நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 20, 2016

குருவி.. குருவி..

தாத்தா!..

என்னம்மா?..

இதெல்லாம் என்ன குருவி.. தாத்தா?..

வர்ஷிதாவின் கைகளில் வண்ணப் பறவைகளின் சித்திரப் புத்தகம் இருந்தது..


சிட்டுக் குருவி...டா செல்லம்.. இது வெறும் படம் தானே!.. இன்னும் கொஞ்ச நேரத்தில பாரேன்.. உன்னைப் பார்க்கணும்..ன்னு நிஜமான குருவிங்களே வரப் போறாங்க!..

எங்கேயிருந்து வர்றாங்க?..

ரொம்ப தூரத்தில இருந்து வர்றாங்க!..

ஏன் .. அவங்கள்ளாம்.. இங்கே நம்ம வீட்டுக்கிட்ட இல்லையா?..

இருந்தாங்க.. ஆனா, இப்ப இல்லே!..

ஏன்?..

நாம தான் அவங்களோட கூட்டை எல்லாம் அழிச்சிட்டோமே!..

அப்ப.. அந்தக் குருவிங்களுக்கெல்லாம் வீடு இல்லையா?..

இருந்ததே.. நம்ம வீட்டிலேயே ஒரு ஓரமா கூடு கட்டிக்கிட்டு இருந்தாங்களே!..

கூட்டுக்குள்ள யாரெல்லாம் இருந்தாங்க?..

அம்மா குருவி.. அப்பா குருவி.. பாப்பா குருவி.. எல்லாரும் இருந்தாங்க!..


ஏன் தாத்தா.. கூட்டை எல்லாம் அழிச்சீங்க.. ரொம்ப தொந்தரவு செஞ்சாங்களா?..

இல்லேம்மா.. அவங்களால நல்லது தான் நடந்தது..

நல்லது தான் செஞ்சாங்களா!..

ஆமாம்.. சின்னச்சின்ன புழு பூச்சி கொசு எல்லாம் பிடிச்சு தின்னுடுவாங்க..

அந்தப் பூச்சிக்கெல்லாம் வலிக்காதா தாத்தா?..

வலிக்கும் தான்.. ஆனா.. அந்த புழு பூச்சிகள் தானே அந்த குருவிகளுக்கு சாப்பாடு.. அதுதானே அதுங்களுக்கு இயற்கை..

இயற்கை..ன்னா என்ன தாத்தா?..

இயற்கைன்னா.. ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது.. அந்த ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு ஆதாரம்.. இது இல்லாமல் அது இல்லை.. அது இல்லாமல் இது இல்லை..

எனக்குப் புரியல தாத்தா!..

எல்லாம் படிச்ச பெரியவங்களுக்கே இயற்கைன்னா என்னான்னு புரியலை.. பச்சைக் குழந்தை நீ.. உனக்கு எப்படிம்மா புரியும்!..

அப்ப எனக்குப் புரியதா?..

செல்லம்!.. நீ இன்னுங் கொஞ்சம் பெரிய புள்ளையானதும் உனக்கு எல்லாம் புரியும்மா!..

அப்ப சரி.. அந்தக் குருவி எல்லாம் ஏன் இங்கேயிருந்து போச்சு.. சொல்லுங்க!..


நமக்கு பக்கத்திலய இருந்த அந்தக் குருவியெல்லாம் நமக்கு எந்தக் கெடுதலும் செய்யலை.. ஆனா மண்ணுக்கு கெடுதலா இருந்த பூச்சிங்க எல்லாத்தையும் தின்னு ஒழிச்சுதுங்க..

குருவி மற்ற பறவைகளால எல்லா இடங்கள்..லயும் தானியங்கள் பரவி நல்லது தான் நடந்துச்சு..

அப்புறம் ஏன்.. அந்தக் குருவி எல்லாம் ஏன் இங்கேயிருந்து போச்சு?..

சொல்றேன்.. நவீன விஞ்ஞானம் .. விவசாயம்.. அப்படின்னு ரசாயன உரங்களப் போட்டு சாகுபடி செஞ்சாங்க!..

சாகுபடி..ன்னா என்ன தாத்தா?..

அன்னைக்குப் போனோமே.. நெல்லு வயலு.. நாத்து.. பயிரு.. எங்க பார்த்தாலும் பச்சைப் பசேல்..ன்னு இருந்திச்சே.. ஆளுங்கள்லாம் வேலை செஞ்சாங்களே!.. அதான் சாகுபடி...

ம்ம்ம்..நெல்லு வயலா!.. அங்கே வாய்க்கால்.. ல மீனெல்லாம் பார்த்தோமே!..

ஆமாம்.. அந்த நெல்லு வயல்..லயும் மற்ற பயிர்கள்..லயும் ரசாயன உரங்களைப் போட்டு வளர்த்தாங்க..

உரம்..ன்னா என்ன தாத்தா?..

உரம்..ன்னா.. இப்ப உனக்குப் பசிக்குதுல்ல..

ஆமா..

அம்மா.. உனக்கு சோறு ஊட்டி விடுறாங்களால்ல...

ஆமா..

அந்த மாதிரி.. நெல்லு நாத்துக்கும் பசிக்கும்.. அதுக்கு சாப்பாடு தான் உரம்!.. புரியுதா?..

ம்ம்ம்...

அந்த மாதிரி உரம் போட்டதில..  புழு பூச்சி எல்லாம் செத்துப் போச்சு..

சாமிகிட்ட போயிடுச்சா.. ஏன் தாத்தா?..

அந்த உரம் எல்லாம் விஷம்..டா செல்லம்..  ரசாயன உரத்தைப் போட்டு சாகுபடி செஞ்சதும் மண்ணு விஷமாகிப் போச்சு..இதனால மண்ணுல இருந்த புழு பூச்சி.. எல்லாம் அழிஞ்சு போச்சு.. புழு பூச்சி..ங்க அழிஞ்சு போனதும் குருவிங்களுக்கு சாப்பாடு இல்லாம போச்சு...

அப்ப பசிக்குமே.. பாப்பா குருவியெல்லாம் அழுவுமே!..

அழுதிச்சுங்க தான்.. ஆனா மனுஷங்களுக்கு குருவி அழுவுறது தெரியல!..

ஏன்.. தாத்தா?..


எல்லாமே தனக்கு தனக்கு ..ன்னு நினைச்சுக்கிட்டு இருந்த மனுஷன் - இந்த பூமியில பறவைக்கும் விலங்குக்கும் மரம் செடி கொடி எல்லாத்துக்கும் உரிமை இருக்குங்கிறதை மறந்துட்டான்.. அதனால..

அதனால?..

கண்ணுல பட்டது எல்லாத்தையும் நாசம் பண்ண ஆரம்பிச்சான்!.. மரம் மட்டை அழிஞ்சதால குருவிங்க வாழ்க்கை பாவமா போச்சு...

ஏற்கனவே பூச்சி புழு இல்லாம பசியோட இருந்த குருவிங்களுக்கு - மரம் மட்டை எல்லாத்தையும் அழிச்சதால தூங்கறதுக்கு கூடும் இல்லாம போச்சு...

பாவம் தாத்தா.. குருவிங்க!..

பாவப்பட்ட குருவிகளை யாருமே திரும்பிப் பார்க்கலை.. நிறைய குருவிங்க இருந்த இடம் தெரியாமலேயே போச்சு..

ஜனங்களோட வாழ்க்கை முறையும் மாறிப் போனதால - வீடு வாசல் எல்லாமும் மாறிப் போச்சு.. குருவிங்க குடியிருந்த தாழ்வாரம் எல்லாம் இப்போ கட்டுற வீடுகள்..ல கிடையாது.. அதனால நம்மோட கூட இருந்த குருவிங்க எல்லாம் நம்மை விட்டு போயிடுச்சுங்க..

இயற்கையா பூமியில இருந்த மரம் காடு எல்லாத்தையும் அழிச்சதால - இந்த மண்ணுக்கும் ஜனங்களுக்கும் நிறைய கஷ்டம் வந்தது..

மரங்கள் இல்லாததால.. மழை குறைந்து போனது.. பூமியில தண்ணி இல்லாம என்ன செய்ய முடியும்.. இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள்...

அப்புறந்தான்.. நல்லவங்களும் படிச்சவங்களும் கூடி இயற்கைய காப்பாற்ற வேணும்..ன்னு முடிவு செஞ்சாங்க... இயற்கைய காப்பாற்றலேன்னா... பெரிய ஆபத்து எல்லாம் வரும்..ன்னு சொன்னாங்க..


அதெல்லாம் கேட்ட ஜனங்க ஓரளவுக்கு திருந்துனாங்க.. அதனால.. மறுபடியும் மரம் எல்லாம் நட்டு வைக்கிறாங்க.. மறுபடியும் குருவி எல்லாம் வரணும்.. ந்னு ஆசைப்படுறாங்க...

குருவிங்க சாப்பிட தானியம் எல்லாம் சேகரிச்சு வைக்கிறாங்க.. அதோட, அதுங்களுக்கு தண்ணியெல்லாம் வெச்சு காத்திருக்காங்க..

அப்ப - குருவிங்களுக்கு கூடு?.. - வர்ஷிதாவின் கண்களில் ஆவல் மின்னியது..

குருவிங்க கட்டுற கூடு மாதிரி மனுஷங்களுக்கு கட்டத் தெரியாது.. ஆனாலும், குருவிங்க வந்து தங்கற அளவுக்கு அட்டைப் பெட்டிகள்..ல கூடு செஞ்சு வைக்கிறாங்க.. மறுபடியும் குருவியெல்லாம் வீட்டைச் சுத்திப் பறக்கணும்.. ந்னு ஆசைப்படுறாங்க!..

அங்கெல்லாம் குருவிங்க.. வருதா தாத்தா!..

முன்னை விட இப்போ பரவாயில்லை.. கொஞ்சம் முன்னேற்றமா இருக்கு.. அதனால எல்லாரும் ஆர்வமா.. இதுல ஈடுபடறாங்க..

உலகம் பூராவும் இன்னைக்கு சிட்டுக் குருவிகள் தினம்..ன்னு கொண்டாட்டம் நடக்குது..

கொண்டாட்டம்.. ந்னா என்ன தாத்தா!..

அதான் பண்டிகை.. தீபாவளி மாதிரி.. சந்தோஷம்..

அப்போ.. நாம வெடி எல்லாம் வெடிக்கலையே?..

ஆகா.. வெடி எல்லாம் டமார்.. டமார்..ன்னு போட்டா குருவிங்க பயந்திடும்.. தேடி வர்றது எல்லாம் மறுபடி ஓடிப் போயிடும்.. இல்லையா.. அதனால தான் வெடி எல்லாம் வெடிக்கலை...

ம்ம்ம்..

குருவிகளைப் பத்தியும் மற்ற பறவைகளைப் பத்தியும் எல்லார்கிட்டயும் எடுத்துச் சொல்லணும்.. அதுங்களைப் பாதுகாக்கிறதுக்கு வேண்டியதைச் செய்யணும்.. செடி கொடி மரங்களைக் காக்க வேணும்.. உலகம் முழுதும் பச்சைப் பசேல்...ன்னு இருக்கிறதுக்கு நம்மால ஆனதைச் செய்யணும்..

அப்படிச் செஞ்சா...

அப்படிச் செஞ்சா.. குருவிகளுக்கு நல்லது..விலங்குகளுக்கு நல்லது.. நமக்கும் நல்லது.. இந்த பூமிக்கே நல்லது..

நானும் நல்லது செய்வேன்.. தாத்தா!..

வர்ஷிதா சொல்லிக் கொண்டிருந்தபோதே -

சடசட.. என்று சிறகடித்தபடி சிட்டுக் குருவிகள் வந்து சேர்ந்தன..

ஒருகணம் திகைத்தாலும் - வர்ஷிதாவின் முகத்தில் ஆனந்தச் சிரிப்பு..

வருக.. வருக!.. - என, அந்தக் குருவிகளை அன்புடன் வரவேற்றேன்..

இல்லம் முழுக்க சுற்றிப் பறந்து களித்தன - குருவிகள்..

நலம் தானே.. நீங்களெல்லாம்!..



நலம் தான்.. ஒரு குறைவும் இல்லை.. வெயில் தான் சற்று ஏறியிருக்கின்றது..
தோட்டத்தில் நிறைய செடி கொடிகள்.. நீர்த் தொட்டி, தானியப் பெட்டி.. உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கின்றது..

இதெல்லாம் கடமையல்லவா.. ஒருவிதத்தில் பிராயச்சித்தமும் கூட!.. இவள் தான் என் பேத்தி.. வர்ஷிதா!.. உங்களைப் பற்றித் தான் இவளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!..

ஹாய்!.. - என்றன குருவிகள்..

ஹாய்!.. - புன்னகை பூத்தபடி கையை நீட்டினாள் வர்ஷிதா..


வர்ஷிதாவின் கையிலும் தோளிலும் அமர்ந்து சற்றே விளையாடின..

அடடா.. இந்த சந்தோஷங்களை எல்லாம் தொலைக்க இருந்ததே - இந்த வையகம்!..

எல்லாமும் மீண்டு வருவதில் மகிழ்ச்சிதான்!..


அங்கிருந்த சிறுதானியங்களை அலகால் அளைந்து அழகாய் உண்டன..

சிறு சிறு துளிகளாய் நீரை அருந்தின..

சரி.. அன்பின் அழைப்புக்கு மிக்க நன்றி.. என்றென்றும் வேண்டும் நமது நட்பு.. இன்றைக்கு கல்யாணநாள் தங்களுக்கு.. எங்களுக்கு நலங்காட்டுகின்றீர்.. உங்களுக்கெல்லாம் அன்பின் நல்வாழ்த்துகள்.. செல்லச் சிட்டு வர்ஷிதாவுக்கு சின்னச் சிட்டுகளின் அன்பு முத்தங்கள்..

மிக்க நன்றி.. மிக்க நன்றி!..

அங்கே - தமிழ் இளங்கோ அண்ணா அவர்கள்
இறைவன் இருக்கின்றானா?..  - என்று ஒரு பதிவு போட்டிருக்கின்றார்கள்..

ஆமாம்.. நானும் படித்தேன்.. சிந்தனைக்குரிய விஷயம்...

இறைவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
இயற்கை இருக்கட்டும்.. இயற்கையாகவே இருக்கட்டும்!.
இயற்கை இருக்கும் வரைக்கும் தான் நமக்கு இங்கே இருக்கை!..

- என்றபடி, விடை பெற்றுக் கொண்டு விருட்டெனப் பறந்தன குருவிகள்..
  
கைகளை அசைத்து - குருவிகளுக்கு
விடை கொடுத்தவாறு நின்றிருந்தோம் -
நானும் வர்ஷிதாவும்!..



இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்!..

விட்டு விடுதலை ஆகி நிற்பாய் - இந்தச் 
சிட்டுக் குருவியைப் போல!..

சுதந்திரமான மனதிற்காக - மகாகவியின் வாக்கு!..

அந்த சுதந்திரம் சிற்றுயிர்கள் அனைத்திற்கும் கிடைக்க 
எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக!..

வாழ்க நலம் 
***