக நிகழ்ந்தேறியது.

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தேர் இல்லாததால், இதுவரை கோயிலுக்குள் மட்டும் சிறிய அளவில் ரத உற்சவம் நடத்தப்பட்டது. 
புதிய தேர் திருப்பணிக்கு நிதி ஒதுக்கி - ஆவன செய்த அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!..

புதிதாகத் தேரினை உருவாக்கும் பணியினை ஏற்று - சிறப்புடன் வடிவமைத்துக் கொடுத்த அரும்பாவூர் ஸ்தபதி திரு. வரதராஜன் அவர்களுக்கும் அவர்தம் குழுவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!..

அதன் பின் தொடர்ந்த பணிகளை செம்மையாக நிறைவேற்றிய இந்து அற நிலையத்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தினர் ஆகியோருக்கும் நன்றி!..

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திருத்தேருக்கு - சக்கரங்களை உருவாக்கிக் கொடுத்த - திருச்சி BHEL நிறுவனத்தினருக்கு நன்றி..

திருத்தேரை வண்ண வண்ன திரைச்சீலைகளாலும் தொம்பைகளாலும் அலங்கரித்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நன்றி..

திருத்தேரின் ஓட்டத்தை முட்டுக்கட்டைகளால் நெறிப்படுத்தி தேரடியில் நிலைநிறுத்திய சாரதியருக்கும் மற்றும் சீர் பாதந்தாங்கி வந்தவர்களுக்கும் நன்றி..



மங்கல இசையுடன் சிவகண வாத்தியங்களை முழக்கிய சிவனடியார்கள் மற்றும் திருமுறைப் பண்ணிசைத்த ஓதுவார் மூர்த்திகளுக்கு அன்பின் வணக்கமும் நன்றியும்!..

கூத்தொலி பறையொலி என குதுகலித்து வந்த - தப்பாட்டக் குழுவினருக்கும் கோலாட்ட குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி..

சமய வழி நின்று தொண்டாற்றிய வழிபாட்டு மன்றத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..
தேர்த் திருவிழாவின்போது சிறப்பாக பணியாற்றிய - தஞ்சை மாநகர காவல் துறையினர், மாவட்ட சுகாதார நலத் துறையினர், களப்பணியாளர்கள் மற்றும் பலவழிகளும் சேவை புரிந்த அனைவருக்கும் நன்றி..


உடனுக்குடன் சிறப்பான படங்களை வழங்கிய - நண்பர் முகம்மது ஜாவீத் அவர்களுக்கும் தஞ்சை Fb அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி..


தேரோட்டத்தின் காணொளி நேற்றிரவு தான் கிடைத்தது.
நிகழ்வுகளை அழகாகத் தொகுத்து வழங்கிய - SFA ஸ்டூடியோவினருக்கு (Swamy Foto Animation Studio, Thanjavur) நன்றி..



ஆங்காங்கே பக்தர்களுக்கு சித்ரான்னம், நீர் மோர், குளிர் பானங்கள் - என வழங்கிய நல்லோர்களுக்கும் மிக்க நன்றி..


தேரோட்டம் காண்பதற்கென - தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்தும் ஆவலுடன் குழுமிய சிவனடியார்களுக்கும் பக்தகோடியினருக்கும் அன்பின் வணக்கங்கள்!..

ஈசன் எம்பெருமானை - ஆழித்தேர் வித்தகர் - என்று அப்பர் சுவாமிகள் புகழ்ந்து ஏத்துவார்..

அந்த ஆழித்தேர் வித்தகனை அருள் தரும் பெருமானை 
ஆருயிரில் குடிகொண்ட தியாகேசனை - 
தஞ்சை மாநகர் கண் கொண்டு வணங்கி கை கொண்டு தொழுதது..

என்றன்றும் நித்ய விநோதனாக
நின்று வாழ்ந்து கொண்டிருக்கும் 
மாமன்னன் ஸ்ரீ ராஜராஜ சோழப் பெருமான் 
இத்தேரோட்டத்தினைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்திருப்பார்!.

அனைவருக்கும் அனைத்து நலன்களும் உண்டாகட்டும்.


தனியரெத் தனைஓராயிர வருமாந்
தன்மையர் என்வயத் தினராங்
கனியர்அத் தருதீங் கரும்பர்வெண் புரிநூற்
கட்டியர் அட்ட ஆரமிர்தர்
புனிதர்பொற் கழலர் புரிசடா மகுடர்
புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்கு
இனியர் எத்தனையும் இஞ்சிசூழ்
தஞ்சை ராசராசேச்சரத்து இவர்க்கே!..
-: கருவூரார் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
* * * 

12 கருத்துகள்:

  1. தங்களால் மீண்டும் ஒரு முறை நேரில் காணும் வாய்ப்பு கிட்டியது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நேரில் தரிசித்த தாங்கள் கொடுத்து வைத்தவர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. நிகழ்வுகள் அனைத்தும் அருமை... நன்றிகள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. தஞ்சை தேரோட்டம் கண்கள் குளிர கண்டோம் ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தேரோட்டத்தில் வீதியில் திருப்பங்கள் இருக்காதா.?கல்பாத்தித்தேரில் தேரைத் திருப்ப பின்புறமிருந்து யானை ஓரச் சக்கரத்தில் முட்டி திசை மாற்றும் . நன்றிகூறும் போது சக்கரங்களை வடிவமைத்து செய்து கொடுத்த பி எச் இ. எல் நிறுவனம் விட்டுப் போய் விட்டதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நான்கு ராஜ வீதிகளிலும் திருப்பங்கள் உண்டு..
      திருப்பங்கள் இல்லாத் தேரோட்டமா!..

      இங்கே - முட்டுக் கட்டை போட்டு திருப்பியிருக்கின்றனர்..

      BHEL விட்டுப் போனது கவனக்குறைவு தான்..

      தங்கள் அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. காணொளி திறக்கவில்லை. மீண்டும் முயற்சித்துப் பார்க்கிறேன்.

    தேரோட்டம் பற்றிய படங்கள் கண்டு ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தஞ்சை தேரோட்டம் காண வந்ததற்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. ஆகா, பார்க்காமல் விட்டேன் போலும். தங்கள் பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தேரோட்டத்தை நீங்கள் நேரில் பார்த்திருப்பீர்கள்.. எனினும்,
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..