நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 17, 2022

கீரைப்புராணம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இருதினங்களுக்கு முன்பு மதிப்புக்குரிய கமலாஹரிஹரன் அவர்களது தளத்தில் வெளியான கீரைப் புராணத்திற்கான கருத்து..

செங்கீரை சிறுகீரை
அகத்தியுடன் அரைக்கீரை
புளிக்கீரை புகழ் முருங்கைத் 
தளிர்க்கீரை
பசலையுடன் வருகீரை
வல்லாரை கண்ணியென
வகுத்தார் வகுத்த வகைக்கு
மேலுண்டோ வாழ்வில் நெறி..

இதனைத் தொடர்ந்து என் மனதில் உருவான கீரைப் புராணம் ஸ்ரீ அகத்தியர் தமது நல்லாசிகளுடன்
இன்றைய பதிவில்
 தங்களுக்காக!..


கேளப்பா சிறுமதலாய்
கீரைகளின் பெருமைதனை
ஆதியிலே அகத்தியரும்
ஆங்கமர்ந்து உரைத்தாரே..

அகத்திக்கீரை
சித்தத்தை இரத்தத்தைத்
தெளிவிக்கும் அகத்தியுடன்
சேராத இடம் சேர்ந்து சேர்த்து
வந்தநோய் தீர்க்கும் சிறுபசலை

பலங்கொண்ட மேனிக்குப்
பெரும் பசலை நன்றாகும்
வெந்தயக் கீரையது
வாதத்திற் கென்றாகும்..

கருமணிக்கீரை
கருமணிக் கீரையும் தான்
கடுவயிற்று வலிக்காகும்
நன்னாறி அதுவுந்தான்
நாவறட்சி தனைப் போக்கும்..

கற்பூர வல்லியவள்
சஞ்சீவி என்றாகி
கறி வேப்பிலை கூட
அருமருந்து ஆகிடுதே..

அறங்கொண்ட ஆண்மைக்கு
ஓரிதழை உணர்வாயே
ஆயிரம் நன்மைக்கு
அரைக்கீரை அறிவாயே..

முருங்கைக் கீரை
முளை கொண்ட பயறுடனே
முருங்கையின் கீரையது
பேறடைந்த பெண்ணுக்கு
பெருவிருந்து ஆகுமே..

வலி கொண்ட மூட்டுக்கு
முடக்கத்தான் போதுமே..
குப்பையிற் மேனியால்
வீக்கமும் வெருண்டோடுமே..

ஆவாரை
நல்லாரைக் காத்து வரும்
வல்லாரை இகழாதே
பொன்னாரைப் போலிருக்க
ஆவாரை மறவாதே..

கண்ணுக்குக் கண்ணியுடன் 
கனிவுடன் கேளப்பா
காமாலை வந்தக்கால்
கீழ் நெல்லி பாரப்பா..

தூதுவளை
காபாலம் குளிரத்தான்
கரிசாலை தான் படைத்தான்
தூதுவளை துயர் தீர்க்கும்
ஈளையுடன் பிணி போக்கும்..

தருதருங் கீரையுடன்
செடிக்கீரை கொடிக்கீரை
சிறப்பான விருந்தாகுமே
குலத்துக்கு மருந்தாகுமே

துளசி
நலந்தரு கீரையுடன்
நறுந்துளசி தும்பையும்
இஞ்சியும் மஞ்சளும்
ஏலமி லவங்கமும்
குறுமிளகு சீரகம்
கோதிலா கல்லுப்பு
எல்லாமும் மருந்துதான்
துயரங்கள் தான் தீர்க்குமே..

வேப்பிலை
வேப்பிலையின் மகிமைதனை
வித்தகனே நீயறியாய்
காப்பிலை யாம் மாவிலையை
விரித்துரைக்க ஆகாதே

விடங்கொண்ட கீரையும்
இவ்விடத்தில் மிகவுண்டு
தக்கதொரு குரு கண்டு
தகவறிதல் வேண்டுமே..

செங்கீரை
செங்கீரை அதனோடு
மா வடு உண்ட சிவன்
பதந்தனைசிந்தை வைத்தேன்
செம்மையது சேர்க என்று..

செழுங்கீரை அது
கொண்ட சீர் எல்லாம் 
சொல்லி வைத்தேன்
வையகமும் வாழ்க என்று..
**
 வாழ்க வையகம்
வாழ்க நலமுடன்..
***

28 கருத்துகள்:

  1. அருமையாக கவி புனைந்திருக்கிறீர்கள்.  மிக அருமை.  வார்த்தைகள் துள்ளி விழுகின்றன அதனதன் இடங்களில்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கீரை வகைகள் குறித்த பதிவு அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி ஜி ..

      நீக்கு
  3. அநேகமாய் ஒன்றிரண்டு கீரை தவிர்த்து எல்லாமும் சாப்பிட்டிருப்பேன். வல்லாரைக்கீரையில் துவையல் செய்து சாப்பிட்டோம். ஆவாரம்பூக் கஷாயம் இப்போவும் சில நாட்கள் உண்டு. தேநீர் மாதிரிக் கூடப் போட்டுக் குடிக்கலாம்.வேப்பிலையும் குப்பைமேனியும் தான் என் மேனி அழகைப் பாதுகாக்கும் ஔஷதங்கள். வெயில் காலத்தில் இவை இரண்டையும் அரைத்துத் தான் சோப்புக்குப் பதிலாகத் தேய்த்துக் குளிக்கும்படி இருக்கும். இல்லை எனில் சிவப்புச் சிவப்பாக ஆங்காங்கே ஏதோ சாட்டையடி வாங்கினாப்போல் இருக்கும். எல்லாக் கீரை பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் தவழும் பருவத்தைச் செங்கீரைப்பருவம் என்பார்கள். இது குறித்த கவிதை ஒன்று கூட நேற்று முகநூலில் என் சிநேகிதி பகிர்ந்திருந்தார். அது நினைவு வந்தது.

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றியக்கா ..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தாங்கள் பாடிய கவி கண்டு மனம் மிக மகிழ்கிறது. இப்போதுதான் என் வலைப் பக்கத்தில் தங்கள் சிறுகவி கண்டு அகமகிழ்ந்து நன்றி உரைத்து விட்டு வந்தேன். இங்கு தங்கள் வலைப்பக்கத்திலும் கீரைகளைப் பற்றி, அதன் பயன்களைப் பற்றி, நெடுங்கவி பாடி அசத்தி விட்டீர்கள். சரஸ்வதி தேவி தங்கள் நாவில், சிந்தையில் நிரந்தர வாசம் செய்கிறாள். அன்னைக்கும் நன்றி.

    தங்கள் கவியில் குறிப்பிட்ட அத்தனை கீரைகளும், தெய்வீக அருள் பெற்றவை. அதன் பலன்களும் சொல்லில் அடங்காத புகழ் பெற்றவை. அக்கீரைகளுக்கு புகழ் சேர்க்கும் அருமையான கவி யை தந்தமைக்கு மிக்க நன்றி. . மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

    என்னையும் பதிவில் நீங்கள் குறிப்பிட்டு எழுதியிருப்பது பூவோடு சேர்ந்த நாரான ஒரு சிறு மகிழ்வை தந்தது. தங்களுக்கு என் பணிவான நன்றிகள் சகோதரரே. 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி ..

      நீக்கு
  5. கீரைக் கவிதையை ரசித்தேன். இதில் வேப்பிலை, மாவிலை சேராது. இருந்தாலும் அதன் பயனும் அருமை. கற்பூரவல்லியை கீரையாக உபயோகித்து ஏதேனும் செய்கிறோமா என்ன? எல்லாக் கீரைகளையும் கொண்டுவந்தது சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பூரவல்லிக் கஷாயம் போடலாம். சின்னக் குழந்தைக்குக் கூடக் கொடுக்கலாம். வளரும் பருவத்துக் குழந்தைகளுக்குக் கற்பூரவல்லி இலையில் பஜ்ஜி போட்டுக் கொடுப்போம். மற்ற வாழைக்காய், உ.கி.கத்திரி, வெங்காயம்னா கொடுப்பது கஷ்டம். ஆகவே இதில் போட்டுக் கொடுக்கலாம்.

      நீக்கு
    2. ரசம் கூட வைக்கலாம். ஆனால் எனக்கு ஒத்துக்கலைனு முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே எழுதின நினைவு! :)

      நீக்கு
    3. அன்பின் நெல்லை..

      தங்களுக்கு விளக்கம் அடுத்த பதிவில் வருகின்றது..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி ..

      நீக்கு
  6. ப்ரபந்தத்தில், அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே பாசுரங்களில் ஒன்றை எழுதி, செங்கீரைப் பருவத்தைத் தொட்டிருக்கலாம். (பெரியாழ்வார் திருமொழி). செங்கீரைப் பருவம்.. நிலையாக நிற்காது, தண்டுகளைக் கொண்ட கீரை ஆடுவதுபோல, குழந்தை நின்றாலும் உடம்பு ஆடும் பருவத்தை இரசித்து அதைத் தன் பாசுரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியாழ்வார் பாசுரங்கள் படிச்சிருந்தாலும் உங்க அளவுக்கு எல்லாம் என் நினைவில் இல்லையே நெல்லை! :( செங்கீரைப்பருவம் குறித்து ஆயர்பாடிக் கண்ணன் மேல் பாடி இருக்கார்னு நினைவு வந்ததே தவிர்த்துப் பாசுரம் நினைவில் வரலை. :) நானும் அந்தக் கருத்துத் தான் சொல்லி இருக்கேன். குழந்தை தவழ்ந்து நின்றாலும் உடல் ஆடும். கழுத்தைத் தூக்கிப் பார்த்துச் சிரிக்கும். ஹையோ! சொர்க்கம்! கீரைத்த்ண்டு ஆடிக் கொண்டு இலைகளோடு கூடிய பாகம் மேலே ஒருபக்கமாகப் பார்க்குமே!

      நீக்கு
  7. மரபுக்கவிதை சிறப்பாக உளது, மற்ற கீரைப் புராணமும் படங்களுடன் அழகாக வெளியிட்டிருக்கிறீர்கள். இரண்டு பகுதிகளாக இரு தினம் பதிவு செய்திருக்கலாம். 

    பாராட்டுகள். 

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜெயகுமார் அவர்களுக்கு

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி ..

      நீக்கு
  8. உங்கள் மனதில் உருவான கீரை புராண பாடல் மிக அருமை.
    படங்களும் அழகாய் இருக்கிறது. அகத்தியரின் அருளாசி கிடைத்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகத்தியரின் அருளாசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி ..

      நீக்கு
  9. கீரைப்புராணத்தை ரசித்து வாசித்தேன். கவிதை மிக மிக அழகாகப் புனைந்திருக்கிறீர்கள். தமிழ் விளையாடுகிறது. படங்களும் கீரையின் பெயரும் என்று பதிவு அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி துளசிதரன்..

      நீக்கு
  10. துரை அண்ணா, நீங்கள் எழுதியிருப்பது படி கீரை விற்பவர் வாசலில் கூவி விற்றால் எப்படி இருக்கும் என்று கற்பனையை ஓட்டிப் பார்த்தேன். ஆஹா என்றிருந்தது! நன்றாக இருக்கும் இல்லையா?

    ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க. கருமணிக்கீரை வயிற்று வலிக்கு நல்லது என்பது இப்போதுதான் அறிகிறேன்

    அருமை யா எழுதியிருக்கீங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கம் அடுத்த பதிவில் வருகின்றது..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி ..

      நீக்கு
  11. கீரைகள் பற்றிய கவி அருமை .மருத்துவ குணங்கள் மிக்க இவற்றை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

    எங்கள் வீட்டில் ஆவாரை தவிர்த்து மற்றைய கீரைகள் இருப்பதில் மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஆவாரையும் விரைவில் இடம் பெறட்டும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..