நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

பாரதியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 11, 2019

அன்பின் மழைத்துளி

இன்று மகாகவி பிறந்தநாள்

11 - 12 - 1882
உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்டென்று தானறிதல் வேணும்..
வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!..
-: மகாகவி :-
***

கீழுள்ள காணொளியை Fb ல் வந்தது..

மழையொடு மழையாக
அந்தப் பெண்ணின் முகத்தில் வழியும்
அன்பினைப் பாருங்கள்..

இந்தக் காணொளியைக் கண்டு
என்மனதில் எழுந்தவையே இங்குள்ள
சில வரிகள்...



மனமெலாம் மாசற்ற தங்கம்
மண்மீது அதனாலே மழைத்துளிகள் தங்கும்
மொழியற்ற உயிரிடத்துக் கொஞ்சும்
மொழிகண்டு நனைகிறதே நெஞ்சம்..

வாழ்க நலம்
ஃஃஃ

வியாழன், டிசம்பர் 13, 2018

மறக்கவும் கூடுமோ!..


மார்பில் அணிவதற்கே உன்னைப் போல்
வைர மணிகள் உண்டோ?..
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப் போல்
செல்வம் பிறிதும் உண்டோ?..
***

பாரதி.. பாரதி.. பாரதி...
உன்னையும் மறப்பதுண்டோ!..
***

மார்கழி நெருங்கி விட்டது..
மகாகவியை வாழ்த்தவும்
மார்கழியை வரவேற்கவும்
மனதுக்கினிய பாடல் ஒன்று..


காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா!..
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா - நின்றன் 
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா!..

கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா!..
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா!..
***

வாழ்க பாரதி!..
ஃஃஃ

செவ்வாய், செப்டம்பர் 11, 2018

காளீ... தருக!...

இன்று மகாகவியின்
நினைவு தினம்..

11 செப்டம்பர் 1921
எண்ணிலாத பொருட்குவை தானும்
ஏற்றமும் புவியாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்
வெம்மையும் பெருந் திண்மையும் அறிவும்
தண்ணிலாவின் அமைதியும் அருளும்
தருவள் இன்றெனதன்னை என்காளி
மண்ணில் ஆர்க்குந் துயரின்றிச் செய்வேன்..
வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்...

தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்
வானம் மூன்று மழைதரச் செய்வேன்
மாறிலாத வளங்கள் கொடுப்பேன்
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்கறச் செய்வேன்
ஞானம் ஓங்கி வளர்ந்திடச் செய்வேன்
நான் விரும்பின காளி தருவாள்!...


துன்பம் இனியில்லை.. சோர்வில்லை.. தோற்பில்லை..
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட
நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக.. தீமையை ஓட்டுக..
- மகாகவி :-

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் 
ஃஃஃ

திங்கள், டிசம்பர் 11, 2017

பாட்டுத் திறத்தாலே..

11 டிசம்பர் 1882
மகாகவி பிறந்த நாள்
பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப் 
பாலிக்கின்ற எங்கள் மகாகவிக்கு 
இன்று பிறந்தநாள்..
***


காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் அங்கு 
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அந்தக்
காணி நிலத்திடையே ஓர்மாளிகை
கட்டித் தரல்வேண்டும் அங்கு
கேணிய ருகினிலே தென்னைமரம்
கீற்றும் இளநீரும்


பத்துப் பன்னிரண்டு தென்னைமரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர்போலே நிலவொளி
முன்புவர வேணும் அங்கு
கத்துங் குயிலோசை சற்றேவந்து
காதிற்பட வேண்டும் என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந்
தென்றல் வர வேணும்..


பாட்டுக் கலந்திடவே அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டு தரவேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப் 
பாலித்திட வேண்டும்..
***


துன்பம் இனியில்லை சோர்வில்லை தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட
நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக.. தீயது ஓட்டுக!..
-: மகாகவி :-

வாழ்க பாரதி.. வாழ்க பாரதி!.. 
* * *

திங்கள், செப்டம்பர் 11, 2017

நேசம் மறக்கவில்லை


ஆசை முகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?..
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ!..

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணன் அழகு முழுதில்லை..
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்!..


ஓய்வும் ஒழிதலும் இலாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயும் உரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினை எப்போதும்!..

கண்ணன் புரிந்து விட்ட பாவம் - உயிர்க்
கண்ணனுரு மறக்கலாச்சு
பெண்களில் இனத்திலிது போல - ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ!...


தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்து விட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதும் இல்லை தோழி..

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்களிருந்து பயனுண்டோ?..
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி!..
* * * 

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு!..
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க..
நன்மை வந்தெய்துக.. தீதெலாம் நலிக!..
***

இன்று மகாகவியின் நினைவு நாள்..

இருள் சூழ்ந்திடும் வேளையில்
பாரதியின் வார்த்தைகளே கைவிளக்கு!..

பாரதி வாழ்க.. பாரதி வாழ்க!..

ஓம் சக்தி ஓம்!..
* * * 

ஞாயிறு, டிசம்பர் 11, 2016

நீ எனது இன்னுயிர்..

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்!..

ஏன்.. என்ன ஆச்சு.. உங்களுக்கு!?..

அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூறித் ததும்பும் விழிகளும் -

சரிதான்.. இத்தனை வயசுக்கு அப்புறம் பித்து தான் பிடிச்சிருக்கு!.

பத்து மாற்றுப் பொன்னொத்த நின்மேனியும்..

பசங்க எல்லாம் வெளியே போய்ட்டாங்க...ங்கற தைரியமா!..

இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்
என்னை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவனாகப் புரியுமே!..

ஏன்!.. இப்போ மட்டும் என்னவாம்?..
தேவலோகம் போலத்தானே இருக்கு!.. 




நீ எனதின்னுயிர் கண்ணம்மா!..
எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்!..

ஆகா!.. இப்படியே இருந்தா..
வீட்டு வேலையெல்லாம் யார் பார்க்கிறதாம்!?..


துயர் போயின போயின துன்பங்கள்
நின்னைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே!..

அதுதானே.. வேணும்!.. 
வீணையடி நீ எனக்கு.. மேவும் விரல் நான் உனக்கு!.. 
அப்படின்னு இருந்தா.. துன்பங்கள் துயரங்கள் தொலையாதா!..

என்றன் வாயினிலே அமுதூறுதே..
கண்ணம்மா என்ற பேர் செல்லும் போழ்திலே!..

..... ..... ..... ..... .....!..

கண்ணம்மா!..

ம்!..

கண்ணம்மா!..

ம்!!..

என்றன் வாயினிலே அமுதூறுதே..
உயிர்த் தீயினிலே வளர் ஜோதியே 
உன்றன் சிந்தனையே எந்தன் சித்தமே!..

..... ..... ..... ..... .....!..

தோயும் மது நீ எனக்கு.. தும்பியடி நான் உனக்கு..
அக்கா.. அக்காவ்!..

வாம்மா.. தாமரை!.. நல்ல நேரத்தில தான் வந்திருக்கிறாய்!.. 
பாரு.. உங்க.. அத்தானை.. பாரதியார் பாட்டைப் பாடிக்கிட்டு!...

அப்போ.. நான் வந்து கெடுத்துட்டேனா!?.. அடடா!.. 

தாரையடி நீ எனக்கு.. தண்மதியம் நான் உனக்கு!..
வீரமடி நீ எனக்கு.. வெற்றியடி நான் உனக்கு!..

கேட்டியா.. தாமரை!.. 

நிஜந்தானே அக்கா!.. வீரத்தையும் வெற்றியையும் பிரித்துப் பார்க்க முடியுமா?.. வீட்டுக்கு வீடு இப்படி..ன்னா வாழ்க்கையே வசந்தம் தானே அக்கா!.. 

நல்லா சொல்லு தாமரை!..

ஆமா.. பசங்க எல்லாம் எங்கே?..

அவங்க இல்லை..ங்கற தைரியம் தான்!..

இருந்தாலும் -
பாயும் ஒளி நீ எனக்கு.. பார்க்கும் விழி நான் உனக்கு..
தோயும் மது நீ எனக்கு.. தும்பியடி நான் உனக்கு!..
அப்படின்னு.. நீங்க ஒவ்வொரு நிமிஷத்தையும் கொண்டாடறது சந்தோஷமா இருக்கு அக்கா!..

கிளித்தோப்புல உங்க அத்தான் - என்னைச் சுத்திச் சுத்தி வந்து பாடினதும் - இந்தப் பாட்டு தான்!.. 

நீங்களும் அத்தானும் கிடைக்கறதுக்கு நான் கொடுத்து வச்சவ அக்கா!..

ஏம்மா!?..

வாழ்க்கை..ன்னா.. இதுதான்.. இப்படித்தான்..ன்னு!.. எவ்வளவு விஷயங்கள் கத்துக்கிட வேண்டியிருக்கு உங்கக் கிட்டயிருந்து!..

எங்கக் கிட்டயிருந்து இல்லேம்மா!.. மகாகவி.. கிட்டயிருந்து !..

சரி.. நாம புறப்படுவோம்.. கருத்தரங்கத்துக்கு நேரமாச்சு!..

புறப்படலாம்... அக்கா.. பசங்க எங்கே..ன்னு கேட்டேனே?..

அவங்க முன்னயே போய்ட்டாங்க!..

சரி.. செல்வி.. நாம புறப்படுவோம்.. தாமரை நீயும் வர்றியாம்மா?..

தாமரையை வரச் சொன்னதே நான் தானே!..

ஓ!...

அக்கா.. அங்கே யார் பேசப்போறது!..

உங்க அத்தான் தான்!.. என்ன தலைப்பு..ல பேசப் போறாங்க தெரியுமா!..

என்ன தலைப்பு.. அக்கா?..

பாரதி போற்றிய பெண்மை!..

அதைத்தான்!.. நான் நேர்..லயே பார்த்தேனே!..

தாமரை.. மகாகவியைப் பற்றி ஒவ்வொரு அறிவார்ந்த ஆண்மகனும் பேச வேண்டும் அம்மா!.. பெண்மை வெல்க!.. ந்னு கூத்தாடிய கவிஞன் அவன் அல்லவா!..

உண்மைதான் அத்தான்.. உண்மைதான்!..

சரி.. நீ அங்கே ஏதாவது பேசு தாமரை!..

கூட்டத்தில.. திடீர்..ன்னு என்ன பேசறது அத்தான்?..

பாரதியைப் பற்றி பேசறதுக்கு படிச்சுக்கிட்டா வரணும்?..

ஏதாவது பாடு.. தாமரை.. உனக்குத் தான் பாரதி பாட்டெல்லாம் தெரியுமே!..

சரிங்க.. அக்கா!.. 




நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் - இவள்
பார்வைக்கு நேர்ப்பெருந் தீ..
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தர் எல்லாம்
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர்
சக்தி ஓம்.. சக்தி ஓம்.. சக்தி ஓம்!..
***



போற்றி.. போற்றி!.. ஓராயிரம் போற்றி.. நின்
பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்!..
என்று பெண்மையைப் போற்றி நின்ற
மகாகவியின் பிறந்த நாள் இன்று!..

சக்தி ஓம்.. சக்தி ஓம்.. 
சக்தி ஓம்.. 
***

ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

சுட்டும் விழிச்சுடர்

11 டிசம்பர் 1882 - 11 செப்டம்பர் 1921
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ..
வட்டக் கரியவிழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?..

பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்வயிரம்..
நட்டநடு நிசியில் தெரியும்
நட்சத்தி ரங்களடி!..


சோலைமலர் ஒளியோ - உனது
சுந்தரப் புன்னகை தான்..
நீலக் கடலலையே - உனது
நெஞ்சில் அலைகளடி!..

கோலக் குயிலோசை - உனது
குரல் இனிமை யடி..
வாலைக் குமரியடி - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்!..

ஓவியம் - Rajeshwar Nyalapalli
சாத்திரம் பேசுகின்றாய் - கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடி..
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா
சாத்திரம் உண்டோடி?..

மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்..
காத்திருப் பேனோடி - இதுபார்
கன்னத்து முத்தம் ஒன்று!..

ஓவியம் - Rajeshwar Nyalapalli
இன்று மகாகவியின் நினைவு நாள்..

சுட்டும் சுடர்களாகிய சூரியனும் சந்திரனும், 
வட்டக் கரிய விழியெனும் வானத்துக் கருமையும்
நட்ட நடுநிசியின் நட்சத்திரக் கூட்டங்களும்

எம் நினைவில் பாரதி.. பாரதி!.. - என்றே
தோற்றுவிக்கின்றன..

புதிது புதிதாய் தமிழில் 
பயிற்றுவிக்கின்றன..

ஓவியம் - Rajeshwar Nyalapalli
வாலைக் குமரியென வாழும் தமிழுடன்
பாரதியின் பெயரும் என்றும் நிலைத்திருக்கும்!..

வாழ்க பாரதி.. வாழ்க பாரதி!.. 
***

புதன், ஜூலை 13, 2016

காக்க.. காக்க..

வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம்.. 
அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்லா இருக்கலாம்!..
-: கவிஞர் வாலி :-

ஆனால்,
இவ்வாறெல்லாம் நடந்தால் என்னதான் செய்ய முடியும்?...

மேலதிக விவரங்களை படங்களின் கீழுள்ள இணைப்பில் காணலாம்..













நன்றி - புதியதலைமுறை
***

வீட்டை விட்டு வெளியே சென்றால் - 
வம்பு வழக்கு ஏதும் இல்லாமல்
எந்த ஒரு விபத்திலும் சிக்காமல்
உடம்பு ரத்தக்களறி ஆகாமல்

நல்லபடியாக மீண்டும் வீடு திரும்புவதற்குக் கூட 
புண்ணியம் செய்திருக்க வேண்டும் போலிருக்கின்றது...

நம்மை நாமே காத்துக் கொள்ள இயலாத வேளைகளில் அக்கம் பக்கத்தினர் தெய்வம் போல துணைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை ஒன்று இருந்தது..


வனவிலங்குகள் கூட மாறுபட்ட சூழ்நிலைகளில் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்கின்றன என்கின்றார்கள் - ஆய்வியலாளர்கள்..

அப்படியான காணொளி ஒன்று - இதோ!..



சற்றே மனிதப் பண்பு குறைந்தவரைக் காண்டாமிருகம் என்று இழித்துரைப்பர்..

காணொளியில் - காண்டாமிருகத்தின் செயலினைக் காணுங்கள்..

ஆற்றைக் கடக்கும் மானைப் பிடித்து விழுங்க முயற்சிக்கின்றது முதலை..

அதைத் தடுத்து - 
மானைக் காப்பாற்றிக் கரை சேர்க்கின்றது - காண்டாமிருகம்.. 

ஐந்தறிவு விலங்கு எனப்படும் காண்டாமிருகம் மேலானதா - இல்லையா!..

இன்றும் கிராமங்களில் -
ஒருவருக்கொருவர் ஒத்தாசை என்றெல்லாம் பேச்சு வழக்குண்டு..

அதைத்தான் -
மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்லி வைத்தார்கள்...

ஆனால் -
அந்த வார்த்தைகள் - அப்படியான நம்பிக்கைகள்
இவை எல்லாம் மலையேறிப் போய் வெகுநாட்களாகின்றன..

ஆனாலும், முதுமொழி ஒன்று உண்டு..

அரசன் அன்று கேட்பான்.. தெய்வம் நின்று கேட்கும்!.. - என்று..

அதையாவது நம்புவோம்..

ஏனெனில்,

நம்பினார் கெடுவதில்லை.. நான்கு மறை தீர்ப்பு!.. - என்கிறார் மகாகவி..

அவர் தீர்க்க தரிசனம் பெற்றவர்.. 
அவருடைய வாக்கு மகத்தானது..

தெய்வம் கேட்கும்..
சத்தியமாக தெய்வம் கேட்கும்!..

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் நீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.. (0555) 
*** 

வெள்ளி, செப்டம்பர் 11, 2015

செல்வக் களஞ்சியம்

செல்வம் என்றால் பொன்னும் பொருளுமா?..

இல்லை..

அமுதத் தமிழ்!..

அதுதான் - அது ஒன்றேதான் செல்வம்!..

அதைத்தான் மகாகவி பாரதியார் கூறுகின்றார்!..


மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைரமணிகள் உண்டோ!..
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிதும் உண்டோ!..

இன்று மகாகவி பாரதியார் அமரத்வம் எய்தியநாள்!.. 
* * *

சின்னஞ்சிறு கிளியே - கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!..
என்னைக் கலிதீர்த்தே - உலகில் 
ஏற்றம் புரிய வந்தாய்!..

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!..
அள்ளி அணைத்திடவே - என்முன் 
ஆடிவரும் தேனே!..

ஓடி வருகையிலே - கண்ணம்மா
உள்ளங் குளிருதடி!..
ஆடித் திரிதல் கண்டால் - உன்னைப் போய்
ஆவி தழுவுதடி!..

உச்சிதனை முகர்ந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி!..
மெச்சியுனை ஊரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி!..

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி!..
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி!..

சற்று உன்முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சலம் ஆகுதடி!..
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்குதடி!..


உன்கண்ணில் நீர் வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டுதடி!..
என்கண்ணில் பாவையன்றோ - கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!..

சொல்லி மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்!..
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடுவாய்!..

இன்பக் கதைகள் எல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ!..
அன்பு தருவதிலே - உம்மைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ!..

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைரமணிகள் உண்டோ!..
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிதும் உண்டோ!..


மார்பில் அணிவதற்கே - பாரதி உன்னைப்போல் 
வைரமணிகள் உண்டோ!..
சீர்பெற்று வாழ்வதற்கே - உன் சொல்லைப் போல் 
செல்வம் பிறிதும் உண்டோ!..

எங்கள் ஞானத் திருவிளக்கே!..
உன்திருவடி தொழுகின்றேன்!..

ஓம் சக்தி.. ஓம் சக்தி.. ஓம் சக்தி..
ஓம்!.. 
* * * 

வியாழன், டிசம்பர் 11, 2014

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள்!..


தாயகத்தின் விடுதலையில் வேட்கை கொண்டு 
தமிழைத் தன் கைக் கொண்ட தலைமகன்!..

தமிழ்நிலம் பெற்றெடுத்த புதல்வருக்குள்
தமிழ் கொண்டு பகை கெடுத்த வீரமகன்!..

தமிழ் வாழ்க - நிலம் வாழ்க - குடி வாழ்க என்று 
தமிழுக்கே தனைக் கொடுத்த தங்கமகன்!..

தமிழுக்கு இதென்றும் தமிழர்க்கு இதென்றும்
செந்தமிழால் குறியிட்ட அன்புமகன்!..

அன்னவனின் பேர்பாடி சீர்பாடி புகழ்பாடி
அடிமலர்த்தாள் போற்றுகின்றேன் - வாழிஎன்று!.. 

தமிழ் கொண்டு தமிழகத்தை அலங்கரித்த மகாகவிக்கு 
இன்றைய பதிவு சமர்ப்பணம்!..


செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே!..

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு!..

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வைகை பொருனைநதி - என
மேவி யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு!..


முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு - செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு!..

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு!..

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு!..


வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு!..

சிங்களம் புட்பகம் சாவகம் - ஆதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு!..  


நாடு வாழ வேண்டும்., மக்கள் வாழ வேண்டும்., 
நலம்மிகும் நல்லோர் துணைக்கு வரவேண்டும்!..
நலம்நாடி வரும் நல்லோர் தோளுக்கும் 
நாயகியாம் பராசக்தி அருளல் வேண்டும்!..

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் - இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ

வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்
தஞ்சமென் றே உரைப் பீர்அவள் பேர் - சக்தி
ஓம்சக்தி.. ஓம்சக்தி.. ஓம்!..

நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்.,
அல்லது நீங்கும் என் றேயுலகேழும்
அறைந்திடு வாய் முரசே!

சொல்லத் தகுந்த பொருளன்று காண் - இங்கு
சொல்லு மவர்தமை யே
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி.. ஓம்சக்தி.. ஓம்!..


நம்புவ தேவழி என்ற மறையதன்னை
நாமின்று நம்பிவிட் டோம்
கும்பிட்டெந்நேரமும் சக்தி என் றாலுனைக்
கும்பிடு வேன் மனமே!..

அம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சம் இல்லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி.. ஓம்சக்தி.. ஓம்!..

பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு
போற்றி உனக்கிசைத் தோம்.,
அன்னை பராசக்தி என்றுரைத் தோம் - தளை
அத்தனை யுங்களைந் தோம்.,

சொன்ன படிக்கு நடந்திடுவாய் - மன
மே தொழில் வேறில்லை காண்.,
இன்னும தேயுரைப் போம்சக்தி ஓம் சக்தி
ஓம்சக்தி.. ஓம்சக்தி.. ஓம்!..

வாணியைச் சரண் புகுந்தேன்
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!..
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்.,

எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல்!.. சக்தி
வேல்!.. சக்தி வேல்!.. சக்தி வேல்!..

சக்திவேல்.. சக்திவேல்.. சக்திவேல்..
ஓம் சக்தி!.. ஓம் சக்தி!.. ஓம் சக்தி!.. 
ஓம்!.
* * *