நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

கும்பகோணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கும்பகோணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 28, 2026

மாசி மகம்

  


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
 சனிக்கிழமை

 மாசி 18 திங்களன்று (மார்ச்/2)
மாசிமக தீர்த்தவாரி

கும்பகோணம் மகாமகக் 
குளக்கரையில்
பெருந்திருவிழா..

ஸ்ரீ கும்பேஸ்வரர் மங்களாம்பிகை

பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களைத்
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே. 5/22/1

நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி எனப்படும்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே.. 5/22/3

துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே. 5/22/6
-: திருநாவுக்கரசர் :-
**

மாசிமகப் பெருந் 
 திருவிழாவின் அழைப்பிதழ்..


ஓம் நம சிவாய
***

ஞாயிறு, நவம்பர் 30, 2025

வருக வருக

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
ஞாயிற்றுக்கிழமை

கும்பகோணம்
ஸ்ரீ கும்பேஸ்வரர் கோயில் திருக்குட முழுக்கு வைபவத்திற்காக யாகசாலை பூஜைக்கு காவிரி நீர்  எடுத்து வரப்பட்ட நிகழ்வு..
 
நன்றி
நம்ம ஊரு கும்பகோணம்












 நன்றி 
துரை மனோகரன்

நாளை
திங்கட்கிழமை காலை 6:45 மணியளவில்
கும்பகோணம்
ஸ்ரீமங்களாம்பிகை சமேத
ஸ்ரீ கும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் 
திருக்குடமுழுக்கு

கும்பேஸ்வரர் போற்றி போற்றி
**

திங்கள், ஜூலை 13, 2015

திருக்குடமுழுக்கு

சார்ங்கா... சார்ங்கா!..

ஆன்மீக வானில் அலை அலையாய்ப் பரவும் திவ்ய நாமம்!..

திருக்குடந்தை ஆராஅமுதன்!..

அவனே - அந்தத் திருப்பெயருக்கு உரியவன்!..


சைவ வைணவ திருக்கோயில்கள் திகழும் திருத்தலங்களுள் - புகழ் பெற்று விளங்குவது கும்பகோணம்!..

குடந்தைக் காரோணம், குடமூக்கு, திருக்குடந்தை என்றெல்லாம் போற்றப்படுவது - கும்பகோணம்..

மகாமகக்குளம் மற்றும் பொற்றாமரைக்குளம் எனும் இரண்டு தீர்த்தங்களை உடையது -  கும்பகோணம்..

சோழர்களின் காலத்திலிருந்து -
இன்று வரை மகத்தான பல சிறப்புகளை உடைய எழில் நகரம்.

நகரின் மத்தியில் இலங்குவது - ஸ்ரீசார்ங்கபாணித் திருக்கோயில்..

ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் நம்மாழ்வார் - என, 

ஏழு ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட பெருமை உடைய திருக்கோயில்.

வேத விமானம் எனப்படும் வைதிக விமானத்தின் கீழ் - 
அரவணையில் - உத்தான சயனத் திருக்கோலம்.

சொர்க்க வாசல் இல்லாத திவ்யதேசம்..

இத்திருத்தலத்தில் பெருமாளை சேவித்தவர்க்கு - மறு பிறப்பு ஏதும் இல்லை என்பதாக ஐதீகம்.

பெருமாளின் சந்நிதி தேர் வடிவில் அமைந்திருப்பது சிறப்புடையது.

சந்நிதியின் இருபுறமும் உத்ராயன திருவாசல் மற்றும் தட்சிணாயன திருவாசல்.

 தை முதல் ஆனி வரை உத்ராயன திருவாசலும் ஆடி முதம் மார்கழி வரை தட்சிணாயன திருவாசலும் திறந்திருக்கும். 

ஒரு வாசல் திறந்திருக்கும் போது மற்றொன்று அடைக்கப்பட்டிருக்கும்.

தற்போது திறந்திருப்பது -  உத்ராயன திருவாசல். 

நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் பத்தாம் நாள் (22/2/2016) திங்கட்கிழமையன்று மகாமகம்..

மகாமகத் திருவிழாவினை முன்னிட்டு குடந்தையிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுகின்றன..

அந்தவகையில் -
ஸ்ரீ கோமளவல்லி உடனுறையும் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயிலில் - கடந்த ஆண்டு ஜூலை/9 அன்று பாலாலயம் செய்யப்பட்டது.

தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் வழங்கிட -  நன்கொடையாளர்களால் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது..

அதன்பின் திருப்பணி வேலைகள் தொடர்ந்தன. அனைத்தும் நிறைவு பெற்று, இன்று அதிகாலை 5.45 மணியளவில் திருக்குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்தது..

திருக்குடமுழுக்கின் சில காட்சிகள் இன்றைய பதிவில்!..







திருக்கோயிலின் ராஜகோபுரங்களும் அனைத்து சந்நிதி விமானங்களும் திருப்பணி செய்யப்பட்டுள்ளன. பொற்றாமரைக் குளத்தின் சுற்றுச்சுவர்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தாயார் சந்நிதி ஸ்ரீ விமானத்திற்கு ஒரு கலசம்
ஸ்வாமி சந்நிதி ஸ்ரீவிமானத்திற்கு மூன்று கலசங்கள்
கிழக்கு ராஜகோபுரத்தில் ஏழேகால் அடி உயரத்தில் பதினோரு கலசங்கள் -

அகிய இவை அனைத்தும் குடந்தையிலுள்ள தனியார் நிறுவனத்தினரால் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

நேற்று மாலை கலசங்கள் வீதி வலம் வந்தபின் - ராஜகோபுரத்திலும்
ஸ்ரீ விமானங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டன.

கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு - வியாழன்று மாலை - பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.



வெள்ளிக்கிழமை காலை காவிரியிலிருந்து புனித நீர் - மேளதாளங்களுடன் யானையின் மீது எடுத்து வரப்பட்டது.

யாக சாலை பூஜைகள் தொடங்கி - பெருமாள், தாயார் , ஸ்ரீதேசிகன் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.



தொடர்ந்து - இரவு இரண்டாம் கால யாக பூஜை நிகழ்ந்தது.

சனிக்கிழமை மூன்று மற்றும் நான்காம் கால பூஜைகளும்
ஞாயிற்றுக்கிழமை ஐந்து மற்றும் ஆறாம் கால பூஜைகளும் நடந்தன.




இன்று அதிகாலை மூன்று மணியளவில் விஸ்வரூப திருக்காட்சியுடன்
நித்ய ஆதாரணங்கள், துவார பூஜை, பாலிகா பூஜை, கும்ப மண்டல பூஜைகள், பிராயச்சித்த ஹோமத்துடன் பூர்ணாஹூதி வழங்கப்பட்டது.

தொடர்ந்த நிகழ்வுகளில் அதிகாலை ஐந்து மணிளவில் கடங்கள் புறப்பட்டன.

சந்நிதி வலம் வந்து - காலை 5.45 மணியளவில் ஏக காலத்தில் ராஜகோபுரங்கள் மற்றும் சந்நிதி விமானங்களுக்கு திருக்குடமுழுக்கு சிறப்புடன் நடைபெற்றது..

அத்துடன் மகா தீபஆராதனையும் நடைபெற்றது..







திருக்குடமுழுக்கு வைபவத்தைத் தரிசிப்பதற்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.

இன்று மாலை ஸ்ரீ கோமளவல்லித் தாயாருடன் ஆராஅமுதன் தங்கக் கருட வாகனத்தில் திருவீதி எழுந்தருள்கின்றார்..

இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் Facebook- ல் பெற்றவை..

படங்களை வலையேற்றம் செய்த
திரு. ராமஸ்வாமி நாராயணன் அவர்களுக்கும் 
நம்ம கும்பகோணத்திற்கும் (Facebook) மனமார்ந்த நன்றி..
* * *

சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்
அங்கமங்க அன்றுசென்று அடர்த்தெறிந்த ஆழியான்
கொங்குதங்கு வார்குழல் மடந்தைமார் குடைந்தநீர்
பொங்குதண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே (808)  
திருமழிசையாழ்வார்.

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திரும் பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா எனும்நாமம் (956) 
திருமங்கையாழ்வார்..

கோமளவல்லித் திருவடிகள் போற்றி.. போற்றி..
சார்ங்கராஜன் திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் ஹரி ஓம்  
* * * 

புதன், மார்ச் 04, 2015

இளைய மகாமகம்

இன்று மாசிமகம்.

இந்த நன்னாள் - இளைய மகாமகம் என கோயில் நகரம் என குறிக்கப்படும் சிறப்புடன் கும்பகோணத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.


இந்த விழா ஸ்ரீ மங்களாம்பிகை சமேத கும்பேஸ்வரன் திருக்கோயிலில்  கடந்த 23/2 அன்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று (3/3) வெகு சிறப்பாக தேரோட்டம் நடைபெற்றது.

இன்று மகாமகத் திருக்குளத்தில் - மாசி மக தீர்த்தவாரி.



மூர்த்தி, தலம், தீர்த்தம் - எனும் மூன்றினாலும் சிறப்பு பெற்று விளங்குவது கும்பகோணம்.

இத்திருத்தலத்தின் பெருமைக்கெல்லாம் மூலகாரணம் -
ஸ்ரீ மங்களாம்பிகையுடன் உறையும் ஸ்ரீ கும்பேஸ்வர ஸ்வாமி.

மஹா பிரளயத்தின் போது நான் முகனிடம் ஈசன் வழங்கிய அமுத கும்பம் நிலை கொண்ட தலம்.

கிராத மூர்த்தியாகத் தோன்றிய சிவபெருமான் - பினாக வில்லில் தொடுத்த கணையால் அமுத கும்பம் சிதைந்து அதனுள்ளிருந்து அமிர்தம் நாலாபுறமும் வழிந்தது.

அமிர்தம் பரவியிருந்த மண்ணை - லிங்க வடிவமாகக் குழைத்த பெருமான், சிவசக்தி ரூபமாக அதனுள் கலந்தார்.

அமுத லிங்கமாகப் பொலிந்த ஸ்ரீ கும்பேஸ்வர மூர்த்தியைப் பணிந்த பிரம்மன் சிருஷ்டியைத் தொடங்கினார்.

மஹா பிரளயத்திற்குப் பின் - சிருஷ்டியை இங்கிருந்தே தொடங்கப்பட்டது.


ஈசன் தம்முடைய 36,000 கோடி மந்த்ரசக்திகளை அம்பிகைக்கு வழங்கிய தலம்.

அம்பிகையின் திருமேனியிலிருந்து 36,000 கோடி மந்திரங்கள் வெளிப்பட்டதாகவும் கூறுவர்.

அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை. ஸ்ரீமங்களேஸ்வரி எனவும் போற்றுவர்.

கும்பத்திலிருந்து வழிந்த அமுதம் திரண்டு நின்ற இடமே - மகாமகக் குளம்.

கங்கை, யமுனை, சிந்து, சரயு, காவிரி, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணை - எனும் ஒன்பது நதிகளும் - மக்கள் தம்மிடம் தொலைத்த பாவங்களை - மகாமகத் திருக்குளத்தில் மூழ்கித் தொலைத்ததாக ஐதீகம்.

நதிக்கன்னியர் ஒன்பது பேரும் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் தெற்கு முகமாக அருள்பாலிக்கின்றனர்..


வியாழ வட்டம் எனப்படும் மகாமகம் இத்திருத்தலத்தின் சிறப்பு.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை -
தேவ குருவாகிய ஸ்ரீ பிரகஸ்பதி சிம்ம ராசியில் இருக்க - கும்ப ராசியில்
மக நட்சத்திரத்தில் சூரியனுடன் நிறைநிலவாக சந்திரன் திகழும் நாள்
மகாமக நன்னாள் என குறிக்கப்படுகின்றது.

அந்நாளில் ஸ்ரீ மங்களாம்பிகையுடன் ஸ்ரீ கும்பேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

ஒவ்வொரு வருடமும் குருபெயர்ச்சியாகி - ஒரு ராசியில் விளங்க மாசி மாதத்தில் மக தீர்த்தவாரி நடைபெறும்.

அந்தவகையில் இந்த வருடம் - மாசி மக நன்னாள்..

தட்சப் பிரஜாபதியின் மகளாக தாட்சாயணி என வளர்ந்து பெருமானைக் கரம் பிடித்த - அம்பிகை தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றிய நாள் மாசி மகம்.


அடுத்த ஆண்டு (22/2/2016) நிகழ இருக்கும் மகாமகத்திற்கு முன்னதாக இன்று நிகழும் மாசி மகத்தையே - இளைய மகாமகம் என குறிக்கின்றனர்.

ஸ்ரீ கும்பேஸ்வரர் கோயிலின் பழைமையான ஐந்து தேர்களும் பழுதாகி 1988- ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓடாமல் இருந்தன. பக்தர்களின் பெருமுயற்சியால் ஐந்து தேர்களும் 2002 - ல் புதுப்பிக்கப்பட்டன.

அதன் பின் வருடாவருடம் சிறப்புடன் தேரோட்டமும் மகாமகக் திருக்குளக்கரையில் தீர்த்தவாரியும் சிறப்புடன் நிகழ்கின்றது.


மகாமகக் குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவை உடையது.
குளத்தினுள் ஒன்பது கிணறுகள் அமைந்துள்ளன.

மகாமகத்துக்கு முன்பாக குளத்திலுள்ள தண்ணீர் முழுதும் வெளியேற்றப்பட்ட நிலையில் கிணறுகளைக் காணலாம்.

சோழர்களுக்குப் பிறகு தஞ்சை விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சி பொறுப்பில் இருந்தது. 

அப்போது - தஞ்சையை ஆட்சி புரிந்த மன்னர் சேவப்ப நாயக்கர் (1532 - 1560). 

சேவப்ப நாயக்கரிடம் முதலமைச்சராக திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர்.

திருவண்ணாமலை, விருத்தாசலம், கும்பகோணம், பட்டீஸ்வரம் மற்றும் பல தலங்களில் திருப்பணிகள் பலவற்றைச் செய்தவர் -  கோவிந்த தீட்சிதர். 

அற நூல்களில் கூறப்பட்டுள்ள அனைத்து தர்மங்களையும் செய்தவராக கோவிந்த தீட்சிதர் போற்றப்படுகின்றார்.

இவரது சிறப்பான சேவைக்காக மன்னர் எடைக்கு எடை பொன் தந்து பாராட்டினார். 

தானமாகக் கிடைத்த பொன்னையும், பொருளையும் கொண்டு கி.பி.1542-ல் சாதாரணமாக இருந்த மகாமகக் குளத்தைச் சுற்றிலும் பதினாறு சிவ சந்நிதிகளை முன்மண்டபங்களுடன் எழுப்பினார்.   

அத்துடன் படிக்கட்டுகளையும் புதிதாக நிர்மாணம் செய்தார்.

இன்று நாம் காணும் மகாமகத் திருக்குளத்தை வடிவமைத்தவர் - இவரே!..

கோவிந்த தீட்சிதரின் திருவடிவம் கும்பேஸ்வரன் திருக்கோயிலில் வடிக்கப்பட்டுள்ளது

மாசி மகம் - 1921
மாசிப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு ஸ்ரீகும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் 23/2 அன்று திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது.

அன்றைய தினமே -
ஸ்ரீ வியாழ சோமேஸ்வரன் திருக்கோயில்,
ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயில்,
ஸ்ரீ அபிமுகேஸ்வரன் திருக்கோயில்,
ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்,
ஸ்ரீ கௌதமேஸ்வரர் திருக்கோயில் - மற்றும்
ஸ்ரீ பாணபுரேசர் திருக்கோயில்களிலும் திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது.

விழா நாட்களில் சேஷம், கமலம், பூத, கிளி, யானை, மூஷிகம், மயில், ரிஷபம்,  கைலாசம், குதிரை -  என பல்வேறு வாகனங்களிலும் ஓலைச்சப்பரத்திலும் வீதியுலா நடைபெற்றது. 

நேற்று (3/3) காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து - அம்பிகையும் ஈசனும் வெள்ளி ரிஷப வாகனராக திருத்தேரில் எழுந்தருள ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஆரவாரத்துடன் வடம் பிடித்து திருத்தேர்களை இழுத்து நிலைப்படுத்தினர்.


இன்று பகல் 10.36 மணிக்கு மேல் 12.25க்குள் ரிஷப லக்னத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் மங்களாம்பிகையுடன் ஸ்ரீகும்பேஸ்வரர் வீற்றிருக்க மகாமகத் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகின்றது.

தீர்த்தவாரியின் போது அனைத்து சிவாலயங்களில் இருந்தும் வைணவ திருக் கோயில்களில் இருந்தும் உற்சவத்திருமேனிகள் வாகனங்களில் எழுந்தருளி வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.

அம்பிகையும் பெருமானும் வெள்ளி ரதத்தில் எழுந்தருள - நாளை மறு தினம் (6/3) விடையாற்றி நடைபெறுகின்றது. 

ஞானசம்பந்தப்பெருமானும் அப்பர் பெருமானும் அருணகிரிநாதரும் பாடிப் பரவிய திருத்தலம்.

புறந்தூய்மை நீரால் அமையும்!.. என்று அருள்பவர் வள்ளுவப்பெருந்தகை.

அந்த வகையில் அகந்தூய்மையும்
நீரால் - நீராடலால் அமையட்டும்.

நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கையா யாளவள் கன்னி எனப்படுங்
கொங்கை யாளுறையுங் குடமூக்கிலே!.. (5/22)
- : அப்பர் பெருமான் :-

திருச்சிற்றம்பலம்.
* * *

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

மாசி மகம்

எல்லாம் வல்ல இறைவனின் தனிப்பெருங்கருணையினாலும் அன்பு நிறை நெஞ்சங்களின் நல்லாசிகளினாலும் எனது அன்பு மகளின் திருமணம் - சிவகாசி நகரில் - பிப்ரவரி ஒன்பதாம் நாள் ஞாயிறன்று இனிதே நிகழ்ந்தது.

அந்த நிகழ்வுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முன்பாக இனியதொரு பதிவு..

சூரியன் கும்ப ராசியிலும் தேவகுரு ஆகிய பிரகஸ்பதி வருடாந்திர சுழற்சியாக ஒரு ராசியிலும் இருக்க - மக நட்சத்திரத்தில் சந்திரன் நிறை நிலவாகக் கூடும் திருநாள் - மாசி மகம். 

சூரியன் கும்ப ராசியிலும் தேவகுரு ஆகிய பிரகஸ்பதி சிம்ம ராசியிலும் இருக்க - மக நட்சத்திரத்தில் சந்திரன் நிறை நிலவாகக் கூடும் திருநாள் - மகாமகம்.  


வியாழ வட்டம் எனப்படும் சுழற்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்.

மகாமகம் எனப்படும் திருநாள் எதிர்வரும்  2016 - ல் நிகழ இருக்கின்றது. 

ஆயினும் - இப்போது மிதுன ராசியில் குரு விளங்க - வழக்கம் போல மாசி மகம் அனுசரிக்கப்படுகின்றது.

இன்று பிப்ரவரி 15. மாசி மகம்.

முன்னொரு சமயம் - 

ஊழிப் பெருவெள்ளம் கொண்டு  உலகைப் புனரமைக்க விரும்பிய ஈசன் - நான்முகனை அழைத்து சிருஷ்டிக்கான ஜீவ அமுதத்தினை ஒரு கும்பத்தில் நிறைத்து வழங்கினார்.

அதனை ஊழிப் பெருவெள்ளம் ஏற்படும் போது அதில் மிதக்க விட்டு - அந்தக் கும்பம் எவ்விடத்தில் தங்குகின்றதோ அங்கே அதைப் பிரதிஷ்டை செய்து வழிபடும்படி ஆணையிட்டார்.

பிரம்மனும் அவ்வாறே செய்ய  - ஈசன் வேட வடிவங்கொண்டு எய்த அம்பினால்   - கும்பம் உடைந்து அதிலிருந்த அமுதம் பூமியில் பரவி ஓரிடத்தில் திரண்டு நின்றது. 

அதுவே - மகாமகத் தீர்த்தம். கும்பம் தங்கிய திருத்தலம் - கும்பகோணம்.

அமுதம் ஊறிக் கிடந்த மண்ணில் இருந்து  சுயம்புவாகத் தோன்றிய லிங்க வடிவத்தினுள் - உலகம் உய்யும் படிக்கு ஈசன் ஜோதி வடிவாக நிறைந்தார்.


எனவே, ஈசன்  - ஸ்ரீகும்பேஸ்வரர் என  விளங்குகின்றார்.

அம்பிகை சர்வ மங்களங்களையும் அருளும் ஸ்ரீ மங்களாம்பிகை.

பின்னொரு சமயம் -

மக்களின் பாவங்களை சுமந்ததால் - களையிழந்த நதிகள் அனைத்தும் கங்கையின் தலைமையில் காசி விஸ்வநாதரிடம் முறையிட்டன. 

கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரை, கிருஷ்ணை, சரயு -

எனும் நவ கன்னியரின் அல்லலைப் போக்குதற்கு - சிவபெருமான் தாமே அவர்களை அழைத்து வந்து அடையாளங்காட்டியருளிய தீர்த்தம் - மகாமகத் தீர்த்தம். 

ஐயன் அருளியபடி,  அவர்கள்  தீர்த்தத்தில் நீராடி தமது பாவங்களைத் தொலைத்த நாள்  - மகாமகத் திருநாள்.

இந்தத் திருநாள் - திருக்குடந்தையில் சகல சிவாலயங்களிலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றது

சிலவருட இடைவெளிக்குப் பின் - இந்த வருடம் மாசி மகத்தின் போது தஞ்சையில் இருக்கும் பேற்றினைப் பெற்றேன். 

இன்று மாலையில் கும்பகோணம் சென்று -

ஸ்ரீ உச்சிப் பிள்ளையார் திருக்கோயில்,
ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயில், 
ஸ்ரீ தேனார்மொழி சோமசுந்தரி சமேத ஸ்ரீவியாழ சோமேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ பிரஹந்நாயகி  சமேத ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், 
ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், 
ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீஅபிமுகேஸ்வரர் திருக்கோயில் 

- என  ஆலய தரிசனம் செய்து அனைவருடைய நலனும் வாழ்க என்று வேண்டிக் கொண்டு மகாமகத் திருக்குளத்தை வலஞ்செய்து வணங்கினேன்.

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சில - இன்றைய பதிவில்!..

பதிவில் உள்ள படங்கள் கைத்தொலைபேசியின் மூலம் எடுக்கப்பட்டவை.

ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ சார்ங்கபாணி தெப்போற்சவம்
ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில்
ஸ்ரீ உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்
ரிஷப வாகனத்தில் பெருமான்
ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ வடிவேல் குமரன்
வெள்ளி விமானத்தில் பெருமான்





திருக்கயிலாய சிவகண வாத்ய முழக்கத்துடன் , மகாமகக் குளக்கரையில் பெருமான் வலம் வந்தருளிய போது -

அப்பகுதியே - சிவலோகம் என விளங்கியது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் - என மூன்றினாலும் சிறந்து விளங்கும் திருத்தலம்  - கும்பகோணம்.

திருக்குடந்தையைக் கண்டு தொழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

சிவாய திருச்சிற்றம்பலம்!..