நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 25, 2022

ஸ்ரீ காமாட்சி விருத்தம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ காமாட்சி விருத்தம்
*

மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே – திங்கட்
புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.

-: நூல் :-
சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியா நின்ற வுமையே
சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்
சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்
ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
சிறியனால் முடிந்திராது
சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடனுன்னதம்மா
சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன்மணியு நீ
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்
பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
பாதச் சிலம்பி னொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும் 
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும் 
சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையில் பொன்கங்கணம்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனாற் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்
கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ
குழப்பமா யிருப்ப தேனோ
விதியீது நைந்துநான் அறியாம லுந்தனைச்
சதமாக நம்பி னேனே
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக முனக் கில்லையோ
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே
மாயனது தங்கையே பரமனிட மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள்வாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்
பேரான ஸ்தலமு மறியேன்
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
போற்றிக் கொண்டாடி யறியேன்
வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி
வாயினாற் பாடியறியேன்
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கியொரு நாளுமறியேன்
சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்
சரணங்கள் செய்து மறியேன்
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு
சாஷ்டாங்க தெண்ட னறியேன்
ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்
ஆச்சி நீ கண்ட துண்டோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பெற்றதாய் என்றுன்னை மெத்தவும் நம்பிநான்
பிரியமாயிருந்த னம்மா
மெத்தனம் உடையை என்றறியாது நானுன்
புருஷனை மறந்தனம்மா
பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்
பராமுகம் பார்த்திருந்தால்
பாலன் யானெப்படி விசனமில்லாமலே
பாங்குட னிருப்பதம்மா
இத்தனை மோசங்களாகாது ஆகாது
இது தர்மமல்ல வம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ
யிதுநீதி யல்லவம்மா
அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தனையோ
அதை யெனக்கருள் புரிகுவாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணி மந்தர காரிநீயே
மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ
மலையரையன் மகளானநீ
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ
தயாநிதி விசாலாட்சி நீ
தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ
சரவணனை யீன்ற வளும் நீ
பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்
பேர்பெற வளர்த்தவளும் நீ
பிரவணசொரூபி நீ பிரசன்னவல்லி நீ
பிரிய வுண்ணாமுலையு நீ
ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ
பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்
கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்
காதினுள் நுழைந்த தில்லையோ
இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா
இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்
இதுதரும மல்ல வம்மா
எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்
ஏதும் நீதியல்ல வம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்
மூடனான் செய்த னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு
மோசங்கள் பண்ணி னேனோ
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா
ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா
சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே
சிறுநாணமாகு தம்மா
சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக உன்
அடியன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

எந்தனைப் போலவே செனன மெடுத்தோர்க
ளின்பமாய் வாழ்ந் திருக்க
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
உன்னடியேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பிள்ளை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை
போக்கடித் தென்னை ரட்சி
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா
அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பாரதனி லுள்ளளவும் பாக்கியத்தோ டென்னைப்
பாங்குடனி ரட்சிக்கவும்
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்
சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய னணு காமலும்
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமற்
பிரியமாய்ச் காத்திடம்மா
பிரியமாயுன் மீதில் சிறியனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி
ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்
னம்மை யேகாம்பரி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனிஜெனன மெடுத்திடாமல்
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பினேனே
முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக்காதே யம்மா
வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனாரேசப் போறார்
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத் தீருமம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
***

பெயர் சொல்லாத அந்தப்
பெரியவர் தமக்கு அநேக வணக்கங்கள்..

ஆனை போன வழியே பூனை போகலாகாது என்பதற்கிணங்க
முதல் நூலுக்கான வணக்கத்தைத் தொடர்ந்து 
நாளை முதல் நான் தொடுத்துள்ள பாமாலை..

ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம்
***

12 கருத்துகள்:

  1. முதல் நூல் வணக்கம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. தொடக்கம் சிறப்பு வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. காமாக்ஷி விருத்தம் படித்துக் கொண்டேன். எங்கள் அம்மாவிடம் இது போன்ற ஸ்லோக பாடல்கள், பாட்டுக்கள் அடங்கிய புத்தகங்கள் நிறைய இருந்தன. அதில் இந்தப்பாடல் எழுதியவரின் பெயர் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும். ஆனால் அந்த புத்தகங்கள் இப்போது அங்கிருக்கும் வாய்ப்பே இல்லை. அப்பளமாக நொறுங்கி இறைவனடியில் சேர்ந்திருக்கும். பாடல் மட்டுந்தான் அப்போது நான் என்னுடைய சிறு வயதில் அம்மாவிடம் கற்றிருக்கிறேன். இங்கும் பார்த்ததும் அம்மாவிடம் கற்ற நினைவுகள் வருகின்றன. அன்னை காமாஷிக்கும், இதை கற்று தந்த எங்கள் அம்மாவுக்கும், பாடல் எழுதியவருக்கும், அதை இங்கு பகிர்ந்த தங்களுக்கும் என் நமஸ்காரங்கள்.

    தங்களது பாமாலையை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். ஆடிச் செவ்வாயில் அன்னை பரமேஸ்வரியின் பாமாலை கள் மனதிற்கு இதம் தரும்படியாக மலரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      சமைக்கும் போது இப்படியான பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பது தெய்வீகம்..
      இதனாலேயே நம்முள் அன்பும் அருளும் கலந்து இருக்கின்றன..

      தங்களுக்கும் அன்பின் வணக்கங்கள்

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  4. இதைப் படிக்கும்போதெல்லாம்/சொல்லும்போதெல்லாம் அம்மாவின் குரல் காதில் விழும். இதைச் சொல்லிக்கொண்டே சமையலில் அரைத்தும் கரைத்தும், நறுக்கிக் கொண்டும் வேலை செய்யும் அம்மா கண் முன்னால்! அம்மா சொல்லிச் சொல்லிச் சொல்லி எனக்கும் மனப்பாடம் ஆனவற்றில் இதுவும் ஒன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி. நாளை முதல் உங்கள் பாமாலையை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      சமைக்கும் போது இப்படியான பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பது தெய்வீகம்..
      இதனாலேயே நம்முள் அன்பும் அருளும் கலந்து இருக்கின்றன..
      இதுதான் தாய்வழிச் சீதனம்..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  5. என் அம்மாவும் இந்த பாடல் பாடுவார்கள். பாடல் எழுதி வைத்த நோட்டு தங்கையிடம் இருக்கிறது.
    இன்று உங்கள் பகிர்வில் பாடல் முழுவதையும் படித்து அன்னையை வணங்கி கொண்டேன்.
    நன்றி.
    உங்கள் பாமாலை இடபெறட்டும் அன்னைக்கு சிறந்த பாமாலையாக அமையும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      சமைக்கும் போது இப்படியான பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பது தெய்வீகம்..
      இதனாலேயே நம்முள் அன்பும் அருளும் கலந்து இருக்கின்றன..

      தங்களது அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..