நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 05, 2026

ஸ்ரீ ரமணர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 
வியாழக்கிழமை

சரணம் சரணம்
சற்குரு சரணம்



காணொளிக்கு நன்றி
சித்தர் வழிபாட்டுக் குழு

இன்றொரு பிரார்த்தனை

எங்கள் பிளாக் சக பதிவரான ஸ்ரீமதி சியாமளா வெங்கட்ராமன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடு மனதை வருத்துகின்றது...

விரைவில் நலமடைவதற்கு
வேண்டிக் கொள்வோம்..

ஓம் நம சிவாய
***

புதன், மார்ச் 04, 2026

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 புதன்கிழமை


மக்கள் திரள் கலைந்திருந்தது.. ஆயினும்  சீரான அழகுடன்  
மகாமகக் குளக்கரை..

மாசி மகத்தன்று மதியப் போதில் தீர்த்தவாரி வைபவம் முடிந்திருக்க நான் பிற்பகல் 3:45 மணியளவில் மகாமகக்குளத்தில் இறங்கி தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டு பரவசம் அடைந்தேன்..

நூற்றுக்கணக்கான மக்கள் நீராடிக் கொண்டு இருக்க என்னைப் போலவும் பற்பலர்...

குளத்திலிருந்து கரையேறி மேற்கு நோக்கி விளங்குகின்ற ஸ்ரீ அமிர்தவல்லி உடனாகிய அபிமுகேஸ்வரர் கோயிலில் சிவதரிசனம்.

ஒரு ஓரத்தில் செருப்பை விட்டு விட்டு திருக்குளத்தை வலம் வரத் தொடங்கினேன்...

கூட்டமாக இருந்தாலும் நெரிசல் இல்லை..

திரு உலா முடிந்த நிலயில் விஸ்வநாதர் அபிமுகேசர் தேர்களும் சப்பரங்களும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தன..







ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணத்திற்காக 
மேற்குப் படித்துறையில் பெண்கள் கூடியிருந்தனர்..



வழியில் ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வநாதப் பெருமான் தரிசனம்..











எவ்வித இடையூறும் இன்றி மகாமகக் குளத்தினை வலம் வந்து நிறைவு செய்தேன்..








மாலை ஆறு மணிக்கு மேல் திருக்குளத்தில் தீர்த்த ஆரத்தி...

மக்கள் மீண்டும் திரண்டு கொண்டிருந்தனர்.... 

தீர்த்த ஆரத்தியைத் தரிசிக்க ஆசை.. 

இருந்தாலும்
தொடர்ந்து நடந்ததனால் 
களைப்பு மேலிட்டது.. 

பேருந்து நிலைய நெரிசலை நினைத்தபடி ஸ்டேஷனுக்குச் சென்று ரயில் மூலம்  இரவு 8:00 மணியளவில்
தஞ்சைக்குத் திரும்பினேன்...

இயன்ற அளவில் தங்களுக்காக காட்சிப்படுத்தியுள்ளேன்...

காணொளி
வழங்கியோர்
சித்தர் வழிபாட்டுக்குழு

அவர் தமக்கு நன்றி


எல்லாம் ஈசன் செயல்
 
ஓம் நம சிவாய
***

செவ்வாய், மார்ச் 03, 2026

மணி மாலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி நிறைநிலா
செவ்வாய்க்கிழமை

சில ஆண்டுகளுக்கு முன் அன்னையின் 
பேரில் தொடுக்கப்பட்டு
தளத்தில் பதிவாகிய பாமாலை இது..

மீண்டும் 
தங்களுக்காக..
 

காப்பு
தனிமா மணியாய் மலரும்  பொருளே
ஒளிமா மணியாய் திகழும் அருளே
சிவமா மணியின் செல்வத் திருவே
தவமா மணியே கணபதி சரணம்..

மாணிக்கம் 
வருவாய்  வருவாய்
வாழ்வின் ஒளியாய் 
வருவாய் வருவாய்
வளர்தமிழ் வடிவாய்..
கடைக்கண் ஒளியால்
காரிருள் தீர்ப்பாய் 
திருவடி நினைந்தேன்
தினமும் காப்பாய்.. 
பேணிக் கொண்டாடிடும்
அடியார் தமக்கு 
காணிப் பொன்னளந்திடும்
கருணா சாகரி.. 
மாணிக்க மூக்குத்தி 
மதுரையின் மீனாள் 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 1

வைரம்
உயிராவணமாய்
உன்புகழ் பாட 
பயிரார் வயல் தனில்
பாயும் புனலே 
வயிரம் அணிந்திடும்
வாழ்வே போற்றி 
வாழும் வகையில்
தருவாய் போற்றி 
பயில்வார் தனையே
பார்த் தருள்வாயே.. 
அருளும் அங்கயற்
கண்ணி போற்றி 
பாண்டியன் மகளே
பதமலர் போற்றி 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 2

மரகதம் 
மயில் வாகனனை
மார்பினில் ஏந்தும் 
மங்கல கௌரி
மலரடி போற்றி 
மதுரையின் அரசி 
மங்கலம் போற்றி 
மரகதப் பூங்கொடி 
பொன்னடி போற்றி 
போற்றும் அடியார்
அகத்தில் மலரும்
ஆனந்த மலரே
அருள்வாய் போற்றி 
பூத்திடும் சங்கத்
தமிழே போற்றி 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 3

கோமேதகம்
நாமேவிய நற் றமிழால்
போற்றி
தாமேவிய நல் லடியார்
தலையில் 
பாமேவிய நல் அருளே 
எழுதும்
கோமே தகமே சரணம்
சரணம்.. 
தீமேவிய தெள் ளமுதே
சரணம்
காமேவிய நற் கனியே
சரணம் 
பூமேவிய பொன் மயிலே
சரணம்
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 4

நீலம் 
பாலாம்பிகையே
பர்வத வர்த்தனி 
நீலாம்பிகையே
நின்னடி சரணம் 
நீள்விழி மலர்கள்
நீலம் என்றே 
தாள்மலர் போற்றி
தாயே சரணம்.. 
கனலாய் புனலாய்
விளைவாய் சரணம் 
கதிராய் நிலவாய்
ஒளிர்வாய் சரணம் 
வெயிலாய் புயலாய்
புவியாய்த் திகழ்வாய் 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 5

வைடூரியம் 
வானவர்க் கரணாய்
வைடூரிய வாள் 
வளைக்கரம் ஏந்தி
கொடும்பகை  தீர்த்தாய் 
குஞ்சரங குடையுடன்
குலமகள் போற்றி 
கொடிமீன் படையுடன்
கோமகள் போற்றி 
நாமகள் போற்றும்
நங்காய் போற்றி 
நலந்தரு நாரணன்
தங்காய் போற்றி 
வளந்தரு மதுரையில்
என்தாய் போற்றி 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 6

முத்து 
பித்தாய் நானிங்கு
புகல்வதும் இனிதோ 
பேரருளே உன்னைப்
புகழ்வதும் எளிதோ 
பித்தா னவனின்
பெருந்திரு மேனியில் 
பிரியா தென்றும்
படருங் கொடியே 
பொற்றா மரையில்
பூத்திடும் நிலவே 
முத்தெனுந் தமிழாய்
முன்வரும் அமுதே 
பூத்தேன் பொழியும்
பொதிகையின் வாழ்வே 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 7

பவளம் 
பவளம் நகையாய்
நானிலம் காக்க 
நிகழும் பொழுதும்
நிழலாய் காக்க 
சுழலும் உலகில்
சூழ்வினை அகலத் 
திகழும் திருமலர்ப்
பாதங்கள் போற்றி 
புகழும் மதுரையின்
புனிதம் போற்றி 
புண்ணிய வைகைப்
பொலிவே போற்றி 
பூத்திடும் மல்லிகை
மாமலர் இதழாய் 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 8 

புஷ்ப ராகம்
கதம்ப வனத்தில்
களிப்புறு குயிலாய் 
கருதிடும் மனத்தில்
மலர்ந்திடும் மயிலாய் 
வலக்கரம் ஏந்திடும்
கிளியாய் எனையே 
வார்த்திடுவாயே
எந்தன் அன்னையே 
பூமணி புஷ்ப 
ராகம் பொலிந்திடும் 
புகழ்மணி நூபுரத்
திருவடி போற்றி 
தேசம் உடையாய்
திருவடி சரணம் 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 9


மணி மணியாக
நவமணி மாலை 
மங்கல மார்பினில்
மல்லிகை மாலை 
அணிதிகழ் மாலை
ஆயிரம்  இலங்கும் 
அன்பினில் மீனாள்  
மனமெனத் துலங்கும் 
மணியுடை நூபுரம
மணித்தமிழ் பேசும் 
திருவடி யதனில்
அருளொளி வீசும் 
சுந்தரன் பங்கில்
சுந்தரி போற்றி.. 
கைதொழுதேன் கழல்
அடிமலர் போற்றி.. 
**
ஓம் சக்தி ஓம்
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், மார்ச் 02, 2026

நவீனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி  
திங்கட்கிழமை

சமையலறையில்  இருக்க  வேண்டியவை 
என, எத்தனையோ  விதமான 
உபகரணங்கள் வந்து விட்டன..

அத்தகையவற்றுள் 
இலகு ரக மின் உபகரணங்களத் தவிர்த்து 

இன்றைய
சமையலறையில்
அவசியம் இருக்க வேண்டிய எளிய உபகரணங்களுள் சில ..

இவற்றுக்கு மேலும் பலவகை இருக்கலாம்...  அவை அவரவர் விருப்பம்...

ஒன்று மட்டும் நிச்சயம்...

அன்றைய 
சமையலறையின் தோற்றத்தை மாற்றி விட்ட காரணிகளால் - 

ஆரோக்கியத்தைக் கொண்டு வருவதற்கு இயல வில்லை...

 










படங்கள்
இணையத்தில்
பெறப்பட்டவை..

 உபகரணங்கள் யாதாயினும் அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்..

நலம் நம் கையில்

ஓம் நம சிவாய 
***

சனி, பிப்ரவரி 28, 2026

மாசி மகம்

  


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
 சனிக்கிழமை

 மாசி 18 திங்களன்று (மார்ச்/2)
மாசிமக தீர்த்தவாரி

கும்பகோணம் மகாமகக் 
குளக்கரையில்
பெருந்திருவிழா..

ஸ்ரீ கும்பேஸ்வரர் மங்களாம்பிகை

பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களைத்
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே. 5/22/1

நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி எனப்படும்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே.. 5/22/3

துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே. 5/22/6
-: திருநாவுக்கரசர் :-
**

மாசிமகப் பெருந் 
 திருவிழாவின் அழைப்பிதழ்..


ஓம் நம சிவாய
***

வெள்ளி, பிப்ரவரி 27, 2026

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி  
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
குன்றுதோறாடல்


தனதன தனன தனதன தனன
     தனதன தனன ... தனதான

எழுதிகழ் புவன நொடியள வதனி
     லியல்பெற மயிலில் ... வருவோனே

இமையவர் பரவி யடிதொழ அவுணர்
     மடிவுற விடுவ ... தொருவேலா

வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
     வழிபட மொழியு ... முருகேசா

மலரடி பணியு மடமகள் பசலை
     மயல்கொடு தளர்வ ... தழகோதான்...

முழுகிய புனலி லினமணி தரள
     முறுகிடு பவள ... மிகவாரி

முறையொடு குறவர் மடமகள் சொரியு
     முதுமலை யழக ... குருநாதா

பழகிய வினைகள் பொடிபட அருளில்
     படிபவ ரிதய ... முறுகோவே

பருவரை துணிய வொருகணை தெரிவ
     பலமலை யுடைய ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

இந்தத் திருப்புகழைப்
பாராயணம் செய்வதன் மூலம்
பல தலங்களையும் வழிபட்ட பேறு கிட்டும்..


முருகா முருகா
முருகா முருகா
***

வியாழன், பிப்ரவரி 26, 2026

ஜோதி தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 
வியாழக்கிழமை

ஸ்ரீ கோரக்க சித்தர்


ஸ்ரீ கோரக்க சித்தர் சந்நிதியில் தீப ஆராதனை

தலம்

வடக்கு பொய்கைநல்லூர், நாகப்பட்டினம்

காணொளிக்கு நன்றி

சித்தர் வழிபாட்டுக் குழு

ஓம் நம சிவாய

***

புதன், பிப்ரவரி 25, 2026

அன்பின் வழி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 புதன்கிழமை


ராமாயணம் காட்டுகின்ற நெறி

காணொளிக்கு நன்றி


வாழ்க நலம்
***

செவ்வாய், பிப்ரவரி 24, 2026

கருப்பன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 செவ்வாய்க்கிழமை

சில ஆண்டுகளுக்கு முன் 
எங்கள் பிளாக் தளத்தில் வெளியான எனது சிறுகதை

கருப்பன்
**

" டிங்டிங் டிடிங்.. டிங்டிங் டிடிங்.. "

சொசைட்டிக்கு பால் கறக்கணும்... மூனே முக்கால் ஆச்சு.. செவலையை அவிழ்த்து அதன் முதுகிலேயே கயிற்றைப் போட்டாள் காவேரி.. 

அது நின்று கொண்டு திரும்பிப் பார்த்தது - கன்றைக் காணோமே!.. என்று..

அந்த நிலையிலும் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு..

உம் புள்ளய ஒன்னும் செஞ்சிட மாட்டோம் தாயி!.. - என்றபடி கன்றை அவிழ்த்து விட்டாள்.. 

துள்ளிக் குதித்த கன்றைப் பார்த்துக் கொண்டே நடந்தது பசு.. 

கையில் பால் குவளையையும் விளக்கெண்ணெய் சிமிழையும் எடுத்துக் கொண்டு நடந்த காவேரியின் கண்கள் எதிரில் தேடின - இப்போதாவது கருப்பன் வருகின்றானா!.. என்று...

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் கருப்பனைத் தவிர மற்றெல்லாமும் தென்பட்டன..

எதிரில் வருபவர் யாராவது கருப்பனைப் பற்றி சொல்லுவார்கள் - என்று பார்த்தால் அவரவரும் அவரவர் வேலையோடு போய்க் கொண்டு இருக்கின்றார்கள்..

கருப்பன்.. கருப்பன்!..
யாரவன் கருப்பன்?.. - என்றால் 

அந்தக் காலத்து ஆடு.. அலமேலுவோட ஆடு ஞாபகத்துக்கு வருதா?.. அது மாதிரி.. அந்த ஆட்டைப் போல எழுதப் படிக்கத் தெரியாதே தவிர கருப்பனுக்கு  மற்றதெல்லாம் தெரியும்..

விடியற்காலை கட்டுத் தறியில் இருந்து அவிழ்த்து விட்டால் போதும்.. அக்கம் பக்கத்து குரால்களைக் கொஞ்ச நேரம் கொஞ்சிக் குலாவி முத்தமிட்டு விட்டு மெதுவாக நடையைக் கட்டுவான்.. மந்தையில் மத்தியானம் வரைக்கும் நாட்டாமை.. ஒரு யோசனை வந்து விட்டால் வடக்கே ரயில்வே டேசனுக்குப் போவான்..  அங்கே சுற்றித் திரிந்து விட்டு நடுப் பகலில் திரும்புவான்..

" எங்கேடா ஊர் சுற்றப் போனாய்!.. " - என்று காவேரி அதட்டினால் தனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் அப்பாவியாக நிற்பான்..

ஒரு வாளி நிறைய கடலைப் புண்ணாக்கை கரைத்து வைத்திருப்பாள் காவேரி - இது மாதிரி ஊர் சுற்றும் பயல் உடம்புக்கு இது தான் நல்லது என்று... 

மூச்சு முட்ட அதைக் குடித்து விட்டு திண்ணையில் ஏறிப் படுத்தான் என்றால் அது தான் அவனுக்கு சொர்க்கம்..

இப்படியாகப்பட்டவன் சாயங்காலத்துக்கு மேலும் வீட்டுக்குத் திரும்பவில்லையே.. என்ற கவலை காவேரிக்கு..

புளியந்தோப்பில் வைத்து செவலையிடம் ரெண்டு லிட்டர் கறந்து சொசைட்டியில் ஊற்றி விட்டு  அட்டையிலும் பதிவு செய்து விட்டு வீட்டுக்கும் திரும்பியாயிற்று.. கருப்பன் வீடு திரும்பவில்லை..

காவேரியின் கண்களில் நீர் கோர்த்தது..

கருப்பனுக்கு என்று ஊறவைத்த கடலைப் புண்ணாக்கு நுரைக்க ஆரம்பித்திருந்தது..

தோட்டத்திலிருந்து அப்பாவும் அம்மாவும் திரும்பியாயிற்று..  பள்ளிக்கூடம் விட்டு தம்பியும் வந்து விட்டான்... 

விஷயம் தெரிந்ததும்
எல்லாரும் ஏகமனதாகச் சொன்னார்கள் - " எங்கே போயிடப் போறான்... வருவான்.. வருவான்!.. "

ஆனால் வரவில்லை..

அதோ - ஏழு தெருக்களையும் தபால் கட்டுடன் சைக்கிளில் சுற்றி வரும் போஸ்ட் ஆபீஸ் மாமா ..
இங்கிருந்தபடியே கத்தினாள்..

" மாமா.. கருப்பனப் பார்த்தீங்களா?.. '
சைக்கிளை நிறுத்தி காலை ஊன்றியவர் - 
" இல்லையே.. ம்மா!.. " - என்றபடி வீட்டை நோக்கி மெதுவாக நகர்ந்தார்..

கருப்பனைப் பற்றி அந்த ஊரில் எல்லாருக்கும் தெரியும்...

முனீஸ்வர சாமிக்கு நேர்ந்து விடப்பட்டிருந்தான்..

அது பெரிய கதை.. பன்னிரண்டு மைல் சுற்றளவுக்கு விசேசம் இந்த ஊர் குருதி  பூசை.. அதுவும் மூனு வருசத்துக்கு ஒரு தரம் தான்.. அந்தக் கெரகம் இந்த வருசம் பார்த்து வருது.. மற்ற படையல் பள்ளயம் எல்லாம் வருசா வருசம் வழக்கம் போல..

தை முதல் செவ்வாய் அன்னைக்கு குருதி பூசை.. 

இலுப்பைத் தோப்பு முனீஸ்வரன் கோயில்ல பரிவார சாமிகளுக்கு எண்ணெய்க் காப்பு.. புது வேஷ்டி சாத்தி அசைவ படையல்..
இதுல முனீஸ்வரன் ஒதுங்கியே இருப்பார்.. 

அவருக்கு தை முதல் வெள்ளியன்னிக்கு அமுது படையல்..  சுழியம், அதிரசம், இளநீர், பானகம், பஞ்சாமிர்தம், தயிர் பள்ளயம், பாயாசம்..

கடை வெள்ளிக்கு  முனீஸ்வரன் அழைப்பு.. வாண வேடிக்கை.. ஊர் கோலம்..
கடை செவ்வாய் அன்னிக்கு விடையாற்றி.. மஞ்சத் தண்ணி விளையாட்டு..

முனீஸ்வர சாமிக்கு.. ன்னு
கிடாக்கள் நேர்ந்து விடுறது .. படையல் மட்டும் பரிவார சாமிகளுக்கு!..

ஊர்ல பதினைஞ்சு கிடா குட்டிகள் குருதிப் பூசைக்காகவே சுத்திக்கிட்டு இருக்குதுங்க.. இருந்தாலும் காவேரியோட கருப்பனுக்குத் தான் முதல் மரியாதை.. பூசை..

இந்த நேர்ச்சை ஆடுகளோட அடையாளம் - சிவப்பு நிற கழுத்துக் கயிறும் அதுல சூலாயுத முத்திரையோட ஒரு தகடும் தான்.. 

முனி ஐயா கிடாக்களக் கண்டாலே போதும்.. 
களவாணிப் பயலுகளுக்கு பேதியாயிடும்..  ஒருத்தனும்  கிட்ட நெருங்க மாட்டான்...  கிடாக்கள் வெள்ளாமையில  இறங்கிட்டா கூட ஜனங்க கோவிச்சுக்க மாட்டாங்க.. 

" சேதாரம் ஆகிடாம பாத்துக்குங்க ஐயா.. " - ங்கற ஒரே பேச்சு தான்.. 

அந்த வருசம் அந்த வயல்ல மகசூல் அமோகமா இருக்கும்..  கல்லு எதையும் எடுத்து வீசினா - அவ்வளவு தான்..

காத்து வாக்குல சேதி ஊருக்குள்ள போயி - நாலு எட்டா சனங்க வந்து விட்டார்கள்..

" இருவது கிலோவுக்கு மேல தேருமே!.. "

" இந்தக் கிடாக்களை வச்சி பண்ணையம் பண்றதே பெரிய பாடு.. "

" எனக்கென்னமோ சந்தேகமாத் தான் இருக்கு.. "

" நாளைக்கு முனியன் கடுப்பாகி கெளம்பிட்டா யாரு தாங்குறது?.. "

ஆளுக்கு ஆள் பேசி விட்டுப் போனார்கள்...

" எலே.. தம்பி... வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டுப் போய் ஒரு சுத்து பார்த்துட்டு வர்றியா?.. " 

காவேரியின் அப்பாவுக்கு உண்மையிலேயே கவலை..

" ராத்திரியில அந்த அண்ணன் சைக்கிள் தர மாட்டார் அப்பா!.. " 

" அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. முனியன் கெடாய ஒருத்தன் தொட முடியுமா.. ன்னேன்.. ஏதாவது கொரால் பின்னால போயிருப்பான்... காலைல வருவான் பாருங்க... ஏ.. பாப்பா.. எதுக்கும் நீ கவலப்படாம  ஒரு ரூவா துட்டை எடுத்து முடிஞ்சு வை!.. " - என்று ஆறுதலாகப் பேசியபடி காவிரியின் தலையை வருடி விட்டாள் தாய்..

ராத்திரி சோறு ஒருவருக்கும் இறங்கவில்லை.. திண்ணை காலியாகக் கிடந்தது.. 

கையில் அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு வேலிப் படல் வரைக்கும் சென்று பார்த்து விட்டு வந்தாள் காவேரி..

ஈசான மூலை பல்லிக்குக் கூட கருப்பன் போன இடம் தெரிய வில்லை..  வாயை மூடிக் கொண்டு சும்மா இருந்தது..
கண்களைத் துடைத்தபடி தூங்கிப் போன காவேரி விடிவதற்கு முன்னால் எழுந்து வாசலுக்கு ஓடினாள்...

கருப்பனைக் காணோம்..
சொசைட்டியில் பால் கறக்க வேண்டும்... 

" ஏ... பாப்பா... பேசாம இரு.. அது கோயில் கெடா... அந்தக் கவலை முனியனுக்குத் தான்!.. " - என்றாள் அம்மா செவலையை அவிழ்த்துக் கொண்டே..

பொழுதும் நன்றாக விடிந்து விட்டது.. கருப்பன் காணாமல் போனது குரால்களுக்குத் தெரி ந்திருக்கும் போல.. எல்லாமே ஒரு மாதிரி மசங்கலாக இருந்தன...

அம்மா சொன்ன மாதிரி ஒரு ரூபாயை எடுத்து விளக்கு மாடத்தில் வைத்த காவேரி வாளியில் கடலைப் புண்ணாக்கைப் போட்டு தண்ணீர் எடுத்து ஊற்றினாள் - கருப்பன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையுடன்..

யார் யாரோ வாசலுக்கு வந்தார்கள்.. ஏதேதோ பேசி விட்டுப் போனார்கள்..

" கருப்பன் காணாமப் போய்ட்டான்.. முனியனுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!..
நல்லா மாட்டிக்கிட்டான் நல்ல தம்பி!.. " 

உள்ளூர சந்தோஷம் சிலருக்கு..

" போலீஸ்ல சொல்லுவமா?.. "

" எதுக்கு!.  போற போக்குல  பொங்க வைக்கிறதுக்கா?.. "

" ஏ.. நல்லதம்பி..  கருப்பன் காணாப் போனதுக்காக வருத்தப் படாதே.. கைக்கு கிடச்சதும் வர்ற கார்த்திகையில பாய்ச்சல் விட்டு குருதி பூச வச்சிடுவோம்.. இல்லேன்னா வேற கிடாக் குட்டி வாங்கி விட்டுடுவோம்.. அதனால ஒன்னும் தப்பு இல்லை.. காணாப் போன கருப்பன் வரலை.. ன்னா சாமி குத்தம் ஆகிடும்.. ன்னு பயப்படாதே "

வாத்தியார் தாத்தா பேசினார்.. 

" அதுவும் சரிதான்.." - என்ற பேச்சும் கூடவே எழுந்தது,.

காவேரி எழுந்து முன்னால் வந்தாள்..

" தாத்தா மன்னிக்கணும்... நான் முனி ஐயாவுக்கு நிறை காணிக்கை நேர்ந்திருக்கேன்!... "

வாசலில் கூடியிருந்தவர்களுக்கு அதிர்ச்சி...

" நெற காணிக்கையா!..  குருதி பூசைக்கு நேர்ந்துகிட்ட கிடா தானே கருப்பன்!.. "

" ஆமா.. ஆனாலும் நான் நேத்து மறு மாப்பு  கேட்டு வேண்டிக்கிட்டேன்.. "

எல்லார் முகத்திலும் இருள் - கறி சோறு போச்சே!.. - என்று..

நிறை காணிக்கை என்றால் நேர்ந்து விட்ட கிடாயை அப்படியே விட்டு விடுவது.. வாழும் காலம் வரை வாழ்ந்து முடிந்ததும்  அந்தக் கிடாயை கொட்டு முழக்கு மாலை மரியாதையுடன் அனுப்பி வைப்பது..

" யோசிச்சு தான் சொல்றியா காவேரி?.. "

" ஆமாங்க.. தாத்தா!.. "

" அப்போ நேர்ந்து விட்டுருக்கும் மத்த கிடாக்களை எல்லாம் என்ன பண்றது?...

திடீரென ஆவேசம் வந்து ஆடினான் கோவிந்தன் மகன்.. பதினைஞ்சு வயசுதான் அவனுக்கு..

" அவுத்து விட்டுடுங்கடா.. "

" அப்போ குருதி பூச?.. "

" கூஷ்மாண்டத்தை வெட்டிப் போடுங்க!.. "

" கூஸ்மாண்டமா.. அப்படி.. ன்னா!?.. "

" பூசனிக்காய்.. டா.. பூசனிக்காய்!.. "

" அது மட்டும் போதுமா!... "

" போதும்.. பள்ளயத்தை மட்டும் மாத்தக் கூடாது.. புரிஞ்சதா!.. "

" புரிஞ்சதுங்க சாமி!.. "

" ஊர்ல.. நாட்ல.. அநியாயம் அக்கிரமம் பெருகிப் போச்சு.. அயோக்கியன ஆக்கினை பண்ணனும்.. களவாணிய களை எடுக்கணும்.. எம் பரிவாரம் பூராவும் அங்கே பூந்து வெளையாடுவாங்க.. "

" எதுவும் குத்தம் குறை இல்லையே.. கோப தாபம் இல்லையே!.. " 

" அதான் சொல்லிட்டேனே.. நல்ல சனங்க  நிம்மதியா இருப்பாங்க.. ன்னு!.. "

விபூதி சம்படம் வந்தது.. விபூதியை அள்ளி மேலே வீசிய சாமி பெரிய சத்தத்துடன் மலையேறியது.. 

சிறுவன் மயங்கி விழுந்தான்..

" அடடே... கருப்பன் எங்கே... ன்னு கேக்கறதுக்கு  மறந்துட்டமே!.. "

கூட்டம் வருத்தப்பட்ட வேளையில் -
வேலிப் படலை முட்டித் தள்ளி விட்டு கருப்பன் வந்து கொண்டிருந்தான்..

காவேரி பொங்கி எழுந்து ஓடி கட்டிக் கொண்டாள்..

" எங்கே சாமி போயிருந்தே!.. "

" நான் இங்கே தானே இருக்கேன்!.. " - என்கிற மாதிரி காவேரியின் முகத்தோடு முகம் வைத்துக் கொண்டான் கருப்பன்..
***

திங்கள், பிப்ரவரி 23, 2026

ரயில் டிபன்ஸ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
திங்கட்கிழமை


தஞ்சாவூர் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுவையான நற்செய்தி: 

தஞ்சாவூர் ஜங்ஷனில் திறக்கப் பட்டுள்ளது 'ரயில் கோச் ரெஸ்டாரன்ட்'!.. 🚂

45 வருட பாரம்பரியமுடைய தஞ்சாவூரின் புகழ் பெற்ற 'ரயிலடி வி. சுப்பையா டிபன்ஸ்' (Railadi V. Subbaiya Tiffins) நிறுவனத்தினர் தங்களது புதிய ரயில் கோச் உணவகத்தை 
(AC) கடந்த வெள்ளிக்கிழமை (20/02/26) அன்று  தஞ்சாவூர் சந்திப்பு நிலைய - பிரதான வாயிலின் எதிர்ப்புறத்தில் கோலாகலமாகத் திறந்துள்ளனர்..

பாரம்பரிய  சுவையுடைய சைவ உணவுகளை ரயில் பெட்டிக்குள் குளுகுளு என, அமர்ந்து சாப்பிடுவது  மாறுபட்ட புதிய அனுபவம்! ..

ரயில் கோச் உணவகத்தின் உட்புறம் முழுவதும் தஞ்சையின்  மண் வாசம் கலையழகுடன் கூடி தனித்துவமாக நிரம்பியுள்ளது..







ரயில் பயணத்திற்கு முன்னோ அல்லது பிறகோ குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு இது ஒரு சிறப்பான இடம்...

படங்களுக்கு நன்றி
Fb

 தஞ்சை வாழ்க..
***