நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 24, 2021

தடம் பார்த்த நடை

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..

***

" தந்த தன.. தானன னா..  ஆஆ!... "

- என, தொலை தூரத்துத் தெம்மாங்கு சத்தம்...

அந்தத் தெம்மாங்கு - அது ஒன்றே - நீண்டு விரிந்து விளைந்திருக்கும் வயற்காட்டினைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது..

நன்றி - ஓவியர் திரு. மாதவன்

தெம்மாங்கினைத் தொடர்ந்து -
தென்னங்கனி பிளந்தாற்போல,
காளை ஒருவனின் கம்பீரமான குரல்..
அவனருகில் இளங்கன்னி ஒருத்தி!..

இருந்தும் -  சிறிது சோகமும் கூட!..

ஏன்!.. எதற்கு?..

தொடர்ந்து கேட்போம் வாருங்கள்..

" ஒட்டுக் கேட்பது தவறில்லையா?.. "

" அடுத்த வீட்டுக் கதவில் காதை வைத்துக் கேட்பது தான் தவறு.. பெருந்தவறு!.. இங்கே வெட்டவெளியில் காற்றலையில் அல்லவா தெம்மாங்கு தவழுகின்றது... கேட்டு மகிழ்வதில் தவறே இல்லை!.. "

" தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
வாழை இலை போல வந்த பொன்னம்மா!..
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?.. "

" அதென்னங்க தாழையாம் பூ முடிச்சி?... "

" இருங்க... இந்தப் பையனோட பாட்டுக்கு அந்தப் பொண்ணும் இசைப்பாட்டு பாடுது.. முதல்ல பாட்டைக் கேட்போம்.. அப்புறமா.. அர்த்தத்தைப் பார்ப்போம்!.. "

" பாளை போல் சிரிப்பிருக்கு.. பக்குவமா குணமிருக்கு..
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா...
இந்த ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா!.. "

" ஆகா!... "

" தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால்
போதுமா.. அது
மானாபிமானங்களைக் காக்குமா?..
மானாபிமானங்களைக் காக்குமா?.. "

" மானமே ஆடைகளாம்
மரியாதை பொன்னகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே - எங்கள்
நாட்டு மக்கள் குலப்பெருமை தோன்றுமே!..
நாட்டு மக்கள் குலப்பெருமை தோன்றுமே!.. "

" அடடா!..." 

" அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா?. - வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா!..
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா!.. "

" மண் பார்த்து விளைவதில்லை.. மரம் பார்த்து படர்வதில்லை..
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா... - அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா!...
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா!... "

" தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
வாழை இலை போல வந்த பொன்னம்மா!..
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?.. "

" அற்புதம்.. அற்புதம்!.. ஆனா.. அவங்க ரெண்டு பேரும் அப்படியே மாடு கன்றை ஓட்டிக்கிட்டு போறாங்களே?.. "

" ஆமாம்.. சாயங்காலப் பொழுதாச்சே... வயக்காட்டு வேலைய முடிஞ்சது.. வீட்டுக்குப் போக வேணாமா?... கம்புக்கு களை எடுத்தாச்சு.. தம்பிக்கும் பொண்ணு பார்த்தாச்சு.. அப்படிங்கற மாதிரி... வரப்போட வரப்பா வேலையும் பார்த்தாச்சு.. வருங்காலத்துக்கு வேண்டியத பேசியும் ஆச்சு!.. "
 
" அப்போ - ரெண்டு பேருக்கும் பிரியம் தானே.. காதல் தானே!.. "

" காதல் தான்... ஆனா, அதுக்கும் மேலே!... அதனால தான் - தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து.. ந்னு வார்த்தை வந்தது!... "

" அதுக்கு என்னங்க அர்த்தம்?... "

மல்லிகைப் பூ முல்லைப் பூ இந்த மாதிரி பூவெல்லாம் ரெண்டு நாள்ல வாடிப் போனா -  வாசமும் சேர்ந்து காணாப் போயிடும்.. ஆனா, இந்த தாழம்பூ இருக்கே - அது ஒரு தனி ரகம்.. நாளாக நாளாகத் தான் அதனோட மடல்கள்..ல இருந்து வாசம் வீசும்... "

" அது சரி!... "

" அந்தக் காலத்தில சின்ன பெண்ணுங்களுக்கு சடை அப்படின்னாலே - தாழம்பூ சடை தான்.. குஞ்சம் தான்!.. போற பக்கமெல்லாம் வாசம் கமகம...ன்னு!.. " 

" சரி.. அதுக்கும் இதுக்கும் என்னாங்க சம்பந்தம்?.. "

" இருக்கே!... தாழையாம் பூ முடிச்சி.. அதுக்கப்புறம்?... "

" தடம் பார்த்து நடை நடந்து!... "

" அப்படின்னா.... பாதையைப் பார்த்து நடக்கிறது... கிராமங்கள்.. ல சொல்லுவாங்க... வயக்காட்டுத் தடம்... வண்டித் தடம்.. ஒத்தையடித் தடம்.. "

" ஆமாங்க... நானும் படிச்சிருக்கேன்... ரயில் தடம் புரண்டது.. அப்படின்னு போடுவானுங்க... அதுக்கு இது தானா அர்த்தம்!... நல்லாயிருக்கே!... "

" பாதையைப் பார்த்து நடக்கிறது.. ன்னா..  பார்க்கிறது எல்லாமும் பாதை இல்லை.. நல்லவங்க பாதம் பட்டது தான் பாதை.... அவங்க நடந்தது தான் நடை... அதுதான் தடம்.. அந்தத் தடம் பார்த்து நடக்கிறது தான் வாழ்க்கை!...

தடம் மாறாம நடந்தா வாழ்க்கை இனிக்கும்.. மணக்கும்.. தடம் மாறி நடந்தால் - தடுமாறி நடந்தால் அதுவே
கசக்கும்.. கழுத்தை நெரிக்கும்.. மனசாட்சி அக்கினியா எரிக்கும்!.. "

" அடடா!.. நீங்க என்ன தமிழ் வாத்தியாருக்குப் படிச்சீங்களா?... "

" படிக்கலாம்..ன்னு தான் போனேன்... கைப்பணம் அதிகமா கேட்டானுங்க.. கொடுக்க முடியலே.. அதனாலே படிக்க முடியாமப் போச்சு!... "

" ஓ.. அப்பவே.. இதெல்லாம் உண்டா?.. "

" அப்ப ஆரம்பிச்சது தானே!... இன்னைக்குப் புரையோடிப் போய்க் கிடக்கு... "

" சரி.. வாழை இலை போல வந்த பொன்னம்மா.. அப்படின்னா!.. "

"  பொன்னம்மா..ன்றது அந்தப் பொண்ணோட பேரு.. பொன் - தங்கம்..ன்னு தெரியும்.. அதோட பெருமையும் புரியும்... அப்படி குணமுடைய பொண்ணு வாழையில போல வந்தாளாம்!... " 

" அது தான் எப்படி..ங்கறேன்!.. "


" பச்சைப் பசுந்தளிரா வாழைக் குருந்து மேல வந்து - அப்படியே மயில் தோகை மாதிரி விரிஞ்சும் விரியாம ரொம்பவும் மென்மையா இருக்கும்.. தொட்டாலே கிழிஞ்சு போயிடும்.. இதுக்கு தான் தலை வாழை இலை..ன்னு பேரு!.. "

"அடடா!.. "

" இப்படி எந்த ஒரு குறையும் இல்லாம முன்னவங்க போன தடம் பார்த்து 
நடப்பவளே.. காஞ்சாலும் காயாத தாழம்பூவை சூடிக்கிட்டு சிரிப்பவளே!... என் வாசலுக்கு என்ன வாங்கிக்கிட்டு வந்தாய்?... அப்படின்னு கேக்கிறான்... புரிஞ்சுதா!... "

" இதுக்கும் மேல புரியாம இருக்குமா!...

அதுக்குத் தான் அந்தப் பொண்ணு சொல்லுது... மானம் மரியாதை.. இதுக்கு மேல என்ன வேணும் - ஏழையாப் பொறந்த எங்களுக்கு!... "

" ஆகா!... என்னா ரசனை!... ஒருத்தரோட மனசு அவரோட சிரிப்பில தெரியும்.. அப்படி..ன்னு சொல்லுவாங்க.. அதுபோல கன்னையனோட மனசு அவனோட தென்னம்பாளைச் சிரிப்பில தெரியுது... இல்லீங்களா!.. "

" அதுல பாருங்க!... பொன்னும் பொருளும் பூந்தட்டும் சீதனமும் மானம் மரியாதையான வாழ்க்கைக்கு போதுமா!.. அப்படின்னு.. கேக்குறதுக்கு - அந்தப் பொண்ணு சொல்லுது -

தன் மானம் தான் இடுப்புச் சேலை... சுயமரியாதை தான் நகை நட்டு.. என்னோட வழித்துணை தான் பரம்பரையா வர்ற நாணம்!.. இதெல்லாம் இருந்தா போதுமே.. எங்க குலப்பெருமை எட்டுத் திக்கும் கொடி கட்டித் தோன்றுமே!... - அப்படின்னு!... என்ன அருமையா இருக்கு!.. "

" அந்த நாணம் இல்லாதது தான் - நாட்டுல நடக்கிற எல்லா தப்புக்கும் காரணம்!..  தப்பு செய்றதுக்கு வெட்கப்படறவங்க ஒழுக்கம் தவறி நடக்க மாட்டாங்க!..

கடமைய செய்றதுக்குக் காசு வாங்குறதுல இருந்து -

அடுத்தவன் பொண்டாட்டிய அடுத்தவ புருசனை இழுத்துக் கிட்டு ஓடறது வரைக்கும் - வெட்கம் கெட்டவங்க செய்யிற வேலை தானே!.. "

" சரியாச் சொன்னீங்க!.. இருந்தாலும் கன்னையனுக்குச் சந்தேகம் வருது.. பொன்னம்மா நம்மைப் பார்த்து ஆளழகு ..ன்னு சொல்லிடிச்சு.. அதுக்கு நாம தகுதியா?.. நமக்குத் தான் ஒரு கையும் காலும் வெளங்காதே!.. அவளை எப்படி நாம காப்பாத்த போறோம்!... அதனால அவனே கேட்கிறான்... "

" கைகால் விளங்காதவன் மேல யார் இஷ்டப்படுவாங்க!.. நீ என்ன தான் எம் மேல இஷ்டப்பட்டாலும் உங்க வீட்டில சம்மதிப்பாங்களா!... முடவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படறது யாருக்குத் தான் சந்தோஷமா இருக்கும்?.. "

" ஆமா.. மனக்குறை இருக்கும் தானே!... "

" அதுக்கு பொன்னம்மா சொல்லுது பாருங்க... மண்ணைப் பார்த்தா பயிர் வளருது?.. மரத்தைப் பார்த்தா கொடி படருது?.. "

" அந்தப் பயிர்லயும் கொடியிலயும் குத்தம் குறை உண்டா?.. என்னோட கண்ணு ரெண்டையும் பாருங்க... அதுல ஒரு களங்கமும் உண்டா..நீங்க என்னைப் புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா?.. சொல்லுங்க!.. "

" பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்கிறதே - ஒரு புண்ணியம்!.. "

அதுக்கு மேல கன்னையனுக்கு கேள்வி ஏதும் இல்லை!.. நாம காப்பாற்றலே.. ன்னாலும் அவ நம்மளைக் காப்பாற்றிடுவா... ன்னு நம்பிக்கை பிறக்குது... அப்புறம் என்ன!... கள்ளச் சிரிப்பு தான்.. குறும்புப் பார்வைதான்!...

" இந்தப் பாட்டுல - களங்கமில்லாத அன்பு தான்.. வாழ்க்கைக்கு அடிப்படை.. ன்னு சொல்றாங்க.. இல்லையா!.. "

இப்படியெல்லாம் தான் அன்றைக்கு வாழ்ந்தாங்க... ஆனா இன்றைக்கு நடக்கிறதெல்லாம் கேள்விப்பட்டா...

ரத்தம் கொதிக்குது... வேணாம்!... அந்தப் பேச்சை விடுங்க... ஏதோ இன்னைக்குப் பொழுது நல்லபடியா ஆனது... இன்னொரு சமயம் சந்திப்போம்!...

நல்லது.. மறுபடியும் பார்ப்போம்!..
* * *


ஜூன் 24..

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கும்
மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் அவர்களுக்கும் - பிறந்த நாள்..


கவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய பாடல்களுள் -
மண் மணக்கும் பாடல் ஒன்றினை - என்னளவில் வழங்கியுள்ளேன்..

காலத்தை வென்று நிற்கும் - தாழையாம் பூ முடித்து - எனும் இனிய பாடலை
இங்கே - கேட்டு மகிழுங்கள்..

மெல்லிசை மன்னரின் இசையில் பாடியவர்கள் -
T.M. சௌந்தரராஜன், P. லீலா..

நடித்து வண்ணம் கூட்டியவர்கள் -
சிவாஜி கணேசன், சரோஜாதேவி..

இந்தப் பாடல் பெரும் சிறப்பு எய்துவதற்குக் காரணமான - 
மகத்தான கலைஞர்களையும் நினைவு கூர்தல் மகிழ்ச்சி..


மேலும் - அவர்கள் இன்று இல்லை என்று நினைக்கவே முடியவில்லை..

அவர்கள் வழங்கிய இனிய பாடல்களுடன் தான் நாளும் பொழுதும் விடிகின்றது..

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. - என்றார் கவியரசர்..

அந்த சொல் மெல்லிசை மன்னருக்கும் பொருந்தும்..

அவ்வண்ணமாகிய 
அந்த மாபெரும் வித்தகர்களை 

நெஞ்சம் மறப்பதில்லை..
நெஞ்சம் மறப்பதேயில்லை!..  
***

8 கருத்துகள்:

  1. இன்று இந்த இரண்டு மாமேதைகள் பிறந்த நாள் என்று நினைவில் இருக்கிறது.  அதற்கு மிக மிகச் சிறப்பாக ஒரு பதிவு வழங்கி கௌரவித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. இனிய பாடல்களை எழுதியவருக்கும், அந்த பாடல்கள் காலத்தை வென்று நிற்கிறமாதிரி இசை அமைத்த மெல்லிசை மன்னருக்கும் வாழ்த்துக்கள்.
    அருமையான பாடலை பகிர்ந்து அதற்கு அழகான விளக்கம் கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. இரண்டு மேதைகளின் பிறந்த தினம். அதற்கான சிறப்புப் பதிவு வெகு சிறப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான விளக்கம் ஜி
    கவியரசருக்கும், மெ.மன்னருக்கும் இன்று பிறந்தநாள் அமைத்துக் கொள்ளப்பட்டது.

    ரஷ்யாவுக்கு கவியரசருக்கு அழைப்பு வந்தபோது தம்பி எம்.எஸ்.வி. வந்தால்தான் நான் வருவேன் என்று கவியரசர் சொல்ல, என்னிடம் பாஸ்போட் இல்லை என்று இவர் சொல்ல, உடனே அவசரமாக பாஸ்போட் அப்ளை செய்யும்போது எந்த சான்றிதழும் இல்லாததால் கவியரசரைவிட ஒரு வருடம் குறைத்து அதே தேதியை போட அதுவே இவருக்கும் பிறந்தநாள் ஆயிற்று.

    பதிலளிநீக்கு
  5. ஆகா...! ஒவ்வொரு விளக்கமும் ரசனை... அருமை...

    பதிலளிநீக்கு
  6. ஆஹா! இருவரின் பிறந்த நாளிலும் அருமையானதொரு அஞ்சலி. நல்ல ரசனையுடன் எழுதப்பட்ட பதிவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.மாமேதைகள் இருவரின் பிறந்த நாள் எனத் தெரிந்து கொண்டேன்.இந்தப் பாடலை மறக்க முடியுமா? அந்த படத்தில் சிவாஜியின் நடிப்பும் வேறு எவராலும் தர முடியாதது. நல்ல அருமையான பாட்டு, இதன் விளக்கமென நடந்த உரையாடல்கள் அனைத்துமாக பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. இத்தகைய அருமையான பாடலை தந்தவரையும், அதற்கு அற்புதமாக இசையமைத்து அதை சாசுவதம் ஆக்கியவரையும் நினைவு கூர்ந்து நல்லதொரு பகிர்வினை இன்று எங்களுக்கு தந்தமைக்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு துரை அண்ணா. ரசித்து எழுதியிருக்கீங்க. ரசித்து வாசித்தேன். பாடலை வைத்து உரையாடலில் நல்ல விளக்கம்..

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..